Wednesday, December 25, 2019

முடியாத புத்தர்



கலைஞர்கள், கவிஞர்கள் தொடங்கி மனிதரின் பேராசையால் சுரண்டப் பட்ட பூமியைப் பற்றிக் கவலைப்படும் சூழலியலாளர்கள் வரை புத்தர் அனைவரையும் இன்றும் ஈர்த்துக்கொண்டிருக்கிறார். ப்ளேட்டோவின் சமகாலத்தவராக புத்தரை வைத்து, உலகளவில் நவீன சிந்தனைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தில்இருந்து புத்தரின் வாழ்வையும் மரணத்தையும் சமகாலத்தில் நின்று பரிசீலிக்கும் நாவல் ‘தம்மம் தந்தவன்’. மராத்திய, ஆங்கில எழுத்தாளரான விலாஸ் சாரங், கவிஞரும்கூட.
பிறந்த அரண்மனைக்கும் புகுந்த அரண்மனைக்கும் நடுவே நடுக்காட்டில் ஒரு சாலமரத்தின் மடியில் மரத்தைப் பிடித்தபடி தாய் மாயாதேவிக்குப் பிறந்த சித்தார்த்தன், அரச மரத்தடியில் ஞானம் பெறுகிறார். பெரும் கருணையையும் ஈவிரக்கமற்ற தன்மையையும் ஒருசேரக் கொண்ட வெட்டவெளி இயற்கையில் பிறந்து, அதே வெட்டவெளியில் ஞானமென்று சொல்லப்படும் புரிதலை அடையும் புத்தனின் வாழ்க்கையைப் பற்றிய இந்த நாவல், ஒரு கவிஞனால் எழுதப்பட்ட அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. தெரியாத கத்திமுனையின் கூர்மையைக் கொண்டது.
பழைய உபநிடதங்கள் தொகுக்கப்பட்டு, புதிய உபநிடதங்களும் இயற்றப்பட்ட காலகட்டத்தில் பிறந்த சித்தார்த்தனின் தேடலும் உபநிடதங்களிலிருந்தே தொடங்குகிறது. துன்பம் என்ற பிரச்சினை குறித்து உபநிடதங்களில் எதுவும் சொல்லப்படவில்லை என்ற புள்ளியில் அவன் தேடல் தொடங்குகிறது. அதுவரையில் நிகழ்ந்த உச்ச அறிதல் என்று சொல்லப்பட்டவற்றை, ‘ஐநூறு தேர்கள் கடந்த பிறகு எஞ்சும் தூசி’ என்று சித்தார்த்தன் கடக்க வேண்டியிருக்கிறது. பச்சையாய்ப் பெரிய உடம்போடு இருந்து மரத்திலிருந்து உதிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய்த் தேய்ந்து நரம்புகளின் கூடாகி இன்மை நோக்கிப் பயணிக்கும் அரச மரத்தின் இலையை நாவலாசிரியர் வர்ணிப்பது போன்றே புத்தரின் துன்பங்கள், தோல்விகள், பலவீனங்கள், சமரசங்கள் அனைத்தும் இந்தப் படைப்பில் விசாரிக்கப்படுகின்றன.
உறக்கமற்றவனின் இரவு நீண்டது என்று தம்மபதத்தில் வரும் கவித்துவ வரிகளைப் போலவே புத்தனாவதற்காக அவன் தந்தை சுத்தோதனரில் தொடங்கி, மனைவி யசோதரா, மகன் ராகுலன் உட்பட அனைவரது இரவுகளையும் உறக்கமற்றவைகளாக ஆக்குகிறான் சித்தார்த்தன். ஆசைகளும் குரோதமும் காமமும் மட்டுமே மனிதனின் இயல்பூக்கங்கள் என்பதை நிரூபிக்கப் போராடும் மாரனுக்கும் புத்தனுக்குமான உரையாடல் ஞாபகத்தில் நிலைக்கும் உருவகங் களால் நிரம்பியது. பிணங்களைத் தின்பதற்காகக் கழுகுகள் பறந்துகொண்டிருக்கும் அதே மலையில்தான் முட்டைகளையிட்டு ஒரு தாய்க் கழுகு அடைகாத்துக்கொண்டிருக்கிறது என்று பதிலளிக்கிறார்.
பிறப்பு இறப்பு என்னும் துன்பங்களால் உழன்ற மனிதர்களின் கண்ணீரினால் ஆன பொய்கையில் அவலோகிதேஷ்வரரால் பிறப்பிக்கப்படும் பெண் தெய்வமான தாரா, இந்த நாவலின் இறுதியில் அறிமுகமாகிறாள். மனிதனை மரணத்தின் பால் இட்டுச்செல்லாதவள் பெண் என்று அவளைப் படைத்த போதிச்சத்துவரான அவர் தன் செயலுக்குக் காரணம் கூறுகிறார். மனிதர்களின் பெரும் அச்சங்களைக் கடக்க வைக்கும் பெண் என்னும் இயற்கையின் அமுதத் தாரையை நாவலாசிரியர் பரிசீலிப்பதாகவும் இதைக் கொள்ளலாம். கருணையின் வடிவமான பொன்னிற தாரா, தவாங் புல்வெளியில் பூடானையும் திபெத்தையும் பார்த்தபடி சிலையாக நிற்கிறாள்.
பௌத்த ஓவியங்களில் சிங்கங்கள் வரையப் பட்டிருக்கின்றன. சிங்கங்களே இல்லாத திபெத்தில் இந்த சிங்கங்கள் ஓவியங்களில் இடம்பெற்றிருக்கின்றன. தாராவும் சிங்கங்களும் நாம் கடக்க வேண்டிய அச்சங்களின் குறியீடாகவும் பார்க்கலாம். சமீபத்தில் வந்த தமிழ் மொழிபெயர்ப்புகளில் காளிப்ரஸாத் மொழிபெயர்த்திருக்கும் இந்நாவல் முக்கியமானது; சமகாலத்துடன் பொருத்தப்பாடு கொண்டதும்கூட.
தம்மம் தந்தவன்
விலாஸ் சாரங்
தமிழாக்கம்: காளிப்ரஸாத்
நற்றிணைப் பதிப்பகம்
திருவல்லிக்கேணி, சென்னை-5.
விலை: ரூ.260
தொடர்புக்கு: 94861 77208
கவிஞர். ஷங்கர்ராமசுப்ரமணியன் வலைப்பூவில் வந்த விமர்சனம்:-

விலாஸ் சாரங்கின் தம்மம் தந்தவன்


Thursday, July 18, 2019

அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே

"நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாம்"
என்ற அன்னை வேளாங்கண்ணி படப்பாடலுக்கு எங்கள் ஊரின் பள்ளி மாணவர்கள் ஒருமுறையாவது நடனம் ஆடியிருப்பார்கள். அல்லது ஒருமுறையாவது அதை பாடியிருப்பார்கள். எங்கள் பள்ளியிலும் அதே பாடல். எட்டாம் வகுப்பு படிக்கையில் பள்ளி விழா. அந்தப்பாடலுக்கு ஆடிய நண்பன் தன் தந்தையுடன் மகாமகம் திருவிழாற்குச் சென்றிருந்தான்.  அங்கு ஏற்பட்ட திடீர் நெரிசலில் அவன் அப்பா கை நழுவி அவன் தடுமாற அவனை பிடிக்க அவர் குனிய அவர்களைத் தள்ளி அவர்கள் மீது நடந்தபடி இருவரையும் மிதித்தே கொன்றது அந்தக்கூட்டம்..

அத்திவரதனை தரிசிக்க நாங்கள் குடும்பத்துடன் சென்றபோது என் தோளில் அஸ்வத் அமர்ந்திருந்தான். கருட வாகனமா என்றார் எங்களைப் பார்த்த பக்தர் ஒருவர். அனுமந்த வாகனம் என்றும் அம்மாவோ மனைவியோ நினைத்திருக்க  வாய்ப்பில்லாமல் இல்லை. அத்விகா அம்மா கையை பிடித்திருக்க, என் அம்மாவும் அப்பாவும் முன்னே சென்றுகொண்டிருந்தனர்.   கிரகணம் முடிந்து கடந்த இருநாட்களாக  கூட்டம் இல்லை என்பதால் வியாழக்கிழமையான  இன்று விடுமுறை போட்டு அதிகாலையில் கிளம்பி தரிசிக்க வந்திருந்தோம்.


அந்த வரிசை வளைந்து நெளிந்து சென்றது. அதில் அந்தப்பக்கமாக வருபவர்கள் இடையில்  திடீரென இப்புறமாக  உள்ளே தாவிக்குதிக்க,கடல் அலைபோல கூட்டம் அப்படியே ஆடி அசைந்தது. அப்பொழுது என் தோளில் அமர்ந்திருந்தவனை இடுப்பில் அமர்த்திக்கொண்டு சமாளித்துநிற்க பக்க வரிசையில் வந்தவர்கள் கீழே விழுப்போய் சமாளித்தனர். மகள் ஒருபுறம் அலற அவளைப்பிடித்தபடி சமளித்து மனைவி நின்றாள். அனைவருமே சாய்ந்து நின்றிருந்தோம். அந்தப்பக்கம் ஒரு பள்ளம் இருக்கிறது. கூட்டம் நிரம்பி  அதுவரை சென்றிருக்கிறது.  அந்தச் சமயத்தில்தான் எனக்கு முன்புசொன்ன மகாமகம் நண்பன் முகம் ப்ளாஷ் அடித்தது. நாங்கள் அப்பொழுது ஆஞ்சநேயர் சந்நதி அருகில் வந்து விட்டிருந்தோம். அதுவரை திரும்பிப் போகலாம் என்றும் கிட்டத்தட்ட வந்துட்டோம் பாத்துட்டு போலாம் என்றும் இரு எண்ணங்கள் இருந்தன.

ஆனால் மகாமகம் நினைவு வந்தக்கணம் முதல் முகம் வியர்த்து வடியத்துவங்கியது.  என் நிலை கண்டு அம்மாவும் மனைவியும் பதற, நான் அவர்களிடம் திரும்ப போகலாமா என்று கூறினேன்.. அதற்குள்கூட்டம் மெல்ல நகர திரும்பிப் போவது இயலும் ஒன்று அல்ல. பின்னாலும் பெருங் கூட்டம் இருக்கறது. ஒருவாராக ஓர வரிசையில் வந்து அங்கு பக்கவாட்டில் இருந்த வேதாந்தா தெருவில் நுழைந்தோம். அங்கு துவக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் டீ கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆர்த்தி டீ வாங்கி வந்து அளித்தாள். அதைத்தாண்டி வரிசையில் செல்பவர்கள் யாரும் வரவில்லை. நாங்கள் தெருவின் உள்ளே செல்ல, ஐந்தாறு வீடுகள் தாண்டி பூட்டியிருந்த இருந்த ஒரு பழங்கால திண்ணை அமைப்பு வீடு ஒரு ராமானுஜர் பெயர் தாங்கிய ஒரு பெயர்ப்பலகையுடன் இருந்தது. காலியான  திண்ணையைக் கண்டு ஆசுவாசமடைந்த நான் அதில் சற்று சாய்ந்து படுக்க குழந்தைகள் திண்ணையில் ஏறி அமர்ந்தனர். அம்மா எதிரில் இருந்த ஒரு ஜவுளிக்கடையின் வாசலில் நின்றிருந்த ஒரு மடிசார் பெண்மணியிடம் பாத்ரூம் உபயோகிக்கலாம என்று கேட்டாள். வீட்டு கொல்லைக்கு போகணும் ஆனால் தண்ணியும் இல்லை என்றார். சரியென திரும்ப வந்து அமர கையில் கொண்டு வந்திருந்த இட்லியை அப்பாவிற்கு அளித்து அவரை சாப்பிடச் சொல்ல நாங்கள் அனைவரும் ஓய்வாக திண்ணையில் அமர்ந்தோம். வியர்த்து வடிந்த அஸ்வத்தின்  சட்டையைக் கழட்டிப் பிழிந்தால் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றியது. நானும் சட்டை பித்தான்களைக் கழட்டி அங்கு கீழே கிடந்த ஒரு ப்ளாஸ்டிக்  விசிறியை எடுத்து விசிறிக்கொண்டேன். அப்பொழுது எங்களை கவனித்துக்கொண்டிருந்த எதிர் வீட்டு மனிதர் அருகில் வந்து "இங்கேயே திண்ணைல  சாப்ட்டு அப்படியே போயிடாதீங்கோ. அலம்பி வுட்ரூங்கோ. ததியாராதணை நடக்கிற மண்டபம் இது என்றார். " சரிங்க என்று சொல்லி அவரை அனுப்பிவைத்தோம். வரிசையில் நிற்கத் துவங்கிய அந்த நாலரை மணி நேரத்தில் நான் குபீரென சிரித்தது அப்போதுதான்.

அருகில் இருந்த கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்த மற்றொரு வீட்டில் இருந்தவர்களிடம் கேட்டு பாத்ரூம் போய் வந்தனர். ஒன்றரை மணி நேர ஓய்விற்குப் பிறகு மீண்டும் கிளம்பினோம். அப்பொழுது வரிசையின் நிலைமை இன்னும் மோசமாகியிருந்தது. ஓய்வெடுக்காதவர்கள் ஆங்காங்கே ஓரமாக மயங்கி விழுந்திருந்தனர். பெரும்பாலும் வயோதிகர்கள். குழந்தையை மடியில் இட்ட பெண்மனிகள். இருநூறு அடி நகர்வதற்குள் கூட்டத்தை பிளந்தபடி ஒரு வரிசை பக்கவாட்டில் சென்றது. அவர்கள் அனைவரும் வெளியே செல்ல காத்திருந்தவர்கள் போலும். ஒருவாறு ஒருவரோடு ஒருவர் இணைந்து வெளியேறினர். அதனால் நானும் குழந்தையும் தனியாகவும் மற்றவர்கள் பின்னாலும் என பிரிந்து விட்டோம். நான் அஸ்வத்தை தோளில் ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த குடிநீர்வாரிய நீர்த்தேக்க அலுவலகத்தின்  மதிலை ஏறிக்குதித்து உள்ளே சென்று அவனை ஒரு மணற்திட்டில் அமரவைத்து வரிசையை நோக்க வந்தேன். அதற்குள் அப்பாவும் பின்னே வர அவரும் ஏறி உள்ளே வந்தார். அத்விகா அந்த நெரிசலில் மாட்டிக்கொண்டதாகவும் மூச்சுவிட முடியாமல் அழுததால் அம்மாவும் மனைவியும் ஓரத்தில் கூட்டத்தோடு நிற்பதாகவும் சொன்னார்.

அந்த இடைப்பட்ட நேரத்தில் அங்கிருந்த ஒரு நபர் உதவிசெய்ய அவர்கள் வரிசையை விட்டு வெளியேறி எதிரில் இருந்த ஒரு மருந்துவமனையின்  வாசற்படியில் அமர்ந்திருந்தனர். இப்பொழுது நினைத்தாலும் அது ஒரு தெய்வச் செயல்தான். உதவிய அந்த நபர் பெயர் நரசிம்மனாக இருந்திருக்கலாம். சொந்த ஊர் சோளிங்கராகவும்...

போனில் அழைத்து பேசியபின் அனைவரும் ஆங்காங்கு  செட்டில் ஆகிவிட்டோம்  என்று அறிந்து கொண்டோம். கால்மணி நேர ஓய்வு..  அத்விகா அங்கிருக்கும் ஒரு வாட்டர் டாங்க் மேலை ஏறி அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.  இங்கே அஸ்வத் கீழே கிடந்த கற்களைப் பொறுக்கி வீடு கட்டியிருந்தான். அங்கிருந்து கிளப்பும் போது 'அப்பா இன்னும் வாசலே கட்டலப்பா'ன்னு முறையீடு வேறு. இவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றியது. முத்தமிழ் மன்றத்தில் ஜெ. பேசிய கட்டண உரையில் ஒரு குழந்தை உங்கள் கைக்கு வருகிறது. அதன் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்கப் போகிறீர்கள் என்று பேசியது நினைவிற்கு வந்தது. ஆம்.. அதுதான் எவ்வளவு பெரிய பொறுப்பு என இப்போது உரைக்கிறது.




மீண்டும் நாங்கள் கிளம்பி அவர்களை அழைத்துக்கொண்டு அஸ்திகிரிசாலை வழியாக வெளியேறினோம். அங்கு மக்கள், தங்கள் வீட்டு வாசலில்  தண்ணீர் கேன் குடங்கள் வைத்திருந்தனர். பெரும்பாலான மடங்கள் திறந்திருந்து பக்தர்களுக்கு உதவியபடி இருந்தன.

உள்ளே நுழைகையில்  ஆனைக்கட்டி சாலையில் சாலையில் செருப்புகளை விட்டுவிட ஏற்பாடு செய்திருந்தனர். வெளியேறும் அஸ்திகிரி உள்ளிட்ட சாலைகள் விஐபிக்கள் வகன நிறுத்தமாகவும் இருப்பதால் புதிதாக தார் போட்டிருக்கின்றனர். அதில் செருப்பில்லாமல் மக்கள் நடந்து வந்து தங்கள் செருப்புக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஏற்பாடு போலும். தார் ஒழுகி ஒட்டியும் கொண்டது.  ஆடிமாதம் பிறந்து விட்டது. தீமிதியும் நல்லது தானே...

அங்கும் ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டோம்.  அந்த வீட்டுக்கார் வெளியே செல்லும்போது அவருடன்  பைக்கில் சென்று மற்றவர்களின் செருப்புக்களை எடுத்து வந்து அளித்தேன். அனைவரும் எழுந்து நடக்கத் துவங்கினோம். வந்திருந்த பக்தர்களில் சிலர் குழந்தைகளை தூக்கிக் கொண்டும்.. சிலர் தாவிக் குதித்தும் சிலர்  ஆளுக்கு ஒரு கால் செருப்பை அணிந்து நொண்டியபடியும் கடந்து வந்துகொண்டிருந்தனர்.

திரும்பி வரலாம் என்றால் கார்களும் பேருந்துகளும் நிரம்பியருக்கின்றன என்றார் ஒருவர். பிறகு அருகிலிருந்த ஸ்ரீமத் ஆண்டவன்  ஆசிரமத்தை அடைந்து அங்கிருந்து,சங்கரமடத்தைச் சேர்ந்த  நண்பர் சிவாவை அழைத்தேன். அவர் உதவியில் ஒரு கார் ஏற்பாடு செய்து வந்து சேர்ந்தோம்.
அதற்குள் கூட்ட நெரிசலில் நான்குபேர் இறந்ததாக செய்தி வந்திருந்தது...

பத்தி முதலாமவற்றுள் பதி எனக்கு கூடாமல்
எத்திசையும் உழன்று ஓடி இளைத்து விழும் காகம் போல் 
முத்தி தரும் நகரெழில் முக்கியமாம் கச்சி தன்னில் 
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே...!


என அவனுக்குள் அடைக்கலமான அந்த நால்வரும் வைகுண்ட பதவியடைந்து பிறவிப்பிணி தீர்ந்து நிறைவுறுவார்களாக!!!

இத்தருணத்தில் கோயில் நிர்வாகத்திடம் வைக்கும் வேண்டுகோள்கள் இவைதான்..

1) நாற்பது வருடத்திற்கு ஒருமுறை வெளியே வரும் அத்திவரதர்,நான்கு வருடங்களுக்கு ஒரு முறையோ அல்லது  மகாமகம் போல பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ வர விரும்புவாரா என்று கேட்டுச் சொல்லலாம். நாற்பது வருடங்களில் ஒருமுறை என்பது வாழ்வில் ஒருமுறைதான். இதைத் தவறவிடவும் பக்தர்கள் விரும்புவதில்லை என்று எடுத்துச் சொல்லவும்

2) அப்படியே வந்தாலும் கோயிலுக்குள் வசந்த மண்டபத்தில்தான் சயனிக்க நிற்க வேண்டுமா என்றும் கேட்டுச் சொல்லவும். ஒரு மைதானமோ அல்லது திருக்குளத்தின் மத்தியிலோ இருந்து தரிசனம் அளிக்கும் பட்சத்தில் அதுவும் வசதியாக இருக்கும்.

மாவட்ட நிர்வாகத்திடமும், ஆங்காங்கே கும்பலாக நின்று, மைக் கூட இல்லாமல் கத்தியபடி, தடியை வைத்து தடுப்பு அரண்கள் மீது படீரென அடித்து வரிசையை கலவரப்படுத்தி ஒருவர் மீது ஒருவர் பற்றி நெருக்கச் செய்தும்  ’கும்பலா ஏன் வந்து படுத்துறீங்க.. உங்களை யார் குழந்தைகளை கூட்டிட்டு வரச்சொன்னா? ’ என்றும் பேசி அன்பு காட்டிய  காவல்துறையிடமும்  சொல்லிக்கொள்ள இருப்பது ஒன்றே ஒன்றுதான்

"அப்பரசண்டிகளா!!! பேஷ் பேஷ்!! ஜமாய்ச்சுட்டேள் போங்கோ!!!!"

Tuesday, July 16, 2019

புத்தரைச் செலுத்திய விசை



தம்மம் தந்தவன் மொழிபெயர்ப்பு நாவலுக்கு எழுதிய முன்னுரை

புத்தர் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களும் அவரின் உபதேசங்களும் பல்வெறு வடிவங்களில் நாம்மை வந்தடைந்தபடியேதான் இருக்கின்றன. நாடகத் தருணங்கள்நீதிக்கதைகளாக வந்திருக்கின்றன. ஒரு பறவையை வீழ்த்தியவனைவிட அதைக்  காப்பாற்றியவனுக்கே அது உரிமையானது என்கிற கதை மூலமாகவே நான் சிறுவயதில் முதன் முதலாக சித்தார்த்தனைப் பற்றி அறிகிறேன். சித்தார்த்தன் தன் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு ஞானம் அடைய சென்ற அகத் தத்தளிப்பைச் சித்தரிக்கும் இட த்தைப்  பலர் கவிதைகளாக புனைந்திருக்கின்றனர். சித்தார்த்தன் புத்தரான பிறகு அவர் உபதேசித்தவை ஜென் கதைகளாகவும் புத்தரின் சொல் என்ற வகையில் ஓரிரு வரிகளாக தொகுக்கப்பட்டும் இன்றும் நாம் காணும் பதாகைகளிலோ நம் கைபேசியில் வரும் குறுஞ்செய்திகள் வடிவிலோ நம்மை வந்தடைந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு எக்காலத்திற்கும் பொருத்தமான உபதேசங்களை அவர் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எண்ணுகையில் வியப்பு மேலிடுகிறது

இவ்வண்னம் புத்தர் காலத்திற்கு அப்பாற்பட்டு நின்றாலும், அவரை இங்கனம் செலுத்திய விசை எது என்பதை அறியும் ஆவல் எழாமல் இருந்ததில்லை. ஒரு கதையாகக் காண்கையில், நம் மண்ணிம் பெரும் நாயகர்களான ராமனும் கிருஷ்ணனும், வீறு கொண்டெழுந்து,  இவ்வுலகுக்கு புதிய அறத்தை போதித்திருக்கிறார்கள். அதற்குத் தேவையான காரணங்கள் அவர்களின் வாழ்விலேயே  நிரம்பியிருக்கின்றன. அவர்களைக் காழ்ப்பும் வஞ்சமும் சூழ்ந்திருக்கின்றன. தன் இளமையில் உற்றார்களாலேயே அலைகழிக்கப்படுகின்றனர். அவர்களுக்குப் பாதகமானவர்களாக முறையே கைகேயியும் கம்சனும் திகழ்கிறார்கள்அதே உலகியல் பார்வையில் சித்தார்த்தனை நோக்கும்போதுசித்தார்த்தனுக்கு வாய்த்தவர்கள் அனைவருமே அவனுக்கு மிகவும் சாதகமானவர்கள். ஒருக்காலும் அவனுக்கு தீங்கு விழைவிக்க எண்ணாதவர்கள். இவர்களிடமிருந்து விலகி, பிரிந்து சென்று அவன் தனித்தலைய வேண்டி இருந்ததற்கான காரணங்கள் எவை என்பதை அறியும் ஆவல் ஒரு வாசகனுக்குள் இயல்பாகவே தோன்றக்கூடும். காழ்ப்பும் குரூரமும் ஒருவனை விரட்டுவதைப் போல, மாசற்ற அன்புமே கூட ஒருவனைத் விரட்டியடிக்குமா என்ற ஐயம் எனக்குமே தோன்றியிருக்கிறது.  அத்தகைய தருணத்தில்தான் இந்நாவல் வாசிக்கக் கிடைத்தது.




    விலாஸ் சாரங், சிறந்த புனைவாசிரியர்.  இந்நாவலில் புத்தரின் வாழ்க்கையோடு மட்டுமன்றி, மேற்சொன்ன நீதிக்கதைகள், கவிதைகள், உபதேசங்கள் ஆகிய அனைத்தையுமே எதிர்பாராத விதங்களில் கலந்து அளித்திருக்கிறார். கூடவே புத்தரின் வாழ்க்கையில் முன்னும் பின்னும் நிகழந்த சம்பவங்களைத் தொகுத்தும் இதை ஒரு சுவாரசியமான நாவலாக ஆக்கியிருக்கிறார்காலமும் தூரமும் தோன்றிய பின்னர்தான் உலகில் உயிரினங்கள் தோன்றுவதற்கான காரணிகள் உருவாயின என்று சொல்லப்படுகிறது. இந்நாவலில் கூட சில தருணங்களை அவர் காலமும் தூரமும் கொண்டுதான் விளக்குகிறார். அதில் தனக்கான ஒரு சுதந்திரத்தையும் எடுத்துக் கொள்கிறார். உதாரணமாக, கதாபாத்திரங்கள் உரையாடுகையில் இடையே தற்கால சொற்களை கதைகளை உள்நுழைக்கிறார். இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது என்பதால் தன் ஆங்கில வாசகர்களின் புரிதலுக்காக லில்லிபுட், எலிசபெத், கதைகளையும் கதாபாத்திரங்களின் உரையாடலுக்கிடைய உட்புகுந்து உரைக்கிறார். அதுவும் மிக இயல்பாகவே எவ்விடத்தில் துருத்தைக்கொள்ளாமல் அவரின் தனித்துவ நடையுடன் இயைந்து கொள்கிறது. இந்நாவலை வாசிப்பவர்கள், புத்தரின் வாழ்க்கையை மட்டுமன்றி, அன்றைய மக்களின் பழக்கவழக்கங்கள், கல்விமுறைகள் எவ்வாறு இருந்தன அதிலிருந்து பெளத்தம் எவ்வாறு எழுந்து வந்தது என்னும் ஒட்டுமொத்த புரிதலையுமே அடைந்துவிடமுடியும். அவ்வகையில் இது ஒரு சிறந்த துவக்கமாகவும் விளங்கும்.
இம் மொழிபெயர்ப்பிற்கு ஊக்கமளித்த யுகன் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த என் குடும்பத்தாருக்கும், இப்புத்தகத்தை சிறப்பாக வெளியிட்டிருக்கும் நற்றிணை பதிப்பகத்தாருக்கும், மொழிபெயர்ப்பை முதலில் வாசித்து பிழைநீக்கி செம்மைபடுத்திய ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, July 14, 2019

மொழிபெயர்ப்பு அனுபவம்

கேயாஸ் தியரி என்றும் வண்ணத்துப்பூச்சி விளைவு என்றும் தசாவதாரம் திரைக்கதை என்றும் சொல்லப்படுகிற தற்செயல்களின் தொடர்ச்சியினை விளக்க, இந்த மொழிபெயர்ப்புப் பணி என்னை வந்தடைந்ததையும் சொல்லிக்கொள்ளலாம்.

வெண்முரசில் கிராதம் நாவல் எழுதும்போது  ஜெயமோகன் அவர்களுக்கு கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் அவர்களின் நினைவு வருகிறது. அவரை விஷ்ணுபுரம் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கிறார். வந்தவர், இதுபோல பிறமொழிகளின் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதையும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் முன்னெடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அதைச் சிரமேற்கொண்ட ஜெ. தொடர்ந்து பிறமொழி எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதை ஒவ்வொரு விஷ்ணுபுர விழாவிலும் தொடர்கிறார். அவ்வரிசையில் இரண்டாவதாக வந்தவர்தான் மேகாலய எழுத்தாளரான ஜெனீஸ் பரியத் அவர்கள். அவரது ஆங்கில சிறுகதைத் தொகுப்பான Boats on Land யுவபுரஸ்கார் விருது பெற்ற ஒன்று. அதைத் தமிழில் நிலத்தில் படகுகள் என்று விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் மொழி பெயர்த்தோம். அதில் Discovery of flight எனும் சிறுகதையை பறத்தலைக் கண்டடைதல் என்று நான் மொழிபெயர்த்திருந்தேன்.


இனி அங்கிருந்து இன்னருத நிகழ்விற்கு தாவுவோம். தஸ்தவ்யேஸ்கியின் தமிழ்க்குரலாக எம்.ஏ.சுசீலா அவர்கள், அவரது குற்றமும் தண்டனையும், அசடன் உள்ளிட்ட பெருநாவல்களையும், மற்ற நாவல்களையும் சிறுகதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.  சென்ற வருடம் எம்ஏ சுசீலா அவர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் ரஷ்ய கலாச்சார மையமும் சேர்ந்து பாராட்டு விழா நடத்தினோம். அப்புத்தகங்களின் பதிப்பாளரும் நற்றிணை பதிப்பகத்தாரே.  அது தொடர்பாக அவரை அணுகியபோது,  கூடவே, நிலத்தில் படகுகள் தொகுப்பை விரைவில்  கொண்டுவரவேண்டும் என்ற துடிப்புடனும் இருந்தோம்.   அப்பொழுதுதான்  The Dhamma Man என்கிற இந்த நாவலை மொழிபெயர்க்க அளித்தார். அதை வாங்கும் பொழுது, ஒரு வாரம் அந்த நாவலை வாசிக்க மேலும் ஒரு மாதம் அதை மொழிபெயர்க்க என எனக்கு நானே குறித்து வைத்துக்கொண்டேன். அதன்பின் 2018 மேமாத ஊட்டி காவிய முகாம் தலைக்கு மேல் இருக்கிறது.


(கவர்னர்) ஸ்ரீநிவாஸன்

எழுத்தாளர் விலாஸ் சாரங், அடிப்படையில் கவிஞர் மற்றும் சிறுகதையாசிரியர். ஆகவே அந்தக் கச்சிதம் அவரது நாவலிலும் வெளிப்படுகிறது. அவரது  நடையில் மேலும் என்னை ஆச்சரியப்படுத்தியது அவரது கதை சொல்லும் முறை. அது ஆசிரியர் குரலாக துவங்கும். திடீரென ஒரு பணியாள் வழியாக பயணிக்கும். சில நேரங்களில் சித்தார்த்தன் குரலாகவும்.

ஜெயமோகன் எழுதும் வெண்முரசு நாவலில் அத்தனை கதாபாத்திரங்களின் மனவோட்டங்களும் எழுதப்படவில்லை. கிருஷ்ணன், திரெளபதி,கர்ணன் கணிகர் போன்றவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை ஜெயமோகன் எழுதுவதில்லை. அவர்கள் கடவுள்களா மானுடர்களா என்ற புதிரை லாவகமாக கையாண்டு வருகிறார். அதேபோல, இந்நாவலில் விலாஸ் சாரங் அவர்களும் சித்தார்த்தனின் மனம் என்ன நினைக்கிறது என்று எழுதியது போல் புத்தரின் மனவோட்டத்தை எழுதுவதில்லை. மேலும் காலம் மற்றும் தூரம் போன்ற காரணிகளைக் கொண்டு நாவலை நகர்த்திச் செல்வார். நாவலை படித்து முடித்து இந்தப் புரிதலை அடைந்தவுடன் நான் மொழி பெயர்க்கத் துவங்கினேன். அச்சமயத்தில்  நான் செய்த மிகை பாவனை ஒன்று உண்டு

முதலில் அதை தட்டச்சிடாமல் நற்றிணை பதிப்பகம் அளித்த கநாசு படம் போட்ட  நாட்காட்டியில் எழுதத்துவங்கினேன். தட்டச்சிடாமல்  எழுதுவதில் ஒரு இன்பம் இருக்கிறது. நான் என்னை கநாசு முதலான மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் வைத்து நினைத்துக்கொண்டேன் அல்லது மீண்டும் சரிபார்க்க வசதியானது என எண்ணிக்கொண்டேன்.  எழுத்தாளர் யுமாவாசுகி மற்றும் எம்.ஏ.சுசீலா ஆகியோரின் மொழி பெயர்ப்புகளை விரும்பி  படித்திருப்பதால் அவர்களை ஆதர்சமாக கொண்டு எழுதத துவங்கினேன்.  ஒரு மாதத்தில் முடித்து மே மாத  ஊட்டி காவியமுகாமிற்குள் அளித்து விட வேண்டும் எனத் துவங்கியவன், ஒரு  நாளைக்கு ஒரு பக்கம் என எழுதி 2018 ஆகஸ்டு மாத ஈரோடு புத்தக கண்காட்சிக்குள் அளித்து விட வேண்டும் என என் விதிமுறைகளைச் சற்று தளர்த்திக் கொண்டேன். அதற்குள் ஒரு குழுவாக இணைந்து நிலத்தில் படகுகளை சரிபார்த்து அளத்துவிடலாம் என அதற்குள் இறங்கி அதை அளித்து வைத்தோம். அதற்குள் செப்டம்பர் வந்திருந்தது. நான்  மொழிபெயர்ப்பில் இரு பக்கங்கள் எழுதி முடித்திருந்தேன்.

நடுவே குமரகுருபரன் விருது விழாவிற்காக கவிஞர். கண்டராதித்தன் படைப்புகளைப் படித்தேன். என் முதல் மேடை உரை அங்கு நிகழ்வதால் அதற்கு முன்னுரிமையை அளித்தேன். அதன்பின் டிசம்பர் மாதம் நிகழவிருக்கும்
விஷ்ணுபுரம் விருது விழாவின் நாயகரான பேராசிரியர்: ராஜ் கெளதமன் படைப்புகளையோ அவரது திறனாய்வுகளையோ நான் அறிந்தவனில்லை. ஆகவே அதை முடித்துவிட்டு இங்கு வரலாம் என அவர் புத்தகங்களை படிக்கத் துவங்கினேன். சிலுவைராஜ் தொடர் நாவல்களை படித்து ஆகோற்பூசல் வந்திருந்தேன். அதற்குள்  விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளரின் பட்டியலை ஜெ. அளித்தார். ஸ்டாலின் ராஜாங்கம், எஸ்.செந்தில்குமார்  என நான் அதிகம் படித்திராத எழுத்தாளர்கள் பட்டியல். ஆகவே அவற்றையும் வாசிக்கத்துவங்கியிருந்தேன். நல்லவேளையாக சுனில் கிருஷ்ணன் அரங்கு எனக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. ஆசுவாசமாக உணர்ந்தேன்.

விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து 2019 ம் ஆண்டு தைப்பொங்கலும் முடிந்திருந்த அந்த தருணத்தில் நான் மூன்று அத்தியாயங்களை எழுதியிருந்தேன்.  சென்னைப் புத்தக கண்காட்சியே கடந்துவிட்டிருந்த்து. ஆனால் அந்த எட்டு மாதங்களில் காணும் கலைப்பொருள்களில், பைக் மற்றும்  கார் ஸ்டிக்கர்களில், சுடிதார் சேலை டிசைன்களில், மேகத்தின் வடிவங்களில் புத்தரே கண்ணில் தென்பட்டுக்கொண்டிருந்தார். கடன் பட்டார் நெஞ்சம் போல பதறிக் கொண்டிருந்தது மனம். தம்மன் என்கிற பெயரில் மொழிபெயர்த்திருந்த அந்த புத்தகத்தின மற்ற அத்தியாயங்களை மனதில் மட்டுமே எழுதிவைத்திருந்தேன். மீண்டும் அதை டைரியில் தொடர்ந்து எழுதத் துவங்கினேன்.  என் மீது எனக்கிருந்த கோபத்தில்  வாட்சப்பை அன்இன்ஸ்டால் செய்ததை எண்ணி இப்பொழுதும் வியந்துகொள்வதுண்டு. முழுவதையும் எழுதி முடித்த போது 2019 ம் ஆண்டின் ஊட்டி காவியமுகாமற்கான படைப்புகள் வரத்துவங்கியிருந்தன.



ஆனால் இத்தனை வாசித்திருக்காவிடில் விலாஸ் சாரங் எளிதாக தொகுத்துச் சொல்லிச்செல்லும் வேத காலமும் இந்திய மரபும் பிடிபட்டிருக்குமா
என்பது ஐயமே!
வேத கால நெறிகள்,உபநிடத காலம் அதைத்தொடர்ந்து பெளத்தத்தின் எழுச்சி என அனைத்தும் இறுதியில் நம்மால் விளக்கக்கூடிய அளவில் நாவலுக்கிடையே புகுத்துவது என்பதே விலாஸ் சாரங்கின் வெற்றி. அதிர்ஷ்டவசமாக முன்பே வெண்முரசு வாயிலாக இது எனக்கும் அறிமுகமாகிவிட்டிருந்தது. சொல்லப்போனால், இதில் வரும் சிருஷ்டி கானம் உபநிடத வரிகள் போன்றவற்றை ஏற்கனவே ஜெயமோகன் அவர்களின் வலைதளத்தில் படித்தும் இருக்கிறேன். குறிப்பாக  சொல்வளர்காடு நாவல். இந்நாவல் அங்கிருந்து வேறு கோணத்தில் இது நகர்ந்தாலும் அடிப்படைகளின் புரிதல் இருந்தது.

அதேபோல, மூன்று மாதங்களில் எழுதக்கூடிய ஒன்றுதானா ஒருவருடம் இழுத்தது என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. ஒருநாளில் எளிய தியானத்தில் அடைந்த மெய்மையை அடைய முடியாமலா சித்தார்த்தன் அத்துனை வருடங்கள் அலைந்தான்? ஞானம் அடைவது எங்கனம் என்று ஜென் குருவிடம் சீடன் கேட்கிறான். அவர் தன் கையில் உள்ள பிரம்பால் அவன் தலையில் அடிக்கிறார். அந்த்பிரம்படி கணம் நம்மை வந்தடைய நாம் காத்திருக்கத்தான் வேண்டும்

அதன் பின்னர்தான் நான் துவக்கத்தில் கூறிய மிகை பாவனையின் பக்க விளைவு ஆரம்பமானது. அதை நான் இனி தட்டச்சு செய்து பதிப்பகத்தற்கு அனுப்ப வேண்டும். அது மட்டுமே மீண்டும் மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டது. யாரிடமாவது தரலாம் எனில் அவர்களுக்கு என் கையெழுத்து புரியவில்லை. மேலும் இன்னொரு முறை நாமே சரிபார்த்தவிதமாகவும் ஆகிவிடுகிறது என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால் அது தவறான எண்ணம். தட்டச்சு செய்வதே சிறந்த வழி அல்லது நமக்காக தட்டச்சு செய்ய ஆட்கள் இருக்கவேண்டும்.



இறுதியில் மொழிபெயர்ப்பின் படிப்பினைகளாக நினைத்துக்கொள்ள  விரும்புவது கீழ் கண்டவை:-


அ) நம்மால் பதினைந்து நிமிடங்களுக்குள் ஒரு கட்டுரையோ அல்லது கருத்தைத் தொகுத்தோ  எழுத முடிகிறது என்பதை வைத்து மொழிபெயர்ப்பை அணுகலாகாது. மூலத்தின் வார்த்தைகளை தவறவிடாமல் பொருள் மாறாமல் சேர்க்க அதைவிட நாலு மடங்கு நேரமாகறது

ஆ) அச்சுப்பிரதியின் ஒரு பக்கம் என்பது நமக்கு இரு பக்கங்கள் எனக் கணக்கிடவேண்டும்.

இ) மொழி பெயர்ப்பிற்கு உகந்த நேரம் எது என்பதைக் கண்டறிய வேண்டும்

ஈ) நாவலின் கனமான பக்கங்களை மொழிபெயர்க்க மற்ற அத்தியாயங்களை விட நேரம் அதிகமாக ஆகிறது. இதில் யசோதரையும் ராகுலனும் புத்தரைச் சந்திக்கும் இடம் எனக்கு அத்தகைய சோர்வை அளித்தது.

உ) கையால் எழுதி சீன் போடுவதைவிட, நேரடியாக தட்டச்சிவிடுவதே நலம்

ஊ) மேற்சொன்னவை வெறும் மொழிபெயர்ப்பிற்கான புரிதல்களே! அலுவலக குடும்ப நெருக்கடிகள் அந்தந்த சூழலுக்கானவை

ஒரு நாளில் பத்து மணிநேரம் சராசரியாக அலுவலக வேலையே எடுத்துக்கொள்கிறது.  இந்த வேலையானாலும், இதர லெளகீக கடமைகளானாலும், இலக்கிய வாசிப்பானலும், என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இத்தனைக்கும் நடுவில் இதை செய்து முடிக்க வேண்டுமா என்று எண்ணும் போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொள்வது ஒன்றுதான். 'இதைத் தேர்ந்தெடுத்தது நீ!'


இன்று இந்த புத்தகம் வெளியான சமயத்தில் நேரடிப் பங்கு வகிக்கும் இருவருக்கு நன்றி சொல்லவேண்டும். ஒருவர் நற்றிணை யுகன். பதிப்பாளர் என்பதையும் தாண்டி அவர் பொறுமையாக காத்திருந்து, அடிக்கடி தொலைபேசியில் அழைத்து உற்சாகமூட்டியபடி இருந்தார்.   அவருக்கு அளித்த ஒரு மாதத்திலேயே மீண்டும் ஒருமுறை பிழை பார்த்து சிறந்த வடிவமைப்பில் பதிப்பிக்கவும் செய்துவிட்டார்.  இரண்டாவதாக, திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள். அவர்தான், முதல்முறை படித்து அதை திருத்தியும்  அளித்தார். தம்மம் என்று பல நாவல்கள் வந்திருப்பதால் தம்மன் என்னும் பெயருக்கு மாற்றாக யுகன் கூறிய மற்ற பெயர்களில் தம்மம் தந்தவன் என்ற  பெயரே பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம். இவ்வாறாக முன்பு கூறிய தற்செயல்கள் ஒரு நிலையை வந்தடைந்தன

இவர்களைத் தவிர மறைமுக காரணமாக குடும்பத்தினரும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களும் மற்ற நண்பர்களும்  இருக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக நான் மனம் சோர்ந்து போகும்போதெல்லாம் மனச்சோர்வு என்று  அதை வெளியே சொல்லக்கூட நாணும் வண்ணம்  தன் குன்றா செயலூக்கத்தினூடே சோர்வென்பது இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஜெயமோகனும் இருக்கிறார்
தொடர்புடைய பதிவு:- புத்தரைச் செலுத்திய விசை




Saturday, July 13, 2019

சாம்ராஜ்-ன் ஜார் ஒழிக சிறுகதை தொகுப்பு பற்றிய கலந்துரையாடல்


எழுத்தாளர் சாம்ராஜின் ஜார் ஒழிக குறித்த கலந்துரையாடலில் பேசியதின் எழுத்து வடிவம்

வாசகசாலை நண்பர்களுக்கு வணக்கம். தமிழகந்தோறும் இலக்கிய சந்திப்புகளை நிகழ்த்திவருவது என்பது சாதாரண வேலையில்லை. மாத கூட்டங்கள் நடத்துவதில் நானும் எனது சில நண்பர்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். வெண்முரசு நாவலுக்கான கூட்டங்கள் மூலம் அதை நடத்துகையில் அதில் உள்ள ஆனந்தத்தோடு சேர்த்து இடர்களையும் அறிவோம். அவ்வகையில் வாசகசாலை இன்னும் பலதரப்பட்ட படைப்புகளையும் அறிமுகம் செய்து, வெவ்வேறு வாசகர்களையும் சந்தித்து இதை முன்னெடுப்பதில் இன்னும் நிறைய பக்குவமும் விடாமுயற்சியும் தேவைப்படும். கார்த்தி உள்ளிட்ட வாசகசாலை நண்பர்களுக்குப் பாராட்டுக்கள். நானும் சில கூட்டங்களில் இவ்வாறு வாசகனாக கலந்து கொண்டிருக்கிறேன். ஜோடி குரூஸ் கலந்துரையாடலும் வாசகசாலையின் விருதுவிழாவும் அதில் நினைவில் இருக்கின்றன. ஸ்டார் எழுத்தாளர்களின் அரங்கிறகுத் தான் நானும் வந்திருக்கிறேன் என்பதை ஒருவித குற்ற உணர்ச்சியுடன் நானும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.



            இன்றும் ஒரு ஸ்டார் எழுத்தாளரின் அரங்கு. அந்தவகையில் குற்ற உணர்ச்சி தொடருகிறது என்றே வைத்துக்கொள்ளலாம்.



 இலக்கிய உலகம் என்பது எப்பொழுதும் ஒரு தனித் தீவு போலத்தான். பொது வாசகர் உலகத்திலிருந்து விலகியே இருப்பது. பொது வாசகர்களுக்கு இலக்கியகர்த்தாக்கள் நேர்மறையாக அறிமுகமாகிறார்கள் அல்லது எதிர்மறையாக. நேர்மறையாக என்றால் கற்றதும் பெற்றதும் கதாவிலாசம் வழியாக என வைத்துக்கொள்ளலாம். தற்பொழுது எல்லாம், தமிழ் இலக்கியத்தில் பல எழுத்தாளர்கள் சர்ச்சை மூலமாகத்தான் பொது வாசகருக்கு அறிமுகமாகிறார்கள். அதன் பின் அவரது படைப்புக்களை வாசகன் படிக்கத் துவங்குகிறான். அவ்வாறு, அந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து வரும் வாசகர்கள், அதன்பின் சமூகம் இயல்புநிலைக்குத் திரும்பிய பின்னரும்  அந்த எழுத்தாளரை சர்ச்சைகளுக்கெல்லாம்  அப்பாற்பட்டு அவரின்  எழுத்துக்களுக்காக தொடர்ந்து வாசிக்கிறார் என்றால் அது அந்த எழுத்தாளர் அடைந்த வெற்றி என்று வைத்துக்கொள்ளலாம். அவ்வாறு தொடர்ந்து வாசிக்க வைக்கும் எழுத்தாளர்கள் வெகு சிலரே.



நான் ஜெயமோகன் சாம்ராஜ் இருவரையும் அறிந்தது இப்படிப்பட்ட சர்ச்சைகள் வழியாகத்தான். அந்த வகையில் அதில் இரண்டாமிடத்தை சாம்ராஜ் க்கு அளிக்கலாம்.

 சர்பத் கடையைத்தாண்டி முவிலேண்ட் வந்த பிறகுதான் அவர் படைப்புகளை வாங்கிப் படிப்பதற்கான ஆர்வம் ஏற்பட்டது. பட்டாளத்துவீடு தொகுப்பை தொடர்ந்து அடுத்த சிறுகதை தொகுப்பு இந்த ஜார்ஒழிக!





அவரின் இந்த ஜார்ஒழிக தொகுப்பினைப் பற்றி பேசுகையில் அவர் எதற்காக எழுதுகிறார் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் வழியாக இந்த உரையைக் கொண்டு செல்லலாம் எனத் தோன்றியது. இதில் எனக்கு இரு நிலைகள் தோன்றுகின்றன. முதலாவது யாருக்காக எழுதுகிறார் என்பது, இரண்டாவது  ஏன் எழுதுகிறார் என்பது

முதலாவதில் அவரது வாசகராக யாரைக் கருதுகிறார்  என்று  ஒரு உட்கேள்வி  இருக்கிறது. அதிலிருந்து துவங்கலாம் என்று நான் நினைக்கிறேன்

            உதாரணமாக, ஒரு விஷ்ணு கோயில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில், கோயில் வாசலில் ஒருவர் கரும்பலகையில் இவ்வாறு எழுதி வத்திருக்கிறார்,,,

            'எழுந்தால் பாம்பு தலையில் கொத்திவிடும், நகரவிடாமல் இவன் காலை ஒருத்தி இறுக்கிப் பிடித்திருக்கிறாள். அதையும் உதறி இறங்கினால் இருப்பதோ ஒரு கடல். அப்படியிருக்கையில் இவனே தூங்கவில்லை. தூங்குவதுபோல நடிக்கிறான்.  இவனா நம் கஷ்டத்தை தீர்த்துவைப்பான்' என்று அதில் இருக்கிறது.

 இதைக் காணும் ஒரு வைணவர் மிகவும் புண்பட்டுப் போவார். எழுதியவனைப் பார்த்துத் தூற்றுவார். இதை ஒரு  அல்லது நாத்திகரோ இடதுசாரியோ ( அல்லது சைவரோ) கண்டால் எழுதியவரைப் பாராட்டுவார்கள்.

இனி அந்த உரையின் கீழே ஒரு ஆழ்வார் பெயரை இடுகிறோம். அதை எழுதியவர் பேயாழ்வார் என்று. அப்பொழுது இதைப் பற்றி முன்பு உரைத்தவர்கள், அப்படியே தான் உரைத்ததற்கு எதிர்நிலையை எடுப்பார்கள்.



 ஆனால் இருபக்கங்களிலும் ஒருசிலர் இருப்பார்கள், அவர்கள் முன்பும் சரி இப்பொழுது அவர் யாரென தெரிந்த பின்பும் சரி அதை ஒரு பெரும் புன்னகையோடே கடந்து செல்வார்கள். ஆமாம்யா.  நம்ம பிரச்சனைதான் சாமிக்கும் இருக்கு.. தலைக்கு மேல வீட்டுக்கடன் கொத்த ரெடியா இருக்கு.. நகரவிடாம வீடு இறுக்க பிடிச்சுகிட்டே இருக்கு. தப்பிச்சு போகலாம்னா, மொத்தமா மூழ்கித்தான் போகணும். அதனால், இந்த வீடே இப்போதைக்கு பரவால்ல. ஆண்டவா உன்னமாதிரியே தூங்குன மாதி இருக்க எனக்கும் வழிபன்ணா நானுமே சமாளிச்ச்டுவேன் ந்னு வேண்டிகிட்டு வருவார் ஒருவர். மற்றவரோ பாவம் நம்ம கஷ்டம்தான் இவருக்கும் போலிருக்கு. நம்பிக்கையா இருங்க தோழர்னு சொல்லி சிரித்துவிட்டுச் செல்வார். இவ்வாறு இரு பிரிவிலும் இதை உணர்ந்து கடக்க சிலர் இருப்பார்கள். அவர்களே சாம்ராஜின் வாசகர்கள் என்று சொல்லலாம் அந்த ஒரு புரிதல் இருப்பவரே சாம்ராஜை அணுக்கமாகப் புரிந்துகொள்ளமுடியும்.



            சாம்ராஜின் தொழில்புரட்சி கதையை வைத்து இதை அணுகுவோம். மிராச்லோவ் பென்கோ எழுதிய சிறுதையை லெனினை வாங்குதல் என்ற பெயரில் சுகுமாரன் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தக்கதையைப பற்றி நண்பர் பாரி சில மாதங்கள் முன்பு உரையாடினார்.நான் அவரின் அந்த ஒரு கதையத்தான் படித்திருக்கிறேன். அது முழுக்க முழுக்க கம்யூனிஸ்டுகளைப் கிண்டல் செய்யும் கதை. அதைப் படித்தால் தான் கம்யூனிஸ்டுகளை கிண்டல் செய்வதற்கும் பகடி செய்வதற்கும் உள்ள வேறுபாடு புரியும். மிராச்லோவ் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தவர்தான்.  ஆனால் ஒருவர் தன் வெறுப்பால் கிண்டல் செய்வதற்கும்  இதற்கும் வித்தியாசம் உண்டு.



லெனினை வாங்குதல் கதைக்கும் சாம்ராஜின் தொழிற்புரட்சி கதையையும் ஒரு சோற்றுப் பதமாக எடுத்துக்கொண்டு சாம்ராஜின் கதைகளை அணுகலாம்

அதை ஒரு மோசமான கிண்டல் எனச்சொல்லலாம். ஆனால்  இது பகடி நம் பாஷையில்  சொன்னால் கலாயப்பது..

அப்பர் எழுதிய பாடல் ஒன்று உண்டு.

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை நாகம் அஞ்சி ....திங்களை மின்னென்று அஞ்சி என்று,

இந்தப்பாடலை விளக்கிய என் ஆசிரியர் சுற்றிலும் நாகத்துக்கும் நங்கைக்கும் பயந்த பக்கதர்களைக் கண்டுதான் இறைவன் புன்னகைக்கிறான். இது அப்பர்  செய்யும் பகடி என்று ஒரு விளக்கம் அளித்தார். அப்படியும் பொருள் கொள்ளலாம் தான்.அதனால் பக்தர்கள் கோபித்தால் அது யார் தவறு.

இந்த புரிதலோடு சாம்ராஜின் கதையை அணுகுபவர்கள்கூட அவர் இதில் மறைத்து வைத்திருக்கும் பல கன்னிவெடிகளுக்குள்  சிக்கக்கூடும். அதில் அவர்களின் அகங்காரமே சிதறக்கூடும். அல்லாவிடில், அது சம்பந்தப்பட்ட மக்களே அதைக் கவனிக்காமல் காலைவைத்து கலங்கவும் கூடும்.



            குள்ளன் பினு தன் வண்டியை நிறுத்த இடம் தேடுவது, நீரோட்டம் பார்ப்பவன் தண்ணீர் தேடுவது போல இருக்கும் என்று சொல்வார். ஒரு நவநாகரீக இளைஞனை குள்ளன் என்ற பதமே தொந்தரவு செய்யும். இது வெகுஜன இதழில் வந்திருந்ததா என்று தெரியவில்லை. வந்திருந்தால் அவர்களே மாற்றச்சொல்லியிருப்பார்கள் என்றும் கூட எதிர்பார்க்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்த்தால்தான் புரியும் இது குள்ளன் கதைல்ல. அவன் உயரமானவன் என்று சொல்லும் கதை என்று.. இறுதியில் அவன் காணும் பிம்பம் அவனிடம் சொல்கிறது. தம்பி, இனி  உனக்கு மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு என்று. இங்கே அவர் கிண்டல் செய்யவில்லை அது ஒரு கரிசனம்தான். முன்பு அதைச் சொன்னால்தான் பின்பு இது உரைக்கும். ஒரு பகடியிலிருந்து ஆக்ரோஷத்துக்கு வந்து திகைப்பில் முடியும் அந்த சிறுகதை.



            பொதுவாகவோ இடதுசாரிகள் பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் அனைவர்  மீதும் கரிசனம் கொண்டவர்கள். அதை தீவிரமாக அணுகாமல் சற்று இளகிய மனதுடன் அணுகினால் வருவது இவர் படைப்புகள். ஏனெனில், மிகத்தீவிரமாக அல்லது அதே தீவிரத்தோடு அதைக்கடத்தும்போது அந்த பட்டியலில் இருக்கும் பல எழுத்தாளர்களொடு ஒருவராக இவரும் சென்று அமர்வார் என்று எண்ணத் தோன்றுகிறது. அவ்வரிசையிலிருந்து இப்படி தனித்திருக்க மாட்டார் என்று சொல்லலாம்.

உதாரணமாக, மல்லிகாவை கூட்டிப்போகிற ஆறுமுகம் அவளை என்ன செய்யப்போகிறான் எனபதை நமக்கு நேரிடையாக சொல்வதில்லை.  ஆறுமுகம் அவளிடம் வந்து சொல்லும் ஒரு விஷயம். பரங்கிமலையில ஜோதின்னு ஒரு தியேட்டர் இருக்காம் அதுல நான் வேலைக்குப் போறேன்ன்னு.. இதிலிருந்து நாம்தான் சில்வற்றை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அவன் இவளை வெறும் காமத்திற்காக மட்டுமே வைத்திருக்கிறானா என்பது. அதற்கான மர்ம முடிச்சான  இடமாக இது இந்தக் கதையில் உண்டு. ஆனால் பிறகு அவளை அவள் அண்ணன் பிரித்து  அடித்து இழுத்து வருகிறான்.இப்படி உறவுகளால் அலைக்கழிக்கப்பட்டலும் அவளின் தனிப்பட்ட ரசனை அந்த சினிமா ஆர்வம்தானே.  அது உடனே மாறுவதல்லை. அவள் பொய் சொல்லிவிட்டு சினிமா பார்க்க கிளம்பத்தான் செய்கிறாள். சில ஏமாற்றங்களுக்காக  அவளின் சினிமா பைத்தியம் இல்லாமல் போய்விடுமா என்ன?  பொதுவாகவே, அப்படிப்பட்ட பைத்தியங்கள் விட்டு போகக்கூடியவையா என்ன? அந்த பைத்தியங்கள் விட்டுப்போவதில்லை. நமக்குமே அது பொருந்தும்தானே. இங்கே எத்தனை பேர் இலக்கிய கூட்டத்துக்கு போகிறேன் என்று வீட்டில் ஒவ்வொருமுறையும் சொல்லிவிட்டு கிளம்புகிறீர்கள். உங்களின் உத்தமர் யாரோ அவரே முதலில்  கை உயர்த்துங்கள்.



          சாம்ராஜை தன் புலி எதிர்ப்பு கவதைக்காகவும் பகடிக்காகவும் ஷோபாசக்தியுடன் ஒப்பிடுபவர்கள் உண்டு. ஆனால், அவர்கள் இருவருக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு என்று நான் நினைப்பது  இதுதான். ஷோபா செய்வதும் ஒருவகையில்  கிண்டல். கண்டிவீரனில் ஒரு இடம், கண்டிவீரன் தன்னைக் கடத்தி வைத்திருப்பவரைத் தாக்க வரும் பெரும் இயக்கத்தினரைச் சுட்டு விடுகிறான். அப்போது ஷோபா சக்தி அதை வர்ணிக்கும் பொழுது, துப்பாக்கிச் சத்தம் கேட்டால் எப்படி ஒளிந்து கொள்ள வேண்டும் என அவர்களின் இயக்கம் கற்றூக்கொடுத்திருந்தது அதன்படி அவர்கள் அனைவரும் சென்று ஒளிந்து கொண்டனர்' என்று சொல்வார.

 இது லட்சியவாதிகளை நோக்கி அவர் செய்யும் கிண்டல் என்றே வெளிப்படுகிறது. அது பொதுவாக வெளியே இருப்பவர் செய்வது..அதில் ஒரு நக்கல் இருக்கிறது..

சாம்ராஜின் கதையிலும் ஒரு இடம் வருகிறது,

விசைத்தறி ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சத்தத்திற்கிடையே புரட்சி பேசும் தோழர் ஒருவர், 'தோழர் நாம் இந்த அரசாங்கத்தை ஏதாவது செய்யனும் தோழர்.. 'என்று ஒருவர் உரக்கப் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது திடீரென மின்சாரம் போய் விடுகிறது. இடமே அதைதியாகி விடுகிறது. அப்பொழுது பேசிக்கொண்டிருப்பவர் திடீரென சத்தத்தைக் குறைத்து, 'ஏதாவது பண்ணனும் தோழர் ' மிகவும் மெதுவாக..

 இதில் ஒரு அப்பாவித்தனமே வெளிப்படுகிறநு..இதை உள்ளே இருப்பவர்தான் செய்யமுடியும்.. முன்பு சொன்ன அந்த ஆழ்வார் போல..அப்பர் பாடல் போல.

                        அவர் ஏன் எழுதுகிறார் என்று பார்க்கும்போது,   ஒரு இடத்தில் நான் கண்ட என் அனுபவத்தை வைத்துத்தான் பொருத்தப் பார்க்கிறேன்.  சில வருடங்களாகவே புரட்சியாளராக  தன்னை உணர்பவர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது என நான் நினைக்கிறேன். அது இன்றைய முதலாளித்துவ உலகில் இடதுசாரிகளை  கேலியாக பார்க்கும் பார்வை அதிகரித்து விட்டிருக்கிறது. முன்பு சொன்ன மிராச்லோவ் பென்கோவின் கதை போல இப்போதும் கேலிக்கதைகள் எழுதப்படுகின்றன . நான் அறிந்த எங்கள் ஊர் நண்பர்களே, இதிலிருந்து மீள தங்களுக்கான சாதிக்கட்சி ஆதரவாளராக மாறி வருகிறார்கள். ஆகவே அதையே  சாம்ராஜ், ஒரு நையாண்டி மூலம் கடந்து வருகிறாரோ என்ற எண்ணம் எனக்கு உண்டு.



          அதில் இவர் பல கூறுகளை உள்ளே நுழைக்கிறார். பல நுட்பமான பகடிகள் உண்டு. பல புராண சம்பவங்களையும் கோர்க்கிறார். குருசேத்திர யுத்தத்தில் துரோணரிடம் தருமன் சொல்கிறான். இறந்தது அஸ்வதாமன் என்கிற ஒரு யானை என்று.. அப்போது யானை என்றூ சொல்லும்போது கிருஷ்ணன் சங்கு ஊதி அதைக் கேட்க விடாமல் செய்தான் என்பது  நாமறிந்த புராண கதை. அதை யதார்த்த களத்தில் பார்க்கும்போது ஜார் ஒழிகவில் கணேசன் பொண்பார்க்க செல்கையில் அவன் சரளமாக புழங்கும் 'ங்கொம்மாளோக்க ' என்ற வார்த்தை வெளிப்படுகையில் ஒருவர்ஒரு தாம்பாளத்தை தவறீ கீழே போட்டு விடுவார்கள். அதில் அந்த வார்த்தை கேட்காமல் போய் அவனுக்கு திருமணமே நடந்துவிடும்..



            மருள் என்னும் கதை.. அங்கு தொழிற்சங்கம் தோற்று விட்டது. முதலாளி சூப்பர்வைசர் எல்லாம் கண்டால் அனைவருக்கும் பயம். சங்கம் வைக்க முயலும் ஒருவன்இறந்தே போகிறான்..ஆனால் ஒரு கிறுக்கன் அங்கு ஒருநாள் வேலைக்குபோகிறான். இப்போ அனைவருக்கும் அந்த பயத்தை விலக்கி விட்டு தனிப்பேருந்தில் ராஜாவாக திரும்புகிறான். அவன் அங்கு தொழிலாளர்களுக்கு ஒரு நம்பிக்கைய அருளிவிட்டான். தொழிலாளர்கே் என்றில்லை, பாவப்பட்ட அனைவருக்குமே நம்பிக்கையும் நியாயமும் கிடைக்க வேண்டும். சாம்ராஜைப் பொருத்தமட்டில் அவருக்கு அதை நிறைவேற்ற அதற்கு அவர் நம்பும் சங்கம் தேவை இல்லை கோஷம் தேவை இல்லை. ஆனால் ஒரு கிறுக்கன் இதை சாதித்தாலுமே பொதும் ( கலகக்காரன்). ஒரு மாந்திரீகன் தூண்டிவிட்டாலுமே போதும். தார் மிதித்த காலில் அவன் ஞானமடைந்தாலும் போதும்.  லட்சுமி சாமியாவதும், பினு உயரமாவதும், செவ்வாக்கியம் முதலாளியம்மாவாவதும் அவர்கள் மீது அவர் கொள்ளும் அந்தக் கரிசனத்தால்தான். அங்கு ஒரு சாமியாடி வருவதோ ஒரு ஏவல் பில்லி, மாந்திரீகம் வருவதோ அவருக்கு ஒரு நெருடலாக இல்லை. கதையும்  அதை வைத்து நகரவில்லை.



       இது தவிர முக்கியமான இன்னொரு விஷயத்தைச் சொல்லவேண்டும். அது அவரது கதைகளின் நடை. ஒன்று, அது எங்கும் உணர்ச்சிவசப்படுவதில்லை இரண்டு அது நகைச்சுவை என்பதால் எங்கும் சம்பவங்களை எழுத்தின் மூலம் விவரித்துச் சொல்லும் முறையைக் கொள்வதில்லை. உதாரணமாக, முன்பு சொன்ன ஷோபா சக்தியின் வரிகள் போல வசனங்களில் உள்ள நகைச்சுவை அல்ல. அது சுஜாதா பாணி. கொச்சின் ஹனீபாவை குட்டி பாட்டிலுக்குள் அமுக்கி வைத்ததைப் போல என்று இதிலேயே ஒரு வரி வருகிறது. ஆனல் அதுவல்ல நான் சொல்வது.. சாம்ராஜின் பலமாக நினைப்பது நான் சொல்வது  அந்த நிகழ்வில் நடக்கும் ஒரு அபத்தம். அதை அப்படியே கடத்தும் எழுத்துத்திறன். தொழிற்புரட்சி போல, ஓம்லக்கா சொல்வதைபோல, மருள் கதையில் நடராஜன் சிலையின் மணிக்கட்டில் கட்டியிருக்கும் சிவப்பு ஷால் போல..மல்லிகாவின் செவிட்டுக்காதில் ரகசியம் சொல்லிப்போகும் ஆறுமுகம் போல அதை நாம் ஒரு காட்சியாக உணர்ந்து உடனே அந்த அபத்தத்தை எண்ணி புன்னகையும் பூக்கிறோம். அவர் அவ்விதத்தில் ஒரு தனித்துவமான எழுத்தாளராக இருக்கிறார்.

இவ்வாறு இடதுசாரிகளின் கரிசனம் பற்றி மட்டுந்தான் பேசுவியா.அவர்களின் குரூரம் பற்றி பேச மாட்டாயா என்று உங்களில் ஒருவர் அதே பகடியோடு கேட்கலாம். ஆகவே, இடதுசாரிகளின் குரூரம் பற்றியும் நாம் இங்கு சொல்லியாக வேண்டும். லட்சியம் என்று பேசி தன் எதிரிகளைக் கொண்று குவித்த ரஷ்ய சீன வரலாறும் நம் கண்முன் இருக்கிறது தானே.



        சாம்ராஜிடமும் அது இருக்கா என்றால் இருக்கு என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.  முத்திருளாண்டி நரம்புத் தளர்ச்சி வந்து திண்ணையோடு ஒடுங்கி இறந்ததும் போகிறார். சரி விட்டுரலாம்.. ஆனால் அங்க ஒரு பெருச்சாளி வந்து அவரின் குறியைக் கடுத்துக் குதற வேண்டுமா? அது செவ்வாக்கியமே செய்தாள் என்றாலும்? பரமேஸ்வரியின் மாமனார் படுத்த படுக்கையானது போதாதா..சர்க்கரை நோயாளியான அவருக்கு தினனும் சர்க்கரை அதிகம் போட்டக் காபிதான் கொடுக்கணுமா..இதெல்லாம் உங்களின் குரூரம்தானே என்று கேட்கலாம்.இப்படிக் கேட்டு இதைக் குரூரமாக நிறுவுவதுதான் உன் குரூரமா என்று அவர் பதிலுக்கும் கேட்கலாம்.



நான் முன்பு கண்ட ஒரு திரைப்படம் நினைவிற்கு வருகிறது. முரளிகோபியின் லெப்ட் ரைட் லெப்ட்.. அதில் அவர் ஒரு தோற்றுப்போன இடதுசாரி.. அவர் முன் அமர்ந்திருக்கும் பாட்டி தன் மகள் சிறு வயதில் கவனிப்பாரற்று இறந்த கதையை அவர் மனைவிக்குச் சொல்லிக்கொண்டிருப்பாள். அப்போது அவருட்டை ரத்த அழுத்தம் எகிறும்.. அப்போது அவள் மனைவி இடைமறித்து சிவாரசியமான சம்பவங்களைக் கேட்பார். அவர் ரத்த அழுத்தம் குறையும்.

   

யாருக்காக எழுதுகிறார் என்ற என் முதல் கேள்விக்கு மீண்டும் வந்தால் அவர், அனைத்துக்  கதைகளையும் தனக்காகத்தான் எழுகிறார், தன் ரத்த அழுத்தத்தைக் குறைத்துக்கொள்வதற்காக எழுதுகிறார் என்று சொல்லலாம். தன் வாசகரின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் எழுதியிருக்கிறார் என்றும்  சொல்லமுடியும். சாம்ராஜ்க்கு முதலில் நன்றி சொல்லவேண்டியிருப்பது அதற்காகத்தான்.