Sunday, June 15, 2025

தக் லைஃப்

கவியரசு பட்டத்தை கண்ணதாசனுக்காக துறக்கிறேன் என்று வைரமுத்து அறிவித்தார். 'என்னா மனுசன்...!' என்று நெக்குருகி பீடியைப் பற்ற வைத்த போது கவிப்பேரரசு என்று அறிவித்துக் கொண்டார். உலக நாயகன் என்று யாரும் தன்னை அழைக்க வேண்டாம் என்று கமல் அறிவித்த போது மேற்படி சம்பவம் மறந்து போயிருந்தது. விண்வெளிநாயகாஆஆ என்ற வீறிடலின் போது அது மீண்டும் நினைவுக்கு வந்தது. ஆனால் உலகநாயகன் என்பது போல அது வெறும் பட்டமல்ல. கதையில் அதற்கு ஒரு இடம் இருப்பதாகவே தோன்றுகிறது.




இந்திரன் வேட்கையின் நாயகன். காமுகன். புராணப்படி, இந்திரன் என்பவன் ஒருவன் அல்ல. அது ஒரு பதவி. அதில் ஒரு சுவாரஸ்யமான முடிச்சு உள்ளது. இந்திர பதவி மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் இந்திராணி மாறுவதில்லை என்பது அதில் உள்ள தொன்மம். இந்திராணி ஏற்றுக்கொண்டு அருகில் அமர்ந்தால்தான் அவன் இந்திரன். அதுவரை அவன் தேவர்களை போரில் வென்றாலும் இந்திராணியின் ஏற்பு என்பது முக்கியமானது. மேலும் யார் வல்லமை கொண்டு எழுந்தாலும் இந்திரனின் நாற்காலி ஆடத் துவங்கும். அவன் அச்சம் கொண்டு அவனை வீழ்த்த எல்லா உத்திகளையும் கையிலெடுப்பான்.


இங்கே ஏற்கனவே இந்திரனாக இருக்கும் சக்திவேலுக்கு  வேறு யார் மீதும் பயம் இல்லை. அவனது பயம் அமர் மீது இருக்கிறது. ஏனெனில் அவன்தான் தன்னைப் போன்ற ஒரு 'சாவுக்கஞ்சாத சத்ரியன்' என அவனது உள்ளுணர்வு அறிகிறது. அந்த அச்சம்தான் தான் உள்ளே போகும் போது அமரை தன்னிடத்தில் நிறுத்தி தனக்கு விஸ்வாசமாக இரு என மறைமுகமாக கூறுகிறது. அவன் அங்கு தனது வர்த்த்கத்தை விஸ்தரிப்பதைப் பார்த்துப் பொங்குகிகிறது. குடும்பமும் தனது சுற்றமும் அவனிடம் பொறுப்பை ஒப்படைக்கும்போது தடுமாறுகிறது. அவன் கைமீறி போகும் போது அவன் மீது சந்தேகம் கொண்டு கேள்வி கேட்கிறது. 


அமருக்கும் இந்திராணியை அருகில் அமர்த்திக் கொண்டு அந்த பதவியை ஆள அசை இருக்கிறது. அது சக்திவேலின் ஐயத்தை வைத்து ஊடுருவும் சதிக்கு உடன்டுகிறது. இருவரின் அந்த போர்க்குணமே இறுதிவரை ஒருவருக்கொருவர் மல்லுக்கு நிற்கும் வரை தொடர்கிறது. சக்திவேல் அமரை தன்னிடத்திற்கு வரவழைக்கும் போதே சந்திராவைப் பற்றி சொல்லாமல் இருக்கவும் அந்த குணமே காரணம். அது தானாக  சமாதானம் பேசாது. அதுவும் அதன் பின்னர் வரும் இறுதிக்காட்சியும் நன்றாக இருந்தது. பலமுறை சாவை தொட்டுப் போகும் சக்திவேலை விட ஒருமுறை அதை சந்தித்து அமரனாகும் அமரின் பாத்திரம் நன்றாக இருந்தது



நாயகன் படத்தை ஒட்டி கேள்விகள் வர இருவர் இணைந்த முந்தைய படம் ஒரு காரணம். ஆனால் இந்தப் படம் நாயகனின் தொடர்ச்சியாக அல்ல. இது சற்று தளபதியின் சாயல் கொண்ட கதை.  இரு நாயகர்கள். அவர்களுடைய ஈகோவும் பாசமும் கலந்து வருகிறது. அதில் நாயகன் என்று சொல்லத்தக்க ஆளுமை கொண்ட பாத்திரம் சிம்புவுடையது. தளபதியின் ரஜினிக்கு இணையானது. தந்தையை இழந்த , தங்கையை பிரிந்த,  தன்னை வளர்த்தவரின் குடும்ப விஷயங்களில் முடிவெடுக்கும் அளவு வளர்ந்த நம்பிக்கை பெற்ற, அவரே தன்னை சந்தேகப்பட, அவர் மீது  வெறுப்பு கொள்ள, அவர் இடத்தை அடைந்து நிற்க, பின் அவரிடம் மன்னிப்பு கேட்க என அருமையான பாத்திரம். மறுபுறம் சக்திவேல் அப்படியேதான் துவக்கம் முதல் இருக்கிறார். அமரின் மரணம் மனதை பாதிக்கிறது. அங்கு படம் முடிந்து விடுகிறது. 


அத்தனை கனமான காட்சிக்குப் பின் சக்திவேல், சத்குரு கெட்டப்பில் முண்டாசும் கூலிங்கிளாஸுமாய் இருக்க பிண்ணனியில் விண்வெளிநாயகா என வீறிடும் போது ஒன்ற முடியவில்லை. ஒன்றமுடியவில்லை என்பதையும் தாண்டி எரிச்சல் உருவாகிறது என்றே சொல்லலாம்.  இத்தனைக்கும் இந்தி்ரன் என்ற யோசித்தால் விண்வெளிநாயகனும் பொருந்துகிறது என்றாலும் கூட அந்த இடத்தில் அது பொருந்தவில்லை. தளபதியில் தேவா இறந்த பின்  மிகவும் எளிமையாக படம் முடியும். இங்கே அது சக்திவேலின் புகழ் பாடுகிறது. ஆனால் ரசிகனின் மனம் அமரிடம் இருக்கிறது





கங்குவா தக்லைஃப் எல்லாம் எதிர்மறை விமர்சனங்களால் ஓடவில்லை என்று ஒரு கருத்து அப்பொழுதே எழுந்து வந்தது. ஜெ. கூட தளத்தில் எழுதியிருக்கிறார். எதிர்மறை விமர்சனங்கள் பேட்ட அண்ணாத்த ஜெயிலர் ஆகிய படங்களின் போது இன்னும் வீறுகொண்டு வந்த வண்ணமே இருந்தன. இவற்றில் நான் இன்னொருமுறை பார்க்கவே விரும்பாத படமான அண்ணாத்த கூட தியேட்டரில் என்னை ஏமாற்றவில்லை. அது என்ன சொல்லப் போகிறது என்பது அதன் முன்னோட்டங்களில் தெளிவாக தெரிந்தது. ஆகவேதான் அது தாக்குப் பிடித்தது. வியாழனன்று வெளியான தக்லைஃப் திரைப்படம், சனிக்கிழமையன்று திரையிடலுக்கு பத்து நிமிடங்கள் முன்பு, விரும்பும் வரிசையில் சீட்டு கிடைக்கும் என்கிற அளவு நிரம்பி இருந்தது. அது ஏமாற்றத்தாலும் உறவுமுறை கூறப்பட்ட அதிர்ச்சியாலும் நிகழ்ந்திருக்கலாம். அந்த ஏமாற்றத்திற்கு காரணம் இதன் கதைப்போக்கு குறித்த தெளிவை இதன் முன்னோட்டங்களும் பேட்டிகளும் அளிக்கவில்லை என்பதாக இருக்கலாம். ரோஜா தளபதி ராவணன் உள்ளிட்ட படங்கள் வந்தபோது சாவித்ரி, கர்ணன் மற்றும் இராமாயண புராண கதைகளை ஒப்பிட்டு வார இதழ்களில் கட்டுரைகள் வந்தன. அதுபோன்று இதன் இந்திர விழைவை தொட்டு ஒரு அறிமுகம் வந்திருந்தால் இந்தளவு ஏமாற்றம் நேர்ந்திருக்காது. வணிக சூதாட்டத்தில் இவ்வாறு ஆகிவிட்டது என்றே எண்ணுகிறேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கிறேன். படத்தையும் இன்னொரு முறையும் பார்த்து விடுவேன்.

4 comments:

  1. நிர்குண் ஹண்டர்ஸ் நெஸ்ட்June 15, 2025 at 6:35 AM

    Yes!

    ReplyDelete
    Replies
    1. நன்றி!! @நிர்குண் ஹண்டர்ஸ் நெஸ்ட்

      Delete
  2. I have not seen the film yet but after reading your view about Indra's story it created the curiosity to watch it. Thanks Kali.

    ReplyDelete
  3. நன்றி.. பார்த்து விட்டு சொல்லுங்கள்

    ReplyDelete