Thursday, January 9, 2020

தம்மம் தந்தவன் - மகிழ்ச்சியும் நன்றியும்



மதிப்பிற்குரிய எழுத்தாளருக்கு வணக்கம்,


தங்கள் வலைதளத்தில் வெளிவந்திருக்கும் 2019ம் ஆண்டின் சிறந்த புத்தகங்கள் வரிசையில் "தம்மம் தந்தவன்" மொழிபெயர்ப்பு நாவலையும் கண்டபோது எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. ( http://www.sramakrishnan.com/?p=9656  )   நாவல் சென்றடைந்ததற்கு புத்தரும் விலாஸ் சாரங்கும் அதைச் சரியான நேரத்தில் வெளியிட்ட பதிப்பகமும் முக்கிய காரணங்கள்.  முந்நூறு பக்கங்களுக்குள் புத்தரின் வாழ்க்கை, தத்துவம் இரண்டையும் சொல்ல ஒரு கவிஞனால் முடிந்துவிடுகிறது. வாசகன் நிரப்பிக் கொள்ள வேண்டிய இடங்களையும் அவனுக்கு விட்டு வைத்தபடி, விலாஸ் சாரங் அதை நன்றாக கையாண்டிருந்தார். மொழிபெயர்ப்பாளனாக அதை சரியாக உள்வாங்கி சரியாக வெளிப்படுத்தியிருக்கிறேன் என்கிற நம்பிக்கையை உங்கள் பதிவு மூலம் அடைந்தேன். அது அளித்த உற்சாகம் இன்னும் நீங்கியபாடில்லை.



இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்த விலாஸ் சாரங் அவர்களின் சிறுகதைத் தொகுப்பான ”The Women in Cages” பற்றி  முன்பும் எழுதியிருக்கிறீர்கள். ( http://www.sramakrishnan.com/?p=4071 ). அந்தத் தொகுப்பும் ”கூண்டுக்குள் பெண்கள்” என்ற பெயரில் தமிழில் நற்றிணை பதிப்பகத்தாரால் வெளிவந்திருக்கிறது. நண்பர் ஸ்ரீநிவாசன் அவர்கள் அதை மொழிபெயர்த்திருக்கிறார்.



2007 ம் ஆண்டில், ஆர்க்குட் வழியாக மட்டுமே  அறிமுகமாகியிருந்த  நண்பர்கள் முதன் முதலில் நேரில் சந்தித்த ஒரு கூட்டத்திற்கு எங்கள் அழைப்பிற்கிணங்க வந்து சிறப்பித்தீர்கள். விஜிபி தங்க கடற்கரையில் நடந்த அந்த கூட்டமும் அதில் நீங்கள் ஆறறிய உரையும் நன்கு நினைவிருக்கிறது. கூட்டமாக பறவைகளையோ, விலங்குகளையோ பார்க்கும் பொழுது உவகை கொள்ளும் மனிதர்கள், திநகரிலோ, பஸ் ஸ்டாண்டிலோ ஏன் கூட்டமாக மனிதர்களைக் காண்கையில் மட்டும்  மன அழுத்தம் கொள்கிறார்கள் என்று ஆரம்பித்து உரையாற்றினீர்கள். அந்த நேரத்தில் உங்கள் வலைதளம் உருவாகிக் கொண்டிருந்தது. அது குறித்த கருத்துக்களைக் கூறினீர்கள்.



நீங்கள் தவிர அன்று வந்திருந்த விருந்தினர்கள் பாமரன், சுபவீ, அறிவுமதி போலவே அங்கிருந்த நண்பர்களிலும் சமூக செயல்பாடுகள், அரசியல், மொழியாளுமை என பல விதப்பட்டவர்கள் உண்டு. இன்று பலரும் பல தளங்களில் செயல்பட்டு வருகிறார்கள்.  நான் இலக்கியத்திற்குள் வந்துவிட்டேன். என் முதல் மொழிபெயர்ப்பு நாவல் உங்களின் வாழ்த்துக்களைப் பெற்றதில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன்



நன்றி



அன்புடன்,
R.காளிப்ரஸாத்,




அன்பு காளிபிரசாத்

உங்களின் தொடர் இலக்கிய செயல்பாடுகளை நான் அறிவேன்.  சிறந்த மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள். 

மனம் நிரம்பிய வாழ்த்துகள்

மிக்க அன்புடன்
எஸ். ராமகிருஷ்ணன்

No comments: