Sunday, August 30, 2020

இரையென்ன இரை இன்னும் - இரா.மீனாட்சி கவிதைகள்

நம் உபநிஷதங்களில் ஞானசபை விவாதங்களில் ஈடுபட்டவர்கள் உரைத்த சொற்கள் தொகுக்கப் பட்டுள்ளன. கார்கி, மைத்ரேயி, காத்யாயணி உள்ளிட்டவர்கள்  அவர்களில் பெண்கள். குருதேவரான யக்ஞவல்கிகர் தான் சந்நியாசம் மேற்கொள்கையில் அழியாத செல்வம் தருகிறேன் என்று  மனைவிக்கு வரம் அளிக்கிறார்.  அவர் மனைவியான மைத்ரேயி அழியாதவை என்னென்ன என்று அவருடன் தர்க்கத்தில் அமர்கிறார். அவள் ஒவ்வொன்றாகக் கேட்டு அழியாத செல்வமான ஞானம் தான் வேண்டும் என்று கேட்டு அவரும் அவ்வாறே அமர்கிறாள் என்பது புராணம். பெண்கள் ஞானத்தேடல் இல்லாமாலேயே தன் அன்பினாலேயே மோக்‌ஷம் அடைகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக ஆண் தனிமையானவன். அவன் தனிமையிருந்து தியானம் ( ஞானம் ) வழியாக அன்பிற்கு வரவேண்டும். ஆனால் அன்பு அல்லது பக்திக்கு, தான் அல்லாமல் இன்னொன்று தேவைப் படுகிறது. ஞானம் பக்தி என்பதை அறிவுத்தளம் உணர்வுத்தளம் என்று வைத்துக் கொள்ளலாம்.  ஓஷோவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலாக,  அன்பும் தியானமும் முக்கிய வழிகள். நீ ஆணென்றால் உன் வழி தியானம் அதன் வழியாக அன்பு. அதுவே நீ பெண் என்றால் அன்பின் வழியாக தியானம். இவ்விரண்டில நான் வலியுறுத்துவது அன்பும் தியானமும் என்கிறார். மரபுக் கவிஞர்களில் ஆண்டாள் காரைக்கால் அம்மையார் ஆகியோரை பக்தி மார்க்கத்திலும் ஒளவையாரை ஞான மார்க்கத்திலும் வைத்து காணலாம். 


நவீன கவிதைகளில் மேற்சொன்ன ஞானத்தளங்கள் / உணர்சித் தளங்களில்  தத்துவ நோக்கில் ( ஞானத்தளங்களில்)  எழுதும் கவிஞர்களில்  ஆண் கவிஞர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். பெண்கவிஞர்களின் கவிதைகள் என பெண்ணியம் சார்ந்தே அதிகம் வாசிக்கக் கிடைத்தன. பெரும்பாலும் உணர்வுகளுக்குள் ஆட்படும் விதமாகவே அந்தக் கவிதைகள் காணப்படுகின்றன. நம் பண்பாட்டின் நோக்கில் எழுந்துவரும் கவிதைகள் அரிதானவை. அதேநேரம் பண்பாட்டின் மீதான விமர்சனமாக கலகமாக வருபவை  ஒப்புநோக்க அதிகம்.  ஞானமும் உணர்வும் கலந்துதான் கலகமாக வெளிப்படுகிறது. அது நவீன காலத்தின் தேவை என்று புரிந்தாலும் அதில் கலகம் மற்றும் பகடி நோக்கு அதிகமாகவும் இருப்பது ஒருவித போக்காகவே ஆகியிருக்கிறது என்பதும் உண்மைதான்.  


இரா.மீனாட்சி அவர்களின் திசை மாறியது என்கிற கவிதை ந. பிச்சமூர்த்தி தி.சோ.வேணுகோபாலன் வகையிலான கவிதையாகவே தோன்றியது. அவருக்குப் பிறகான பெண் கவிஞர்களின் கவிதைகளை ஏற்கனவே வாசித்திருந்ததால், அவரது கவிதைகளை வாசிக்கையில் பெரும் வித்தியாசத்தை உணரமுடிந்தது. மீனாட்சி என்பது மீனாட்சி சுந்தரம் என்பதன் சுருக்கமா என்று ஒருகனம் மனம் என்ணியதும் நவீன கவிஞர்களில் ஆண்களின் வரிசையில் மட்டுமே கண்டிருந்த தத்துவ / மரபர்ந்த கூறுகள்தான் என்று தோன்றுகிறது.    அதன்பின்தான் அவரைப் பற்றி இணையத்தில் தேடி முழுமையாக கண்டறிந்தேன். 1940களில் திருவாரூரில் பிறந்த கவிஞர் இரா.மீனாட்சி 1970 முதல் கவிதை எழுதிவருபவர். தற்பொழுது பாண்டிச்சேரி ஆரோவில்லில் வசித்து வருகிறார். மரபை விட்டுத் தள்ளிவிட்டு புதுக்கவிதை எழாமல் மரபின் ஓட்டத்தையும் சேர்த்தே கொண்டுவரும் கவிதைகளாகவே இவரது கவிதைகள் இருக்கின்றன




திசை மாறியது ,  


தென்திசை நோக்கி முதியவர் நடந்தார்

இருளே கிளையாய்க் கிளைத்த மரங்கள்

அச்சமே உயிர்ச்சத்தாய் நிரம்பிய வேர்முடிச்சுகள்

பாசக்கயிறாய் ஊசலாடும் விழுதுகள்

முதியவர் நடை தொடர்ந்தார்..


...

...

..


கடவுளின் தோளில் குழந்தை.

விடியலை நோக்கி.

பயணம் ஆரம்பம்


யமனுக்கான தெற்கு திசைக்கு சென்ற முதியவர் குழந்தையாக திரும்பி வருகிறார். மரணத்தை நோக்கிச் செல்லும் முதியவரின் தொடர்ச்சியாக குழந்தையை கொண்டுவருகிறது. புனரபி மரணம் புனரபி ஜனனம் என்பது போல ஒரு பிறவிச் சுழற்சியை கண்முன் நிறுத்துகிறார்


கோட்டையும் கோவிலும் உடைந்து போனாலும் உள்ளே தனக்குத்தானாய் கோவில் கொண்ட சிவம் கவிதை மற்றொன்று ( கோட்டையும் கோவிலும்). கடவுளை உள்ளே தேடுவது என்பது பலரால் பல இடங்களில் சொல்லப்பட்டாலும் இதில் வரும் நாகலிங்க இதழ்க் குளுமை படிமமும் தனக்கு தானாக அது கோயில் கொண்டது என்கிற வரியும் அதை உயர்த்திவிடுகின்றன


அம்ருதம் என்னும் கவிதையும் குறிப்பிடத் தக்க ஒன்று

விதைத்த விதை ஊறு முன்னே

எறும்பிழுத்தது

முளைத்த முளை விரியுமுன்னே

புழு துளைத்தது


இலை படர்ந்து ஏறுமுன்னே

நத்தை ஊர்ந்தது

கதிர் எழுந்து குனியுமுன்னே

கிளி அழித்தது

விசித்த கையில் விரல்கள் தேங்க

பசித்த உழத்தி

பசுங்கிளையில்

முதுகு வைத்தேன்

வயிறு இல்லை


நாவல் மரத்தில் ஆவலுடன்

அணில் சுவைத்த ஊதா

வேலி வரிசை ஏறிவந்த

இலந்தை இளஞ்சிவப்பு

கணுக்கணுவாய்

வானம் பார்த்த

மூங்கிலிலும் அரிசி

புளியமரக் காய்கள்

மண்ணுக்குள்ளே கோரை.


இரையென்ன இரை இன்னும்?

உச்சியில் குரு உபதேசம்

ஞானசூரியன் தேஜமயம்


‘அஸதோமா சத் கமய

தமஸோமா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர்மா அம்ருதம் கமய’



எழுத்து கால கவிஞர்களில் நகுலன்,சி.மணி, பசுவய்யா, பிரமிள். இரா மீனாட்சி, தி.சொ.வேணுகோபாலன் போன்றவர்கள் முக்கியமானவர்கள் என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். இவர்களில்  பிரமிள் மற்றூம் இரா.மீனாட்சி ஆகியோரின் கவிதைகள் ஒரு திட்டவட்டமான கருத்துக்களாகவே வெளிப்படுகின்றன


‘ஒளியின் கதியை

ஒளியின் கதியால்

பெருக்கிய வேகம்

ஜடத்தைப் புணர்ந்தால்

ஜடமே சக்தி “E=m c^2 நீள் கவிதையின் ஒரு வரி)


பிரமிள் ஐன்ஸ்டீனின் ஆற்றல் கோட்பாட்டினை இவ்வாறு அத்வைத நோக்கில் கவிதையாக்குகிறார். 


”தெற்கு கோபுர வாசலில்

திகைத்து நிற்கிறது

நீயற்ற நானற்ற கல்” ( பிரமிளின் தெற்கு வாசல் கவிதையின் ஒரு வரி )


இரா.மீனாட்சி அவர்களின் கவிதையை வாசிக்கும்போது பிரமிளின் இந்த கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. இவை, கவிஞர்களின் ஆதார குணங்களான தன்னிரக்கம், ஒரு அலைச்சல், ஆதங்கம், கையறுநிலை போன்ற தருணங்கள் இல்லாமல் அவை ‘சொற்களாக’ ஒலிக்கின்றன. தன் குழப்பத்தைக் கடத்தாமல் தன் புரிதலைக் கடத்துவது இவர்கள் இருவரின் கவிதைகளாக உள்ளன என்று தோன்றுகிறது. வாசகனாக தெற்கு வாசலில் இருந்து திசைமாறியதுக்கு எளிதாக வந்துவிட முடியும்


 பன்னாட்டு நகரத்திலொரு தமிழ்க் குயில் என்கிற அவருடனான இந்தப் பேட்டி மிகவும் அழகாக ஒரு எண்பதாண்டு காலத்தை சுட்டுகிறது.  அதன் கீழே அவரது மொத்த படைப்புகளின் பட்டியலும் உள்ளது. பன்னீர்ப்பூ பற்றிய இரு கவிதைகளும்,  ரயில்வே குவார்ட்டர்ஸில் வசித்ததால் பலவித சமூகங்களையும் அணுகி புரிந்து கொள்ள முடிந்தது என்ற அவதானிப்பும் அரவிந்தரின் வழியாக காணும் தத்துவ தரிசனங்களும் என விரிவாக அவரைப் பற்றி அறிய வகை செய்கிறது. இவரது கவிதைகள் இணையத்தில் கிடைப்பதில்லை. புத்தகங்கள் கிடைக்கின்றன. இரண்டு தொகுப்புகளையாவது முழுமையாக வாசித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.




Wednesday, August 19, 2020

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் - சுரேஷ்குமார இந்திரஜித்

விஷ்ணுபுரம் விருது அதன் துவக்கத்தில் இருந்தே எனக்கு ஒரு ஆச்சரியம் தான். நான் இலக்கியத்தில் வெகுஜன ஊடகம் வாயிலாக அறிந்த சிலரை வாசித்து இலக்கிய உலகில் இருப்பதாக எண்ணியிருப்பேன். முற்றிலும் அறியாத ஒருவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் படுவார். எழுத்தாளர். தெளிவத்தை ஜோசப் அவர்களின் பெயரே அப்பொழுதுதான் கேள்விப் படுகிறேன். மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள் அப்படியான மற்றொருவர். வாசிக்கத் துவங்கும் முன் தெரியாது, ஒரு சுரங்கத்துள் இறங்கப் போகிறேன் என்று. சில நாவல்கள் மூலம் மலேசிய மண்ணின் பிண்ணனியை மக்களை தொகுத்துக் காண்பித்து விட்டார். பேராசிரியர் ராஜ் கெளதமன், கவிஞர் அபி ஆகியோரும் அப்படித்தான். அவ்வாறாக  ஜெ. ஹேட்ரிக் அடித்தது அடித்து விட்டார். இனி நான் எதிர்பாராத ஒருவர் வந்துவிடக்கூடாது என்று ஒரு பட்டியல் வைத்திருந்தேன். இனி அப்படியொருவர் பெயர் உரைக்கப்படுமானால் அது நம் தமிழிலக்கிய வாசிப்புக்கே அவமானம் என்று சூளுரைத்தவனாய் காத்திருந்தது  நல்லவிதத்தில் ஜெயமாக முடிந்தது. நான் யோசித்து வைத்திருந்த மூவரில் ஒருவர்



 
எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்கள் நாற்பது வருடங்களாக இலக்கிய உலகில் இருப்பவர். ஆனால் 2018ல் பதாகை சிறப்பிதழ் வந்திருக்காவிடில் இவரைப் பற்றியும் எனக்கு முழுதாக தெரிந்திருக்காது என்பதை நான் இங்கு மறைக்கத் தேவையில்லை :-). இன்று இதை எழுதும் வரையில் சுரேஷ்குமார் இந்திரஜித் என்றே எண்ணியிருந்தேன் என்பதையும் மறைத்தும் என்னதான் ஆகிவிடப் போகிறது. அமுத்துலிங்கம் அவர்களுடனான உரையாடலில் கூட அவர் பெயரை அப்படித்தான் உச்சரித்தேன். புத்தகத்தில் ‘ர’ விற்கு மேற்புள்ளியில்லை என்பதை முதலில் அச்சுப்பிழை என்றுதான் எண்ணியிருந்தேன். இப்பொழுது திடீரென  அந்தத் தமிழ்ப் பெயர் சிங்களப் பெயராக ஒலிப்பதைக் காண்கிறேன். அதுவும் நல்லதே! விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரது அமர்வில் என்னுடைய முதல் கேள்வி இப்பொழுதே தயாராகிவிட்டது.
 
சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் படித்து முடித்தேன். நாற்பது வருடங்களாக சிறுகதைகள் மட்டுமே  எழுதியவரின் முதல் நாவல் இது. சென்ற ஆண்டு வெளியாகியுள்ளது. பக்க அளவை வைத்து  நாவல் என்று முடிவு செய்திருக்க வாய்ப்புண்டு. ஆந்தாலஜி வகை திரைப்படங்கள் இப்பொழுது பிரசித்தமாகியுள்ளன. ஒரு நாவலுக்குள் அவ்வாறு யோசிக்கலாமா என்று இறங்கியிருக்கலாம். அல்லது நீட்டிச் சொல்வதை விட இது சிறப்பானது என்று நினைத்திருக்கலாம். ஆனால் மிக சுவாரசியமான ஒன்று
 
நாமறிந்த நாவல்கள் பெரும்பாலும் வாழ்க்கைப்பாட்டை நூணுக்கமாக விவரித்துச் சொல்பவை. சிறுகதைகள் கோடிட்டுக் காட்டுபவை. உளவியல் சிக்கல்களை என்னவென்று சொல்லிச் செல்பவை. ஒரு நாவலில் வாசகர் தனக்காக கண்டடைதலாக நினைவில் நிற்கும் சில தருணங்கள் இருக்கலாம். அல்லது ஒரு பாத்திரத்தின் மொத்த வாழ்க்கை நினைவுக்கு வரலாம்.  அந்தவகையில் நாவல் வடிவம் என்பதே ஒரு தருணத்தை நீட்டி முழக்கி சொல்பவையாக இருக்கின்றன. அதில் வாசகன் தானாக கண்டடையும் தருணங்கள் சொற்பமாகவும் ஆசிரியர் சொல்வது அதிக அளவிலும் இருக்கும்.  அப்படிப் பார்த்தால் இந்த நாவல் வகை மிகவும் புதுமையான ஒன்று. ஆதித்ய சிதம்பரம்  நோபல் பரிசு பெறும் ஒரு இந்திய நாவலாசிரியர் ( இந்திய ஆங்கில எழுத்தாளர்). அவர் பரிசு பெற்ற கதையை சொல்லும் நாவல். அவர் என்ன எழுதி நோபல் பரிசு வாங்கினார் என்பதும் ஒரு சிறுகதையாக ( குறுங்கதை) அதிலேயே வருகிறது. அதைத் தவிர அவர் எழுதிய ஐந்து குறுநாவல்களும் உள்ளேயே வருகின்றன. அனைத்தும் கலந்த ஒரு நூறுபக்க நாவல் இது.
 
இது எதையுமே ஆசிரியர் என்ன ஏது என்று சொல்லி கோர்க்க வில்லை. ஆகவே இதில்  நம் வசதிக்கேற்ப ஒரு கதையை நாம் எழுதிக் கொள்ளலாம். அது இருவகையாக நிற்கும். மொத்தமே நூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவலை,  பெண்கள் குறித்த துண்டுப் பிரதிகளாக வாசிக்கலாம் அல்லது  ஆதித்ய சிதம்பரத்தின் வாழ்க்கையில் அவரை பாதித்த தருணங்களின்  தொகுப்பாக வாசிக்கலாம். ஆகவே இங்கு நாவலை நாவலாக்குவதில் வாசிப்பரின் பங்கும் இருக்கிறது.


 
சாஸ்திரத்தால்  கட்டுண்ட கைம்பெண், காதலை மறந்து வேறொருவனை கைபிடித்த பெண், வாழ்க்கையைத் தொலைத்த நடிகை - அவளைப் பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்,  தன் கணவனுக்கு மதுரையில்  குடும்பம் இருப்பது  தெரியாமல் அவனை மலேசியாவில் திருமணம் முடிக்கும் பெண். இவர்கள் தவிர  பறவைகளை  நேசிக்கும் ஒருவள் ஆகிய ஐந்து குறுங்கதைகள். இந்த குறுங்கதைகள் குறித்த விமர்ச கூட்டமும் நாவலிலேயே வருகிறது. கூடவே இந்த குறுநாவல்களை எழுதிய  நாவலாசிரியரான ஆதித்த சிதம்பரத்தை  வடிவமைத்த அவரது காப்பாளர் ( ரெஜினா ) , முன்னாள் மனைவி ( சாரதா ), தோழி ( ரஞ்சனா)  என மூன்று பெண்கள். இதில் நாவலின் இறுதியில் கடலலைகளால் அடிக்கப்படாத மூன்று பட்டாம்பூச்சிகளாக வருவது இவர்கள்தானா அல்லது ஐந்து குறுநாவல்களில் இவர் குறிப்பிடவிரும்பும் சிலரா என்பதை முடிவு செய்வதும் எனக்கானதே என்றாகி விடுகிறது.
 
கடலும் வண்ணத்துப் பூச்சியும் என்பதில் கடல் ஆசிரியரின் வாழ்க்கைப்பாடு என்றால்  பட்டாம்பூச்சியை அவர் கடந்து வந்த மனிதர்கள் குறிப்பாக  பெண்கள் என்று சொல்லலாம். அவர்கள் உலகம் எப்படியானது அதில் அவர்கள் மற்றவருக்கு பொருள்படும் விதம் என்பது ஒரு மின்னல் வெட்டாக வந்தாலும் நினைவில் நிற்கிறது. . ஒருவனுக்கு  அவள் அம்பாள். மற்றொரு ஒருவனுக்கு சாதாரண மனைவி. ஆனால் அவள் மிடுக்கான தலைமை ஆசிரியை  ( சாரதா ) இதில் ஆணும் பெண்ணும் கதையில் வரும் சிவப்பு உடையணிந்த பெண் வரும் தருணம் சுவாரசியமான உளவியல் இடம். நடிகையின் கணவனை  வேலைக்காரி காணும் இடமும் அப்படித்தான் தோன்றுகிறது.  இஸபெல்லா நல்ல பாத்திரம்தான், ஆனால் சமயங்களில் அவளே அந்தத் தனிமையின் அபத்தக் கற்பனையா என்றும் தோன்றுகிறது. இது என் வாசிப்பு
 
இதை வாசிக்கையில் எழுத்தாளர் எம். கோபால கிருஷ்ணனின் மனைமாட்சி நாவல்நினைவுக்கு வருகிறது. நான்கு வெவ்வேறு கதைகளாக பெண்களை / உறவுச் சிக்கலை இன்னும் அருகே சென்று நுணுக்கமாக ஆராய்ந்து உரைத்த ஒரு நாவல் அது. இந்த நாவல் அதற்கு நேரெதிரானது. புள்ளிகளாகச் சொல்லிவிடுகிறது. அதைப் புள்ளிகளாகவே வைக்கலாம் அல்லது இணைத்து சித்திரமாகவும் ஆக்கலாம்.

ஒரு புதிர் போல யோசிக்க வைக்கும் இந்த அனுபவத்திற்காகவே இதை வாசிக்கலாம்.