Thursday, December 10, 2020

கணப்பித்தம் கணச்சித்தம்




 (1)

நாம் அறிந்த உலகம் உண்டு. அறியாத ஒன்றும் உண்டு. அறியாதவை பல இருக்கின்றன என்கிற ஒரு புரிதல் அனைவருக்குமே இருக்லாம். நாம் அறிந்த ஒன்றில் கிடைக்கும் நெம்புகோலை வைத்துதான் அறியாத ஒன்றைத் துழாவ வேண்டியிருக்கிறது. தோ ஒரு தேசத்தில் நடக்கும் தீவிரவாத தாக்குதலைப் பற்றிக் கேள்விப்படுகையில் ஒருவருக்கு அந்நாட்டைச் சேர்ந்த நண்பர்களின் உறவினர்களின் நினைவுகள் வரும். அவர்கள் பிழைத்திருக்க என்ணியா தாக்குதலில் உள்ளாகியிருக்க எண்ணியா என்பது அவரவர் வழி.  ஆனால் அதன் மற்றொரு புறத்தை அறிய நமக்கு இருக்கும் தகவல்களையே மனம் துழாவுகிறது.  

அந்தக் கணம் மனம் கொள்ளும் பாவனைகள் வியப்பானவை. ஒன்றை தேடி அடையும் பொழுதில் அந்த இரு தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு என்பது இராது. மலை உச்சியில் கல்லாய் சமைந்திருக்கும் ஒன்றை காண்பவனும்,  அந்த மலை உச்சியில் தானிருக்கும் இடத்திலிருந்து தன்னைக் காணவரும் அனைவரையும் காணும் அந்த சிற்பமும் மேலதிக வியப்பு ஏதும் கொள்வதில்லை. ஆனால் ஒரு மேஜையில் சுற்றிக் கொண்டிருக்கும் உலக உருண்டையின் மேல் விழுந்து விட்ட எறும்புக்கூட்டம் சிதறி ஓடுகையில் அது தன்னுடைய எந்த கூட்டாளியை எந்த தேசத்தில் எந்நிலையில் காணுமோ என்று ஆராய்வதில் ஒரு சுவாரசியம் உண்டு. அந்த ஒரு ஆர்வத்தை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் உண்டாக்கிய வண்ணமே இருக்கின்றன.

Saturday, November 28, 2020

ஞானத்தை அடைய பத்து வாயில்கள் - குரு - ஹெச். எஸ். சிவபிரகாஷ் ( தமிழில்:- ஆனந்த் ஸ்ரீநிவாசன்)

           ஆன்மீக அனுபவம் மிகவும் அந்தரங்கமானது. இங்கு மிகவும் உன்னதமாக ஆக்கப் பட்டிருப்பதும் அதற்கு இணையாகவே மிகவும் தவறாக பிரசாரம் செய்யப் படுவதும் ஆன்மீகம்தான். உடனடி பலன் என்ன எனத் தேடி அலையும் உலகில் அது ஒருவித சித்து வேலை என்று நகர்பவர்கள் உண்டு. சித்து வேலையிலேயே ஆழ்ந்து அதில் உலகியல் இன்பங்களைப் பெற்று உழல்வதும் உண்டு. தீர்க்க தரிசனம், ஞான திருஷ்டி போன்றவற்றை வைத்து பலனடையும் சாமியார்களும் உண்டு.

 

           ஹெச். எஸ். சிவபிரகாஷ் அவர்கள் கன்னட எழுத்தாளர். கவிஞரும் கூட. அவர் தன் ஆன்மீகத்தேடல் குறித்து எழுதிய Everyday Yogi" புத்தகம் மிகவும் ஆர்வமூட்டக்கூடிய ஒன்று.  ஹெச். எஸ். சிவபிரகாஷ் அவர்களின் தந்தை ஒரு கன்னடர். கன்னட அறிஞர் அவர். பல பல்கலைக்கழக துணைவேந்தர்களும், மந்திரிகளும் அவரது கருத்து கேட்க அவரது வீட்டில் வந்து காத்திருக்கும் அளவு செல்வாக்கு உள்ளவர்.  அவருக்குத் தன் தந்தை வழியாகவே இலக்கிய அனுபவம் உண்டாகிறது. அவரது தாயார் தமிழர். தன் தாயார் வழியாக சங்க இலக்கியங்களும் அவருக்கு நல்ல அறிமுகம் உண்டு. தன் குழந்தைப் பருவத்தில் பெற்ற அனுபவங்களும்,  தன் தந்தை தன் தாய் மீது காட்டிய வன்முறையும் அவரை சில குருமார்களை தேடிச் செலுத்துகின்றன. காஷ்மீர வீர சைவ மரபை சார்ந்தவர். மரபு வழி சம்பிரதாயங்களை கொண்ட மடங்கள், சத்யானந்தா குருகுலம்  உள்ளிட்ட நவீன மையங்கள், சித்தர்கள், சூஃபி ஞானி மற்றும் கிறிஸ்தவ மத தீர்க்கதரிசிகள் என தான் வாழ்வில் சந்தித்த அனைவரைப் பற்றியும் அதில் எழுதியுள்ளார். யாரையும் தேடி வனங்களுக்கு அலைவது போன்றது அல்ல. நம் அருகே இருப்பவர்கள். மிகவும் பரபரப்பான பெங்களூருவில் சாலையிலிருந்து சற்று விலகியுள்ள ஒரு மலைப்பகுதியில் இருந்த ஒரு சூஃபி ஞானி போல. ஞானிகள் ஆற்றும் அற்புதங்கள்கூட ஒருவித சோதனைகளே. அதைக் கடந்துதான் ஞானத்தின் பாதையில் செல்லவேண்டும். இந்த அனுபவங்கள் Everyday Yogi" புத்தகத்தில் உண்டு.

 


                     அறிதல் என்பது ஆனந்தம் அளிக்கவல்லதே. அதே நேரம் அது அளப்பறியது கூட. இலக்கியம், யோகம், தியானம், செயல், பக்தி என அனைத்தும் அறிதலுக்கான வழிகளே. ஆனால் அவற்றின் எல்லைகள எங்கனம் அறியமுடியும் என்பது திகைப்பை அளிக்கிறது. இவற்றில் இவை அனைத்தையும் சிறிது முயன்று பார்த்தவர்களும் இருக்கலாம். எதுவுமே துவக்கத்தில் ஒரு ஈர்ப்பும் செல்லச் செல்ல சலிப்பும் அளிக்கக் கூடியவையே. அந்த சலிப்பைக் கடந்து நிறைவை அடைவது ஒரு தவம். அது அனைவருக்கும் கைகூடுவதில்லை. சிலர் அறிந்து அதிலிருந்து விடுபடுகிறார்கள். சிலர் அறிந்து அதை தொடர்கிறார்கள். ஏன் இந்தச் சலிப்பு என்று அறியாமல்  விழிபிதுங்குவதை விட அதை அறிவது மேலானது. அந்தவகையில் அவரது சமீபத்திய புத்தகமான குரு மிகவும் முக்கியமான ஒன்று. நற்றிணை பதிப்பகம் வாயிலாக தமிழில் வெளியாகியுள்ளது.




          ஞானத்தை அடைய உறுதுணையான பத்து வாயில்களை இது சொல்கிறது. குரு, மந்திரம், தெய்வம், உடல், பிராணன், மனம், காமம், செயலும் வினையும், அகவொளி, பிறிதொன்றிலாமை என பத்து வாயிகள் குறித்து விளக்குகிறார். இவை படிநிலைகள் அல்ல. இன்றுடன் ஒன்று கலந்தவை. சிலருக்கு இதில் ஏதேனும் ஒன்று மட்டும் கூட உவப்பானதாக இருக்கலாம். மேலும் இந்தப் புத்தகம் அதற்கான எந்த ஒரு பயிற்சியையும்  விளக்கவில்லை. யோகப் பயிற்சிகளில் இருப்பவருக்கு எந்தெந்த பயிற்சிகள் மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்கிறது. அவ்வாறு இல்லாதவருக்கு இலக்கியம் செயல் மற்றும் வாழ்வியல் சார்ந்து ஒரு வழியை காட்டுகிறது. இது அறுதியிட்டு ஒன்றைச் சொல்வது அல்ல.  பத்து வாயில்கள் வழியாக இந்தப் புத்தகம் அதை வாசிப்பருக்கு அனைத்து வழிகளை சுட்டி ஒரு திசை காட்டி போல நிற்கிறது. சென்று அடைவது வாசகரின் தன்முனைப்பு சார்ந்தது. 





    இந்தப்  புத்தகத்தை திரு.ஆனந்த் ஸ்ரீநிவாசன் அவர்கள்,  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.    சிக்கலான விஷயத்தை மொழிபெயர்ப்பில் வாசிக்கும் போது அதை எளிய மொழியில் சொல்லி நீர்த்து போகச் செய்வதும், ஸ்லோகங்களை கடின மொழியில் சொல்லி அச்சுறுத்துவதும்  நிகழ்ந்துவிடும். அவ்வாறு இல்லாமல் மிகவும் நேர்த்தியாக மொழிபெயர்ப்பு செய்யப் பட்டிருக்கும் புத்தகம் இது. இதில் பல கவிதைகளை எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார். சில வேத மந்திரங்கள் கூட உள்ளன அவையும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.  ஞானத்தின் பாதையை அறியாதவருக்கும், அறிய விரும்புபவருக்கும்ஆன்மீகத்தில் இல்லக்கில்லாமல் ஓடுபவருக்கும்,   இலக்கை நோக்கி ஓடுபவருக்கும் என அனைவருக்குமே சற்று அமர்ந்து தொகுத்துக் கொள்ள இந்தச் சிறிய புத்தகம் உதவிகரமாக இருக்கும்.


குரு - நற்றிணை பதிப்பகம்

Wednesday, November 4, 2020

உபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம்

நவம்பர் 2020 வல்லினம் இணைய இதழில் வெளியான கட்டுரை. கட்டுரை இணைப்பு இங்கே

(1)

சுதந்திரத்திற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில்  சமூகம், அரசியல்  மற்றும் சித்தாந்தம் என பலதரப்பட்ட வகையில் மாறுதல்களைக் கண்டவற்றில் தமிழகம் மிகவும் முக்கியமான மாநிலம்தான். மாறி  மாறி வரும் தமிழ் சமூக சூழலில் இன்னும் ஒரு யதார்த்த நாவலுக்கான களம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  தான் பாடுபட்டு ஒன்றை உருவாக்கி தன் தலைமுறைக்கு வைத்துச் செல்வோம், ஏழு தலைமுறைக்கான வாழ்வாதாரத்தை அளித்துச் செல்வோம் என்று தீர்க்கமாக ஒருவரால் எதையும் சொல்லிவிட முடியாத நிலைதான் இன்றும். அடுத்த தலைமுறைக்குள் காட்சிகள் மாறிவிடுகின்றன. யதார்த்த நாவல்கள் இன்னும் எழுதப்பட இந்த குறுகிய கால மாறுதல்களும் மோதல்களும் ஒரு காரணமோ என்று எண்ண வைக்கிறது. விவசாய பின்னணி, தொழிற் பின்னணி என பல பின்புலங்களில் யதார்த்த நாவல்கள் பலவும் எழுதப்பட்டு இருக்கின்றன. அந்தத் தளத்தில் பலநாள் விவாதிக்கப்பட்டு வரும் மண் தஞ்சைக்கானது.

இன்று தமிழகத்தின் அந்த நெற்களஞ்சியம் மெல்ல மெல்ல தன் அந்தஸ்தை இழந்து வருகிறது. ‘நடந்தாய் வாழி காவேரி’ என காவிரி பாய்ந்து செழிப்பாக்கிய நெற்களஞ்சியத்தின் ஒவ்வொரு துளி உமியிலும் இன்று அரசியல் ஏற்றப்பட்டு விட்டது.  அது செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் புள்ளி விவரங்களோடு அலசப் படுகிறது. இதனாலேயே இது குறித்துப் பேச ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு கருத்து உருவாகியுள்ளது. விவசாயம் பொய்த்ததா? ஏரிகளும் விளை நிலங்களும் குடியிருப்பு மனைகளாவதா? காவிரியின் மண் சுரண்டலா? என பல விதங்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் அது தன் சார்ந்த ஒரு கருத்தைப் பேச விட்டு வைத்திருக்கிறது. ஆனால் இலக்கியத்துக்குள் இது பெருமளவு எழுதப்பட்டதில்லை. இதற்குள் உடனடியாக மொழி / மாநில கட்சிகளின் அரசியலும் புகுந்துகொண்டதால் அரசியல் மேடைகளிலும்  இதழியல்களிலும், வணிக படைப்புகளிலும் அதிகம்  பேசப்பட்டு விட்டது. அவ்விடங்களில் புனைவுக்கும் பஞ்சமில்லாமல் இது அலசப்படுவதால்   இலக்கியத்தில் இருந்து விலகியும் இருந்ததோ என்றும் எண்ண வைக்கிறது

நெற்களஞ்சியத்துக்கு இணையாகவே, தஞ்சை ஒரு காலத்தில் தமிழிலக்கியத்தின் மையம் என்று சொல்லும் அளவிற்கு ஆளுமை கொண்ட இலக்கிய கர்த்தாக்களையும் கொண்டிருந்தது. அவர்களின் படைப்பில் காவிரி ஒரு வற்றாத சுரபியாகவே வருகிறது. பிற்காலத்தில்  காவிரி சார்ந்த அரசியல் எழுந்து வந்து தஞ்சையின் விவசாய வாழ்க்கை பாதிக்கப் பட்டு வறட்சி, டிஎம்சி ஆகிய சொற்கள் விவாதிக்கப்படத் துவங்கிய சம காலத்தில் தஞ்சையும் தன் இலக்கிய மையத்தைக் கைவிட்டிருந்தது. ஆகவே இன்றும் தஞ்சை எழுத்தாளர்கள் படைப்புகளில் தனிமனிதர்கள் மையம் கொண்ட அளவு நிலம் சார்ந்த படைப்புகள் எழவில்லை.




சில வருடங்கள் இடைவெளிக்குப் பின் வந்த யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவல் மனித உறவும் அன்பும் குறித்துப் பேசியது. அது அறிமுகப் படுத்திய நபர்கள் அதுவரைக்குமான மனிதர்களைவிடவும்  சற்று உக்கிரமானவர்களாக இருந்தனர். இருப்பினும் அதுவும் நிலம் சார்ந்த அடிப்படைகளுக்குள் செல்லாத நாவல்.  விவசாயம் / அதன் தோல்விகள் சார்ந்த படைப்புகள் தமிழில் மற்ற பிரதேசங்களில் எழுதப்பட்டன. விவசாயம் பொய்த்தபின் மனிதர்கள் வேறு சில பகுதிகளுக்குப் பிழைப்புத் தேடிச் செல்வதும் தமிழிலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டன. சோ.தர்மன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், இமையம் போன்றோர்கள் விவசாயம் பற்றியும், இயற்கை / அரசுத் திட்டங்கள் மூலமாக விவசாய வாழ்வை இழந்து இடம் பெயரும் பாத்திரங்களையும் சித்தரித்துள்ளனர்.  ஆனால்தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையிருந்து அதை மையப்படுத்தி ஒரு நாவல் வருவதற்கு இத்தனை வருடங்கள் ஆகி விட்டிருக்கிறது.  அதே, சமயம் அங்கும் இங்குமாக எழுந்து வந்த குழப்பங்கள் அரசியல் ஆட்டங்கள் மண் சுரண்டல்கள் என அனைத்தையும் தொகுத்துப் பார்க்க இத்தனை காலம் தேவை என்பதும் மறுக்கமுடியாததுதான்.

அரசியல் என்று எடுத்துக் கொண்டாலும் தமிழகத்தின் முக்கிய சித்தாந்தமான திராவிட சித்தாந்தம் மையம் கொண்ட பூமி தஞ்சைப் பகுதிதான். கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம் நகர்பக்திக்கு முக்கியத்துவம் பெற்ற அளவே நாத்திகத்துக்கும் முக்கியத்துவம் பெற்ற ஊர்தான். அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஆகியோரின் திராவிட அரசியலுக்குப் பின் பெரும் எழுச்சி கொண்டதாக சாதிக்கட்சிகள் வந்தன. சித்தாந்த ரீதியாக அவற்றின் தாக்கமும் அதிகம் இருந்தது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒரு பெரும் குழப்பத்தை சித்தாந்த ரீதியிலும் வாழ்வாதார ரீதியிலும் சாதீய ரீதியிலும் அந்தச் சுற்று வட்டார மக்கள் எதிர்கொண்டுதான் வந்தனர். கார்ல்மார்க்ஸ் அந்த துவக்க காலத்தைத்தான் தன் நாவலின் பின்புலமாக வைத்திருக்கிறார். சிறுவனான மூர்த்தி, இளைஞனாய் ஆகும்வரை நிகழ்ந்த புறச்சூழலும் அதனால் அவன் பெற்ற ஒருவித சிந்தனை தெளிவும்தான் இந்த நாவல் என்று சொல்லிவிடலாம்.

(2)

மூன்று தலைமுறைக் கதையான தீம்புனல் நாவல், ஒரு குடும்பம் எவ்வாறு புறச்சூழல்களால் அலைக்கழிக்கப் படுகிறது என்பதை விளக்கமாகச் சொல்கிறது. குத்தகை நிலத்தில் விவசாயம் பார்த்து வரும் சோமுவின் நிலம் ஒரு செட்டியாருக்குச் சொந்தமானது. அந்த நிலத்தைச் செட்டியார் தன் பெயரில் மீண்டும் மீட்டெடுக்க வழக்குத் தொடுத்திருப்பதில் இருந்து சோமு வீட்டு சித்திரம் துவங்குகிறது. சோமுவின் பார்வையிலும் அவரது பேரன் மூர்த்தியின் பார்வையிலும் நகர்கிறது. இந்தப் பின்னணியில் மேலும் பல இடர்களைச் சந்தி்த்து நகர்கிறது அந்தக் குடும்பம். சோமுவின் பட்டறிவும் மூர்த்தியின் தர்க்க அறிவும் சந்திக்கும் இடத்தில் நாவல் முடிகிறது. இந்த நாவலின் பெரும் சவால் என்பது வாழ்ந்து கெட்ட ஒரு விவசாய குடும்ப பின்னணி கொண்ட ஒரு கதையை எப்படி ரசமாகச் சொல்வது என்பது தான்.  காரணம் இது பல தளங்களில் ஏற்கனவே அலசப்பட்டுவிட்ட ஒன்று. ஆசிரியரின் சவால் என்பது வாசகருக்கு இதை புதிதாக விவரிக்க வேண்டும்அந்த நிலப்பகுதியை புதிதாக சுற்றிக் காண்பிக்க வேண்டும் என்பதுதான். கார்ல்மார்க்ஸ் அதில் வெற்றி பெற்றிருக்கிறார். விவசாய குடும்பம் என்பதை வார்த்தைகளாக இல்லாமல் வர்ணனைகள் மூலமாக விளக்கியிருக்கிறார். இன்னொருவருக்குச் சொந்தமான குத்தகை நிலத்தில் உழவு செய்யும் ஒரு விவசாய குடும்பத்திற்கு அந்த நிலத்தின் மீது உள்ள உரிமை எந்தளவு என்பது ஒருவரால் உடைத்துச் சொல்ல முடியாத ஒன்று. சட்டரீதியாக அதை அணுக முடியாது. சாதீய / பொருளாதார பின்புலம் கொண்ட அது எவ்வாறு சமூகத்தில் இன்றும் கையாளப்பட்டு வருகிறது என்பது வியக்கத் தக்க ஒன்று. இந்நாவல் அதை லாவகமாகக் கையாளுகிறது. ஒரே ஊரின் வறண்ட காலமும் நீர் நிரம்பி கதிர்கள் மூழ்கி நிற்கும் காலமும் வர்ணிக்கையில் அது சார்ந்த  அனைத்து விஷயங்களையும் கொண்டுவந்து அதை ஒரு காட்சி போல சித்தரிக்கிறார். முட்டிக்கால் தண்ணீரில் நிற்கும் சோமுவின் கால் ஈரமும் நீர் நிரம்பி ஓடும் பாலத்தைக் கடக்கும் மூர்த்தியின் பதட்டமும் சிலிர்ப்பும் அப்படியே வாசகருக்கும் தொற்றிக் கொள்கிறது. அதேபோல மனிதர்களுக்குள் எழும் கசப்பு எள்ளல் போன்றவையும் எளிதாகக் கடத்தப் படுகின்றன.

அறியாச் சிறுவனிலிருந்து, விடலைப் பருவம் தாண்டி, சமூகப் பிரக்ஞை கொண்ட  இளைஞனாக நாவலில் நாயகன் மூர்த்தி எழுந்து வருகிறான்.  நாவலின் மற்ற பாத்திரங்கள் கோபால், விசாலாட்சி, பொன்னம்மாள், பெரியசாமி, புலவர், கிருஷ்ணன் ஆகியோரின் கதைகள் வழியாகத்தான் மூலக்கதையின் போக்கைத் தீர்மானிக்கும் புறக்காரணிகள் வெளியாகின்றன. அரசியல், காமம், களவு என அனைத்து அறிதல்களும் திசைக்கொன்றாக வந்து அவனை ஆட்கொள்கின்றன. திராவிட கட்சிகளிலிருந்து தங்களுக்கான மக்களை பாமக பிரித்தெடுப்பதும் அதற்கான எதிர்வினையாக விடுதலைச் சிறுத்தைகளும் களமாடுவதும் அதன் ஊடாக எழுந்து வந்த சாதிய மோதல்களும், அவற்றின் துவக்க காலத்தில் மக்களை எவ்வாறு  எல்லாம் அலைக்கழித்தன என்கிற தோற்றமும் இதில் உள்ளது. இவை தவிர மூர்த்தி இலக்கிய வாசகனாகவும் இருக்கிறான். சமூக, சித்தாந்த ரீதியிலான அனைத்தையும் தால்ஸ்தோய் தஸ்தாவேஸ்கியில் கண்டடைந்து அவன் ஒரு புரிதலை அடைகிறான்.

ஏற்கனவே இவ்வகை நாவல்களை வாசித்துள்ள, சமூக பிரக்ஞையுள்ள வாசகருக்கு இதன் கதைப் பின்புலம் புதிதாக இராது. இன்று திரைப்படங்கள், சின்னத்திரை வரை இந்தக் கருவை அலசத் துவங்கி பலகாலங்கள் ஆகிவிட்டன. ஒரு குடும்பக் கதையாக அணுக அவர்களின் முன்னோர்களின் பின்னணி தேவைப்படவும் இல்லை. அவர்கள் அந்த மண்ணின் மைந்தர்கள் என்பது அதற்கு முக்கிய காரணம்.  ஆகவே அதுவும் ஒரு சாதாரண குடும்ப வரலாறாகத்தான் உள்ளது. அதற்குள் எந்தளவு நுட்பமாக விஷயத்தை உரைக்க முடியுமோ அதை சொல்லிவிடுகிறார்.  உதாரணமாக சோமு சுந்தரவள்ளி திருமண நிகழ்வு வரும் அத்தியாயம். அன்றைய யுவதிகளின் சுதந்திர ஆற்றுக் குளியல், கணவனைப் பார்க்காமலேயே மணம் புரிதல்  என சொல்லி வரும்போதே சோமுவுடன் இலுப்பை மரக் காடு வரை சென்று ஓநாய்களின் ஊளை வரை சொல்லிவிடுகிறார். பின்வரும் அத்தியாயங்களில் அவை மெல்ல மெல்ல அழிவை நோக்கி வந்து சேரும் சித்தரிப்பை ஆற அமர விளக்குகிறார். தலைமுறைகளாக அங்கேயே இருந்த ஒன்று ஒரு ஐம்பது ஆண்டுக்குள் எங்கிருந்து எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என்பதை விளக்கும் நல்ல உத்தியாக அது உள்ளது.  அதேபோல மேலதிக கவனம் தேவைப்படும் சில இடங்கள் நாவலில் பூடகமாக இருக்கின்றன.  சாதி விட்டுத் திருமணம் செய்த ரஞ்சிதாவை அழைத்து வரும் கோபால் ஏன் அதே ஒதுக்குப்புற வீட்டில் அடைத்து வைக்கிறான். அல்லது அங்கு மூர்த்தியால் வரவழைக்கப் பட்டானா? அந்த வீட்டில்   கலியபெருமாள் எப்படி இறந்து கிடக்கிறார். கலியபெருமாள் மரணத்தில் இந்திராணி அல்லது மூர்த்தியின் பங்கு என்ன? இதெல்லாம் வாசகர் ஊகித்துக் கொள்ள விட்டிருக்கிறார்.  மூர்த்தி தனி ஒருவனாக கோபால் கோஷ்டியினருடன் சண்டையிட்டு அவர்களை விரட்டியதாகப் புலவர் சொல்கிறார்? ஒதுக்குப்புறமான தனித்த வீடு. அதை இளைஞர்கள் விலை மாதர்களை அழைத்து வந்து தனித்திருக்கப் பயன்படுத்துவது தவிர நாவலின் இறுதிக் காட்சியும் ஒரு சண்டையோடு முடிகிறது. இதை வாசிக்கும்போது ரஷ்ய இலக்கியத்திற்கு இணையாகத் தமிழ்த் திரைப் படங்கள்கூட மூர்த்திக்குள் பல சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தியதா என்றுகூட யோசிக்க வைக்கிறது.

ஆசிரியரான ரத்தினம், தான் பிறந்து வளர்ந்த காலனிப் பகுதியை விட்டுவிட்டு வெளிப்புறத்தில் உருவான நகர் ஒன்றுக்குக் குடிபெயர்கிறார். ஆனால் சில நாட்களில் அவர் தன் பழைய வீட்டிற்கே வந்து விடுகிறார்.  அவர் சென்ற புதிய நகரில் அவருக்கு நேர்ந்திருக்கக் கூடிய நுட்பமான சாதீய அவமதிப்பை ஊகிக்க முடிகிறது. மேலும் அதை ரமணியும் உய்த்தறிந்து முந்தைய  அத்தியாயத்தில் வரும் உரையாடலிலேயே சொல்லவும் செய்கிறார்.  அதன் பின் ஒரு அத்தியாயத்தில் ரத்தினத்துக்குத் திருமண பத்திரிகை தரும் தமிழாசிரியர் அவர்கள் வீட்டில் ஏதும் அருந்தாமல் இருப்பது விவரிக்கப் படுகிறது. சோமுவும் மைந்தர்களும் கொண்ட அந்த  விவசாய குடும்பம் நொடித்துப் போய் விரிசல் கொள்ளும் போது மழையில் அந்த வீட்டின்  சுவர் இடிந்து விழுவது இயல்பாகவே நாவலில்  ஒரு குறியீட்டு முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.  இருந்தாலும் பின்னொரு அத்தியாயத்தில் சுவர் விழுந்தது ஒரு குறியீடு என்று நாவலாசிரியர் கூற்றாக அது விளக்கப் படுகிறது. முந்தைய அத்தியாயத்திலேயே  சொன்ன பின்பும் அதையே மீண்டும் ஒரு அத்தியாயமாக வைப்பது / நாவலாசிரியர் வந்து விளக்குவது ஆகியவை ஒருவித திகட்டலாகத் தோன்றிவிடுகிறது.  ஆனால் ஒருபொழுதும் நாவலின் மையக் கதையையோ அதன் நடையையோ இவை மட்டுப்படுத்தவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

 

(3)

பெரிதும் மாற்றிவிடமுடியாத யதார்த்தக் கதைப் பின்புலம் என்றாலும் நாவலை வாசிக்கத் தூண்டுவது  அதன் பலதரப்பட்ட தருணங்களும் உபகதைகளும்தான். மணல் சுரண்டுவது தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அதற்கான முஸ்தீபுகள் எவ்வெவ்வாறெல்லாம் நிகழும் என்று சுட்டிக் காட்டுகிறார். ஒரு கள்வனின் களவு முறைகள் அவன் குடும்பம் என ஒன்றும் இந்தக் குடும்பத்தை ஆட்டுவித்துச் செல்கிறது. மூர்த்தி தான் வேலைகேட்டு சென்ற ஒருவரின் வீட்டுப் பெண்ணுடன் உருவாகும் ஒரு நிமிட விடலைப் பரிதவிப்பும் அவள் உறவு முறையில் தங்கை என்று தெரிந்ததும் உண்டாகும் ஏமாற்றமும் என சிலவற்றைக் குறிப்பிடலாம். தேசியவாத காங்கிரஸ், இனவாத திராவிட கட்சிகள், சாதிய ரீதியிலான கட்சிகள்  என மக்கள் படிப்படியாக ஒவ்வொரு தலைமுறைக்கும் பிரிந்தபடியும் குறுகியபடியும் செல்வதைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் வாசகரை உணரவைப்பது சிறப்பான ஒன்று.

சோமுவின் கம்பீரம் குறைவது, அவரைக் கண்டால் எழுந்து நிற்கும் பெண்கள் பின் அசட்டையாக அமர்ந்திருப்பதைச் சொல்லி விளக்குவது போல நாவலின் பல குணாதிசயங்களும் முரண்களும் வாசகருக்குக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. சமூகத்தில் கிடைக்கும் மதிப்பு பொருளாதாரம் சார்ந்ததா அல்லது சாதீய அடுக்கு சார்ந்ததா என்கிற கேள்வி உள்ளார்ந்து எழுந்தபடியே இருக்கிறது. ரத்தினம் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் அவர் சாதீய பார்வையில் குறைத்து மதிப்பிடப்படுகிறார். சாதீய நோக்கில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் பொருளாதார ரீதியாக வீழ்ந்ததில் சோமுவும் குறைத்துத்தான் மதிப்பிடப் படுகிறார். அவரது முந்தையை கம்பீரம் குறைந்து விடுகிறது. கோபால் போல சாதீய அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் தன்னைத் தக்கவைத்துக் கொள்வோரே அங்கு கோலோச்ச முடிகிறது. அவ்வாறாக, சமூகம் எதை நோக்கிச் செல்கிறது என்பதன் துவக்கப்புள்ளியைத் தீம்புனல் விளக்கிவிடுகிறது. இப்பொழுது பார்த்தால் அங்கு அதற்குப் பின் நிலைகொண்ட நிலை அதுவே. புலவரும் ரத்தினமும் பேசும்போது மூர்த்தி நகர்ந்து செல்வதும் அங்கு நிகழும் உரையாடலும் அதில் எழும் ஒருவித வெறுமையும் தான் நாவலின் மையமாக நிற்கிறது. நாவலாசிரியர் சொல்ல வந்த ஒன்று இதுதான் என்றும் தோன்றுகிறது. பெரும் வார்த்தை ஜாலங்கள் இல்லாத அந்த எளிய உரையாடலை விளங்கிக் கொள்ள இந்தக் கதையைச் சொல்லியாகத்தான் வேண்டும்.




ஆனால் அதன்பின் நிகழும் ’ஆக்ஷன் பிளாக்’ ஒருவிதத்தில் கதையை முடிக்கும் அவசரமாகவே  இருக்கிறது. அல்லது நவலாசிரியரின் ஒருவித ஆத்ம திருப்தி என்று கொள்வதா எனத் தெரியவில்லை. நாவல் நிகழும் தருணம் என்பது திராவிடக் கட்சிகள் மக்களிடம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் போன்ற சிந்தனைகளை உருவாக்கி லட்சிய நோக்கில் ஒருவனின் சிந்தனையைக் கட்டமைத்த காலம். இறுதிக் கட்டத்தில் மூர்த்தி எடுக்கும் முடிவும் அது சார்ந்துதான் நிகழ்கிறது. ஆனால் சரியும் ஒரு ஸ்தம்பத்தினை சரியவிடாமல் கயிற்றை இழுத்துப் பிடிக்கும் முயற்சி போலத்தான் அது. நாவலாசிரியர் சுட்டிக் காட்ட விரும்புவதும் அந்தக் காலத்தைத்தான் என்று கருதுகிறேன். 1980களில் நிகழ்கிறது இந்த நாவல்.  2020ல் இன்று நாவல் வெளிவந்த தருணத்தில் வைத்துப் பார்க்கும்போது இன்றும் நிகழும் சாதியக் கொலைகளும் புறக்கணிப்புகளும் அதைத்தான் பறை சாற்றுகின்றன. இன்று அந்த மூர்த்திக்கு அடுத்த தலைமுறை எழுந்துவந்து களமாடுவைதைக் காணும்போது அந்த  வெறுமையையே உணரமுடிகிறது.

இந்நாவலுக்கு முன்பு புனைவுத்தளத்தில் கார்ல் மார்க்ஸ்ன்  இரு சிறுகதை தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. ’வருவதற்கு முன்பிருந்த வெயில்’ மற்றூம் ’ராக்கெட் தாதா’  ஆகிய தொகுப்புகளாக வந்திருகின்றன. அவற்றை வெளிவந்த காலத்தில் வாசித்திருக்கிறேன்.  இவற்றில் ’வருவதற்கு முன்பிருந்த வெயில்’ தொகுப்பின் ’காட்டாமணக்கு’ உள்ளிட்ட ஓரிரு கதைகளைத் தவிர்த்து, பொதுவாகவே அது பொருந்தாக் காமம், அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைஞர் வாழ்வு  என சிற்றிதழில் செல்லுபடியாகக் கூடியவைகளையே மீண்டும் சொல்லும் கதைகளாகவே இருந்தன. ஆனால் ராக்கெட் தாதா அதிலிருந்து வேறுபட்ட ஒன்று. அது மிகவும் சுவாரசியமான ஒன்று.  அதன் ஒவ்வொரு கதையும்  சில அழகான அல்லது திகைக்க வைக்கும் சிறுகதை தருணங்களைத் தன்னுள் வைத்துக் காட்டியது.  ஒரு வாசகனாக அவரது புனைவுகளில் எழுந்து வரும்  இத்தகைய தருணங்களை நான் ரசித்து வாசிப்பதுண்டு.  இந்தத் தீம்புனல் நாவலையும் அவ்வாறே அவ்விரண்டின் கலவை என்று சொல்லலாம். நாவலின் கதை எளிதாக ஊகிக்கக் கூடிய ஒன்று.   ஆனால் அதில் எழுந்து வரும் தருணங்கள், நிலம் சார்ந்த வர்ணனைகள், அவர் மனிதர்களை கவனித்து காட்சிப் படுத்தியிருக்கும் விதம் ஆகியவை நாவலை மிகவும் எளிதாக்குகின்றன. அவரது அடுத்த நாவலுக்கான எதிர்பார்ப்பையும் அவையே தூண்டுகின்றன.

 


Thursday, September 3, 2020

முரசும் சொல்லும் - ஒ) நிறைவுடன்...

முந்தையது:- முரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்


ஒருவன் இலக்கிய வாசகனானாலும் தத்துவ நூலை அணுகுவது எளிதல்ல. ஆகவே அதை கதையாக விளங்கிக் கொள்ளவே இதில் நாடகீய போர்த்தருணம் சொல்லப்பட்டது. இருப்பினும் அதை நேரடியாக வாசித்து அறிவதும் கடினமே. அதுவே, இமைக்கணம் வழியாக கீதையை அணுகுவது ஒப்புநோக்க எளிதானது. ஆனால் இமைக்கணத்தை விளங்கிக் கொள்ளவும்,  வெண்முரசினை அது சொல்லவரும் வரலாறு/ அரசியல்/ மரபு / தரிசனங்கள் சார்ந்த பின்புலத்துடன் அறிய வேண்டியதும் அவசியம்.

 

இமைக்கணத்தின் படிநிலைகள் என்று சொல்வதால், அவை ஒன்றுடன் ஒன்று மேம்பட்டது என்று ஆகிவிடாது. உதாரணமாக மாத சம்பளம் வாங்கும் ஒரு பணியாளர், தனது வரையறுக்கப்பட்ட வாழ்க்கை எல்லைக்குள் வாழ்பவர். அவரால் எளிதாக மூன்றாம் அத்தியாயமான கர்ம சந்நியாச யோகத்துக்குள் வந்துவிட முடியும்.  விடுபட்ட நிலையில் பெரும் விழைவு இன்றி தன் கடமையை ஆற்ற முடியும்.  ஆனால் அவருக்கு மாத ஊதியம் வழங்கும் அந்த நிறுவன தலைவரால் அவ்வாறு இருக்க வியலாது. அவர் சாங்கிய யோகப்படி உலகியலில் உழன்று செயலாற்றி நின்று செயல் புரிதல் வேண்டும். எனவே இந்த அறிதல்கள் என்பது ஒன்றுடன் ஒன்று உயர்ந்தது தாழ்ந்தது என்று இல்லை. எந்த ஒரு வழியில் சென்றாலும் அது இறுதியாக  ஞானத்திற்கே இட்டுச் செல்லும்

 

தனக்கு உலகியலோ போரின் முடிவோ ஒரு பொருட்டு இல்லை என்று சொல்லும் பீஷ்மருக்கு செயல் / கர்ம யோகம் உரைக்கப்படுகிறது. தன் இளவயது சபதம் முதிய வயதில் அபத்தமாக தோன்றுவதம் குழப்பம் அறிவின் சொற்கள் மூலம் சிகண்டிக்கு அகற்றப்படுகிறது. இவ்வாறு வெவ்வேறு குணங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலந்து உருவானதே வெண்முரசு என்னும் பெருங்கதையாடல். இன்று போரும் அதற்குப் பின்னான அரசியல்  மொழி மற்றும் சித்தாந்த மாற்றங்களையும் கண்டபிறகு,  இமைக்கணத்தின் மறு வாசிப்பில் அந்தப் பெருஞ்சித்திரத்தை உணர முடிந்தது. இமைக்கணத்தினை அணுகுவது என்பது அவரவர் புரிதலுக்கு உட்பட்டது.  அவரவர் வாழ்க்கை அனுபவத்துடன் தொடர்புடையது. அவ்வகையில் இமைக்கணத்தை அவரவர் வாசித்து அறிவதே சிறந்தது.

 

வெண்முரசு வாசிப்பின் வழியே நான் அடைந்தவற்றின் தொகுப்புத்தான் இந்தக் கட்டுரைகள். சென்னை வெண்முரசு கலந்துரையாடல்கள் எனது வாசிப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தன. கலந்துரையாடல் என்பது அளிக்கும் பலன் ஒவ்வொருவருக்கும் மிகவும் அந்தரங்கமானது.  எனக்கு அதில் வரும் உவமைகள் சொற்கள் சிறு கிளைக்கதைகள் என பல குறிப்பிடத்தக்க இடங்கள் உள்ளன. அவ்வாறாகவே, ஒவ்வொருவரும் அதில் ஒவ்வொன்றை பற்றிக் கொள்ளக் கூடும். ஆகவே இந்தக் கட்டுரைகளுக்குள் அவற்றைக் குறிப்பிடவில்லை. வேறு சந்தர்பங்களில் அவற்றையும் நான் எழுதக் கூடும். இந்தக் கட்டுரைகளைப் பொறுத்தவரையில், புதிதாக வெண்முரசு வாசிக்கத் துவங்கும் ஒருவருக்கு அந்த படைப்பு  குறித்த ஒரு குறைந்தபட்ச  புரிதலை அளிக்க வேண்டும் என்பது மட்டுமே  எனது நோக்கமாக இருந்தது.


மே-2015 முதல் ஐந்து வருடங்களைக் கடந்து நிகழ்ந்து வரும் சென்னை வெண்முரசு மாதாந்திர கூடுகையின் முதலாம் ஆண்டின் நிறைவில் எழுத்தாளர் ஜெயமோகன் லலந்து கொண்டபோது

வெண்முரசின் ஓவியங்கள் பல தருணங்களை எளிதாகப் புரிய வைத்திருக்கின்றன. தனது முதல் இலக்கிய வாசிப்பு என்பது வெண்முரசு வழியாகவே நிகழ்ந்தது என்று ஓவியர் ஷண்முகவேல் அவர்கள் கூறினார். ஆனால்  முதல் அத்தியாயத்தில் மானசா தேவி ஆஸ்திகனுக்குக் கதை சொல்வதில் துவங்கி ஒவ்வொரு இடத்திலும் கதாபாத்திரத்தின் வீச்சை ஓவியங்கள் மூலம் அவர் வாசகரிடத்தில் கொண்டு சேர்த்தார். அவருடனான ஒரு சென்னை கலந்துரையாடலின் போது அவரது உரையில் கூறிய ஒன்று அவர் எந்தளவு கவனமாக இருந்திருக்கிறார் என்று உணர்த்தியது. ஜெ. வெண்முரசை தொடராக எழுதும் போது எதிர்காலத்தில் ஏதோ ஒரு வர்ணனையில் முகத்தில் உடலில் ஒரு மச்சம் வடு போன்ற ஒரு அடையாளத்தை எழுதிவிட்டால் என்ன செய்வது என்று கருதியே எந்த ஒரு கதாபாத்திரத்தின் முகத்தையும் தான் வரையவில்லை என்றும் முகத்தைக் காட்டாமலேயே அந்த சூழலைச் சித்தரித்தது பெரும் சவாலாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். இன்று இந்த கட்டுரைகளுக்காக ஓவியங்களை மீண்டும் தேடிப் பார்த்து அவற்றில் எதை ஒதுக்குவது என்பதில் பெரும் குழப்பம் உண்டாயிற்று. 


ஓவியர் ஷண்முகவேல் வெண்முரசு விழாவில் கெளரவிக்கப் பட்டபோது

எனது வீட்டில் வெண்முரசு புத்தகமாக அனைவராலும் வாசிக்கப் படுவது.  
அதன் வழியாக கொற்றவை நாஞ்சில்நாடன் அ.முத்துலிங்கம் என பலரை வீட்டில் உள்ளவர்கள் வாசிக்கத் துவங்கினர். நவீன இலக்கியத்தில் இவ்வாறு வீட்டில் அனைவரும் தொடர்ச்சியாக வாசிப்பது என்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு வெண்முரசின் வழியாகவே மீண்டும் நிகழத் துவங்கியுள்ளது. அதை முன்பே கணித்து நேர்த்தியாக வடிவமைத்த நற்றிணை மற்றும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.


அம்மா வெண்முரசு ( செந்நாவேங்கை ) வாசிக்கும் சிக்குபலகை மேடை😀 


வெண்முரசு வாசகர்களை திரட்டி venmurasu reader” குழு மூலம் வெண்முரசு நாவல்கள் மற்றும் அதன் பலதரப்பட்ட சிறப்புகள் குறித்த கட்டுரைகள் வெண்முரசு வாசகர்கள் மூலம் தொகுக்கப் படுகின்றன. அவற்றின் மூலம் வெண்முரசின் இன்னும்  பல வாசிப்புக் கட்டுரைகளும் / உரைகளும் எழுந்து வரும். ஆனால் எவ்வளவு தொகுத்தாலும் வெண்முரசின் இறுதியில் வரும்  கிளி போல நமது உள்ளமும்  “இல்லை! இல்லை!” என்றுதான் கூவிக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை

 


முரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்

இந்தப் பகுதி வல்லினம் கலை இலக்கிய இதழின் செப்டம்பர்-2020 இதழில் வெளியானது. இணைப்பு இங்கே:- 

 

முந்தையது:- முரசும் சொல்லும் - ஏ) கதிரெழுகை

ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்


(1)

இதிகாசங்கள் என்பவை பொதுவாக உரையாடல்தான். முன்னர் நிகழ்ந்ததை சொல்பவை. இவ்வாறு வியாசர் வினாயகரிடம் சொல்லி அவர் எழுதிய ஜய கதையை சொல்கிறேன் என்று வைசம்பாயனர்  ஜனமேஜயனிடம் அவையில் சொல்லும்போது அதைக் கேட்ட செளதி ( சூததேவர்) பிற்காலத்தில் செளனகரிடம் உரைப்பதுதான் மஹாபாரதமாக நமக்குக் கிடைப்பது.  அந்த இதிகாசம் இலக்கியத்துக்குள் வரும்போது அதுவும் ஒரு உரையாடலாகத்தான் நிகழ்கிறது. அது அந்த எழுத்தாளாரின் அக உரையாடல் எனக் கொள்ளலாம். அது வழிபாடு, குழப்பம் என்கிற இரு இடங்களில் நிகழ்கின்றன. வழிப்பாட்டு மனநிலையில் அணுகும்போது அது அதன் உச்ச குணங்கள் அனைத்தையும் மீறாமல் அதற்குள்ளாகவே அவர்களின் நுட்பத்தை இன்னும் விரிவாக்கி அளிக்கிறது. பாலகுமாரன் எழுதிய  ஒரு அன்பு மந்திரம், கிருஷ்ண அர்ஜுனன் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை.  அன்றைய பாக்கெட் நாவல்களின் குடும்ப நாவல் வகை கதைகளாக அவை உள்ளன. புலரியில் படுக்கையில் துவங்குவதே பாக்கெட் நாவலின் ஒரு மரபு. அதுபோலவே சுபத்ரையை மணந்த அர்ஜுனன் மஞ்சத்திலிருந்து துவங்கும் கதை.  அது கிருஷ்ண அர்ஜுன தோழமையை இன்னும் விரித்துச் சொல்லி வாசகருக்கு நெகிழ்வும் பக்தியையுமே அளிக்கின்றன. என் அன்பு மந்திரமும் இந்த வகைதான். அது துரோணர் துருபதன் நட்பைப் பேசுகிறது. குருகுலங்கள் ஏன் முக்கியம் என்ற உரையாடலில் இது துவங்குகிறது.  இதனூடாக அன்றாட வாழ்வின் எளிய சிக்கல்களே அணுகப் படுகின்றன.  இதிகாச பாத்திரங்களின் சிக்கலைக் கண்டு வாசகர்கள் தெளிவடைவது வேறு.  வாசகரின்அன்றாட சிக்கலை இதிகாச பாத்திரங்களுக்கு பொருத்துவது வேறு. இதனாலேயே இவை ஆரம்பகட்ட பக்தியுடன் நின்று விடுகின்றன. அல்லது கடமையை செய் பலனை எதிர்பாராதே போன்ற சொற்களின் விளக்கங்களாக அவை அமைந்து விடுகின்றன. இது இலக்கியத்தை நேர்மறையாக அணுக உதவும் என்றாலும் பாத்திரங்கள் மீது உன்னதங்கள் ஏற்றி வைக்கப்படுதலும் அவர்களைப் பெரும் பிம்பமாக்குவதும் இதன் மூலம் நிகழ்ந்து விடுகிறது

 

இந்த சிக்கல் எங்கும் இருக்கத்தான் செய்கிறது. பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதி அதை விடுதலைப் போருக்கான ஆயுதமாக முன்னெடுக்கிறார். அதற்குள் அதிகம் அறச்சிக்கல் கொள்ளவில்லை.  ஆனால் நவீன இலக்கியத்திற்கும் முன்பு சொன்ன ஒருவித சிக்கல் இருக்கத்தன் செய்கிறது. அந்த விதத்தில், நவீன எழுத்தாளருக்கு இதிகாசத்தை அணுகுவதில் இருக்கும் நோக்கானது தமிழின் முதல் நவீன சிறூகதை எழுத்தாளரான புதுமைப் பித்தனிடமிருந்தே துவங்குகிறது. ராமன் அகலிகையிடம் சீதையிடம் நடந்து கொள்ளும் முறைகள் வேறு வேறாக இருப்பது  புதுமைப் பித்தனைக் குழப்பியிருக்கின்றது ( சாபவிமோசனம்). அதன் பின் மற்ற படைப்பாளிகள் வாயிலாகவும் அது மெல்ல வளர்ந்து, அது இதிகாசத்தில் கொல்லப்பட்ட அனைவரின் தரப்பாகவும் ஒலிக்கத் துவங்குகிறது. ஏகலைவனுக்காக,  அரக்கு மாளிகையில் பலியாகும் ஆறு அப்பாவி வேடர்களுக்காக அவை வாதிடுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஆள்பவரை கேள்வி கேட்கும் குறியீடாக அவை மெல்ல முன்னெடுக்கப் படுகின்றன. அதன்பின் மெல்ல மெல்ல தோற்பவர் தரப்பு நியாயங்கள் முன்னெடுக்கப் பட்டு வென்றவர்கள் சூழ்ச்சி செய்பவர்களாக நிலை நிறுத்தப் படுகிறார்கள். அல்லது ஒரு தனிப்பட்ட நாயகனை முழுதும் அலசி ஆராய்ந்து அவன் எவ்வகையில் சூழ்நிலைக் கதையாக இருக்கிறான் கட்டுண்டு கிடக்கிறான் பிறருக்காக தன்னைப் பலி கொடுக்கிறான் என்று வர்ணிக்கப் படுகிறது. கர்ணன் பாத்திரம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதனால் ஏற்படும் பிரச்சனை என்னவெனில், கர்ணனுக்காக துரியோதணன் தரப்பு நியாயங்கள் பீமன் அர்ஜுனர்கள் தரப்பு அநீதிகள் தொகுக்கப்பட வேண்டிய நிர்பந்தம் எழுத்தாளருக்கு உண்டாகிவிடுகிறது. இந்த விதத்தில் இந்த வகை படைப்புகள் ஏற்கனவே உள்ள நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்குவது அல்லது ஏற்கனவே சித்தரிக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் இன்னொரு முகத்தை எடுத்துரைப்பது என்கிற இருவகைகளில் அடங்கி விடுகின்றன. முன்பு சொன்னது நேர்மறை என்றால் இதை எதிர்மறை என்று சொல்லலாம்

 

 


Sunday, August 30, 2020

இரையென்ன இரை இன்னும் - இரா.மீனாட்சி கவிதைகள்

நம் உபநிஷதங்களில் ஞானசபை விவாதங்களில் ஈடுபட்டவர்கள் உரைத்த சொற்கள் தொகுக்கப் பட்டுள்ளன. கார்கி, மைத்ரேயி, காத்யாயணி உள்ளிட்டவர்கள்  அவர்களில் பெண்கள். குருதேவரான யக்ஞவல்கிகர் தான் சந்நியாசம் மேற்கொள்கையில் அழியாத செல்வம் தருகிறேன் என்று  மனைவிக்கு வரம் அளிக்கிறார்.  அவர் மனைவியான மைத்ரேயி அழியாதவை என்னென்ன என்று அவருடன் தர்க்கத்தில் அமர்கிறார். அவள் ஒவ்வொன்றாகக் கேட்டு அழியாத செல்வமான ஞானம் தான் வேண்டும் என்று கேட்டு அவரும் அவ்வாறே அமர்கிறாள் என்பது புராணம். பெண்கள் ஞானத்தேடல் இல்லாமாலேயே தன் அன்பினாலேயே மோக்‌ஷம் அடைகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக ஆண் தனிமையானவன். அவன் தனிமையிருந்து தியானம் ( ஞானம் ) வழியாக அன்பிற்கு வரவேண்டும். ஆனால் அன்பு அல்லது பக்திக்கு, தான் அல்லாமல் இன்னொன்று தேவைப் படுகிறது. ஞானம் பக்தி என்பதை அறிவுத்தளம் உணர்வுத்தளம் என்று வைத்துக் கொள்ளலாம்.  ஓஷோவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலாக,  அன்பும் தியானமும் முக்கிய வழிகள். நீ ஆணென்றால் உன் வழி தியானம் அதன் வழியாக அன்பு. அதுவே நீ பெண் என்றால் அன்பின் வழியாக தியானம். இவ்விரண்டில நான் வலியுறுத்துவது அன்பும் தியானமும் என்கிறார். மரபுக் கவிஞர்களில் ஆண்டாள் காரைக்கால் அம்மையார் ஆகியோரை பக்தி மார்க்கத்திலும் ஒளவையாரை ஞான மார்க்கத்திலும் வைத்து காணலாம். 


நவீன கவிதைகளில் மேற்சொன்ன ஞானத்தளங்கள் / உணர்சித் தளங்களில்  தத்துவ நோக்கில் ( ஞானத்தளங்களில்)  எழுதும் கவிஞர்களில்  ஆண் கவிஞர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். பெண்கவிஞர்களின் கவிதைகள் என பெண்ணியம் சார்ந்தே அதிகம் வாசிக்கக் கிடைத்தன. பெரும்பாலும் உணர்வுகளுக்குள் ஆட்படும் விதமாகவே அந்தக் கவிதைகள் காணப்படுகின்றன. நம் பண்பாட்டின் நோக்கில் எழுந்துவரும் கவிதைகள் அரிதானவை. அதேநேரம் பண்பாட்டின் மீதான விமர்சனமாக கலகமாக வருபவை  ஒப்புநோக்க அதிகம்.  ஞானமும் உணர்வும் கலந்துதான் கலகமாக வெளிப்படுகிறது. அது நவீன காலத்தின் தேவை என்று புரிந்தாலும் அதில் கலகம் மற்றும் பகடி நோக்கு அதிகமாகவும் இருப்பது ஒருவித போக்காகவே ஆகியிருக்கிறது என்பதும் உண்மைதான்.  


இரா.மீனாட்சி அவர்களின் திசை மாறியது என்கிற கவிதை ந. பிச்சமூர்த்தி தி.சோ.வேணுகோபாலன் வகையிலான கவிதையாகவே தோன்றியது. அவருக்குப் பிறகான பெண் கவிஞர்களின் கவிதைகளை ஏற்கனவே வாசித்திருந்ததால், அவரது கவிதைகளை வாசிக்கையில் பெரும் வித்தியாசத்தை உணரமுடிந்தது. மீனாட்சி என்பது மீனாட்சி சுந்தரம் என்பதன் சுருக்கமா என்று ஒருகனம் மனம் என்ணியதும் நவீன கவிஞர்களில் ஆண்களின் வரிசையில் மட்டுமே கண்டிருந்த தத்துவ / மரபர்ந்த கூறுகள்தான் என்று தோன்றுகிறது.    அதன்பின்தான் அவரைப் பற்றி இணையத்தில் தேடி முழுமையாக கண்டறிந்தேன். 1940களில் திருவாரூரில் பிறந்த கவிஞர் இரா.மீனாட்சி 1970 முதல் கவிதை எழுதிவருபவர். தற்பொழுது பாண்டிச்சேரி ஆரோவில்லில் வசித்து வருகிறார். மரபை விட்டுத் தள்ளிவிட்டு புதுக்கவிதை எழாமல் மரபின் ஓட்டத்தையும் சேர்த்தே கொண்டுவரும் கவிதைகளாகவே இவரது கவிதைகள் இருக்கின்றன




திசை மாறியது ,  


தென்திசை நோக்கி முதியவர் நடந்தார்

இருளே கிளையாய்க் கிளைத்த மரங்கள்

அச்சமே உயிர்ச்சத்தாய் நிரம்பிய வேர்முடிச்சுகள்

பாசக்கயிறாய் ஊசலாடும் விழுதுகள்

முதியவர் நடை தொடர்ந்தார்..


...

...

..


கடவுளின் தோளில் குழந்தை.

விடியலை நோக்கி.

பயணம் ஆரம்பம்


யமனுக்கான தெற்கு திசைக்கு சென்ற முதியவர் குழந்தையாக திரும்பி வருகிறார். மரணத்தை நோக்கிச் செல்லும் முதியவரின் தொடர்ச்சியாக குழந்தையை கொண்டுவருகிறது. புனரபி மரணம் புனரபி ஜனனம் என்பது போல ஒரு பிறவிச் சுழற்சியை கண்முன் நிறுத்துகிறார்


கோட்டையும் கோவிலும் உடைந்து போனாலும் உள்ளே தனக்குத்தானாய் கோவில் கொண்ட சிவம் கவிதை மற்றொன்று ( கோட்டையும் கோவிலும்). கடவுளை உள்ளே தேடுவது என்பது பலரால் பல இடங்களில் சொல்லப்பட்டாலும் இதில் வரும் நாகலிங்க இதழ்க் குளுமை படிமமும் தனக்கு தானாக அது கோயில் கொண்டது என்கிற வரியும் அதை உயர்த்திவிடுகின்றன


அம்ருதம் என்னும் கவிதையும் குறிப்பிடத் தக்க ஒன்று

விதைத்த விதை ஊறு முன்னே

எறும்பிழுத்தது

முளைத்த முளை விரியுமுன்னே

புழு துளைத்தது


இலை படர்ந்து ஏறுமுன்னே

நத்தை ஊர்ந்தது

கதிர் எழுந்து குனியுமுன்னே

கிளி அழித்தது

விசித்த கையில் விரல்கள் தேங்க

பசித்த உழத்தி

பசுங்கிளையில்

முதுகு வைத்தேன்

வயிறு இல்லை


நாவல் மரத்தில் ஆவலுடன்

அணில் சுவைத்த ஊதா

வேலி வரிசை ஏறிவந்த

இலந்தை இளஞ்சிவப்பு

கணுக்கணுவாய்

வானம் பார்த்த

மூங்கிலிலும் அரிசி

புளியமரக் காய்கள்

மண்ணுக்குள்ளே கோரை.


இரையென்ன இரை இன்னும்?

உச்சியில் குரு உபதேசம்

ஞானசூரியன் தேஜமயம்


‘அஸதோமா சத் கமய

தமஸோமா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர்மா அம்ருதம் கமய’



எழுத்து கால கவிஞர்களில் நகுலன்,சி.மணி, பசுவய்யா, பிரமிள். இரா மீனாட்சி, தி.சொ.வேணுகோபாலன் போன்றவர்கள் முக்கியமானவர்கள் என்று ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார். இவர்களில்  பிரமிள் மற்றூம் இரா.மீனாட்சி ஆகியோரின் கவிதைகள் ஒரு திட்டவட்டமான கருத்துக்களாகவே வெளிப்படுகின்றன


‘ஒளியின் கதியை

ஒளியின் கதியால்

பெருக்கிய வேகம்

ஜடத்தைப் புணர்ந்தால்

ஜடமே சக்தி “E=m c^2 நீள் கவிதையின் ஒரு வரி)


பிரமிள் ஐன்ஸ்டீனின் ஆற்றல் கோட்பாட்டினை இவ்வாறு அத்வைத நோக்கில் கவிதையாக்குகிறார். 


”தெற்கு கோபுர வாசலில்

திகைத்து நிற்கிறது

நீயற்ற நானற்ற கல்” ( பிரமிளின் தெற்கு வாசல் கவிதையின் ஒரு வரி )


இரா.மீனாட்சி அவர்களின் கவிதையை வாசிக்கும்போது பிரமிளின் இந்த கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. இவை, கவிஞர்களின் ஆதார குணங்களான தன்னிரக்கம், ஒரு அலைச்சல், ஆதங்கம், கையறுநிலை போன்ற தருணங்கள் இல்லாமல் அவை ‘சொற்களாக’ ஒலிக்கின்றன. தன் குழப்பத்தைக் கடத்தாமல் தன் புரிதலைக் கடத்துவது இவர்கள் இருவரின் கவிதைகளாக உள்ளன என்று தோன்றுகிறது. வாசகனாக தெற்கு வாசலில் இருந்து திசைமாறியதுக்கு எளிதாக வந்துவிட முடியும்


 பன்னாட்டு நகரத்திலொரு தமிழ்க் குயில் என்கிற அவருடனான இந்தப் பேட்டி மிகவும் அழகாக ஒரு எண்பதாண்டு காலத்தை சுட்டுகிறது.  அதன் கீழே அவரது மொத்த படைப்புகளின் பட்டியலும் உள்ளது. பன்னீர்ப்பூ பற்றிய இரு கவிதைகளும்,  ரயில்வே குவார்ட்டர்ஸில் வசித்ததால் பலவித சமூகங்களையும் அணுகி புரிந்து கொள்ள முடிந்தது என்ற அவதானிப்பும் அரவிந்தரின் வழியாக காணும் தத்துவ தரிசனங்களும் என விரிவாக அவரைப் பற்றி அறிய வகை செய்கிறது. இவரது கவிதைகள் இணையத்தில் கிடைப்பதில்லை. புத்தகங்கள் கிடைக்கின்றன. இரண்டு தொகுப்புகளையாவது முழுமையாக வாசித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.




Wednesday, August 19, 2020

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் - சுரேஷ்குமார இந்திரஜித்

விஷ்ணுபுரம் விருது அதன் துவக்கத்தில் இருந்தே எனக்கு ஒரு ஆச்சரியம் தான். நான் இலக்கியத்தில் வெகுஜன ஊடகம் வாயிலாக அறிந்த சிலரை வாசித்து இலக்கிய உலகில் இருப்பதாக எண்ணியிருப்பேன். முற்றிலும் அறியாத ஒருவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் படுவார். எழுத்தாளர். தெளிவத்தை ஜோசப் அவர்களின் பெயரே அப்பொழுதுதான் கேள்விப் படுகிறேன். மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள் அப்படியான மற்றொருவர். வாசிக்கத் துவங்கும் முன் தெரியாது, ஒரு சுரங்கத்துள் இறங்கப் போகிறேன் என்று. சில நாவல்கள் மூலம் மலேசிய மண்ணின் பிண்ணனியை மக்களை தொகுத்துக் காண்பித்து விட்டார். பேராசிரியர் ராஜ் கெளதமன், கவிஞர் அபி ஆகியோரும் அப்படித்தான். அவ்வாறாக  ஜெ. ஹேட்ரிக் அடித்தது அடித்து விட்டார். இனி நான் எதிர்பாராத ஒருவர் வந்துவிடக்கூடாது என்று ஒரு பட்டியல் வைத்திருந்தேன். இனி அப்படியொருவர் பெயர் உரைக்கப்படுமானால் அது நம் தமிழிலக்கிய வாசிப்புக்கே அவமானம் என்று சூளுரைத்தவனாய் காத்திருந்தது  நல்லவிதத்தில் ஜெயமாக முடிந்தது. நான் யோசித்து வைத்திருந்த மூவரில் ஒருவர்



 
எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்கள் நாற்பது வருடங்களாக இலக்கிய உலகில் இருப்பவர். ஆனால் 2018ல் பதாகை சிறப்பிதழ் வந்திருக்காவிடில் இவரைப் பற்றியும் எனக்கு முழுதாக தெரிந்திருக்காது என்பதை நான் இங்கு மறைக்கத் தேவையில்லை :-). இன்று இதை எழுதும் வரையில் சுரேஷ்குமார் இந்திரஜித் என்றே எண்ணியிருந்தேன் என்பதையும் மறைத்தும் என்னதான் ஆகிவிடப் போகிறது. அமுத்துலிங்கம் அவர்களுடனான உரையாடலில் கூட அவர் பெயரை அப்படித்தான் உச்சரித்தேன். புத்தகத்தில் ‘ர’ விற்கு மேற்புள்ளியில்லை என்பதை முதலில் அச்சுப்பிழை என்றுதான் எண்ணியிருந்தேன். இப்பொழுது திடீரென  அந்தத் தமிழ்ப் பெயர் சிங்களப் பெயராக ஒலிப்பதைக் காண்கிறேன். அதுவும் நல்லதே! விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரது அமர்வில் என்னுடைய முதல் கேள்வி இப்பொழுதே தயாராகிவிட்டது.
 
சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் படித்து முடித்தேன். நாற்பது வருடங்களாக சிறுகதைகள் மட்டுமே  எழுதியவரின் முதல் நாவல் இது. சென்ற ஆண்டு வெளியாகியுள்ளது. பக்க அளவை வைத்து  நாவல் என்று முடிவு செய்திருக்க வாய்ப்புண்டு. ஆந்தாலஜி வகை திரைப்படங்கள் இப்பொழுது பிரசித்தமாகியுள்ளன. ஒரு நாவலுக்குள் அவ்வாறு யோசிக்கலாமா என்று இறங்கியிருக்கலாம். அல்லது நீட்டிச் சொல்வதை விட இது சிறப்பானது என்று நினைத்திருக்கலாம். ஆனால் மிக சுவாரசியமான ஒன்று
 
நாமறிந்த நாவல்கள் பெரும்பாலும் வாழ்க்கைப்பாட்டை நூணுக்கமாக விவரித்துச் சொல்பவை. சிறுகதைகள் கோடிட்டுக் காட்டுபவை. உளவியல் சிக்கல்களை என்னவென்று சொல்லிச் செல்பவை. ஒரு நாவலில் வாசகர் தனக்காக கண்டடைதலாக நினைவில் நிற்கும் சில தருணங்கள் இருக்கலாம். அல்லது ஒரு பாத்திரத்தின் மொத்த வாழ்க்கை நினைவுக்கு வரலாம்.  அந்தவகையில் நாவல் வடிவம் என்பதே ஒரு தருணத்தை நீட்டி முழக்கி சொல்பவையாக இருக்கின்றன. அதில் வாசகன் தானாக கண்டடையும் தருணங்கள் சொற்பமாகவும் ஆசிரியர் சொல்வது அதிக அளவிலும் இருக்கும்.  அப்படிப் பார்த்தால் இந்த நாவல் வகை மிகவும் புதுமையான ஒன்று. ஆதித்ய சிதம்பரம்  நோபல் பரிசு பெறும் ஒரு இந்திய நாவலாசிரியர் ( இந்திய ஆங்கில எழுத்தாளர்). அவர் பரிசு பெற்ற கதையை சொல்லும் நாவல். அவர் என்ன எழுதி நோபல் பரிசு வாங்கினார் என்பதும் ஒரு சிறுகதையாக ( குறுங்கதை) அதிலேயே வருகிறது. அதைத் தவிர அவர் எழுதிய ஐந்து குறுநாவல்களும் உள்ளேயே வருகின்றன. அனைத்தும் கலந்த ஒரு நூறுபக்க நாவல் இது.
 
இது எதையுமே ஆசிரியர் என்ன ஏது என்று சொல்லி கோர்க்க வில்லை. ஆகவே இதில்  நம் வசதிக்கேற்ப ஒரு கதையை நாம் எழுதிக் கொள்ளலாம். அது இருவகையாக நிற்கும். மொத்தமே நூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவலை,  பெண்கள் குறித்த துண்டுப் பிரதிகளாக வாசிக்கலாம் அல்லது  ஆதித்ய சிதம்பரத்தின் வாழ்க்கையில் அவரை பாதித்த தருணங்களின்  தொகுப்பாக வாசிக்கலாம். ஆகவே இங்கு நாவலை நாவலாக்குவதில் வாசிப்பரின் பங்கும் இருக்கிறது.


 
சாஸ்திரத்தால்  கட்டுண்ட கைம்பெண், காதலை மறந்து வேறொருவனை கைபிடித்த பெண், வாழ்க்கையைத் தொலைத்த நடிகை - அவளைப் பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்,  தன் கணவனுக்கு மதுரையில்  குடும்பம் இருப்பது  தெரியாமல் அவனை மலேசியாவில் திருமணம் முடிக்கும் பெண். இவர்கள் தவிர  பறவைகளை  நேசிக்கும் ஒருவள் ஆகிய ஐந்து குறுங்கதைகள். இந்த குறுங்கதைகள் குறித்த விமர்ச கூட்டமும் நாவலிலேயே வருகிறது. கூடவே இந்த குறுநாவல்களை எழுதிய  நாவலாசிரியரான ஆதித்த சிதம்பரத்தை  வடிவமைத்த அவரது காப்பாளர் ( ரெஜினா ) , முன்னாள் மனைவி ( சாரதா ), தோழி ( ரஞ்சனா)  என மூன்று பெண்கள். இதில் நாவலின் இறுதியில் கடலலைகளால் அடிக்கப்படாத மூன்று பட்டாம்பூச்சிகளாக வருவது இவர்கள்தானா அல்லது ஐந்து குறுநாவல்களில் இவர் குறிப்பிடவிரும்பும் சிலரா என்பதை முடிவு செய்வதும் எனக்கானதே என்றாகி விடுகிறது.
 
கடலும் வண்ணத்துப் பூச்சியும் என்பதில் கடல் ஆசிரியரின் வாழ்க்கைப்பாடு என்றால்  பட்டாம்பூச்சியை அவர் கடந்து வந்த மனிதர்கள் குறிப்பாக  பெண்கள் என்று சொல்லலாம். அவர்கள் உலகம் எப்படியானது அதில் அவர்கள் மற்றவருக்கு பொருள்படும் விதம் என்பது ஒரு மின்னல் வெட்டாக வந்தாலும் நினைவில் நிற்கிறது. . ஒருவனுக்கு  அவள் அம்பாள். மற்றொரு ஒருவனுக்கு சாதாரண மனைவி. ஆனால் அவள் மிடுக்கான தலைமை ஆசிரியை  ( சாரதா ) இதில் ஆணும் பெண்ணும் கதையில் வரும் சிவப்பு உடையணிந்த பெண் வரும் தருணம் சுவாரசியமான உளவியல் இடம். நடிகையின் கணவனை  வேலைக்காரி காணும் இடமும் அப்படித்தான் தோன்றுகிறது.  இஸபெல்லா நல்ல பாத்திரம்தான், ஆனால் சமயங்களில் அவளே அந்தத் தனிமையின் அபத்தக் கற்பனையா என்றும் தோன்றுகிறது. இது என் வாசிப்பு
 
இதை வாசிக்கையில் எழுத்தாளர் எம். கோபால கிருஷ்ணனின் மனைமாட்சி நாவல்நினைவுக்கு வருகிறது. நான்கு வெவ்வேறு கதைகளாக பெண்களை / உறவுச் சிக்கலை இன்னும் அருகே சென்று நுணுக்கமாக ஆராய்ந்து உரைத்த ஒரு நாவல் அது. இந்த நாவல் அதற்கு நேரெதிரானது. புள்ளிகளாகச் சொல்லிவிடுகிறது. அதைப் புள்ளிகளாகவே வைக்கலாம் அல்லது இணைத்து சித்திரமாகவும் ஆக்கலாம்.

ஒரு புதிர் போல யோசிக்க வைக்கும் இந்த அனுபவத்திற்காகவே இதை வாசிக்கலாம்.

Friday, July 24, 2020

முரசும் சொல்லும் - ஏ) கதிரெழுகை

முந்தையது:- முரசும் சொல்லும் - எ) தன்னறத்தின் தடத்தில்

ஜெ. தளம் இயங்கத் துவங்கிய சில நாள் முதலே கீதை விளக்க கட்டுரைகள் வரத்துவங்கின. ஒவ்வொரு கட்டுரையின் கீழும் பின்னூட்டத்தில்  அது சார்ந்த மேலதிக கேள்விகள் எழும். அனைத்திற்கும் பதில் சொல்லி அடுத்த கட்டுரை துவங்கும். அதில் ஒரு கடிதத்தில், இதைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் ஒட்டு மொத்த பாரதத்தையும் பக்க சார்பின்றி அணுக வேண்டும் அத்ற்கு நான் பாரத்ததையே மீண்டும் எழுதவேண்டும் என்று கூட ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஜெ.வின் அறையை தன் செங்கோலின் கீழ் அரசபரிபாலனம் செய்பவர் அந்த நேரத்தில் ஆமோதித்திருக்கக் கூடும். அந்த வகையில் வெண்முரசு எழுத அதுவுமே ஒரு காரணம் என்று சொல்லலாம்.


நான் கீதை ஆழ்ந்து வாசித்தவன் இல்லை. என் முதற்கட்ட அணுகுதலை வைத்து,  இமைக்கணத்தை கீதையுடன் இணைத்து கீழ்கண்டவாறு புரிந்து கொண்டேன்.

ஒன்று : காலம்
இரண்டு : இயல் --  கர்ணன் ( சாங்கிய யோகம் )
மூன்று : ஒருமை -- பீஷ்மர் ( கர்ம யோகம் )
நான்கு : அறிவு -- சிகண்டி ( ஞானகர்ம சந்நியாச யோகம் )
ஐந்து : விடுதல் -- விதுரர் ( கர்ம சந்நியாச யோகம்)
ஆறு : ஊழ்கம் -- வியாசர் ( தியான யோகம் )
ஏழு : மறைமெய் -- யுதிஷ்டிரன் ( ஞான விஞ்ஞான யோகம் அட்சர பிரம்ம யோகம், ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்)
எட்டு : சுடர்வு -- திரெளபதி (  விபூதி யோகம் )
ஒன்பது: சொல் -- தெளம்யர், கர்க்கர் குசேலர் ( விஸ்வரூப தரிசன யோகம் பக்தி யோகம் )
பத்து : பொருள்  -- உதங்கர் ( சேத்ரம் சேத்ரக்ஞன் விபாக யோகம், குணத்திரய விபாக யோகம், புருசோத்தம யோகம் )
பதினொன்று : முழுமை -- சுகர் (தெய்வ அசுர சம்பத் விபாக யோகம் சிரத்தாத்திரய விபாக யோகம் மோட்ச சந்நியாச யோகம்)
பன்னிரண்டு : இறைப்பாடல் -- அர்ஜுனனுக்கு உரைக்கும் கீதை ( தொகுப்பு )

அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போர்க்களத்தில் உரைத்ததுதான் கீதை என்னும் ஒரு நாடகீய தருணம் சொல்லப்படுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் அறிதலின் ஒவ்வொரு படிகள் என்றூ பொதுவான கருத்தும் நிலவுகிறது. கீதையில் இந்த அனைத்து படிகளிலும் நின்று அர்ஜுனன் இந்தக் கேள்விகளைக் கேட்கிறான். அவனுக்கு போரிட எழும் தயக்கத்திலிருந்து சரணாகதி தத்துவம் வரை கேட்கிறான். ஆனால், வெண்முரசில் அந்த அத்தனையையும் அர்ஜுனனே கேட்கவில்லை. அவர்கள் மாறுபடுகிறார்கள். இமைக்கணத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அதை அந்த ஐயம் சரியாக பொருந்தக் கூடிய நபர் வந்து கேட்கிறார். இமைக்கனத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும் அணுகி அறிவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. ஆனால் கர்ணனை அணுக இது மிகவும் உதவியாக இருந்தது என்பதால் அதை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஜெயமோகன் இங்கும் ஒரு புனைவின் உச்சத்தைத் தொட்டுப் பார்க்கிறார். இந்தக் கேள்வியை அந்த நபர்கள் கேட்கவில்லை. அவர்களுக்குள் புகுந்து கொண்ட தர்மராஜன் யமன் இதைக் கேட்கிறான் என்பது அது. அதற்கான ஒரு கதை சொல்லப் படுகிறது, அந்தக் கதை ரகுகுல ராமன் உலகியல் இன்ப துன்பங்களில் ஆழ்ந்து பீடிக்கப்பட்டு இருக்கீறான். அவன் காலம் முடிந்ததை அறிவிக்க வரும் யமனுக்கு, மும்மூர்த்திகளின் ஒருவனான ராமன் பூவுலக வாழ்வில் பீடிக்கப் பட்டதைக் கண்டு மெல்லிய ஆற்றமை எழுகிறது. அது நகைப்பாக மாறுகிறது. ஆணவமாக எழுகிறது. அதனால், அவனை யமலோகத்தில் மானுடர் உள்நுழையும் வழியிலேயே அவரை அழைத்து வருகிறான்.  அது அவனது ஆணவமாக பதியப்பட்டு விடுகிறது. அதனால் தவம் மேற்கோள்கிறான் யமன். அவந்து பணி நிகழாததால் உயிர்களின் மரணம் ஜனனம் என்கிற சுழற்சி நிகழாமல் போகிறது. ஆகவே நாரதர் அவனைக் காண வருகிறார். இது நான் சுருக்கமாக, மேலோட்டமாக  தொகுத்து எழுதினாலும் அந்த முதல் அத்தியாயம் தியானிகன்,  பிரபாவன், நாரதர் ஆகியோருக்கான பல அற்புத உரையாடல்கள் கொண்டது. உயிர் என்பது என்ன என்பது போன்ற அடிப்படைக் கேள்விகள் அங்கேயே எழுப்பப்பட்டு உரையாட படுகின்றன. ஆகவே இதை ஒரு பிண்ணனிப் புரிதலை வைத்துக் கொண்டு அந்த அத்தியாயத்தைப் படிப்பதே சிறந்த வாசிப்பு அனுபவமாக இருக்கும்.

(மறுபடியும் இதை இங்கு குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், இமைக்கணம் முழுக்கவே பலதரப்பட்ட உரையாடல்கள் வருகின்றன. அவற்றை வாசிக்கும் எனக்கான புரிதல் என்பது என் அளவில் மட்டுமே இருக்கும். நான் அதை எழுதும் போதே எழுத்தில் வேறொரு புரிதல் வருவது போல எழுதிவிடலாகும் என்கிற எச்சரிக்கையே இங்கு குறிப்பிடுகிறேன். இமைக்கணத்தின் சில வரிகள் வாசிக்கையில் பிறருக்கு வேறோன்றாக தோன்றலாம். அல்லது வேறொரு வாக்கியம் முக்கியமானதாக தோன்றலாம்.

உதாரணமாக நாரதர் யமனிடம் சொல்லும், ’கடமைகளை கைவிட்டுவிட்டு எவரும் தவத்தை முழுமைசெய்ய இயலாது, காலத்துக்கரசே!’  என்கிற ஒரு வரி.  ஒரு சிறிய உரையாடலின் இந்த வாக்கியமே சிலருக்குத் தன் வாழ்வின் ஒரு கேள்விக்கு திறப்பாக அமையக் கூடும். )