ஒரு மத்திய அரசுத்துறை அதிகாரி தன்னிடம் லஞ்சம் கேட்கும் போது உதிர்த்த 'எடுத்தெறிந்த வார்த்தைகளால்' தனியார் நிறுவன கணக்காளரான வெங்கடேசன் வெகுவாகப் புண்படுகிறார். ஒரு வேகத்தில் சிபிஐ அலுவலகத்துக்குச் சென்று அந்த அதிகாரியின் மீது புகார் அளிக்கிறார். சிபிஐ -யும் அந்த அதிகாரியைக் கையும் களவுமாகப் பிடிக்கும் ஆயத்தத்தில் இறங்குகிறார்கள். அவர் லஞ்சப் பணத்தை பொது இடத்தில் வைத்து அளிக்கும் போது சுற்றிவளைத்துப் பிடிப்பது என முடிவு செய்கிறார்கள். இந்த இடைப்பட்டக் காலத்தில் புகார் அளித்த வெங்கடேசனுக்கு அந்த அதிகாரி மீது பரிதாபம் உருவாகிறது. அவர் மாட்டிக் கொண்டால் அந்தக் குடும்பம் என்னவாகுமோ என்கிற கவலை எழுகிறது. ஆகவே அந்த அதிகாரி வரச் சொன்ன உணவகத்துக்கு வந்து அமர்கிறார். அதிகாரியும் எதிரில் வந்து அமர்கிறார். பணத்தைக் கொடு என்கிறார். இவர் தண்ணீர் குடிப்பது போலக் குனிந்து சார் கிளம்பிப் போயிடுங்க என்கிறார். அதன் பின் நடப்பது ஒரு சிறந்த அவல நகைச்சுவை.
விமலாதித்த மாமல்லனின் சிபிஐ கதைகள் தொகுப்பு, சிபிஐ அலுவலகத்தின் கதை அல்ல. வேறு ஒரு மத்திய அரசுத் துறையின் அலுவலரான நரஹரி, சிபிஐ யின் 'திடீர்ச் சோதனை' தருணங்களில் அவர்களின் பறக்கும் படையின் ஒருவராக செல்பவர். அந்த அனுபவங்களில் சிலவற்றினைப் பதினைந்து கதைகளாகத் தொகுத்திருக்கிறார். அரசு அலுவலக நடைமுறை, அங்கு இருக்கும் ஏற்றத் தாழ்வு, காழ்ப்பு,
போட்டி, பொறாமை என அனைத்தையும் அரசியல் சரிநிலை உருவக்கேலி என எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் உள்ளது உள்ளபடி சொல்லும் நடையுடன் இது கூறப்படுகிறது.
இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப்படும் நிகழ்வைக் கவனித்தால் அதில் வெங்கடேசனுக்கு ஏற்படும் குழப்பமும் பதட்டமும் மிக அழகானவை
என்று தோன்றும். இதுபோன்ற மற்றொரு நிகழ்வில் அன்பளிப்பு வேண்டாமென மறுக்கும் ஒரு அதிகாரியைக் காரணம் ஏதுமின்றி வெறும் வழக்குத் தரவுக்காக ஆசை காட்டி சிக்கவைக்கும் தருணம் சொல்லப் படுகிறது. இது போன்று அரசு துறைகளுக்குள்ளாகவே வேறு வழக்குக்காக பலிகடாவாக்கப்படும் அதிகாரிகள், ஊழல் வழக்கில் தப்பித்தாலும் பாவ புண்ணியம் கணக்கு பார்த்து வேலையைத் தொடர வேண்டாம் என முடிவெடுக்கும் குடும்பத்தினரை அனுசரிக்கும் அதிகாரிகள் என பலதரப்பட்ட சூழல்கள் சொல்லப்படுகின்றன.
‘ஒரு சிபிஐ டைரிக் குறிப்பு’ படம் போல பரபரப்பாக ஒன்றைக் கண்டறியப்போகிறோம் என்கிற சாகஸ உணர்வோடு வருகிற நரஹரிக்கு இது போன்று 'பொடி வைத்துப் பிடிக்கும்' நாடகங்கள் வெறுப்பேற்றுகின்றன. ஏனெனில் வணிகப்படம் போல அங்கு நல்லவர்கள்,
நேர்மையானவர்கள் vs தீயவர்கள்,
எதற்கும் துணிந்தவர்கள் என்கிற கறுப்பு வெள்ளைப் பாத்திரங்கள் இல்லை. நேர்மைக்குள்
இருக்கும் மனிதாபிமானமற்ற தன்மையும் கபடமானவர் எனக் கருதியிருப்பவரிடம் இருந்து வெளிப்படும்
கருணையான அம்சமும் கேள்விகளை எழுப்புகின்றன. நரஹரிக்கு, லட்சக்கணக்கில் கொள்ளை அடிப்பவரையெல்லாம் விட்டுவிட்டு இப்படி
ஐம்பது நூறுக்கு அடிப்பவரை
பிடிப்பது சரியா என்கிற
குழப்பம் வருகிறது. அப்போது நிகழும் உரையாடல் குறிப்பிடத் தக்கது //சொசைட்டில் 30% என்ன ஆசை காட்டினாலும் தப்பான வழிக்குப் போகாது. 30% என்ன பண்ணினாலும் நல்ல வழிக்குத் திரும்பாது. இந்த இரண்டு இடைல இருக்கற 40%, மதில் மேல் பூனை மாதிரி. மாட்டிக்க மாட்டோம்னா தப்புப்பண்ண ரெடியா இருப்பாங்க. தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா லைஃபே போயிடும் அவனை மிரட்டி வெச்சிருந்தா பயந்துகிட்டு ஒழுங்கா இருப்பான். இந்த 40 நல்ல 30தோட சேர்ந்ததான்னா சொசைட்டி ஓரளவாவது ஒழுங்கா இருக்கும். அதுக்கு, எதுக்கும் துணிஞ்சு இந்த TTE மாதிரி ஆட்களை பிடிச்சு உள்ள போட்டோம்னா ஆகணும். முதல் தடவை பண்ணுறவன், எப்பயாவது தப்பு பண்ணுவான்னு சொல்ல முடியாது. கூட இருக்கறவங்களே இவன் போட வேணும்னு ஆள்தான்னு சொல்ற மாதிரி இருக்கற ஆட்களை மட்டும்னா இப்படி டிராப் பண்றோம். அதனால், ஒருத்தன் லைஃபே நம்மால போச்சுனு நீங்க கில்ட்டியா ஃபீல் பண்ண வேண்டியதில்லை. ஹி டிசர்வ்ஸ் இட்.’//
நரஹரிக்கு நாளடைவில் இதில் உள்ள
இத்தகைய கலவையான சூழல் பிடிபடுகிறது. அதன் பின்னர் அவர் இதற்குள் ஒரு கதை கேட்கும்
சுவாரஸ்யமும் தள்ளி நிற்கும் மனோபாவமும் கொண்டுதான் ஈடுபடுகிறார். சூழலை நுட்பமாக கவனிப்பவராகவும் தன்னைத் தடாலடியாக வெளிக்காட்டிக் கொள்பவராகவும் இருக்கிறார். அலுவலகத்தில் ஒருவரின் சங்கேத வார்த்தைக்கு எல்லோரும் சிரிக்கும்போது, இவர்
அது என்ன எனக் கேட்கிறார். பிறகு சொல்கிறேன் என்கிறார் அவர். எல்லோரும் சிரிக்கிறார்களே
அப்போ எல்லாருக்கும் தெரிந்திருக்கு தானே.. என்கிட்ட மட்டும் ஏன் மறைக்கனும் எனக் கேட்பது
ஒரு உதாரணம். இவர் ஒரு காலண்டர் கூட இனாம் வாங்க மாட்டார் என்பதைப் பார்த்த பிறகுதான்
சிபிஐ அதிகாரிகள் இவரை சோதனைக்கு அழைக்கிறார்கள்.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த லஞ்ச உலகில் சிக்கிக் கொண்டு தனது நேர்மைப் பிடிப்பைத் தளர விடும் போதும் அவர் அதற்குள் தனக்கான ஒரு நியாயத்தை வைத்துக் கொள்கிறார். பிறகு சிபிஐ ஒரு சோதனைக்கு உதவியாக அழைக்கும்போது, தான்
இதற்கு வருவதற்கான தார்மீகமான பண்பை இழந்துவிட்டேன் என்று மறுக்கிறார். நீங்களுமா என்று
வியக்கும் அந்த அதிகாரி, ‘பட், ஸ்டில் யூ ஆர் ப்ருட்டலி ஹானஸ்ட்’ என்கிறார். முன்பின்
ஓடி மாறி வரும் இந்தக் கதையமைப்பில் இது முதல் அத்தியாயத்திலேயே வந்துவிடும். ஆனால்
மொத்த புத்தகத்தையும் வாசித்த பிறகு இதைக் கவனித்தால் இது நரஹரி கோரும் பாவமன்னிப்பும்
அல்ல ஒருவித ‘சொல்லி வைத்தலும்’ அல்ல என்பது புரிகிறது. நரஹரிக்கு உள்ளுர் பயம் இருக்கிறது
ஆனாலும் அந்த சாகஸ உணர்வு இதை செலுத்துகிறது. அதன் போக்கில்தான் இவற்றைச் சொல்லிச்
செல்வதும் நிகழ்கிறது.
நாம் நரஹரியின் ‘தெனாவட்டால்’ ஈர்க்கப் படுகிறோம். அவர் ஒரு நிமிர்வோடு இருக்கிறார். ஒரு காலண்டர் வைத்ததற்காக தனது அதிகாரியின் அறைக்குச் சென்று எச்சரித்து வருகிறார். அலுவலகங்களில் உள்ள அடிமைத்தனங்களை இலக்கியத்தில் பார்த்து வரும் தமிழ் வாசகருக்கு இந்த நிமிர்வு அதிசயத்தக்க ஒன்று. அப்படிப்பட்டவர் எந்த தருணத்தில் இப்படி லஞ்சம் வாங்குபவராக மாறுகிறார் என்பதை இது சொல்லாமல் கடக்கிறது. தனது அலுவலகத்தில் சோதனை என்றதும் அவர் படபடத்துப் போகும்போது, நரஹரியின் ஆளுமையில் ஒரு தடுமாற்றத்தைக் காண முடிகிறது. இந்தத் தொகுப்பில் அது ஆளுமை வீழ்ச்சி என்றே தோன்றும். ஒரு திடீர் மாற்றமாகவும் இருக்கிறது. நான் ‘மெட்ராஸ் பேப்பரில்’ விமலாதித்த மாமல்லனின் ‘ஆபீஸ்’ நாவலை வாசிக்கத் துவங்கினேன். அப்போது சிபிஐ கதைகள் அச்சில் வந்தது. ஆபீஸ் நாவல் வாசித்திருந்ததால் நரஹரியின் ஆளுமை இன்னமும் தெளிவாகவே பிடிகிட்டியது. அவ்வாறின்றி, இதை மட்டும் வாசிப்பவருக்கு இதன் பாத்திரங்கள் மீது எழும் பச்சாதபமும் ஆர்வமும் இதன் கதைசொல்லியான நரஹரி மீது எழுவதற்கு வாய்ப்பு இல்லை. பிரதிக்கு அந்த நோக்கமும் இல்லை. ஆனால் அவரது சில ஆளுமைகள் வெளிப்படுகின்றன. ஒரு சோதனைக்குப் போகும் போது ரயில் ஜன்னலில் மழைத்துளி கோர்த்து சொட்டி விழுவதைச் சுண்டி விட்டபடி நரஹரி அமர்ந்திருப்பார். மற்றொரு தருணத்தில் இவர் சோதனை செய்த வீட்டு அம்மாள் இவரைப் பார்த்துக் கும்பிட, கோயிலுக்குப் போகாத நரஹரிக்குக் கும்பிடுவது எப்படி எனக் கைவரவில்லை. அரைகுறையாக கும்பிடுகிறார். சோதனைக்குப் போகும் இடத்தில் பழைய கதைகேட்பது ஏதேனும் தேறுமா என நூல் விட்டுப் பார்ப்பது, சுரத்தில்லாத நேரங்களில் வலிந்து ஒரு வியப்பைக் காட்டி சிபிஐ ஊழியர்களை சகஜமாக்குவது போன்ற குறிப்புகள் வழி ஒரு சித்திரம் கிடைக்கிறது. இந்தத் தொகுப்பின் மையப்புள்ளியானது, சிபிஐ சோதனைகளை அடிப்படையாகக் கொண்டு அதைச் சுற்றி நிகழ்பவற்றைச் சொல்வதாக உள்ளதேயன்றி நரஹரியின் கதையாக இல்லை என்பதாலும் அந்தப் பாத்திரத்தின் மீது கவனம் குவிவதில்லை.
பொதுஜனத்துக்கு காலங்காலமாக எழும் அடிப்படை சந்தேகம் என்பது சட்டம் என எதைப் பார்ப்பது என்பதும் எதை விடுவது என்பதும். சாதாரண காலங்களில் இருக்கும் தலைக்கவச பிடித்தல்களும் அபராதங்களும் கூட தேர்தல் காலத்தில் இருப்பதில்லை. பொதுக் கூட்டங்கள் நடக்கும் போது வாகன ஓட்டிகள் மீது மது அருந்தியதற்கான சோதனை செய்வதில்லை. இவற்றை நாமே பார்க்கிறோம். யாரும்
கண்டுகொள்வதில்லை என்பது சாலையில்
சாகசம் செய்யும் விடலைகளுக்குத் தெரிய
வரும் போது அவர்கள் உற்சாகமடைகிறார்கள். விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதில் யாரைக் குறைசொல்வது. இவ்வாறு
விதியைத் தளர்த்தும் உரிமையை யார் எடுத்துக் கொள்கிறார்கள். ஆகவே ஒரு சட்டம் என்பது அந்தந்த நேரத்திற்கேற்ப அமல்படுத்தப் படுகிறது. தீவிரப் படுத்தப்படுகிறது. தேவையெனில் அதை நிறுத்திவைக்கவும் செய்கிறார்கள்.
அது போலவே இந்த லஞ்சம் அளிப்பது பெறுவது என்பதை நடைமுறையில் இந்தியன் தாத்தா போலக் கையாள முடிவதில்லை. ஒரு தொழில் முனைவோருக்குத் தனது வாடிக்கையாளரைப் பார்க்கும் நேரம் என்பது அவருடைய வருவாய்க்கான நேரம். அந்த நேரத்தில் அரசு அலுவலகத்தில் அலைக்கழிக்கப் படுவதை எந்தத் தொழிலதிபரும் விரும்புவதில்லை. அவர் பக்கம் அனைத்தும் சரியாக இருந்தாலும் அரசு அலுவலக நடைமுறை இரு நாட்களுக்கு இழுக்குமென்றால் அது அவருக்கு ஒரு அவஸ்தை. அதைத் துரிதப்படுத்த அவர் பணம் தர முன்வருகிறார். அவரைப் பொறுத்த மட்டில் ஒரு அரசு அலுவலர் தனது வேலையை நேரத்துக்குத் செய்வதே அவருக்குப் போதுமானது. அதற்கே அந்த அலுவலருக்குப் பணம் தருவது எஎன்பது அவருக்கு ஒப்புநோக்க இலாபகரமானது. இது இரு தரப்புக்கும் லாபகரமான ஒரு உடன்படிக்கை இது. ஆனால் தார்மீகப்படி தவறானது. ஆகவே இந்த தருணத்தில் அந்த அரசு அலுவலரின் நிலை சற்றே குழப்பமானதாகிறது. அவர் நியாயப்படி அன்பளிப்பை மறுக்க வேண்டும் என்றாலும் அதை ஏற்பதும் பிழையில்லை என்றும் தோன்றுகிறது. இது போன்ற திரிசங்கு நிலையையும்
கறுப்பு வெள்ளை நிலையையும் சரியாக வாசகருக்குக் கடத்துகின்றன இந்தக் கதைகள். கூடவே கொஞ்சம் கொஞ்சமாக
லஞ்சப் பணத்தை ஆதாரமில்லாமல் எப்படியெல்லாம் செலவழிக்கலாம் என்கிற ஒரு
கையேட்டை இதிலிருந்து வாசகர் உருவாக்கிக் கொள்ளும் சாத்தியமும் உள்ளது என்று வேடிக்கையாகக் குறிப்பிடலாம். அதை வங்கியில் இடுவது,
நிலம் வாங்குவது என ஆதாரம் காட்டும் செலவுகளை செய்யாதே என்கிறது
விமலாதித்த மாமல்லன் கதைகள், அசோகமித்திரனின் சொற்சிக்கனமும் கோபிகிருஷ்ணனின் அபத்தமும் கலந்த ஒரு வாசிப்பை நல்குபவை. அன்றாட வாழ்க்கை மற்றும் சாதாரண சம்பவங்களின் வழியாக சொல்லப்படும் கதைகள். அதிகம் வர்ணனைகளும் அற்றவை. உதாரணமாக, திஜானகிராமனின் கதைகள், தான் உருவாக்க விரும்பும் உணர்வை வரிகளால் உரையாடல்களால் வாசகருக்குக் கடத்திவிடுபவை. ஆனால் இத்தகைய கதைகள் அதைச் செய்வதில்லை. அந்த அனுபவத்தோடு பொருந்திப் போகும் வாசகருக்கு அது ஒரு திறப்பாக அமையும். இந்த சிபிஐ கதைகள் தொகுப்பு, அவரது முந்தைய கதைகளை விட அதன் ‘பறக்கும் படை’ மற்றும் ‘ திடீர்ச் சோதனை ‘ போன்ற சாகஸ உள்ளடக்கத்தால் சுவாரஸ்யம் கூடிய ஒன்று. கூடவே அந்த அனுபவச் சரடின் உளவியல் நோக்கும் தொடர்கிறது.

