Tuesday, March 30, 2021

'ஆள்தலும் அளத்தலும்' - எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் வாழ்த்து

எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் வாழ்த்து 

 எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின்  கதாவிலாசம் வாசித்து அதன் வழியாகவே எழுத்தாளர்களையும் படைப்புகளையும் தொகுத்துக் கொண்டேன். அன்று விகடன் போன்ற வணிக ஊடகத்தில் இலக்கியத்தையும் ஆளுமைகளையும் அறிமுகப் படுத்தினார். என் தொகுப்பின் முன்னுரையில் அவருக்கு இதை குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்திருந்தேன்.வெகுஜன எழுத்திற்கும் இலக்கிய எழுத்திற்குமான வேறுபாட்டை அது (கதாவிலாசம்) உணர்த்தியது.

 சமூக ஊடகங்களின் வாயிலாக வாய்க்கும் இணைய உறவிற்கு அடித்தளமாக அமைந்த ஆர்க்குட் உச்சத்தில் இருந்த காலத்தில், எனக்கு அதில் இலக்கியம் சார்ந்து ஆர்வம் இருந்தது.  அந்த திசை நோக்கி வாசிப்பில் மேலும் உந்திச்செலுத்தியது அன்றைக்கு எங்கள் ஆர்க்குட் கூடுகைக்கு நேரில் வந்து அவர்  ஆற்றிய உரைதான்.

என்னுடைய மொழிபெயர்ப்பு நாவலான தம்மம் தந்தவன் வந்த பொழுது அதை அந்த வருடத்தின் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக குறிப்பிட்டு அவர்  எழுதியருந்தது என்றும் எனக்கு பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஒன்று.

வாசகர் எழுத்தாளரை அறியும் அளவு எழுத்தாளர் எங்கோ ஒரு நகரத்தில் வாழ்ந்திருக்கும் வாசகரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால்  இன்று தொகுத்துப் பார்க்கையில், அவரது  எழுத்துக்கள் வழியாக மறைமுகமாக என் வாசிப்பிலும்,   புனைவுகள் வெளியாகும் தருணங்களில் அதை அடையாளப்படுத்தி நேரடியாகவும்  அவர்  எப்பொழதும் என்னுடன் இருக்கிறார்   என்கிற உணர்வு உண்டாகிறது.




 ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பு வெளியான பொழுது அதை அவருக்கு   அளித்து ஆசிபெறவே எண்ணினேன். ஆனால் அதை இவ்வளவு விரைவாக வாசித்து இருநாட்களில் அவரது  தளத்தில் அது குறித்து எழுதுவார்  என்று எதிர்பார்க்கவில்லை. நேரில் சந்தித்த பொழுது  என் சிறுகதை தொகுப்பு  குறித்த பாராட்டுகளோடு அது சார்ந்த    மேலும் சில கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளித்தார். அவற்றையும் மனதில்  குறித்துக் கொண்டேன்

இந்த நெருக்கடியான புத்தக கண்காட்சி காலத்தில் கிடைத்த சொற்ப ஓய்வு நேரத்தில் இதை வாசித்து  எழுதியதும் கதைகள் குறித்து உரையாடியதும்  என்னை மிகவும் உற்சாகமாக உணரச் செய்தன. 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள். 

No comments: