Saturday, December 23, 2017

அம்புப் படுக்கை - சுநீல் கிருஷ்ணன்

எச்சரிக்கை:-

இந்தப்பதிவினை எழுதியதும் யார் யாருக்கு சுட்டிஅளிப்பேன் என தெரியும். அவ்வகையில் இது உடன்பிறந்தோனின் பெருமையை பிறந்தவீட்டில் பீற்றிக்கொள்ளும் பதிவே

அம்புப் படுக்கை - தொகுப்பு

பணமும் பாசமும் அறிவியலும் விதியின் முன் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும் வாசுதேவன் கதையின் மூலம் அறிமுகமான சுநீல் தன் பேசும்பூனை கதைமூலம் கணையாழியின் சிறந்த குறுநாவலுக்கான பரிசைப் பெற்று, ஜெயமோகன் காதில் புகை வரும் அளவிற்கான எழுத்தாளராய் வந்து நிற்கும் பயணமே இந்த அம்புப்படுக்கை தொகுதி. 

பத்து கதைகள் கொண்ட இந்த தொகுப்பில் தர வரிசைப்படி முதல் இடம் வைக்கச் சொன்னால் நான் வாசுதேவனைத்தான் தேர்ந்தெடுப்பேன். அதில் உள்ள தவிப்பும் இயலாமையும் “சக்சன் போட கொஞ்சம் லேட்டானாக்கூட மூச்சு நின்னுடும்” என்று சொல்லிவிட்டு வருவதும் மிகவும் பாரமானது. வாசுதேவன் பெற்றோருக்கு  அளிக்கும் அதே வேதனையை மருத்துவருக்கும் பின் வாசகனுக்கும் அளிக்கிறான். அந்த உணர்வைக் கடத்திய இடத்தில் இந்தக்கதை வெற்றியடைகிறது. இறுதியில் கொச்சையான தெலுங்கில் அந்தக் குழந்தை பொம்மையைப் பிய்த்து விளையாடுவதில் கதையை முடித்திருப்பார்.  வந்தேறிகளின் தெலுங்கு,  ஊழைவிடவும் கொடுமையானது





குருதி சோறு கதை நம் குலதெய்வங்களின் கதை. ஒரு குறுநாவலுக்கிணையானது. பாலாயி அன்னபூரணியாகும் தருணம்.  இருவேறு கதைகளை சொல்லிவந்து இறுதியில் பாட்டிகதை வாயிலாக அனைத்தையும் இணைக்கும் நுட்பம் சரியாக கைவந்திருக்கிறது. இது தவிர காளிங்க நர்த்தனம், அம்புப்படுக்கை போன்ற கதைகளும் சரளமான மொழிவடிவில் உள்ளன.

2016 மற்றும் திமிங்கலம் போன்ற கதைகளை இவர் மொழிபெயர்த்தார் என்று சொன்னால் நம்பிவிடலாம். அந்த எழுத்து வகையினாலேயே அவை மாறுபட்டும் இருக்கின்றன. ”ஹோமோ ரீகாம்பினண்ட்” ஆய்வு பற்றி விளக்கியிருப்பது ஒரு சிறுகதைக்கு அவர் மேற்கொள்ளும் சிரத்தையைக் காட்டுகிறது. 


எல்லாகாலங்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாக ஒரு கதை உள்ளது, கூண்டு. அது வெளிவந்தபோது இருந்த பணமதிப்பிழப்பு பிரச்சனையை ஒட்டிப் புரிந்துகொள்ளலாம். இப்போது படிக்கையில் வேறு ஞாபகம் வருகிறது. ஒரு நல்ல பகடி / அபத்த நகைச்சுவை கதையாக படிக்கலாம்.




சுநீல் எஸ்.பி.பி, யை விட சிறந்த பாடகர் என நம்பியிருந்த சுதீரனின் நம்பிக்கை தர்ந்த “ பொன்னழகை பார்ப்பதற்கும்” கதையை சுநீலின் பாடல்களைக் கேட்டவன் என்கிற வகையில் நகைச்சுவையாகவே அணுக முடிந்தது. இரண்டாம் முறை படித்தபோது  சிரித்து வயிற்று வலி. சிறிது நேரம் பேசும் பூனை படித்து மனதை சோர்வாக்கிக் கொண்டு மீண்டும் படித்தால் இன்னும் பலமாக சிரித்து பிறகொருநாள் சீரியஸாக படிப்போம் என தாண்டிவந்துவிட்டேன்.  இறுதிக்கதையாக வரும் ஆரோகணம், காந்தியை தருமனோடு ஒப்பிடும் கதை. ஒரு துளி கண்ணீருடன் இந்த தொகுதியை மூடி வைக்க வைக்கிறது. ’ஹரி, என் செல்ல மகனே..” போல  அநேக கதைகளில் வரிகள் வருகின்றன. இவை சற்று செயற்கயாக இருப்பது போல தோன்றுகிறது. அவை ஆங்கில நாவல்களுக்கே உரியவை என்பது என் எண்ணம். அவைகளை தவிர்க்கலாம் அல்லது தமிழ்படுத்தலாம். சில classic களில் இவற்றை தவிர்க்க முடியாது. ஆரோகணம் இந்த தொகுப்பின் classic  என்பதால் விட்டுவிடலாம். ஆனால் மற்ற கதைகளுக்குள் இவை எட்டிப்பார்ப்பதை கவனமாக தவிர்க்கவேண்டும் எனக்கூறுவேன்.

சுநீலின் மிகப்பெரிய பலம் என்பது அவரின் நடை.   பல இடங்களில் லா.ச.ராவை நினைவு படுத்துகிறார். நெருப்பென்றால் வாய் வேகும் நடைதான். உதாரணமாக குருதிசோறு நாவலின் இந்த வரிகளைக் கூறலாம்.

” அம்மா கொடுத்த தாய்ப்பால்தான் கடைசியில் கரிய திரவமாக, குருதி கலந்த காட்டுப்பீயாக வரும் என்று சொல்வார்கள்..”

விளங்கியம்மன் கோவில் பூசாரி பாண்டியண்ணன் உடுக்கையை  அடித்துக்கொண்டே ஆட தொடங்கினார். சபரியின் கால்கள் அவனை மீறி தாள கதிக்கு ஏற்ப ஆடுவது போலிருந்தன. கண்ணுக்கு எதிரே குளிர்ந்த நதியோன்று சபரியைப் வசீகரித்து அழைப்பது போலிருந்தது. ஒரு அங்குலம், ஒரு புள்ளி, ஒரு கனம், அல்லது ஒரு மிக மெல்லிய திரை ஏதோ ஒன்று \அவனை அந்த நதியில் இறங்க விடவில்லை. ஒரு மெல்லிய சலன தூரத்தில் அவன் நின்றுக் கொண்டிருந்தான். நதியின் தெறிப்புகள் உள்ளங்காலில் சிதறி சில்லிட செய்தன. கால்களிலும் கரங்களிலும் படர்ந்திருக்கும் பூனை மயிர்கள் குத்திட்டு நின்றன. அதன் ஆழமும் வேகமும் குளுமையும் கருமையும் அவனை ஈர்க்கிற அதேசமயம் அவைகள் அவனை அச்சமுற செய்தன. ராஜம் மாமாவின் விசும்பல் கூடிக்கொண்டே போனது. யாரோ இரு பெண்கள் உடலை முறுக்கிக்கொண்டு ஆடத் தொடங்கினார்கள். ஊஊஊய் என அடிவயிற்றிலிருந்து ஒரு கூச்சல் எழுந்தது. நதி ஒரு சுழிப்பில் பலரையும் வாரி சுருட்டி கொண்டுவிட்டது...”

அந்த இடத்தில் அங்கு நிற்கும் உணர்வை எழுத்தில் கொண்டுவருவது என்பது அசாதரணம். அது எளிதாக கைவந்திருக்கிறது,

சுநீல்க்கு நல்ல வாசிப்பு பயிற்சி இருக்கிறது, பலதரப்பட்ட மக்களோடும் புழங்குகிற தொழில் அனைத்தையும் மீறிய ஒரு தேடல் இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு ஒளிக்கீற்றாக இந்த தொகுப்பில் வெளிப்படுகின்றன. இந்த் ஒவ்வொரு கதைகளின் வழியே அவர் ஒவ்வொன்றாக கடந்து போகிறார். வாசுதேவனில் எளிய குற்றவுணர்ச்சியோடு துவங்கி அனைத்தும் மகாத்மாக்களாக நிறைவடையும் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் சுநீலின் மாறுபட்ட மன நிலைகளின் வெளிப்பாடு எனலாம். 

சிறுகதைகளைத்தாண்டி அடுத்தகட்ட நகர்வான நாவல் வெளிக்குள் அவர் பிரவேசிக்கவேண்டும்.

வாழ்த்துக்கள் சுநீல்!!!







Sunday, November 19, 2017

அறம் - திரைப்படம்

அடிக்கடி திரையரங்கு சென்று திரைப்படங்கள் பார்க்க இயலுவதில்லை, காரணம் என் அலுவலக பணி நேரம் முடியவும் அரங்குகளில் ரெண்டாங்கட்ட ஆட்டத்திற்கு இடைவேளை விடுவதும் ஏறத்தாழ ஒரே நேரத்தில்தான். ஆனால் அறம் படத்தைப் பார்த்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். மூன்று காரணங்களால் நெரிக்கப்பட்டிருந்தேன். முதல்காரணம் அய்யன் வள்ளுவனுக்கும் ஆய்ச்சி  ஒளவையாருக்கும் அடுத்து அறம் என்ற வார்த்தையை மீட்டெடுத்த எனது ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின்  வி.கு. வாக இது என் தலையாய கடைமையாகிறது. இரண்டு, இந்த கதை நிகழும் இரண்டு நிலப்பகுதிகளும் என்னுடன் மொட்டத்தல மொழங்கால் அளவில் சம்பந்தப்பட்டவை. திருவள்ளூர் ஜில்லாதான் இப்போது எனது ஊர் இன்னொரு ஊரான ஸ்ரீஹரிகோட்டாவில் ஐந்துவருடங்கள் ஒப்பந்த ரீதியில் பொட்டி தட்டிருக்கிறேன் (அல்லது பொட்டி தொடச்சிருக்கேன்).  மூன்றாவது காரணம் இறுதியில் சொல்கிறேன்

படத்தின் முதல் பாதியில் தன் கண்ணழகாலும் குரலழகாலும் பலதிரைப்படங்களில்  பலரை கட்டிப்போட்டிருக்கும் ராமசந்திரனின்  குடும்பமும் ஊரும்  எப்படிப்பட்டவை என கண்முன் நிறுத்திவிடுகின்றனர்.  குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து அவளைக் காப்பாற்ற போராடும் அனைவருடனும் பார்வையாளர்களையும் இழுத்துவிடுகின்றனர். நான் என்ன அவன  மூழ்க விட்டு பாத்துட்டிருந்தேனா.. முன்னூறு வரை எண்ணிகிட்டிருந்தேன் என்று ராம்ஸ் சொல்லும்போது ஆரம்பிக்கும் கண்ணீர் இடைவேளைவரை தொடர்கிறது. இடையிடையே டம் டம் என ஜிப்ரான் ட்ரம்ஸை அதிர விட்டு என்சிசியை ஞாபகப்படுத்தாமலிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்தருக்கும். குழந்தைகள் தூங்க, கிடைக்கிற கேப்பில்  கணவனும் மனைவியும் கொஞ்சி கொள்ளும் இதேபோன்ற ஒரு பாபநாசகாட்சிக்கு "வாவா என் கோட்டிக்காரா..." என அழகாக இசையமைத்தவர், இதில் அதேபோன்ற ஒரு காட்சிக்கு 'ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா... 'என்பதுபோன்ற இசையை தெளித்துவிடுகிறார்.



படம் சொல்லவரும் கருத்துக்கள் என்ன என்பதை நயன்தாரா கிட்டியிடம் சொல்லிவிடுகிறார். மேலும் படத்தின் சில கதாபாத்திரங்களும. சொல்லிவிடுகின்றனர். அதன்பின்னும் படத்தின்  திரண்ட கருத்தை   யோக விழிகொண்டு, அ.முத்துகிருஷ்ணன், இளங்கோ கல்லாணை போன்றவர்கள் அவ்வப்போது வந்து விளக்குகிறாரகள். இது தேவையா என யோசிக்க வைத்தாலும், படத்துல அத்தினி அரசாங்க ஆளும் இருக்கும் போது அரசாங்கம் ஒண்ணும் பண்ணலன்னு சொல்றாங்க எனக்கூறிய ப்ளூவேல் அண்ணாச்சியின் விமர்சனத்தை பார்க்கும் போது இது தேவைதான் எனத்தோன்றுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் நாங்க என்ன சொல்ல வறோம்னா, என இயக்குநர் விளக்கியிருந்தாலும் பிழையன்று

இடைவேளை வரை கண்ணீரை வரவழைத்து, இடைவேளை விட்டதும் கண்ணீரை துடைக்கவே நேரம் சரியாகப் போய்விடுகிறது.  அப்பா ஏம்மா அழறா என குழந்தைகளும் மானத்தை வாங்கிவிடுகின்றன. அந்த சங்கடத்தை மறைக்க அப்போது அம்பத்தூர் ராக்கி தியேட்டர் ஆபரேட்டர் டெங்கு கொசு ஒழிப்பு பற்றிய தமிழக அரசின் சாதனைகளை நடிகர் விவேக் செல்முருகன் ஆகியோர் நகைச்சுவையாக விளக்கும் ஒரு விளம்பரத்தை ஓட்டுகிறார். அவருக்கு என் நன்றி. அதில் விவேக் முருகனைவிட அமைச்சர் மற்றும் முதல்வரின் பர்பாமென்ஸ்க்கு நல்ல சிரிப்பொலி எழுந்த்து. விவேக் தனது லார்டு லபக்குதாஸ் ஸ்கிரிபட்டுக்குப்பிறகு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கும் நகைச்சுவையே அம்பத்தூரில் காணலாம்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொரு நபர் வேலராம்மூர்த்தி அவர்கள்.   ரஜினி முருகன் சேதுபதி ஆகிய படங்களில் அவரை பார்த்திருக்கிறேன். சிவாஜிக்கிணையான நடிகர் என தோன்றுவது ஏனென யோசித்தபோது  இவரது நடை  கந்தன்கருணை படத்தில் சிவாஜியின் நடைக்கு சற்றும் குறைந்த்தல்ல என்பதை
சித்தம் அறிந்தது.

மதிவதனி ,முத்துகுமார் , இலங்கை ரேடியோ என அங்கங்கு இயக்குநரின் அன்பு வெளிப்படுகிறது. குறிப்பாக ஒடுக்கப்படவர்களின் அரசியிலுக்கான படத்தில் துப்பாக்கி ஏந்திய வீராங்கனையாம் தன்ஷிகா பெயரை குழந்தைக்கு வைத்தது உச்சத்திலும் உச்சம். :-)

இந்தப்படத்தின் இயக்குநர் பற்றி அவ்வப்போது முகநூலில் படிப்பதுண்டு. இரு பெரும் படங்கிளின் பங்களிப்பு மறக்கடிக்கப்பட்டும் மீண்டு வந்திருப்பது அவர் போராட்ட குணத்தின்  மற்றும் திரைப்படத்துறையின் மீதான அவரது திறமையின்  வெளிப்பாடு.  அவள் இன்னும் ஆழத்தில் விழுந்துட்டாள் என்றதும் நாமும் பதை பதைக்கிறோம். மீட்கப்படும்போது கைதட்டுகிறோம். அது  அவரது வெற்றி!

படத்திற்கு வந்த்தன் மூன்றாவது காரணம் என்மகள்தான். இரண்டாவது படிக்கிறாள். அவள் என் மனைவி  முற்றதிகாரம் கொண்டவள் என நம்பினாள். அவள் விளையாட்டில் எப்போதும் அம்மா ரோல்தான்.  இதக் கொண்டு போய் அங்க வைங்க என அதிகாரம் தூள் பறக்கும். பள்ளிக்குச் சென்றபின் அந்த ரோலை எனக்குத் தந்துவிட்டாள். அத்விகாம்மா நல்லா ஹோம ஒர்க் சொல்லிக்கொடுங்க என சொல்கையில் நான் சரி மிஸ் என பவ்யமாக சொல்லுவேன். பிறகுதான் ஸகூல் பிரின்சிபாலுக்கு மிஸ்ஸைவிட அதிகாரம் அதிகம் என உணர்ந்தாள். போனவாரம் வரை பெய்த மழை அவளுக்கு ஒரு தெளிவை அளித்தது. அதாகப்பட்டது, கலெக்டர் சொன்னாத்தான் பிரின்சிபாலே கேட்கிறாங்க என்பதும் கலெக்டர் நினைத்தால் ஸ்கூலுக்கு லீவு விட முடியும் என்பதையும் உணர்ந்த தருணம் அது. தினமும் ஸ்கூல் உண்டா என புதியதலைமுறை தொலைக்காட்சியை அவளை வைத்துக்கொண்டு பார்த்தத்தின் தவறு. ஆகவே கலெக்டராதல் என்ற லட்சியத்தில் இருப்பவளுக்கு இந்த கலெக்டர் படம் தூண்டுகோலாக இருக்கலாம் என நினைத்து சென்றேன்.  கலெக்டரைவிட   சியெம் அதிகாரம் பெரிதென்று நயன்தாராவே சொல்லிவிட்டதால்  அதற்கு இப்போதே  இவள் கல்வித்தகுதி over qualified என்ற வகையில் வருவதால் என்குச் சற்று குழப்பமாக இருக்கிறது.

Wednesday, June 21, 2017

என் சரித்திரம் - உவேசா



ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை !
        எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனை !
பாடுபட்ட பதத்தெளி வெத்தனை !
       பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை !
நாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு
       நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனை!
கூட நோக்கினா்க் காற்றின வெத்தனை !
      கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே!.
                            
                               -இரா.இராகவையங்கார் 

பழைய தஞ்சாவூர் மாவட்டம் இன்றைய தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கியது. பல வைணவ திவ்ய சேத்திரங்களும் பல பாடல்பெற்ற சிவதலங்களும் நிறைந்த்து. இங்கிருக்கும் திருவாவாடுதுறை ஆதீனம் என்னும் பெயரை அங்கு ஆதீனத்தை கொலை செய்ய முயற்சித்த வழக்கில்தான் முதன்முதலில் கேள்வியுறுகிறேன். அப்போது எனக்குத் தெரிந்திருந்த ஆசிரமங்கள் எல்லாம் பத்திரிக்கையில் வந்தவைகளே. பிரேமானந்தா ஆரம்பித்து வைத்த சீசன் இது. 2002 ல் ஆடுதுறை ஆதீனம் பற்றி படித்து சாமியார்களே இப்படித்தான் என்று எவ்வளவு எளிதாக நினைத்திருகிறேன். திருவாவாடுதுறையின்  ஆதீனமாக விளங்கி  மாபெரும் தமிழ்த்தொண்டிற்கு உறுதுணையாக விளங்கியிருக்கும் பதிநான்காவது பட்டம் சுப்ரமணிய தேசிகரையும் பதினைந்தாவது பட்டம் அம்பலவாண தேசிகரையும் இக்கணம் மனதால் வணங்குகிறேன்.






மகாமகோபாத்யாயர் வாழ்த்து - சுப்பிரமணிய பாரதியார்

செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு 

  சுவைபெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்

உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று 
  எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
  தப்புலவன் குறைவில் சீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல் 
  பேருவகை படைக்கின்றீரே? 1


அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி யறியாதார் 

  இன்றெம்மை ஆள்வோ ரேனும்
பன்னியர்சீர் மகாமகோ பாத்தியா 
  யப்பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
  தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
  இவன்பெருமை மொழிய லாமோ? 2


நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி

  இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்றுமனம் வருந்தற்க;
  குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப், பிறந்தமொழி வாழ்வறியும் 
  காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
  இறப்பின்றித் துலங்கு வாயே. 3


பிள்ளையவர்களின் முதற்காட்சியை  உவேசா வர்ணிக்கும்போது, அவர் ஒரு யானையைப்போல நடந்து வந்தார் என்கிறார். எவ்வளவு ஒயாரமான நடை என்று தோன்றியது! யானை நடக்கையில் நாம் அதை பார்க்கிறமாதிரி யானை யாரையாவது கவனிக்குமா.. அது தன்னியல்பிலேயே அச்செருக்கு உடையதா..சின்னயானை நடையைத் தந்தது என்கிற கண்ணதாசன் வரி உடன் நினைவுக்கு வருகிறது. தன் குருவின் நடையழகை இதுபோல வேறு யாராவது வர்ணித்தார்களா என்று தெரியவில்லை. இத்துணைக்கும் பிள்ளையவர்கள் வறுமையில்தான் இருந்திருக்கிறார். மடத்தில் உணவுண்டபின் நெடுநாட்கள் கழித்து இன்று நெய் சேர்த்து உண்ணும் வாய்ப்பு கிட்டியது என்று ஓரிடத்தில் சொல்கிறார். பட்டீஸ்வரம் சென்று கவிபாடி மகன் திருமணத்திற்கு பணம் சேர்க்கிறார். கடன் வாங்குகிறார். திருமகள் ஏறிட்டும் பார்க்காதவரை கலைமகள் ஸ்வீகரித்திருக்கிறாள். விரல் சொடுக்குகையில் பாட்டு எழுதுகிறார். சீர் பிரிக்கிறார்.    ” திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் “ என்னும் புத்தகம் இரு பாகங்களாக  உவேசாவால் எழுதப்பட்டு வந்திருக்கிறது. அதைப்படிக்கும் நேரம் அமையவேண்டும். 

என்சரித்திரம் ஆனந்தவிகடனில் தொடராக வந்திருக்கிறது. அத்தொடரில் உவேசா   மணிமேகலையை பிரசுரித்தவரை கூறியுள்ளார். அதை முடிக்கும் முன்பே காலமாகிவிடுகிறார். அவர் இறந்தபின் ஒரு வாரம் வந்திருக்கிறது. இப்போது   576 பக்கங்கள் கொண்ட புத்தகமாகக் கிடைக்கிறது . முதல் நானூறு பக்கங்கள் வரை, தான் சந்தித்த ஒவ்வொரு நபராக கூறுகிறார். அது உவேசா மாணாக்கராய் இருந்து ஆதீனத்தில் கவியாக தொடர்ந்து பின் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக சேரும் வரைக்குமானது. அவர்களின் பழக்கவழக்கங்கள், முகபாவம் குணநலன் என. தன் ஆசிரியர்கள், தன்பால் அன்பு கொண்டு உதவியவர்கள், ஆதீனம் மற்றும் தம்புரான்கள் என நீண்டவிவரிப்புகள். தஞ்சை பூமியின் ஒவ்வொரு கிராமங்களையும் கடந்து செல்கையில் அதுபற்றி ஒரு வரி கூறுகிறார். காவிரி, வயல்வெளி, ஜமீந்தார்கள் ( பிள்ளைமார்கள், மூப்பனார்கள் மற்றும் உடையார்கள்) என அக்காலத்தை அறிய விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம் இது. தன் ஆசிரியர் மற்றும் ஆதீனத்தை அடுத்து மாயூரம் வேதநாயகம் பிள்ளை, கோபாலகிருஷ்ணன் பாரதியார், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்  என பிரபலங்களும், தியாகராஜ செட்டியார், முத்துராமலிங்கத்தேவர் என பிரபல பெயர் கொண்ட சாமானியர்களும், ஏனைய சாதாரண பெயர்கொண்ட சாமானியர்களும் நிரம்பியிருக்கிறார்கள். 

தாதுவருஷப் பஞ்சத்தில் ஆதீனம் சுப்ரமணியதேசிகர் ஆங்காங்கு கஞ்சித்தொட்டிகள் திறந்திருக்கிறார். சுப்ரமணியதேசிகர் பற்றி சொல்லாமல் இதை எழுத இயலாது. இன்னார்க்கு இது தேவை என்பதை குறிப்பால் உணர்ந்து கொள்ளும்  திறனும், அதை செய்வித்து அழகுபார்த்து ஆனந்திக்கும் மனமும் அதனோடிணைந்த துறவும் என திகழ்கிறார் ஆதீனம். வித்துவான்களை அரவணைப்பதும், தன்னை வந்து பார்க்கச் சொல்லி கடிதம் எழுதுவதும் அனைத்தையும் தாண்டி சமண நூலான சீவக சிந்தாமணியை பதிப்பிக்க உதவுவதும் என ஆதீனத்தின் தமிழ்தொண்டு அளப்பரியது. அதுபோல பிள்ளையவர்களும். திருமலையில் முருகன் இருந்தான் என்ற மரபிற்கு  இப்போது வரை வேங்கிட சுப்ரமணியன், வேங்கிட சாமிநாதன் என்கிற பெயர்களே சான்று என்று கூறுகிறார். ஒரு பெயரைக்கொண்டு அதன் மரபை கூறுவது பற்றியும் சங்கிலியாக தொடரும் மரபு பற்றியும் வியப்பு மேலிட்டது. இன்றும் தொடரும் இன்னொரு மரபும் உண்டு. ஆதீனத்தின் சபையில் ஆறுமுக நாவலர் பற்றி ஒருவர் கூறினால், அடுத்து ஒருவர் வள்ளலார் பற்றி பதிகம் பாடுகிறார். இதுபோல ஒரு வரிக்குறிப்புகள்தான். அந்த அரசியல் பற்றி உவேசா மேலே ஏதும் சொல்வதில்லை. பிற்காலத்தில் உவெசா புத்தகங்களைப் பதிப்பிக்கையில் காரணமில்லா காழ்ப்புடன் அவர்மீது வசையாக சிலர் எழுதுகிறார்கள். நாம் ஒரு லட்சியத்துடன் செல்கையில் அவர்களுக்கு மறுமொழி சொல்லிக்கொண்டிருந்தால் நேரம்தான் வீணாகும் நாம் முன்னே செல்ல முடியாது என்கிறார். இதை அவர் தன் எழுத்துகளிலும் கடைபிடித்திருப்பது தெரிகிறது. 

தமிழ்மக்களைப்போல மொழிப்பற்று வேறு யாருக்கும் இல்லை என நான் நினைத்துக்கொள்வதுண்டு. அது எனக்குத் தோன்றியதற்குக் காரணம் தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழ்நேசன் என நாம் பெயர் வைப்பதுபோல ஒரு ஹிந்திகுமாரோ, தெலுகுபாபுவோ கேள்விப்பட்டதில்லை. ஒருமுறை அலுவலக நிமித்த்மாக பாரீஸ் மக்களைப் பார்க்கும் போது அவர்களும் இதுபோல மொழியை தன் பெயருடன் இணைத்துக்கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். ப்ரெஞ்ச் மக்களும் மொழிப்பற்று அதிகம் உள்ளவர்கள் என நினைத்திருக்கிறேன்.  உவெசா வும் இதை தெரிவிக்கிறார். எனக்கு அந்த எண்ணம் இன்னும் வலுப்பட்டது. ஓலைச்சுவடிகளை பாரீஸில் சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்று எழுதியதைப் படித்தபோது ஆயுர்வேத மருத்துவரும் எனது நண்பருமான சுநீல்கிருஷ்ணனின் மூதாதையர்கள் எழுதி அவர் சேகரித்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளை ஒரு ப்ரெஞ்ச் பெண்மணி வாங்கிச்சென்றது நினைவுக்கு வந்தது.

முதல் நானூறு பக்கங்கள் சொல்லும் தகவல்களும் குடும்பத்தினரின், பிள்ளையவர்களின் வறுமையும் மிக கடினமாக இருப்பவை. நானே இரண்டுமுறை புத்தகத்தின் அட்டையைப் பார்த்து அது என் தரித்திரம் அல்ல என உறுதிசெய்துகொண்டேன். மனிதர்கள் கையலம்புவது வாய்கொப்பளிப்பதெல்லாம் ஒன்றுவிடாமல் எழுதி வைக்கிறார். சுவாரசியம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஏன் இவ்வளவு பீடிகை எனத்தோன்றவைக்கிறது. ஆனால், இப்புத்தகத்தின் கடைசி இருநூறு பக்கங்களையும் பரவசமடையாமல் கடக்க முடியாது. அவர் சீவகசிந்தாமணியை பதிப்பிக்க துவங்கும் முயற்சியிலிருந்து மணிமேகலை வரும்வரை எழுதியிருக்கிறார். அதிவேக பக்கங்கள். அலைதலும், ஏமாற்ற்ங்களும், வேதனைகளும், துவேஷங்களும், ஆதரவும், வெற்றியும் கொண்ட பக்கங்கள். அவைகளை நீங்களே படிக்கவேண்டும் என விரும்புகிறேன்.


அவர் எழுதியிருக்கும் புத்தகங்களும், பதிப்பித்திருக்கும் புத்தகங்களும் அத்துணைப் பெரிய முயற்சிகள் கொண்டவைகள். மாபெரும் செயலூக்கம் / லட்சியம் இல்லதவர்க்கு அதை செய்ய இயலாது. தான் சைவ மடம் சார்ந்து இருந்தாலும் வைணவத்தையும்,  சீவக சிந்தாமணிக்காக சமணத்தையும், மணிமேகலைக்காக பெளத்தத்தையும் கற்கிறார். பைபிளின் அமைப்பு படியே புறநானூறு அகராதியை தொகுக்கிறார். அவர் பதிப்பித்த பழந்தமிழ்  புத்தங்களுக்கு உரைஎழுதியதோடு, தன் ஆசிரியர்களான மீனாட்சிசுந்தரம் பிள்ளை மற்றும்  கோபாலகிருஷ்ண பாரதியார் பற்றிய புத்தகங்களும், தன் அனுபவங்கள் பற்றி ”நான் கண்டதும் கேட்டதும்” போன்ற புத்தகங்களும் எழுதியுள்ளார். அவைகளை படிக்கையில் மட்டுமே முழுதாக அவரின் வரலாற்றினை அறியமுடியும். என்சரித்திரம் அவைகளின் சிறுதுளிமட்டுமே எனத் தோன்றுகிறது

Thursday, February 9, 2017

மன்னார்குடியும் மாஃபியாவும்

நான் ஜெயலலிதாவை முதலும் கடைசியுமாக நேரடியாக பார்த்தது மன்னார்குடியில்தான். ராஜகோபாலஸ்வாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கு 1990களில் வந்திருந்தார். தெற்குவீதியில் நின்றிருந்தபோது காரில் வணக்கம் சொல்லியபடி சென்றார். அன்றுதான் என் உறவினர் கண்ணப்பா மாமாவையும் முதன்முதலில் பார்த்தேன். கும்பாபிஷேகம் பற்றி கட்டுரை எழுத வந்திருந்தார். விதுரன் என்கிற பெயரில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார்.  அவரும் ஜெயலலிதா போலவே திடீரென மரணம் அடைந்தார். தீபம் இதழின் பொறுப்பாசிரியர் ஸ்ரீநிவாச ராகவன் என்றால் சிலர் அறிந்திருக்கக்கூடும்,

மன்னார்குடி என் ஊர். என் அப்பாவின் ஊர் அதுவல்ல. திருவாரூர் அருகே  வேளுக்குடி என்னும் கிராமம்.  என் குழந்தைகளுக்கும் அது சொந்த ஊர் அல்ல. ஆகவே, எனக்கு மட்டுமான ஊர் என சொல்லலாம். நான் ஆறாவது படிக்கும்போது அங்கு வந்தோம். பதினெட்டு வருடங்கள் வாழ்ந்தோம். மன்னார்குடியை பற்றி சொல்லவேண்டுமெனில் அங்குள்ள குளங்களை பற்றி சொல்லவேண்டும். நாங்கள் ஆரம்பத்தில் இருந்த முதல்தெருவை சுற்றியே மூன்றுகுளங்கள் இருந்தன. ஆனால் குளிக்க போகவேனும் எனில் அரைமைல் நடந்து கோபிநாதன் கோயில் குளத்திற்குத்தான் செல்லவேண்டும். இவைகளைத்தவிர பல குளங்கள் இருந்தன. காவிரியின் கிளைஆறான பாமணியில் வரும் தண்ணீரை சேமிக்க முடிகிற வகையில் அருகருகே குளங்கள் இருக்கும்.   மிக கச்சிதமாக தாயக்கட்டத்தில் கோடு போட்டதைப்போல ஒரே அளவில் பிரிக்கப்பட்டு நன்றாக திட்டமிடப்பட்டு உருவான நகரம் அது.

பெரிய தெப்பகுளம் எனப்படும் ஹரித்ராநதியில் மதகு வழியே காவிரி தண்ணீர் பாய்வதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். மன்னார்குடி தெப்பகுளம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய குளங்களில் ஒன்று. அதன் நடுவே ஒரு கிருஷ்ணன் கோவில் உண்டு. இப்போது படகில் போய் வரலாம். நான் நீந்திப்போயிருக்கிறேன்.


ஆனிமாதம் தெப்ப உற்சவம் நடக்கும். அந்நாளில் அந்த குளத்தின் கரைகளில் உள்ள மாடங்களில் அகல் விளக்கு ஏற்றுவோம். இதுதவிர பங்குனி மாதம் பதினெட்டு நாட்கள் ராஜகோபாலனுக்கு உற்சவம் நடக்கும். அப்போது கோபாலன் நகர் உலா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் என. இது தவிர அமாவசை, ரோஹிணி நட்சத்திரம், ஸ்ரவண நட்சத்திரம் கூடி வரும் நாட்களில் கோயிலுக்குள் கோபாலன் புறப்பாடு நிகழும். வெள்ளிக்கிழமைதோறும் செங்கமலத்தாயார் புறப்பாடு நிகழும். வெள்ளிக்கிழமையும் மேற்படி தினங்களும் கூடி வருகையில் இரட்டைப்புறப்பாடு நிகழும். புறப்பாடுகளில் பிரபந்தம் வாசித்தபடி முன்னால் செல்ல பின்னால் பெருமாள் வர அவருக்குப் பின்னால் வேதம் ஓதியபடி வருவார்கள். தமிழ் முன்னால் செல்ல அவ்வழியே பெருமாள் வர பின்னால் அவரைத்தேடி வேதம் வருகிறது என சொல்வார்கள்.



மன்னார்குடி கோயிலின் ராஜகோபுரமானது இந்தியாவின் உயரமான கோபுரங்களில் முதல் பத்துக்குள் வரக்கூடியது. கோவிலைசுற்றி உயரமான மதில்கள் உண்டு. மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு, வேதாரண்யம் விளக்கழகு என சொல்வடை உண்டு. மன்னார்குடி கோயிலுக்கு மதிலழகைப் பார்க்கப் போனேன் என புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலான பாடல் உண்டு. ( தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு செய்ய போனேன், சீரகம் பாத்திக் கட்டி செடிக்கு செடி குஞ்சம் கட்டி என்று அவர் பாடிய பாடல்கள் அப்போது மிகப்பிரபலம். )

 உள்ளே நூற்றுங்கால் மண்டபம், ரோஹிணி மண்டபம் என கோயில் மிக பிரம்மாண்டமானது.

தாயாருக்குத் தனி கொடிக்கம்பம், கருடி சந்நிதி, தனி பிரகாரம் உண்டு
கோயிலில் ஒரு அழகான யானையும் உண்டு. செங்கமலம் என்று பெயர். செங்கம்மா என்று
அழைப்பார்கள். குழந்தைகளுக்கு தலையில் கைவைத்து குஷியாக்கும்.
மதியம் மூணு மணியளவில் சென்றால் யானை குளிப்பதை பார்க்கலாம்.

ராஜகோபாலன் மிக அழகு. மணிநூப்புரதாரி ராஜகோபாலா என்கிற தெலுங்கு கீர்த்தனையை கேட்டுப்பாருங்கள். மிக அழகான பாடல். அருணா சாய்ராம் குரலில் யூட்யூபில் இருந்தது.  பிறகு தூக்கிவிட்டார்கள். பதினெட்டு நாட்கள் உற்சவத்தின் போது இரவில் கடைத்தெரு வழியாக புறப்பாடு வருவதைப்போல பகலில் கோவிலை சுற்றியும் தெப்பகுளம் சுற்றியும் புறப்பாடு நிகழும். இதுவும் வேறு அலங்காரம். வைரமுடி, காளிங்க நர்த்தன சேவைகள் எல்லாம் அந்நேரங்களில்தான்.

கலை இலக்கிய இரவு எங்கள் ஊரில் மிக பிரசித்தம். பந்தலடி அருகே இரவு முழுவதும் கூட்டம் நடக்கும். அல்லது கோயில் அருகே. காலை பீப் லேந்து மாலை பீப் வரை வேலை பீப் செய்து கூலி பீப் கேட்டவனை பீப் சொல்லி திட்ட்டும் முதலாளி பீப் பற்றிய பாடல் அங்குதான் முதலில் கேட்டேன். படிச்சவன பன்னி மேய்க்க சொன்னான் பன்னிக்கெல்லாம் மினிஸ்டர் போஸ்ட்டு தந்தான் என்ற பாடலை கேட்டு ரசித்து கைதட்டி சிரித்து நின்றிருக்கிறேன். பொன்னீலன் குன்றக்குடி அடிகளார் பற்றி பேசிய உரை இன்னும் ஞாபகம் இருக்கிறது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். பொன் விளைகிற பூமி என்று சொல்லப்படும்.  இப்போது நிலக்கரி கிடைக்கிறது. மீத்தேன் கிடைக்கிறது என கிளம்பியிருக்கிறார்கள். பழுப்பு நிலக்கரி இல்லை ராவாகவே கிடைக்கிறது என சிலர் சொல்கிறார்கள். அதற்கேற்றார் போல தண்ணீரும் வருவதில்லை. முன்பு காவிரியில் தண்ணீர் வருகிறது என கீழப்பாலம் அருகே நின்று தண்ணீர் கணுக்காலில் பின் ஆடுசதையில் பின் இடுப்பளவு என குப்பைகளை சேர்த்து வர நடுவே கும்மாளமிடுவோம்.இப்போது தண்ணீர் அவ்வளவாக வருவதில்லை.  வண்டிகளில் மணல் அள்ளுகிறார்கள். மிகச் சமீபத்தில் விக்னேஷ் என்னும் ஒரு இளைஞன் காவிரி தண்ணீர் வரவில்லை என தீக்குளித்தான்.

இதுபோல என்னிடம் மன்னார்குடி பற்றி சொல்ல இன்னும் பல விஷயங்கள் உண்டு. அவற்றையெல்லாம் சொல்லிவிட ஆசைதான். ஆனாலும், சொந்த ஊர் மன்னார்குடி என்று நான் சொன்னதும், ஓஹோ!! மாஃபியா ஊருன்னு சொல்லுங்க.. என சிரிப்பவர்களுக்கு என சொல்ல சில விஷயங்கள் உண்டு. நீங்கள் சொல்லும் மாஃபியா கட்சி மன்னார்குடி எம் எல் ஏ வாக ஆனது என் பதின் பருவத்தில்.  அதன் பின் இன்று வரை இல்லை. இது முழுக்கவும் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் கோட்டை. கூட்டணி யாராக இருந்தாலும் இடது சாரிகள் வெல்வார்கள் .  திமுக மீது மிக அபிமானம் உண்டு. இடதுசாரிகள் ஜெயிக்காத நேரங்களில் திமுக ஜெயித்திருக்கிறது. கலைஞர் திருவாரூர் காரர். இன்னொரு அமைச்சருக்கு வடசேரியில் தொழிற்சாலை உண்டு. மாஃபியாவை  வாழவைக்கும் மற்ற ஊர்க்காரர்களுக்கு மாபியாவை சொந்தமாக்கி மன்னார்குடி  யை விட்டு வைக்குமாறு ஊர்க்காரனாக ஒரு விண்ணப்பத்தை   வைக்கிறேன்.




Wednesday, February 8, 2017

கீழுயிர்கள்

இழிமக்கள்… கீழுயிர்கள்… செத்துக்குவியட்டும் இவர்கள். ஆண்குறிகொண்டிருப்பதனாலேயே சாகத்தக்கவர்கள்… மீசைகொண்டிருப்பதனாலேயே கீழுலகில் நெளியவேண்டியவர்கள்

- வெண்முரசிலிருந்து




அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருப்பவனே இன்னொரு வீட்டின் ஏழு வயது பெண் குழந்தையை கடத்தி சென்று கொன்று பின் எரித்த செய்தி இன்று காலையில் நண்பர் மூலமாக அறியவந்தது. நண்பரின் பக்கத்து வீட்டு பெண். குழந்தை காணவில்லை என்று அவர் அனுப்பிய செய்தியை வேறொரு குழுமத்திற்கு அனுப்பிய போது அங்கிருந்த நண்பர் இந்த லிங்க்கை அனுப்பி குழந்தை இறந்த செய்தியை குறிப்பிட்டார். அதுவரைக்கும் அந்த குழந்தையை திருப்பி சேர்த்துவிடு ஆண்டவா என்ற வேண்டுதல்,  பயனற்றுப்போய் பலமணிநேரம் ஆகியிருந்தது. யாராலும் ஆறுதல் சொல்ல முடியாத சோகம். ஹாசினி என்ற பெயரைக்கேட்டால் நேற்றுவரை பொம்மரில்லு படத்தில் வந்த ஜெனிலியா ஞாபகம்தான் வந்தது. இனி இந்த குழந்தை ஞாபகம்தான் வரும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனை தயவு தாட்சணியம் பார்க்காமல் கொன்று தீர்க்கவேண்டும்.




Wednesday, January 18, 2017

நம்பிக்கை

அவநம்பிக்கைகளால் ஆனதும் என் உலகம். பெரிதளவில் நட்பையோ உறவுகளையோ நம்புவதில்லை. யார்மீதும் நம்பிக்கையில்லை என்ற பொருளில் சொல்லவில்லை. ஒன்று யாரும் சாஸ்வதம் இல்லை என்ற பொருளில் சொல்வதாக வைத்துக்கொள்ளலாம் அல்லது கண்முன் காணும் உண்மைக்கு பின் இன்னொரு உண்மை உள்ளது என்பதாகவும் வைத்துக்கொள்ளலாம். அது மிக குரூரமானதாக இருக்கும். மிகவும் பிற்போக்கு கொண்டதாகவும் இருக்கும். இந்த இரண்டு குறித்த பயமும் எப்போதும் எனக்கு இருக்கும். முந்தையதற்கு விபத்தில் இறந்த நண்பர்கள் காரணமாக இருக்கலாம். பிந்தையதற்கு காரணம் நான் வலையுலகில் ஆர்க்குட் காலம் முதல் கண்டுவரும் விவாதங்கள் காரணமாக இருக்கலாம்.

முதலாவது காரணம் தனிப்பட்டது. அதை விட்டு விடலாம். ஆனால் இரண்டாவது காரணம் மிகப்பொதுமையானது. 2007 2008 ல் ஈழப்பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது அதை தனக்கு சாதகமான அத்தனை சித்தாந்தங்களுக்குள்ளும் அடைக்கப்பார்த்து தனித்தனியாக பிரிந்து போராடிய குழக்கள் பல இருந்தன. அனைவரும் இணைய ஏதோ ஒன்று தடுத்தது. அங்கே பள்ளியில் சாதி கேட்பதே இல்லை என உயர்த்தி அப்போது என் நண்பர் ஒருவர் பேசுவார்.  ஆனால் பிற்பாடு சில புதினங்கள் வாசிக்கையிலேயே அங்கு இருந்த வேற்றுமைகள் புரிந்தன. ஈழத்தில் இன்னும் இட ஒதுக்கீடு கிடையாது என்பது புரிந்த்து.  சாதி அடிமைத்தனம் இன்னும் தமிழர்களுக்குள் பேச்சளவில் கூட நீக்கப்படவில்லை. அந்த இடத்தில் ஒருவன் ஏன் சாதி பற்றி பேசப்போகிறான் இத்தனை அழிவுக்குப்பிறகும்? இதுபோன்று உண்மையான சங்கதிகளுக்குப்பின்னே இருக்கும் இன்னொரு உண்மை.

தமிழ்நாட்டிலுமே இது உண்டு. மிக உச்ச கட்டமாக பொதுவுடைமை பேசும் ஒருவர் தன் உறவுக்காரப்பையனின் காதலி குறித்து பேசியபின் அவருடனான நட்பை விட்டிருக்கிறேன். தனிப்பட்ட அனுபவங்களிலும் வீடு வாங்கியதிலோ சுற்று வட்டாரங்களிலோ ஒருவித அமைதியற்ற தன்மையையே உணர்ந்து வந்திருந்தே்ன்.

முத்துக்குமார் ஈழபிரச்சனைக்காக உயிராயுதம் ஏந்தியபோது இதைவிட அதிக கூட்டம். ஆனால் அவர் உடலை வைத்து போராடக்கூடாது என அதை அவசரமாக அடக்கம் செய்த அவலம். அப்போது பலரின் உண்மைமுகம் தெரியவந்த்து. முள்ளி்வாய்க்காலில் போர் முடிவுக்கு வந்தபோது கொல்லப்பட்ட மக்களுக்கான ஊர்வலத்திலும் அதிக இளைஞர்கள் கலந்துகொண்டனர். சமூக வலைதளங்கள் முழுவதும் இது பற்றிய விவாதங்களும் இருந்தன. ஆனால் பிறகு அவற்றை அந்த அளவு சீந்துவாரில்லை. அதற்குபிறகு நினைவுநாள் வாரநாளில் வந்த்தால் வார இறுதிக்கு மாற்றப்பட்டது. தன்னிச்சையான கூட்டம் வரவில்லை. தன் வேலை என்பது இதைவிட முக்கியம் என்றானது. அப்போது மிகவும் அவநம்பிக்கையே எஞ்சியது.

ஆனால் இப்போது சற்று மாறுதல் இருப்பதாக தோன்றுகிறது. 2015
வெள்ளத்தின் போது தானாக இணைந்த மக்கள் தெருத்தெருவாக பொருட்களை சேகரித்தது அதற்கான துவக்கம். அன்று சென்னையிலிருந்து கடலூர் வரை சென்று வந்தார்கள் நண்பர்கள். பிறகு வர்தாபுயலின் போதும் ஆங்காங்கே இதுபோன்ற குழுக்களாக இணைந்து மரங்களை அகற்றி்னர்.




இன்று, ஜல்லிக்கட்டிற்கு கூடியிருக்கும் மக்களை கண்டபோது இன்னும் மகிழ்ச்சியாகவே இருந்த்து. பலருக்கு மாடு வளர்ப்பு என்பது அவ்வளவு பரிச்சயமில்லை. எருமைமாடுகள் அனைத்துமே பால் கறக்கு்ம் மாடுகள்தான் அதில் கிடாவே கிடையாது என்கிற அளவில் புரிந்து வைத்திருந்தார்கள். அது பிரச்சனையில்லை என்றே தோன்றியது. நமது பாரம்பரியமான விளையாட்டு அழிக்கப்படப்போகிறது அதன்வழியாக காளை இனங்கள் அழிவுக்குள்ளாகப்படப்போகின்றன என்ற செய்தி அனைவருக்கும் எட்டியிருக்கின்றது.

முந்தைய ஈழப்பிரச்சனை போல் இல்லாமல் இது தனக்கான பிரச்சனை என அனைவரும் ஆதரவு அளிக்கிறார்கள். குறிப்பாக குடும்பப் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் அனைவருமே இதை நிறுத்தவேண்டும் என பேசுவதை கேட்கமுடிகிறது. இந்தளவு சென்று அடைந்திருப்பது மகிழ்ச்சி. ஈழத்தில் ,கூடங்குளத்தில் கோட்டைவிட்டதுபோல் ஜல்லிக்கட்டில் காவிரியில் தாமிரபரணியில் மீத்தேனில் கோட்டைவிடக்கூடாது என ஆசைப்படுகிறேன். போராட்டக்கார்ர்கள் அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் குறிப்பாக இயக்குநரகளையும் முன்னிறுத்தாது விலக்கி வைப்பது அவர்கள் அனுபவப்பட்டவர்கள் என்பதை உணர்த்துகிறது. வெல்க!!!!

Sunday, January 1, 2017

2016

இரெண்டாயிரத்துப்பதினாறாம் ஆண்டு எனக்கு மிக முக்கியமானது. இதை எப்பவும் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் என நினைத்தே இந்தப் பதிவு.




அதற்கும் முந்தைய ஆண்டின் இறுதி மாதம், மழை, வெள்ளம்,  மின்சார இணைப்பு துண்டிப்பு என கடந்தது சென்னைக்கு. என் மகன்பிறந்து ஒருவாரம் ஆகியிருந்தது. அம்பத்தூர் எஸ்டேட் துவங்கி பாடி, அண்ணாநகர் என நீண்டு பெருங்களத்தூர் தாண்டி சென்னை மிதக்கிறது. ஆனால், என் வீடு இருக்கும் பகுதி பாதுகாப்பாக இருந்தது. மகனின் பெயர் சூட்டல் விழா சிக்கனமாக முடிந்தது. பன்னிரெண்டு பெயர்கள் வைத்தோம். மொத்தம் ஒன்பது பேர் இருந்தோம். நெல்லில் பேரெழுத தாய்மாமனும், காப்பிட அத்தையும் வர இயலவில்லை. ஒன்று விட்ட மாமா வந்து பெயரெழுதினார்.  மொத்தமாக சேர்த்து அரைமணி நேரம் மின்சாரம் துண்டிப்பு இருந்தது. பால், காய்கறிகள், மெழுகுவர்த்தி, நூடுல்ஸ் எல்லாம் தாராளமாகவே கிடைத்தன. மொபைல் சிக்னல் இருந்தது. இங்கிருந்து பொருட்களை வாங்கிச் சென்று பிறபகுதிகளில் வசிக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விநியோகித்தோம். இருபது தேதிக்குப் பிறகு சென்னை ஒரளவு இயல்பு நிலைக்கு திரும்பியது. டிசம்பர் 26, 27 தேதிகளில் கவிஞர் தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா. நண்பர்கள் ஒரு van வைத்து சென்றுவந்தோம். வெள்ளக்காட்டைத் தாண்டிய ஒரு ஆறுதல் அது. காலை ஆறு மணிமுதல் இரவு உறங்கும் வரை உரையாடல்கள், வேடிக்கைகள், பாடல்கள் என சென்ற இரு நாட்கள்.  ஜெயமோகனை நான் வாசிக்க ஆரம்பித்த நாள் எதுவென்றால், இந்த வலைப்பூ தேங்கிய அந்தநாள் என சொல்லலாம். எழுத்து என்பது என்ன என உணர்ந்து / உணராமல் நின்ற தருணம் அது. எழுத்து மட்டுமில்லாமல் மேடைப்பேச்சு / நேர்ப்பேச்சு அனைத்தின் மூலமாகவும் அவர் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். என் ஆசிரியர் ஜெயமோகன் பற்றி தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும்.



புத்தாண்டின் இரவில் கடற்கரையில் உலாவுவது என்ற வழக்கம் முன்பு இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக இல்லை. ஆமாம். திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. 2016ம் ஆண்டில் புதிய வேலைக்கு மாறினேன். முதல் விமான பயணம் செய்தது இந்த ஆண்டுதான். யோகாசனம் கற்றுக்கொண்டதும் வசனம் உள்ள ஆங்கிலப்படங்கள் அதிகம் பார்த்ததும் இந்த ஆண்டில்தான். இந்த லெளகீக சாதனைகளை ஒருபக்கம் வைத்துவிட்டு மற்றவைகளை சாராம்சமாக தொகுத்து பார்க்கிறேன்.

மயிலாப்பூர் ராமக்ருஷ்ணமடத்தில் புத்தாண்டின் காலை தரிசனம் மற்றும்  மதிய உணவு, மாலையில் ஸோர்பா தெ க்ரீக் நாவல் குறித்து எஸ்.ரா. அவர்களின் உரை என புத்தாண்டு ஆனந்தமாகவே துவங்கியது. அந்த உரையின் போது நண்பர் முரளி க்ருஷ்ணன் அறிமுகமானார்.



சென்னை வெண்முரசு கூட்டங்கள் என் வாசிப்பு முறையை மாற்றியமைத்ததில் மிக முக்கியமானவை. வெண்முரசு நாவலின் கதைகளையும் அதன் உதிரி கதாபாத்திரங்களையும் பற்றி பேசிய விவாதங்கள் நாங்களறியாமலேயே மாறி வெண்முரசு சொல்லும் தத்துவங்கள், மனித நாகரீகங்கள் என வெண்முரசை ஒரு கருவியாகக்கொண்டு மற்றவைகளை விவாதித்து அறிவதாக மாறிவிட்டன. 2015 ல் துவங்கி இன்று வரை மிகச்சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றன.

நண்பர்களுடனான குழும உரையாடல்கள் நல்ல புரிதலை ஏற்படுத்தின. நடப்பு அரசியல், சினிமா, அறிவியல் என அனைத்தையும் பற்றி விவாதித்தோம். அனைவருமே விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மூலமாக அறிமுகமானவர்கள். வெவ்வேறு இடங்களில் பணிகளில் இருப்பவர்கள். ஜெயமோகன் என்கிற மந்திரக்கயிறு இணைத்து வைத்திருக்கிறது.



கபாலி திரைப்படத்தின் வெற்றி மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அது  குறித்த நீயா நானா சிறப்பு நிகழ்ச்சியில் ரஜினி ரசிகனாக  கலந்துகொண்டேன். நண்பர் சுனில் கிருஷ்ணன் மூலமாக என்னையும்  சுரேஷ்பாபுவையும் இந்த நிகழ்சிக்கு அழைத்திருந்தார்கள். தூத்துகுடி, திருநெல்வேலி, வேலூர் என பல மாவட்டங்களிலிருந்தும் வந்து கலந்துகொண்ட ரசிகர்களை கண்டு உரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது.



நண்பர் கெ.ஜெ.அசோக் குமார் அவர்களின் சாமத்தில் முனகும் கதவு சிறுகதைத்தொகுதி வெளியானது. அந்த விழாவில் தான், எழுதாளர்கள் கீரனூர் ஜாகீர் ராஜா, ப்ரான்ஸிஸ் கிருபா ஆகியோரை சந்தித்து உரையாடினேன்.

எழுத்தாளர். திரு. யூமா வாசுகி அவர்களை சந்தித்தது என் வாழ்வின் நல்லூழ்களில் ஒன்று. சென்ற தலைமுறையின் தஞ்சை மாவட்ட கதைசொல்லிகளான தி.ஜா,எம்.வி. வெங்கட்ராம் போன்றவர்களை அடுத்து என் தலைமுறைக்கான தஞ்சை மாவட்ட எழுத்தாளர் யுமா வாசுகி அவர்கள்.ரத்த உறவு   என்கிற தமிழின் முக்கியமான க்ளாசிக் நாவலை படித்ததும்  சென்றஆண்டுதான். இந்த நாவல் பற்றிய ஒரு பதிவு இந்த வலைப்பூவில் பாதியில் நிற்கிறது. அதை முடித்து பதிவேற்றவேண்டும்.



எங்க சுத்தியும் ரங்கனை சேவி என, இந்த பதிவில் ஜெயமோகனே மீண்டும் வருகிறார். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் அவருடன் நண்பர்கள் உரையாடியது, பின் மறுநாள் மே-1, குருஜி செளந்தர் அவர்களின் சத்யானந்தா யோகா மையத்தை ( புணரமைப்புக்குப் பின் ) திறந்து வைத்து அன்றைய வெண்முரசு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை, பின் அக்டோபர் -2 காந்தி ஜெயந்தி உரை, பின் சமண தலங்கள் உலா மற்றும் நடைபயணங்களில் காரில் செல்கையில் அவர் கூறும் கருத்துக்கள் வேடிக்கை துணுக்குகள் என பல சுவாரசியங்கள்

மகாசிவராத்திரியன்று நண்பர்களுடன் திருவாலங்காடு, திருநின்றவூர், திரிசூலம், திருவாச்சூர் என சிவனருள் விழையும் பயணம், பின் திருவாசாக முற்றோதல், உத்தமர்கோயில் கிராதமூர்த்தி என தொடர்ந்தது, அதேநேரம், வெண்முரசில் கிராதம் வெளிவந்ததும் தற்செயலாக அமைந்தது



சில துக்க நினைவுகள், கவிஞர். குமரகுருபரன், கவிஞர். ஞானக்கூத்தன் , இரு கல்லூரி நண்பர்கள், ஒரு அலுவலக தோழர், மற்றும் இரு நண்பர்களின் தாயார் / தந்தை என கனமான நாட்கள்.

சிறுகதைகள் எழுத முயற்சித்து,அவற்றில் இரண்டு கதைகள் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தன. முதல் கதையான விடிவு கதைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் நீண்ட விமர்சனம் எழுதினார். ஜெ.தளத்திலும் பலர் விமர்சனங்களை கூறினார்கள். இரண்டாம் கதையான பழனிக்கு  சொல்வனத்தில் மைத்ரேயன் ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். முதல் கதைகளுக்கே இப்படி அமைவதெல்லாம் ஈ உட்கார தேங்காய் விழுவது போலத்தான். ஆனால், எனக்கு அமைந்தன. இதெல்லாம் அந்தரங்கமாக எனக்கு மிகவும் மகிழ்ச்சியையே முதலில் அளித்தன. என் மீதான இந்த அக்கறைக்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன். நண்பர்கள் சிவா கிருஷ்ணமூர்த்தி மற்றும் நட்பாஸ் ஆகியோர்கள் என்னை மிகவும் ஊக்குவித்தார்கள். அவர்களுக்கும் நன்றி. வாசிப்பை சற்று மேம்படுத்திக்கொண்டு எழுதுவதைத் தொடர வேண்டும்.



வருட இறுதியில் மீண்டும் விஷ்ணுபுரவிழா. அதுகுறித்து எழுதிய கடிதம் ஜெ. தளத்தில் வெளியாகியுள்ளது. இரா.முருகன், பவா. செல்லத்துரை, பாவண்ணன், ஹெச். எஸ்.சிவப்ரகாஷ் ஆகியோரை முதன்முறையாக சந்தித்தேன்

சென்ற ஆண்டு முதல்நாள் வாங்கிய ராமக்ருஷ்ணரின் அமுதமொழிகள் புத்தகங்களை இன்று முதல் படிக்கத் துவங்கியுள்ளேன்.


சென்ற ஆண்டில் படித்த புத்தகங்கள் பட்டியல் அளித்துள்ளேன். அனைத்தும் கதைகள் / நாவல்கள்.என்னுள் இன்னும் கதை கேட்கும் சிறுவன் ம் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான் என புரிந்துகொள்கிறேன்.

நாவல்கள் / தொகுப்புகள்
துறைவன் - கிறிஸ்
மத்தகம் - ஜெயமோகன்
அழகான அம்மா ( ரஷ்ய சிறார் கதைகள்) - யூமா வாசுகி
காடு - ஜெயமோகன்
நிழலின் தனிமை - தேவிபாரதி
ரத்த உறவு - யூமா வாசுகி
கன்னி - ப்ரான்ஸிஸ் கிருபா
அரசூர் வம்சம் - இரா. முருகன்
கசாக்கின் இதிகாசம் - ஓ.வி.விஜயன் ( தமிழில்:-  யூமா வாசுகி )
கன்யாகுமரி - ஜெயமோகன்
கன்னிநிலம் - ஜெயமோகன்
நெடுங்குருதி - எஸ். ராமக்ருஷ்ணன்
துயில்  - எஸ். ராமக்ருஷ்ணன்
சஞ்சாரம்  - எஸ். ராமக்ருஷ்ணன்
சிதம்பரநினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு ( தமிழில்:- ஷைலஜா)
பனிமனிதன் - ஜெயமோகன்
சாமத்தில் முனகும் கதவு - கெ.ஜெ.அசோக் குமார்

வெண்முரசு வரிசையில், வெய்யோன், பன்னிரு படைக்களம், சொல்வளர்காடு மற்றும் கிராதம்

கட்டுரைகள் / சம்பவங்கள்

இவர்கள் இருந்தார்கள் -ஜெயமோகன்
குற்றம் புரிந்தவர் - சுபா

சிறுகதைகள்

அ.மி (20கதைகள்)
திஜா (20 கதைகள்)
இரா.முருகன் ( 18 கதைகள்)
அ.முத்துலிங்கம்( 10 கதைகள்)

பாதியில் நிற்பவை

தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்
ஆதிரை - செயந்தன்
ஆரோக்ய நிகேதனம் - தாராஷங்கர் பந்த்யோபாத்யாய
Everyday Yogi- H.S.Shivaprakash

பாதிக்கு முன் நிற்பவை :-) 

மயக்குறு மகள் - காயத்ரி சித்தார்த்
மோகமுள் - திஜா
Sapiens - Yuval Noah harari


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!