Wednesday, June 26, 2019

என்பிலதனை வெயில் காயும்

சமீபத்தில் ஒரு பிரச்சனை. ஒரு எழுத்தாளர் வடமாநில தொழிலாளி  ஒருவரைக் கொன்று விட்டதால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி பரவுகிறது. அப்பொழுது ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய உலகமும் அவர் பின்னால் நின்று நிகழ்ந்ததை விவரித்து அவர் யார் எனச்சொல்லி   அவரை வெளியே கொண்டு வந்தனர். அந்த பிரமிப்பு கடந்து சில வாரங்கள் கூட நகரவில்லை. அதற்குள் மாநிலத்தின் மற்றொரு மூலையில்,  எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் ஒரு பலசரக்குக் கடை ஆளுக்குமான நுகர்வோர் பிரச்சனை காவல்நிலைய வழக்கில் சென்று நின்றது. இதில் எழுத்தாளராக இல்லாத சாதாரண மனிதர் என்றே  வைத்துக்கொண்டாலும் ஒருவர் மீது வன்முறையை பிரயோகித்த நபர் விடாமல் பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கும் சென்று ரகளையில் ஈடுபடுகிறார். அந்த ரகளை செய்யும் நபரின் செல்வாக்கு உணர்ந்த எழுத்தாளரின் அக்கம்பக்கத்து வீட்டினரும் வெளியே வரவில்லை. அப்பொழது அந்த எழுத்தாளர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.  எழுத்தாளரின் நண்பர்கள் அவருக்காக வாதிட, பலசரக்குக்கடைக்காரரின் தரப்பாக பல முக்கியஸ்தர்களும் வந்து நிற்கிறார்கள்.

இப்பொழுது முன்பு கூறிய தமிழ் இலக்கிய உலகம் எடுத்த முடிவு விசித்திரமானது. இது அவருக்குத்  தேவைதான் என்றனர் சிலர். மகாகலைஞன் என்று கவிபாடினார் ஒரு நண்பர். ஒரு பத்திரிக்கை  அதற்கும் மேலாக சென்று எழுத்தாளர் பைக்கில் வந்து மாவை வீசினார். அதுவே கோபத்துக்கு காரணம் என்று பேட்டி வெளியிட்டது. வீலிங் கூட செய்தாரா என்று சொல்லவில்லை. காவல்நிலைய சடங்கு என்பது மருத்துவ பரிசோதனையும் கொண்டது. அது ஒரு நடைமுறை சடங்கு. அதைச் செய்ய சென்றதை திரித்து எழுதி பிரபலமானார் ஒரு முதிய பல்கலை வித்தகர். இத்தனை பேரின் பிரச்சனை என்ன? அந்த எழுத்தாளர் எப்பொழுதும் அவர்களைவிட பெரிய ஆளுமையாக இருப்பது அவர்களை  சீண்டுகிறதா.? அந்தத் தாழ்வுணர்ச்சியின்  வெளிப்பாடா இது? அவரது பிரம்மாண்ட எழுத்தையும் நேர்மையையும் கண்ட அச்சமா?

இந்தப் பிரச்சனையை எப்படிக் கையாண்டிருக்க வேண்டும் என்று அறிவுரை கூறவும் பலர் சித்தமாக இருக்கிறார்கள். அவர்கள் நடுநிலையாளர்கள். நடுநிலை என்றால் இருநிலைகளுக்கும்  நடுவில் நிற்பது என்று யாரோ அவர்களுக்கு சொல்லித்தந்திருக்கிறார்கள். பாவப்பட்டவராக கருதப்படும் அந்த பலசரக்குகடை முதலாளி ஒரு கட்சியின் உறுப்பினர். அவருக்காக வாதாட கட்சிப்பிரமுகர்கள் ஆடம்பர வாகனத்தில் வந்து குழுமினார்கள் என்று தெரிந்துமே அப்பாவி பெட்டிக்கடைக்காரர் என்று எழுதுவதுதான்  அந்த வாதத்திற்கு இன்னும் வலு சேர்க்கும்  போலும்.
இதே பிரச்சனை எனக்கு வந்தால் தோசைக்கு பதிலாக உப்புமா சாப்பிட்டிருப்பேன்.. பட்டினி கிடந்திருப்பேன் அப்படி சூதானமாகநடக்கத் தெரியாமல்  இவ்வளவு எழுதி என்ன பிரயோஜனம் என்ற கேள்வியில் / அறிவுரையில்  வெளிப்படுவது என்ன என்று அவர்களுக்கே தெரியாத அளவிற்கு  இந்தச் சமூகம் மொண்ணையாகிவிட்டிருக்கிறதா?

தங்களால் போஷிக்கப்படாத தங்களின் கருணை தேவைப்படாத நிலையில் இருப்பவர் மீது சாமானியர்களுக்கு இருக்கும் ஒருவித பொறாமை  மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. 



ஆனால் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். இதில் அந்த பலசரக்குகடை மனிதர் சில நாட்களில் தன் போதை இறங்கியதும் இவரைப்பணிந்து வணங்கக்கூடும். அவர்கள் இருவரும்  நண்பர்களாகவேகூட மாறக்கூடும். காரணம் நிகழ்ந்தது ஒரு சாதாரண அடிதடி.

ஆனால் அதற்காக வசைபாடி கொண்டிக்கொண்டிருக்கும் மற்றவர்களை ஆட்கொண்டிருக்கும் போதையோ,  பொறாமையும், இயலாமையும் சேர்ந்தது. அது ஒருக்காலும் இறங்கப்போவதில்லை.

இனி, இதைத்தாண்டியும் ஜெ. மீள்வார். அப்பொழுது அவர் வேறொரு திரைப்படப்பிரச்சனையிலோ, நுகர்வோர் பிரச்சனையிலோ தன்னளவில்  நேர்மையாக நடந்துகொள்ளக்கூடும். அப்பொழுது அதுவும் கூடப் பிரச்சனையாகக் கூடும். அப்பொழுது மீண்டும் ஆர்ப்பரிக்கலாம்.  அதுவரை, உங்கள் கழுத்து வலிக்க அவரை அண்ணாந்து பார்த்தபடியே
 காத்திருங்கள் எனதருமை அற்பர்களே!!!!