Thursday, November 17, 2022

அறைக்கலன் - வம்பு பதிவு

அறைக்கலன் வம்பு ஒரு முடிவிற்கு வந்துவிட்டது (போல இருக்கறது) இனி எழுதலாம்


மெர்சல் படத்தில் ஒரு காட்சி. அங்கு விஜய் தான் வைத்தியம் பார்ப்பவர் தனது ஃபீஸ் இடுவதற்கு ஒரு பெட்டி வைத்திருக்கிறார். அதில் தனது மகனுக்காக சிகிச்சை எடுத்து அதில் பணம் போடாத ஒருவர் தனது மகனின் முதல் மாத சம்பளத்தை மொத்தமாக அதில் இடுவார். அது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சோற்றுக் கணக்கு கதை. கூட்டத்தில் ஒருவன் படமும் தனது இறுதி காட்சியாக அதையே வைத்திருக்கும். வணங்கான் என்கிற பெயரில் ஒரு படம் வருகிறது. அதுவும் ஜெ. கதையின் தலைப்புதான். அந்தக் கதையில் யானை மீது ஏறும் ஒருவன் குறியீடு அதற்குப்பின் வந்த கர்ணன் படத்தில்  ஹீரோயிசமாக காட்டப்படுகிறது. ஜெ. எழுதுவதற்கு முன்னும் யானையின் மேல் மனிதர்கள் அமர்ந்து போனார்கள்தானே என்று வாதிட்டால்  சொல்வதற்கு ஏதுமில்லை.  


ஒருநாள் இங்கு புதிய எழுத்தாளர்களி்ன் கதைகள் ஜெயமோகனின் கதையை போலவே இருக்கின்றன என்பார்கள். மற்றொருநாள் ஜெயமோகனின் எழுத்துக்கள் பாதிப்பை செலுத்தியிருக்கிறதா என்ன? என்றும் கேட்பார்கள். ஜெயமோகன் வாசகர்களை இந்துத்துவம் நோக்கி இழுக்கிறார் என்பார்கள். ஜெயமோகனை யாராவது வாசிக்கிறார்களா என்பார்கள். அநேகர் இத்தகைய  "தூண்டிற் புழுவினைப்போல் -வெளியே 

சுடர் விளக்கினைப்போல்" நிலைமையில் இருந்து வருகிறார்கள். 


இன்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் ஜெயமோகனின் சிறுகதைகள் பேசப்பட்ட அளவுகூட வெண்முரசு பேசப்படவில்லை என்கிறார். ஆனால் வெண்முரசு சென்னை கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில்  ஒருவனாக சொல்ல சில விஷயங்கள் உள்ளன. சராசரியாக மாதம் முப்பது பேர் வரை வருவார்கள். இவர்கள் நேரில்  வர இயன்றவர்கள். கோவிட் காலத்தில் zoom ல் வைத்தபோது நூறு பேர்வரை வருவார்கள். அவர் மேலும்,  வெண்முரசு ஜெ. க்கு  அளிக்கப்பட்ட புரஜெக்ட் என்கிறார். அப்படி ஒரு புராஜெக்டாக அவருக்கு அளிக்கப் பட்டிருக்குமெனில் அதை அளித்தவர்கள் மனிதர்கள் மீது அன்பு கொண்டிருந்த தலைவர்களான மகாத்மா காந்தியாகவோ அல்லது அண்ணல் அம்பேத்கராகவோ இருப்பார்கள் என்று உறுதியாக சொல்லலாம். காரணம், வெண்முரசை வாசித்து புண்பட்டவர்களில் அநேகம் பேர்  பக்தர்களும் இந்துத்துவர்களும்தான். வெண்முரசு கலந்துரையாடல்  சென்னையில் மாதாந்திர கூட்டமாக ஆறு வருடங்கள் நடந்தது. இன்றும் பாண்டிச்சேரியிலும் கோவையிலும் நிகழ்கிறது. வெண்முரசுக்கு ஒரு ஆவணப்படம் வெளியானது. ஒரு இசைத்தொகுப்பு வந்தது. இதெல்லாம் வாசகர்கள் தானாக எடுத்துச் செய்தவை. கடைசியில் வாசகர்களை புராஜெக்ட் மேனேஜர்களாக்கிய பெருமை கவிஞரையே சாரும். 


ஜெ. வெண்முரசின் வழியாகவே புதிய சொற்களை அவர் உருவாக்கியுள்ளார். அநேக வார்த்தைகளை தமிழ்ப் படுத்தியுள்ளார். கண்ணன் நாவல் முழுவதும் இளைய யாதவனாகத்தான் வருவான்.  சாபவிமோசனம் எஅன்று வராது. சொல்மீட்சி என்று எழுதியிருப்பார். கைவிடுபடை என்பதற்கு அஸ்திரம் என்று  அகராதியில் இருந்தது. தானியங்கி அஸ்திரங்களுக்கு அந்தப் பெயர் வைத்திருந்தார். அணிசமையர் என்று அழகுக்கலை நிபுணர்களின் பெயராக வரும். கொடித்தோன்றல் என்ற பெயரில் ரத்த உறவினர் குறிப்பிடப்படுவார்கள். ராஜதந்திரம் என்பது அரசுசூழ்தல் என வரும். இவையாவும் இயல்பாக வருபவை. நான் தமிழ்படுத்தியிருக்கிறேன் பார் என்று துருத்திக்கொண்டு வருபவை அல்ல. வயிற்றாட்டி என்பது பிரசவம் பார்க்கும் தாதிக்கான பெயர். இப்படி யோசித்துப் பார்த்தாலே நினைவுக்கு வரும்  வார்த்தைகள் உள்ளன. இவையெல்லாம் அதன்  வாசகர்களிடையே இன்றும்  ஜாலியாக சொல்லப்படுபவைதான். மேற்சொன்ன சினிமா காட்சிகள் போல உடனே பொதுப் புழக்கத்துக்கு வந்துவிடாது. பிற்காலத்தில் புழக்கத்தில் வரலாம். 


கம்பராமாயணத்தில் வெய்யோன் என்று வருகிறது. இன்று பொதுமக்களிடையே யாருக்கும் அதன் பொருள் தெரியாது.  ஆகையால் கம்பன் என்ன எழுதிவிட்டான் என்று கேட்போமா என்ன? 


ஜெ. வெண்முரசை எழுதிக் கடந்த பின் நூறு சிறுகதைகள் எழுதிவிட்டார். குமரித்துறைவி, கதாநாயகி, அந்தமுகில் இந்தமுகில் என மூன்று நாவல்கள் வந்துவிட்டன. ஆனால் இன்றும் வெண்முரசை முதற்கனலில் இருந்து துவங்கி வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். பலர் இளம் வாசகர்கள். அதில் ஏதேனும் ஐயம் கேட்டு இன்றும்  எனக்கு  தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.


வம்புகளை வரவேற்கலாம். வம்புகளை வாசிக்கும் நூறில் ஒருவர் தீவிர இலக்கியத்துக்குள் வருகிறார். ஆகவே நல்லதுதான்.


ஒரு பின்குறிப்பு:- 


தனிப்பட்ட முறையில், ஜெ. மீதான வம்புகளை காழ்ப்புகளை கண்டு அதிகம் காண்டாவதோ எதிர்வினையாற்றுவதோ கிடையாது.  ஆனால் இந்த  'அறைக்கலன் ' சார்ந்த எதிர்க் கருத்துக்கள் சற்று எல்லை மீறிவிட்டன என்று தோன்றியது. ஆனாலும் அந்த எதிர்க்கருத்துக்களில்  பிரபு தர்மராஜின் ஒரு பதிவு வெடிச்சிரிப்பை அளித்தது. இந்தப் பதிவை புன்னகையுடன் எழுத அதுவும் ஒரு காரணம் :-) 


அந்தப் பதிவின் லிங்க் முதல் comment ல் இல்லை..