Friday, July 24, 2020

முரசும் சொல்லும் - ஏ) கதிரெழுகை

முந்தையது:- முரசும் சொல்லும் - எ) தன்னறத்தின் தடத்தில்

ஜெ. தளம் இயங்கத் துவங்கிய சில நாள் முதலே கீதை விளக்க கட்டுரைகள் வரத்துவங்கின. ஒவ்வொரு கட்டுரையின் கீழும் பின்னூட்டத்தில்  அது சார்ந்த மேலதிக கேள்விகள் எழும். அனைத்திற்கும் பதில் சொல்லி அடுத்த கட்டுரை துவங்கும். அதில் ஒரு கடிதத்தில், இதைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் ஒட்டு மொத்த பாரதத்தையும் பக்க சார்பின்றி அணுக வேண்டும் அத்ற்கு நான் பாரத்ததையே மீண்டும் எழுதவேண்டும் என்று கூட ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஜெ.வின் அறையை தன் செங்கோலின் கீழ் அரசபரிபாலனம் செய்பவர் அந்த நேரத்தில் ஆமோதித்திருக்கக் கூடும். அந்த வகையில் வெண்முரசு எழுத அதுவுமே ஒரு காரணம் என்று சொல்லலாம்.


நான் கீதை ஆழ்ந்து வாசித்தவன் இல்லை. என் முதற்கட்ட அணுகுதலை வைத்து,  இமைக்கணத்தை கீதையுடன் இணைத்து கீழ்கண்டவாறு புரிந்து கொண்டேன்.

ஒன்று : காலம்
இரண்டு : இயல் --  கர்ணன் ( சாங்கிய யோகம் )
மூன்று : ஒருமை -- பீஷ்மர் ( கர்ம யோகம் )
நான்கு : அறிவு -- சிகண்டி ( ஞானகர்ம சந்நியாச யோகம் )
ஐந்து : விடுதல் -- விதுரர் ( கர்ம சந்நியாச யோகம்)
ஆறு : ஊழ்கம் -- வியாசர் ( தியான யோகம் )
ஏழு : மறைமெய் -- யுதிஷ்டிரன் ( ஞான விஞ்ஞான யோகம் அட்சர பிரம்ம யோகம், ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்)
எட்டு : சுடர்வு -- திரெளபதி (  விபூதி யோகம் )
ஒன்பது: சொல் -- தெளம்யர், கர்க்கர் குசேலர் ( விஸ்வரூப தரிசன யோகம் பக்தி யோகம் )
பத்து : பொருள்  -- உதங்கர் ( சேத்ரம் சேத்ரக்ஞன் விபாக யோகம், குணத்திரய விபாக யோகம், புருசோத்தம யோகம் )
பதினொன்று : முழுமை -- சுகர் (தெய்வ அசுர சம்பத் விபாக யோகம் சிரத்தாத்திரய விபாக யோகம் மோட்ச சந்நியாச யோகம்)
பன்னிரண்டு : இறைப்பாடல் -- அர்ஜுனனுக்கு உரைக்கும் கீதை ( தொகுப்பு )

அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போர்க்களத்தில் உரைத்ததுதான் கீதை என்னும் ஒரு நாடகீய தருணம் சொல்லப்படுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் அறிதலின் ஒவ்வொரு படிகள் என்றூ பொதுவான கருத்தும் நிலவுகிறது. கீதையில் இந்த அனைத்து படிகளிலும் நின்று அர்ஜுனன் இந்தக் கேள்விகளைக் கேட்கிறான். அவனுக்கு போரிட எழும் தயக்கத்திலிருந்து சரணாகதி தத்துவம் வரை கேட்கிறான். ஆனால், வெண்முரசில் அந்த அத்தனையையும் அர்ஜுனனே கேட்கவில்லை. அவர்கள் மாறுபடுகிறார்கள். இமைக்கணத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அதை அந்த ஐயம் சரியாக பொருந்தக் கூடிய நபர் வந்து கேட்கிறார். இமைக்கனத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும் அணுகி அறிவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. ஆனால் கர்ணனை அணுக இது மிகவும் உதவியாக இருந்தது என்பதால் அதை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஜெயமோகன் இங்கும் ஒரு புனைவின் உச்சத்தைத் தொட்டுப் பார்க்கிறார். இந்தக் கேள்வியை அந்த நபர்கள் கேட்கவில்லை. அவர்களுக்குள் புகுந்து கொண்ட தர்மராஜன் யமன் இதைக் கேட்கிறான் என்பது அது. அதற்கான ஒரு கதை சொல்லப் படுகிறது, அந்தக் கதை ரகுகுல ராமன் உலகியல் இன்ப துன்பங்களில் ஆழ்ந்து பீடிக்கப்பட்டு இருக்கீறான். அவன் காலம் முடிந்ததை அறிவிக்க வரும் யமனுக்கு, மும்மூர்த்திகளின் ஒருவனான ராமன் பூவுலக வாழ்வில் பீடிக்கப் பட்டதைக் கண்டு மெல்லிய ஆற்றமை எழுகிறது. அது நகைப்பாக மாறுகிறது. ஆணவமாக எழுகிறது. அதனால், அவனை யமலோகத்தில் மானுடர் உள்நுழையும் வழியிலேயே அவரை அழைத்து வருகிறான்.  அது அவனது ஆணவமாக பதியப்பட்டு விடுகிறது. அதனால் தவம் மேற்கோள்கிறான் யமன். அவந்து பணி நிகழாததால் உயிர்களின் மரணம் ஜனனம் என்கிற சுழற்சி நிகழாமல் போகிறது. ஆகவே நாரதர் அவனைக் காண வருகிறார். இது நான் சுருக்கமாக, மேலோட்டமாக  தொகுத்து எழுதினாலும் அந்த முதல் அத்தியாயம் தியானிகன்,  பிரபாவன், நாரதர் ஆகியோருக்கான பல அற்புத உரையாடல்கள் கொண்டது. உயிர் என்பது என்ன என்பது போன்ற அடிப்படைக் கேள்விகள் அங்கேயே எழுப்பப்பட்டு உரையாட படுகின்றன. ஆகவே இதை ஒரு பிண்ணனிப் புரிதலை வைத்துக் கொண்டு அந்த அத்தியாயத்தைப் படிப்பதே சிறந்த வாசிப்பு அனுபவமாக இருக்கும்.

(மறுபடியும் இதை இங்கு குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், இமைக்கணம் முழுக்கவே பலதரப்பட்ட உரையாடல்கள் வருகின்றன. அவற்றை வாசிக்கும் எனக்கான புரிதல் என்பது என் அளவில் மட்டுமே இருக்கும். நான் அதை எழுதும் போதே எழுத்தில் வேறொரு புரிதல் வருவது போல எழுதிவிடலாகும் என்கிற எச்சரிக்கையே இங்கு குறிப்பிடுகிறேன். இமைக்கணத்தின் சில வரிகள் வாசிக்கையில் பிறருக்கு வேறோன்றாக தோன்றலாம். அல்லது வேறொரு வாக்கியம் முக்கியமானதாக தோன்றலாம்.

உதாரணமாக நாரதர் யமனிடம் சொல்லும், ’கடமைகளை கைவிட்டுவிட்டு எவரும் தவத்தை முழுமைசெய்ய இயலாது, காலத்துக்கரசே!’  என்கிற ஒரு வரி.  ஒரு சிறிய உரையாடலின் இந்த வாக்கியமே சிலருக்குத் தன் வாழ்வின் ஒரு கேள்விக்கு திறப்பாக அமையக் கூடும். )


Wednesday, July 22, 2020

முரசும் சொல்லும் - எ) தன்னறத்தின் தடத்தில்



தனித்தலைந்து அடைதல் என்பது தருமன், பீமன் அர்ஜுணன் போன்ற நாயகர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. பல உப கதாபாத்திரங்களுக்கும் இது நிகழத்தான் செய்கிறது. அவர்களின் உணர்வுகளும் தனித்திறமைகளும் கலந்து அவர்களின் தவிப்பும் அடைதலும் நிகழ்கிறது.

தமிழ் இலக்கியத்தின் சிறந்த காதல் அத்தியாயங்கள் வெண்முரசில் உண்டு. இந்திர நீலத்தில் இளைய யாதவன், கிராதத்தில் உமையொருபாகனாக ஈசன் என இறைவடிவங்கள் ஆடும் அத்தியாங்களும் உண்டு. ஆனால் அவை தத்துவார்த்த பிண்ணனி கொண்டவை.   நாம் இங்கு மானுடர்களின் அலைக்கழிப்பைப் பற்றி மட்டும் குறிப்பிடுவதால்,  நளன், அனிருத்தன் பூரிசிரவஸ் என மானுடர்களை வைத்தும் அது நிகழ்வதை தொகுத்துக் கொள்ளலாம். தருமனின் சூது, பீமனின் சமையற்  கலை, அர்ஜுனனின் மாறுவேடத் திறன்,  நகுலனின் புரவி சாஸ்திரம், சகதேவனின் எண் கணிதம் என,  பஞ்ச பாண்டவர்களின் அனைத்து தனிப்பண்புகளையும் ஒருங்கே பெற்றவனான நளன், தனக்கான காதலை கண்டடைய இந்திர வேதத்தை எடுக்கிறான். அங்கு ஒரு இந்திர சிலையை நிறுவுகிறான். அவனிடம் காதல் வயப்படும் தமயந்தி சக்கரவர்த்தினியாகும் விழைவு கொண்டவள். அவளை மணம் கொண்டதாலேயே, அவளின் விழைவினை நளன் ஆற்றுகிறான்.



அனிருத்தன் பாணாசுரனின் மகளின் மீதான காதலில் ஆசுர தேசத்துக்குள் செல்கிறான்.  பூரிசிரவஸ் தன் தயக்கத்த்தின் காரணமாக தன் காதல்களை இழக்கிறான். இவ்வாறு  பல ரசமான தருணங்கள் உண்டு.  ஒரு மனிதனின் சிந்தனையை வடிவமைப்பது நாம் முன்பு விவாதித்த வேதங்களும் உபநிடதங்களும் தத்துவங்களும் மட்டும்தான் என்று இல்லை. இது போன்ற உணர்வு ரீதியானவை கூட வடிவமைக்கின்றன.  மேலும் இது தவிர, மனிதர்கள் தங்களின் அன்றாடம் வழியாக சமைத்துக் கொள்ளும் விதிகளும் வடிவமைக்கின்றன. அவற்றில் சில வேதங்களாகவும் சாஸ்திரங்களாகவும் நிலை கொண்டவை.
         
துரோணர்  காலையில் எழுவது முதல், இரவு அவருக்கு தலைமாட்டில் அமர்ந்து அவர் உறங்கும் வரை தினசரி பணிவிடை செய்யும் அர்ஜுணன் அவரிடமிருந்து தனுர் வேதத்தைக் கற்றுக் கொள்கிறான். துரோணர் அதை தன் ஆசிரியரான அக்னிவேசரிடம் அறிகிறார். இதுவும் குருபரம்பரையாக அருளப்பட்டு வருகிறது.  அக்னிவேசர், பீஷ்மர், பரசுராமர், துரோணர் என நிலைத்த வீரர்கள். அவர்களிடமிருந்து கற்று  எழுந்த அர்ஜுணன், அஸ்வதாமன், சிகண்டி,  கர்ணன் என அடுத்த தலைமுறையினரும் வருகிறார்கள்.  செயல்மூலம் தன்னை வென்றவன் யோகி.  அவன் உலகையும் வெல்வான். யோகியின் கையில் இருப்பது எதுவோ அதுவே இறுதியான ஆயுதம். அதுவே அவன் மந்திரம், அதை ஆள்வதே அவன் சாதகம். சொல் மூலம் அடையப்பெறும் எதையும் வில்மூலமும் அடையலாமென்றுணர்க  இது தனுர்வேதத்தின் சாரமாக அக்னிவேசர் உரைப்பது

மற்றொரு புறம், பீமன் அடுமனைக்குச் சென்று, அங்கு இருக்கும் அடுமனை முது சூதரான மந்தரரிடம் அன்னம் எழுவதை அருகமர்ந்து அறிகிறான். அவரது கால்களின் கீழ் அமர்ந்துகொண்டு அவரது பாதங்களைப்பிடித்து தன் மடிமேல் வைத்துக்கொண்டு விரல்களை மெல்ல இழுத்து நீவியபடி, “சமையல் என்பது ஒரு ஞானமார்க்கம்” என்று அர்ஜுணனிடம் உரைக்கிறான். பிற்காலத்தில், அவர்களின் அஞ்ஞாதவாசத்தின் போது விராடத்தில் அவன் அடுமனை சூதனாகவே பணிபுரிகிறான்.  அங்கு அவனிடம் பாடம் கற்கும் சம்பவன் வந்து சேர்கிறான். மைத்ரேயக் காட்டில் அன்னம் உண்ணப்படுவதைக் காணும் தருமர் பந்தி பரிமாறுதலின் ஊடாகவே அந்த ஞானத்தை அடைகிறார்

மற்றொரு இடத்தில் கர்ணனிடம் அவர் தந்தையும் குதிரைச் சூதருமான அதிரதர் புரவி வளர்ப்புக் கலையை சொல்லி வருகிறார். அஸ்வசாஸ்திரம் எனப்படுகிறது அது.  குதிரைகளின் காலோசையிலேயே அவற்றை உணரத்தெரிந்தவனே அஸ்வசாஸ்திரம் தெரிந்தவன். இப்போது வரும் குதிரைகளை என் அகக்கண்ணாலேயே என்னால் காணமுடியும்” என்கிறார் அவர். பாண்டவர்களில் புரவிக் கலை அறிந்தவன் நகுலன். நீர்க்கோலத்தில் நகுலன் புரவி சூதனாகவே இருக்கிறான்.

Monday, July 20, 2020

முரசும் சொல்லும் - ஊ) பிழைகளின் சுழலிலிருந்து ஞானத்தின் வட்டத்திற்குள்

முந்தையது:-  முரசும் சொல்லும் - உ) விழைவின் கொடி

          தரிசனங்களாக எழுந்து வந்து பிற்காலத்தில் பெரு மதங்களாகி தத்துவத்திலும் நடைமுறைகளிலும் பெரும் ஆதிக்கத்தை செலுத்தியவற்றின் துவக்கால கால கூறுகளை வெண்முரசில் காணலாம்.  பிறருக்கான ஒழுக்கத்தை வலியுறுத்திய பரசுராமன், தனக்கான சுய ஒழுக்கம் கொண்டு உதாரணமாக விளங்கிய தசரதராமன், என்று பரவியதின் அடுத்தநிலை என்னவாக இருக்கும்? ஒவ்வொருவருக்குமானது தானே? அதுதான் இளையயாதவன் வழியாக நிகழ்கிறது. ஒவ்வொருவருக்கான அறம் என்பதை அறியும் முன் அவரவர் தரப்பு நியாயங்களும் அவர் தரப்பு அறிதல்களும் குறிப்பிடத் தக்கவை. அறியாமல் செய்வது பிழையன்று. ஆணவத்தில் செய்வதே பிழை. இவை இரண்டிற்கும் இடையிலான மற்றொன்று உள்ளது.  அது,  பிழை ஆற்றியவன் ஆற்றிய கனம் தன் தவறை உணர்ந்த பிறகு நிகழ்வது என்ன என்பது. ஆற்றிய பிழைக்கு முழுமனம் கனிந்து வருந்தினால் பிழைக்கான ஈடு இல்லாமல் ஆகிவிடுமா? அந்த கேள்வியையும் வெண்முரசு எழுப்பியே செல்கிறது. கதாபாத்திரங்கள் குற்ற உணர்ச்சி கொள்ளும் கணங்களும் பின் அவர்கள் பிழையீடு செய்யும் கணங்களும்  வருகின்றன. அவற்றிற்குப் பின்னால் அவர்களின் தனிப்பண்புகளும் சில அலைக்கழிப்பை அடைகின்றன.


முரசும் சொல்லும் - ஊ) பிழைகளின் சுழலிலிருந்து ஞானத்தின் வட்டத்திற்குள்
          
             இளம்வயதில் துருபதன், துரோணருக்கு வாக்கு அளித்து பின் அதை அவரே மீறி அவரை சிறுமை செய்கிறார். இவ்வாறு, துரோணருக்கு துருபதன் ஆற்றிய நட்பின் துரோகத்தை, துரோணர் தன் மாணவர்களை வைத்து ஈடு செய்து கொள்கிறார். அவர் சார்பாக அதை ஆற்றுபவன் அர்ஜுனன்.  அவன் தேர்த்தட்டில் வைத்து துருபதனை இழுத்து வருகிறான். ஆனால், அதன்பிறகு அவன் துரோணரிடமிருந்து விலகி இறுதியில், தான் இழிவு செய்த  துருபதனுடன் தான் இணைகிறான் என்பது ஒருபுறம். மற்றொருபுறம் துருபதன் தன் பாதி அரசினை துரோணரிடம் போரில் தோற்கிறான். ஆனால், அதே துரோணர், துருபதனின் மைந்தனுக்கு வில்வித்தை கற்றுத் தருகிறார். அவரிடம் கற்ற அந்த மைந்தனே இறுதியில் அவரைக் கொல்லவும் செய்கிறான். இந்த மனமாற்றம் அளிக்கும் சிக்கல் இதை ஒரு கதையாக கேட்கையில் சுவாரசியமாக இருந்து ஒப்புக் கொள்ளத் தோன்றினாலும் ஒரு நவீன இலக்கிய வாசகன் இதை இன்னும் அணுகி அறியவே விழைகிறான்.  

            பாரதக் கதையை மொத்தமாக நோக்குகையில், துவக்கத்தில் இது ஒரு பிழைகளின் சுழலாக இருக்கிறது. அவை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருக்கின்றன. அது தலைமுறைகளாக தொடரும் வஞ்சம் என்று சொல்லப் படுகிறது என்றாலும், பாண்டவர்கள்-கெளரவர்கள் காலத்திலேயே வைத்துப் பார்த்தால் கூட,  துச்சாதனன் பீமனுக்கு விஷம் அளிப்பது, பிறகு பாண்டவர்கள் கூர்ஜரத்தை தவறான போரினால் வெல்வது, தருமனின் யதார்த்தமான நீதிச் சொற்களால் துரியனின் அகங்காரம் சீண்டப்படுவது, கெளரவர்கள் வாரணாவதம் திட்டம் தீட்டுவது, பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் சில அப்பாவி மானுடர்களை பலியாக்கித் தான் தப்பிப்பது இவை அனைத்தும் பிழைகளின் சுற்றாகவே இருக்கிறது. பிழைகளாலேயே முடையப் பட்ட ஒரு சிலந்தி வலை போலக் காட்சியளிக்கிறது. ஒருவிதத்தில்  அவர்கள் ஆற்றும் ஒவ்வொன்றுமே, அரச தர்மத்தில் நீதி என்று சொல்லி நியாயப் படுத்தப்பட்டும் விடுகிறது. . ஏதோ ஒரு அறநூலின் நீதி இதை சரியானது என்று சான்று என்று கூறுகிறது. அல்லது அது ஏன் தவறில்லை என்ற விளக்கத்தை இளைய யாதவனோ கணிகரோ அளிக்கின்றனர். இதைப் பின்பற்றி கதாபாத்திரங்கள் செல்கின்றனர். 

Saturday, July 18, 2020

முரசும் சொல்லும் - உ) விழைவின் கொடி



ஜெயமோகன் நாவல்களின் துவக்க அத்தியாயம் என்பது மிகவும் முக்கியமானது. அது ஒரு சுருக்குக் கயிறு போல உள்ளே இழுத்துவிடும். ஆயிரம் தாமரைகள் வரைந்து வரைந்து பெரும் சக்கரமாக நிற்கும் விஷ்ணுபுரத்தின் முதல் அத்தியாயம் ஒரு உதாரணம். எழுத்து ஒருவிதமாக உள்ளிழுக்கும். ஆனால் அது வேறொரு பொருளும் கொண்டிருக்கும். அதை பிற்காலத்தில் இரண்டாம் வாசிப்பில் உணர்ந்த தருணங்கள் எனக்கு உண்டு. வெண்முரசிலும் அது நிகழ்ந்தது.

உ) விழைவின் கொடி

வெண்முரசின் துவக்க அத்தியாயம் அந்நாவல் செல்லும் திசையை உரைத்து விடுகிறது. உலகம் உருவானது குறித்து ஒவ்வொரு வேதமும் தனக்கான காரணங்களை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. அதில் நாகர்களின் வேதப்படி உலகம் உருவான புராணமே மானசாதேவியால் ஆஸ்திகனுக்கு உரைக்கப் படுகிறது. வெண்முரசு முதல் அத்தியாயம் நாகர்களிடம் இருந்துதான் துவங்குகிறது என்பது ஒரு யதார்த்தமானது  அல்ல. விழைவின் அதிபர்களான நாகர்கள்தான் இதில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணமாறுதலுக்கும் மூலமானவர்களாக இருக்கிறார்கள். அவதார நாயகர்கள் தவிர மற்ற அனைவரும் அதனால் தீண்டப் படுகிறர்கள். மற்ற இதிகாச புராணங்களிலிருந்து பாரதம் எங்கனம் மாறுபடுகிறது என்பதே இவ்வாறு முதல் அத்தியாயத்தில் குறியீடாக சொல்லப்பட்டு விடுகிறது என்றும் சொல்லாம். அதன்பின் தீர்க்கசியாமரால் அது சொல்லாக உரைக்கப் படுகிறது. அறத்தின் மீது இச்சையின் கொடி ஏறிவிட்டது



துவக்கத்தில் உத்தாலகர் தன் தாயை முன்வைத்து பெண்களுக்கான கட்டுப்பாடு விதிக்கிறார். அடுத்த யுகத்தில் பரசுராமனின் வேதம் தன் தாயின் தலையை சீவவும் துணிந்து ஒருத்திக்கு ஒருவன் என்று கட்டுப்பாடு விதித்து செல்கிறது. மற்றொரு புறம்  அதுவே அனைத்து குலங்களுக்கான நெறிகளையும் விதித்தபடியும் செல்கிறது. அதற்கடுத்த யுகத்தில் அயோத்யா ராமனின் அறம் அதிலிருந்து முன்னேறி, த்ரியனுக்கான அறத்தையும் கட்டுபாடுகளையும் சொல்லிச் சென்றிருக்கிறது. அதே நேரம் இது ஆணுக்கான ஒரு ஒழுக்க விதிகளையும் சுட்டுகிறது. இப்பிறவியில் இரு மாதரை சிந்தையினாலும் தொடேன் என்பது இல்லற ஒழுக்கம்.  தன் உரிமையான அரியணையை, தந்தையின் சொல்லுக்காக விட்டு கானேகுவதும் தந்தை சொல்லுக்கு மைந்தரின் அடிபணிதல்.  இவ்வாறு தனக்கான ஒழுக்கநெறிகளையும் கொண்டிருப்பதால் அவன் ஒரு உதாரண புருஷனாக இன்றும் கருதப்படுகிறான். ஆனால் அந்த இதிகாசம் என்பது அந்தந்த குணங்களின் நேரடி வெளிப்பாடாக இருப்பதாலேயே அது வாசிக்க எளிதாகவும், புரியும் வண்ணமும்  இருக்கிறது. ராமனின் குணம், அனுமனின் குணம், ராவணன், விபீஷணன், கும்பகர்ணனின் குணங்களும் அத்தகையவை. ஒரு தம்பியாக ஒப்பு வைத்தால் பரதனும் கும்பகர்ணனும் ஒருவரே. அதன் அனைத்து உணர்ச்சிகளுமே ஒரு அளவிற்கு நேரடியானவையும் கூட. அதனாலேயே ராமாயணம் வாசிப்பதும் புரிந்து கொள்வதும் எளிதானதுஆனால் பாரத வாசிப்பு அத்தகைய எளிதானதாக இல்லை.

Friday, July 17, 2020

முரசும் சொல்லும் - ஈ) குலங்களும் கலப்பரசியலும்


வெண்முரசில் குலங்களின் முரணியக்கம்  பற்றிய என் புரிதல்களை எழுதினால் முந்தைய பதிவில் வரும் பரசுராமரும் இளைய யாதவரும் நிகழ்த்தியவை குறித்து இன்னும் அறியலாம். அவர்கள் ஏன் புதிய சத்ரிய அரசுகளை உருவாக்க வேண்டும் என்கிற கேள்விக்குள் சென்றடையலாம்.  விடைகள் வெண்முரசில் உள்ளன. நான் எழுதும் இந்தப் பதிவுகள் முழுக்க நான் வெண்முரசு மூலம் பெற்ற அறிதல்களை பகிர மட்டுமேயன்றி அதற்கான விளக்கமோ விமர்சனமோ எழுதுவது அல்ல. ஆகவே வேறு இலக்கிய பிரதிகளையும் இங்கு எடுத்து ஒப்புநோக்கி எழுதவில்லை. அருகமர்ந்து உரைத்த ஆசிரியனிடமிருந்து நான் பெற்றவைகளை தொகுத்தலும் எனக்கு இருந்த குழப்பங்கள் நீங்கியதை குறிப்பிடுவதுமே இந்த பதிவுகளின் நோக்கம்.



அதற்கு முன், குலம் என்னும் இந்த பதம் பலவிதமாக பொதுவெளியில் அவரவர்கள் தன் அனுபவம் ஒட்டி தன்விருப்பத்திற்கேற்ப புரிந்துகொண்டு பக்கம் பக்கமாக பேசி, இவ்வாறுதான் பாரதத்தில் கிருஷ்ணன் சொன்னது என்று இறுதியில் பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டிவிடுவது நம் அறிவுத்தளத்தில்  வழக்கமான ஒன்று. கீதையில் அர்ஜுனனிடம் இளையயாதவன் சொல்லும் ஒன்றூ பார்த்தா.. இவ்வாறு தயங்கி நீ வில் ஏந்தாமல் போனால் குலக்கலப்பு நேரிடும் என்பது.. இந்த ஒரு வரியை வைத்துக் கொண்டும்தான்  கீதை ஜாதியை பேசுகிறது என்று அடித்து வாதாடப் பட்டு வருகிறது. முழுமையாக வெண்முரசு படித்த ஒருவன் இதிலிருந்து எப்படி தெளிவு பெறலாம் பண்டைய சமூகத்தை அரசியலை விளங்கிக் கொள்ளலாம் என்று பார்க்கலாம்

குலங்களும் கலப்பரசியலும்

              வாசிப்பு ஏதும் இல்லாத ஒருவர் இயல்பாக அறியக்கூடிய இரு வம்சங்கள், சூரியவம்சம் மற்றும் சந்திரவம்சம். இதில் பாண்டவர்கள் கெளரவர்கள் வருவது சந்திரவம்சத்தில். இதில் யயாதி காலத்தில் ஒரு பிரிவு உண்டாகிறது. அவரது நான்கு மைந்தர்களின் மூவர் யயாதியின் சாபத்தால் குலமிழந்து நகர் நீங்குகிறார்கள். சாபம் பெறாத மகனான புரு யயாதியின் சந்திர வம்சத்தை தொடர்கிறான்.  அவ்வாறு பிரிந்து சென்ற யது, மாடு கன்றுகளை மேய்க்க பழகுகிறான். அவனிடமிருந்து உருவாகி வருவது யாதவகுலம். துர்வசு பாலைவனத்தில் சென்று சேர்கிறான். அங்கு அவன் உருவாக்கிய குலம் பிற்காலத்தில் காந்தார குலமாக வருகிறது. மேலும் அனுத்ருஹ்யூ மலை பிரதேசத்தை அடைந்து அங்கு குடிகளை உருவாக்குகிறான். இது நிகழ்வது ஆதி காலத்தில் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அதன் பின் பற்பல சந்ததிகள் கடந்துதான்  குருவம்சம் என்ற பெயர் நிலைக்க வைத்த குரு ஹஸ்தினாபுரியை அமைத்த ஹஸ்தி, ஆகியோரின் பிறப்பு நிகழ்கிறது.  முன்பு பிரிந்த யாதவமும், காந்தாரமும் முறையே பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் மணம் மூலம் மீண்டும் மண உறவில் அஸ்தினாபுரியுடன்  இணைகின்றன. இதில் இருவருமே சத்ரிய அந்தஸ்து இல்லாதவர்களாகவே வருகின்றனர் என்பதும் கவனிக்கத் தக்கது. இதில் காந்தாரிக்கு மணத்தூது கேட்டு சென்ற சகுனியின் அமைச்சரிடம் குதிரைச் சவுக்கு அளிக்கப் பட்டு அவர்களின் இடம் சூதருக்கானது என்று சத்ரிய அரசான மகதம் கூறுகிறது. யாதவ அரசியான குந்தியை மணம் கொண்டாலும் பாண்டு மன்னனாகும்போது, அவனுடன் பட்டத்து அரசியாக அமர அவளுக்குத் தகுதியில்லை என சத்ரிய இளவரசியான மாத்ரியை அவன் மணம் செய்கிறான்.