Thursday, September 3, 2020

முரசும் சொல்லும் - ஒ) நிறைவுடன்...

முந்தையது:- முரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்


ஒருவன் இலக்கிய வாசகனானாலும் தத்துவ நூலை அணுகுவது எளிதல்ல. ஆகவே அதை கதையாக விளங்கிக் கொள்ளவே இதில் நாடகீய போர்த்தருணம் சொல்லப்பட்டது. இருப்பினும் அதை நேரடியாக வாசித்து அறிவதும் கடினமே. அதுவே, இமைக்கணம் வழியாக கீதையை அணுகுவது ஒப்புநோக்க எளிதானது. ஆனால் இமைக்கணத்தை விளங்கிக் கொள்ளவும்,  வெண்முரசினை அது சொல்லவரும் வரலாறு/ அரசியல்/ மரபு / தரிசனங்கள் சார்ந்த பின்புலத்துடன் அறிய வேண்டியதும் அவசியம்.

 

இமைக்கணத்தின் படிநிலைகள் என்று சொல்வதால், அவை ஒன்றுடன் ஒன்று மேம்பட்டது என்று ஆகிவிடாது. உதாரணமாக மாத சம்பளம் வாங்கும் ஒரு பணியாளர், தனது வரையறுக்கப்பட்ட வாழ்க்கை எல்லைக்குள் வாழ்பவர். அவரால் எளிதாக மூன்றாம் அத்தியாயமான கர்ம சந்நியாச யோகத்துக்குள் வந்துவிட முடியும்.  விடுபட்ட நிலையில் பெரும் விழைவு இன்றி தன் கடமையை ஆற்ற முடியும்.  ஆனால் அவருக்கு மாத ஊதியம் வழங்கும் அந்த நிறுவன தலைவரால் அவ்வாறு இருக்க வியலாது. அவர் சாங்கிய யோகப்படி உலகியலில் உழன்று செயலாற்றி நின்று செயல் புரிதல் வேண்டும். எனவே இந்த அறிதல்கள் என்பது ஒன்றுடன் ஒன்று உயர்ந்தது தாழ்ந்தது என்று இல்லை. எந்த ஒரு வழியில் சென்றாலும் அது இறுதியாக  ஞானத்திற்கே இட்டுச் செல்லும்

 

தனக்கு உலகியலோ போரின் முடிவோ ஒரு பொருட்டு இல்லை என்று சொல்லும் பீஷ்மருக்கு செயல் / கர்ம யோகம் உரைக்கப்படுகிறது. தன் இளவயது சபதம் முதிய வயதில் அபத்தமாக தோன்றுவதம் குழப்பம் அறிவின் சொற்கள் மூலம் சிகண்டிக்கு அகற்றப்படுகிறது. இவ்வாறு வெவ்வேறு குணங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலந்து உருவானதே வெண்முரசு என்னும் பெருங்கதையாடல். இன்று போரும் அதற்குப் பின்னான அரசியல்  மொழி மற்றும் சித்தாந்த மாற்றங்களையும் கண்டபிறகு,  இமைக்கணத்தின் மறு வாசிப்பில் அந்தப் பெருஞ்சித்திரத்தை உணர முடிந்தது. இமைக்கணத்தினை அணுகுவது என்பது அவரவர் புரிதலுக்கு உட்பட்டது.  அவரவர் வாழ்க்கை அனுபவத்துடன் தொடர்புடையது. அவ்வகையில் இமைக்கணத்தை அவரவர் வாசித்து அறிவதே சிறந்தது.

 

வெண்முரசு வாசிப்பின் வழியே நான் அடைந்தவற்றின் தொகுப்புத்தான் இந்தக் கட்டுரைகள். சென்னை வெண்முரசு கலந்துரையாடல்கள் எனது வாசிப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தன. கலந்துரையாடல் என்பது அளிக்கும் பலன் ஒவ்வொருவருக்கும் மிகவும் அந்தரங்கமானது.  எனக்கு அதில் வரும் உவமைகள் சொற்கள் சிறு கிளைக்கதைகள் என பல குறிப்பிடத்தக்க இடங்கள் உள்ளன. அவ்வாறாகவே, ஒவ்வொருவரும் அதில் ஒவ்வொன்றை பற்றிக் கொள்ளக் கூடும். ஆகவே இந்தக் கட்டுரைகளுக்குள் அவற்றைக் குறிப்பிடவில்லை. வேறு சந்தர்பங்களில் அவற்றையும் நான் எழுதக் கூடும். இந்தக் கட்டுரைகளைப் பொறுத்தவரையில், புதிதாக வெண்முரசு வாசிக்கத் துவங்கும் ஒருவருக்கு அந்த படைப்பு  குறித்த ஒரு குறைந்தபட்ச  புரிதலை அளிக்க வேண்டும் என்பது மட்டுமே  எனது நோக்கமாக இருந்தது.


மே-2015 முதல் ஐந்து வருடங்களைக் கடந்து நிகழ்ந்து வரும் சென்னை வெண்முரசு மாதாந்திர கூடுகையின் முதலாம் ஆண்டின் நிறைவில் எழுத்தாளர் ஜெயமோகன் லலந்து கொண்டபோது

வெண்முரசின் ஓவியங்கள் பல தருணங்களை எளிதாகப் புரிய வைத்திருக்கின்றன. தனது முதல் இலக்கிய வாசிப்பு என்பது வெண்முரசு வழியாகவே நிகழ்ந்தது என்று ஓவியர் ஷண்முகவேல் அவர்கள் கூறினார். ஆனால்  முதல் அத்தியாயத்தில் மானசா தேவி ஆஸ்திகனுக்குக் கதை சொல்வதில் துவங்கி ஒவ்வொரு இடத்திலும் கதாபாத்திரத்தின் வீச்சை ஓவியங்கள் மூலம் அவர் வாசகரிடத்தில் கொண்டு சேர்த்தார். அவருடனான ஒரு சென்னை கலந்துரையாடலின் போது அவரது உரையில் கூறிய ஒன்று அவர் எந்தளவு கவனமாக இருந்திருக்கிறார் என்று உணர்த்தியது. ஜெ. வெண்முரசை தொடராக எழுதும் போது எதிர்காலத்தில் ஏதோ ஒரு வர்ணனையில் முகத்தில் உடலில் ஒரு மச்சம் வடு போன்ற ஒரு அடையாளத்தை எழுதிவிட்டால் என்ன செய்வது என்று கருதியே எந்த ஒரு கதாபாத்திரத்தின் முகத்தையும் தான் வரையவில்லை என்றும் முகத்தைக் காட்டாமலேயே அந்த சூழலைச் சித்தரித்தது பெரும் சவாலாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். இன்று இந்த கட்டுரைகளுக்காக ஓவியங்களை மீண்டும் தேடிப் பார்த்து அவற்றில் எதை ஒதுக்குவது என்பதில் பெரும் குழப்பம் உண்டாயிற்று. 


ஓவியர் ஷண்முகவேல் வெண்முரசு விழாவில் கெளரவிக்கப் பட்டபோது

எனது வீட்டில் வெண்முரசு புத்தகமாக அனைவராலும் வாசிக்கப் படுவது.  
அதன் வழியாக கொற்றவை நாஞ்சில்நாடன் அ.முத்துலிங்கம் என பலரை வீட்டில் உள்ளவர்கள் வாசிக்கத் துவங்கினர். நவீன இலக்கியத்தில் இவ்வாறு வீட்டில் அனைவரும் தொடர்ச்சியாக வாசிப்பது என்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு வெண்முரசின் வழியாகவே மீண்டும் நிகழத் துவங்கியுள்ளது. அதை முன்பே கணித்து நேர்த்தியாக வடிவமைத்த நற்றிணை மற்றும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.


அம்மா வெண்முரசு ( செந்நாவேங்கை ) வாசிக்கும் சிக்குபலகை மேடை😀 


வெண்முரசு வாசகர்களை திரட்டி venmurasu reader” குழு மூலம் வெண்முரசு நாவல்கள் மற்றும் அதன் பலதரப்பட்ட சிறப்புகள் குறித்த கட்டுரைகள் வெண்முரசு வாசகர்கள் மூலம் தொகுக்கப் படுகின்றன. அவற்றின் மூலம் வெண்முரசின் இன்னும்  பல வாசிப்புக் கட்டுரைகளும் / உரைகளும் எழுந்து வரும். ஆனால் எவ்வளவு தொகுத்தாலும் வெண்முரசின் இறுதியில் வரும்  கிளி போல நமது உள்ளமும்  “இல்லை! இல்லை!” என்றுதான் கூவிக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை

 


முரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்

இந்தப் பகுதி வல்லினம் கலை இலக்கிய இதழின் செப்டம்பர்-2020 இதழில் வெளியானது. இணைப்பு இங்கே:- 

 

முந்தையது:- முரசும் சொல்லும் - ஏ) கதிரெழுகை

ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்


(1)

இதிகாசங்கள் என்பவை பொதுவாக உரையாடல்தான். முன்னர் நிகழ்ந்ததை சொல்பவை. இவ்வாறு வியாசர் வினாயகரிடம் சொல்லி அவர் எழுதிய ஜய கதையை சொல்கிறேன் என்று வைசம்பாயனர்  ஜனமேஜயனிடம் அவையில் சொல்லும்போது அதைக் கேட்ட செளதி ( சூததேவர்) பிற்காலத்தில் செளனகரிடம் உரைப்பதுதான் மஹாபாரதமாக நமக்குக் கிடைப்பது.  அந்த இதிகாசம் இலக்கியத்துக்குள் வரும்போது அதுவும் ஒரு உரையாடலாகத்தான் நிகழ்கிறது. அது அந்த எழுத்தாளாரின் அக உரையாடல் எனக் கொள்ளலாம். அது வழிபாடு, குழப்பம் என்கிற இரு இடங்களில் நிகழ்கின்றன. வழிப்பாட்டு மனநிலையில் அணுகும்போது அது அதன் உச்ச குணங்கள் அனைத்தையும் மீறாமல் அதற்குள்ளாகவே அவர்களின் நுட்பத்தை இன்னும் விரிவாக்கி அளிக்கிறது. பாலகுமாரன் எழுதிய  ஒரு அன்பு மந்திரம், கிருஷ்ண அர்ஜுனன் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை.  அன்றைய பாக்கெட் நாவல்களின் குடும்ப நாவல் வகை கதைகளாக அவை உள்ளன. புலரியில் படுக்கையில் துவங்குவதே பாக்கெட் நாவலின் ஒரு மரபு. அதுபோலவே சுபத்ரையை மணந்த அர்ஜுனன் மஞ்சத்திலிருந்து துவங்கும் கதை.  அது கிருஷ்ண அர்ஜுன தோழமையை இன்னும் விரித்துச் சொல்லி வாசகருக்கு நெகிழ்வும் பக்தியையுமே அளிக்கின்றன. என் அன்பு மந்திரமும் இந்த வகைதான். அது துரோணர் துருபதன் நட்பைப் பேசுகிறது. குருகுலங்கள் ஏன் முக்கியம் என்ற உரையாடலில் இது துவங்குகிறது.  இதனூடாக அன்றாட வாழ்வின் எளிய சிக்கல்களே அணுகப் படுகின்றன.  இதிகாச பாத்திரங்களின் சிக்கலைக் கண்டு வாசகர்கள் தெளிவடைவது வேறு.  வாசகரின்அன்றாட சிக்கலை இதிகாச பாத்திரங்களுக்கு பொருத்துவது வேறு. இதனாலேயே இவை ஆரம்பகட்ட பக்தியுடன் நின்று விடுகின்றன. அல்லது கடமையை செய் பலனை எதிர்பாராதே போன்ற சொற்களின் விளக்கங்களாக அவை அமைந்து விடுகின்றன. இது இலக்கியத்தை நேர்மறையாக அணுக உதவும் என்றாலும் பாத்திரங்கள் மீது உன்னதங்கள் ஏற்றி வைக்கப்படுதலும் அவர்களைப் பெரும் பிம்பமாக்குவதும் இதன் மூலம் நிகழ்ந்து விடுகிறது

 

இந்த சிக்கல் எங்கும் இருக்கத்தான் செய்கிறது. பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதி அதை விடுதலைப் போருக்கான ஆயுதமாக முன்னெடுக்கிறார். அதற்குள் அதிகம் அறச்சிக்கல் கொள்ளவில்லை.  ஆனால் நவீன இலக்கியத்திற்கும் முன்பு சொன்ன ஒருவித சிக்கல் இருக்கத்தன் செய்கிறது. அந்த விதத்தில், நவீன எழுத்தாளருக்கு இதிகாசத்தை அணுகுவதில் இருக்கும் நோக்கானது தமிழின் முதல் நவீன சிறூகதை எழுத்தாளரான புதுமைப் பித்தனிடமிருந்தே துவங்குகிறது. ராமன் அகலிகையிடம் சீதையிடம் நடந்து கொள்ளும் முறைகள் வேறு வேறாக இருப்பது  புதுமைப் பித்தனைக் குழப்பியிருக்கின்றது ( சாபவிமோசனம்). அதன் பின் மற்ற படைப்பாளிகள் வாயிலாகவும் அது மெல்ல வளர்ந்து, அது இதிகாசத்தில் கொல்லப்பட்ட அனைவரின் தரப்பாகவும் ஒலிக்கத் துவங்குகிறது. ஏகலைவனுக்காக,  அரக்கு மாளிகையில் பலியாகும் ஆறு அப்பாவி வேடர்களுக்காக அவை வாதிடுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஆள்பவரை கேள்வி கேட்கும் குறியீடாக அவை மெல்ல முன்னெடுக்கப் படுகின்றன. அதன்பின் மெல்ல மெல்ல தோற்பவர் தரப்பு நியாயங்கள் முன்னெடுக்கப் பட்டு வென்றவர்கள் சூழ்ச்சி செய்பவர்களாக நிலை நிறுத்தப் படுகிறார்கள். அல்லது ஒரு தனிப்பட்ட நாயகனை முழுதும் அலசி ஆராய்ந்து அவன் எவ்வகையில் சூழ்நிலைக் கதையாக இருக்கிறான் கட்டுண்டு கிடக்கிறான் பிறருக்காக தன்னைப் பலி கொடுக்கிறான் என்று வர்ணிக்கப் படுகிறது. கர்ணன் பாத்திரம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதனால் ஏற்படும் பிரச்சனை என்னவெனில், கர்ணனுக்காக துரியோதணன் தரப்பு நியாயங்கள் பீமன் அர்ஜுனர்கள் தரப்பு அநீதிகள் தொகுக்கப்பட வேண்டிய நிர்பந்தம் எழுத்தாளருக்கு உண்டாகிவிடுகிறது. இந்த விதத்தில் இந்த வகை படைப்புகள் ஏற்கனவே உள்ள நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்குவது அல்லது ஏற்கனவே சித்தரிக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் இன்னொரு முகத்தை எடுத்துரைப்பது என்கிற இருவகைகளில் அடங்கி விடுகின்றன. முன்பு சொன்னது நேர்மறை என்றால் இதை எதிர்மறை என்று சொல்லலாம்