Wednesday, May 12, 2021

நீ சரி பண்ணி வாழ்ந்த




வங்கித் தபாலின் முகவரி பகுதி போல கரும் சுருளுக்குள் முகம் மட்டும் பளீரிடுகிறது

கரிய போர்வைக்குள்ளிருந்து முகம் மட்டும் காட்டி தூங்கும் ஒரு  பெரிய குழந்தையின் முகம் போலவும் 

ஸ்ட்ரெக்சரை நிதானமா இழுங்க என்கிறார் ஆம்ஸ்ட்ராங் உடையணிந்த தகனமேடை பணியாளர் 

'ஹ்க்கும்! நிதானம்' என மோவாயை தோள்பட்டையில் இடித்துக்கொள்கிறாய்

ஏன்? நிதானமாதான் இழுக்கறேன் என்கிறேன்

சும்மா கதைவுடாதடா
நான் பாத்துண்டுதான் இருந்தேன்
ஆத்தை வுட்டு வெளிய வந்தவுடனே சிகரெட் வாங்கலாமான்னு கடகாரன் கிட்ட வரைக்கும் போய்ட்டு  பைக்ல போனா போலீஸ் புடிக்குதான்னு ஒப்புக்கு கேட்ட

ரெண்டு பேரு போன் பண்ணிணா..
 அப்படியே ஹெல்மேட்ல போன வுட்டுண்டு பேசற
அப்பறந்தான் வண்டிய நிறுத்தற
திரும்ப வண்டிய எடுக்கறப்போ
சைட்ஸ்டாண்ட எடுக்கல
எவனோ திட்னப்போ அவன்கிட்ட சாரின்னு சொல்லிட்டு ஸ்டாண்ட் எடுக்குற

இருந்தாலும் அது மேனர்ஸ் இல்லையா என்கிறேன்


எப்பேலேந்து சொல்லிண்டிருக்கேன் பதறாம இருடான்னு...
ரெண்டு கொழந்தைங்க ஆயிடுத்து
இன்னும் ஆத்த விட்டு வெளீல வந்தா புக்காத்துக்கு வந்த புதுப்பொண்ணு  மாதிரியே மலங்க மலங்க முழிக்கிற

எல்லாம் சரியாகிடும் சித்தி என்கிறேன்

ஆமாம்..நீ சரி பண்ணி வாழ்ந்த.. என இருகைகளால் என் முகத்தை வழித்து திருஷ்டி கழிக்கிறாய்

சிமெண்ட் தரையில் கடகடவென ஏறுகிறது ஸ்ட்ரெக்சர்

என் கொழந்தைக்கு எவ்ளோ திருஷ்டி பாத்தேளா என்கிறாய் சுற்றிவரப் பெருமையாய் பார்த்து

Friday, May 7, 2021

இடைவெளிகளை நிரப்பும் எழுத்து

எழுத்தாளர் வாசு முருகவேல் அவர்களின் நாவல்கள் குறித்து எழுதிய கட்டுரை, அகழ் இணைய இதழில் வெளியானது 

 



வாசு முருகவேலின் நான்கு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று அவர் ‘ஈழத்தமிழில்’ எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ நாவலின்  ‘தமிழகத் தமிழ்’ பதிப்பு. இரண்டாம் பதிப்பு இவ்வாறு திருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. அந்த அளவு நமது மொழிப்புலமையின் நிலைமை இன்னும் மோசமாகிவிடவில்லை. அவ்விரண்டினையும் ஒரே நாவல் என்று கொண்டால் மொத்தம் மூன்று நாவல்கள் வெளியாகியுள்ளன.


 ஜெப்னா பேக்கரி 


நம் தலைமுறையில்  நேராகக் கண்ட, அதில் தனக்கான சார்பு நிலை கொண்ட போரில் ஒன்று தமிழீழ விடுதலைப்போர். இதில் விடுதலைப் புலிகள்ஆதரவு / எதிர்ப்பு என இரு மனநிலைகள் இங்கு உருவாயின. அவற்றில் புலிகளுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பவரிடம் எதிர்த்தரப்பினரால்  இரு கேள்விகள் தவறாது கேட்கப்படும். அதில் ஒன்று முன்னாள் இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப்பட நிகழ்வு. அதைச் சற்றே பெருமிதத்துடன் எதிர் கொள்பவர்கள்கூட அடுத்த கேள்வியான ‘யாழ் வெளியேற்றம்’ பற்றி கேள்வி வந்தால் சற்றுப் பெருமிதம் குலைந்துதான் போவார்கள். அந்த அளவிற்கு ஒரு கரும்புள்ளி அந்த நிகழ்வு.


கடற்கரை ஓரமாக வேறு வேலையாக நடந்துபோகிறவர்கள் சற்று நின்று, கடலில் கால் நனைத்துப் போகலாம் என்று அலையில் ஆடிச் செல்வதுண்டு. அதுபோல யுத்தத்தில் யாரும் தலையைக் கொடுத்துவிட்டு வருவோம் என்று தானாகப் போய் கொடுக்கப் போவதில்லை. அது இதிகாச யுத்தமானாலும் நிகழ்கால யுத்தமானாலும் அதில் ஈடுபட ஒரு  ‘மறுகேள்வி கேட்காத” அர்ப்பணிப்புத் தேவையாகிறது. முழு அர்ப்பணிப்பு இல்லாமல் வெறுமனே சென்று மடிய யாரும் விரும்புவதில்லை.


இந்த விஸ்வாசம் அனைத்துத் தரப்பிற்கும்தான் இருக்கிறது. சொல்லப்போனால் போர் அதனால்தான் எழுகிறது.  ஆனால்  முழுமுதற் விஸ்வாசம் என்பது மூர்க்கமான ஒன்று. அது எதிர்த் தரப்பின் நியாயங்களைக் கருத்தில் கொள்வதில்லை.   ‘ஸ்ரீலங்கா இஸ்லாமியர்கள் காங்கிரஸ்’ உருவானதும், அதைத் தொடர்ந்து ஒருவேளை தமிழீழ தனி அரசு அமைத்தால் அதில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக ஆவார்கள் என்று கருத்து உருவானதும், ஆகவே இருதரப்பிலும் பதற்றம் உண்டானதும், அதில் சிங்கள அரசு குளிர் காய்ந்ததும், இறுதியாக ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் சொந்த நாட்டிலேயே வீடு, நிலம், பொருள் ஆகியவற்றை இழந்து அகதியாக இடம் மாறியதும், இன்றுவரை அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்தமண்ணை மிதிக்காமல் உள்நாட்டிலேயே வேறு வேறு இடங்களில் வாழ்கிறார்கள் என்பதும்,  அவர்களில் 90% பேர் இன்னும் தன் ஊருக்கு வராமலே வெளியேதான் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதும் இந்த யாழ்  வெளியேற்றத்தின் விளைவு. இது குறித்த தகவல்கள் விக்கிபீடியா உள்ளிட்ட தளங்களில் கிடைக்கின்றன.  சிங்கள திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேயின் ’august sun’ படம் இஸ்லாமிய வெளியேற்றம் குறித்துப் பதிவு செய்த முக்கியமான படைப்பு. மௌலானா முஹாஜித் எழுதிய ‘முஸ்லிம்கள் படுகொலை’ புத்தகமும் அச்சம்பவத்தின் ஒட்டுமொத்த அரசியல் பின்னணியைக் கூறுகிறது. இவை இரண்டிலும் யாழ் வெளியேற்றம் மையம் அல்ல. ஆனால் அன்றைய சூழ்நிலையை அறிய உதவக்கூடும்.


இந்தப் பின்னணியின் சூழலில்தான் வாசு முருகவேல் தனது  முதல் நாவலான ஜாப்னா பேக்கரியை  எழுதுகிறார். இதில்   அரசியல் ரீதியாக ஆளும் சிங்கள அரசு தவிர்த்து இரு தரப்புகள் உள்ளன. ஒன்று, ஈழத்தில் சிறுபான்மையினராகக் கருத்தப்பட்டு உரிமை மறுக்கப்பட்டுப் போராடும் தமிழர்கள். இரண்டாவது தமிழர்களில் தாம் சிறுபான்மையாகக் ஆகிவிடுவோமோ என அச்சத்தில் வாழும் சில இஸ்லாமியர்கள். இவர்களுக்கிடையே எந்த முடிவும் எடுக்கவியலாமல் கால ஓட்டத்தின்படி வாழும் இருதரப்பு அப்பாவியான மக்கள்.  இவர்கள்தான் பெரும்பான்மையினர்.


வாசுமுருகவேல் நடை இயல்பாகவே சுருங்கக் கூறும் வகையினைச் சார்ந்தது.  றஜீவன், அரைமண்டை போன்ற மனிதர்களை அறிமுகப்படுத்தவோ அவர்களின் சிந்தனைப் போக்கை உணர்த்தவோ பெரும்  வர்ணனைகளை எடுத்துக்கொள்வதில்லை. அஜ்மல் தனது தந்தைமீது வெறுப்புடன் வளர்ந்தவன்.  அன்று  தன் தந்தையின் மரணித்த உடல் கிடத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். எப்பொழுதும் அதிரடியாகச் செயல்படும் நபர்  அடக்கமாக இருப்பதைப் பார்த்து “எப்பேர்ப்பட்ட ஒரு அனுபவத்தை இழக்கப் பார்த்திருக்கிறோம்’ என்று கருதி நிற்பதாகக் குறிப்பிடுகிறார். அந்த இடத்தை மெல்ல வர்ணிக்கத் துவங்குகிறார். மரண வீட்டில் சோகத்தை உண்டாக்குவதற்கே ஆட்கள் தேவைப்பட்டனர். அதுவே பெரிய சோகம் என்று சொல்லியபடி செல்கிறது நாவல். இந்தக் கச்சித  வர்ணனை சில சொற்களிலேயே அந்த இல்லத்தின் நிலை, அவர்களுக்குள் இருந்த உறவுச் சிக்கல் என எல்லாவற்றையும் காட்டிவிடுகிறது


ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இராமாயண மஹாபாரதப்  போர்களை உருவாக்கிய நிர்பந்தமும் அதில் பல உட்குழுவிற்கு இருந்த அறமின்மையும் தற்காலத்தில் உரைக்கப்பட்டால்கூட அது சார்ந்து சர்ச்சைகள் உருவாக்கி வருகின்றன. அந்தக் காலத்தில் நாம் வெற்றியாக / தோல்வியாக  கண்ட ஒன்றினை  விமர்சித்து தற்காலத்தில் எழுதினால் கூட சித்தாந்த ரீதியில் பல இடர்களைக் களைய வேண்டியிருக்கிறது. அடையாளங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் நிகழ்கால யுத்தத்தின் கூறுகளை எழுதும் ஒருவர் இன்னும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. கதையோட்டத்தில் புலிகளின் தரப்பா இஸ்லாமியர்களின் தரப்பா எது சரியானது என்கிற கேள்விக்கோ தீர்ப்பிற்கோ கதாசிரியர் சொல்லவில்லை. ஆனால் சின்னஞ்சிறுவர் முதல் அனைவருக்கும் அந்த பேக்கரிமீது ஒரு ஒவ்வாமை உருவானது, கசப்பாக மாறியது ஆகியவற்றை அரவிந்தன் என்ற சிறுவனின் உடல்மொழி வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது.  அதேபோல நசீர் தன்னுடைய ரேடியோ உடைபடும் தருணத்தில் அழுகையை நிறுத்தி வெறித்துப் பார்ப்பது மற்றோர் உதாரணம். அதை நேர்த்தியாக் கையாண்டிருக்கிறார். எப்படியானாலும் நாம் யார் தரப்பில் நிற்கிறோம் என்பது கூர்ந்து கவனிக்கப்படும்.  நம் சாய்வு யார் தரப்பில் இருக்கிறது என்பது நாவலில் வெளிப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கும்.  அவ்விதத்தில்  உணர்ச்சிக்கு அப்பாற்பட்டு நின்று சுருங்கக் கூறும் இவரது நடை  அதைத் தவிர்த்துச் சம்பவங்களைத் தொகுத்துக்கொள்ள உதவுகிறது.  மகாபாரதத்தில் துரியோதனன் சார்பாகப் பேசலாம். அதற்காக வாரணாவத்தை  நியாயப்படுத்தக் கூடாது அதுதான் அடிப்படை அறம். அந்தப் புரிந்துணர்வு நாவலாசிரியருக்கும் இருக்கிறது. நாவல், அந்தச் சூழல் குறித்த ஊகங்களையும் கிசுகிசுப் பாணியில்  சொல்லிச் செல்கிறது. மேலும் ஆசிரியர் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்ள  இலக்கிய வாசகர்  ஆறாம் வகுப்பு மாணவர் அல்லர். அந்த வகையில் சூழலை  எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதில் வாசகரின் பங்கும் உள்ளது. வாசகரின் மனச்சாய்வும்  உள்ளது.  


ஒருபுறம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், மறுபுறம் மதரீதியாக அதை அணுகிப் போராட்டத்தைக் குழப்பிவிடும் ஆளும் அரசின் சாணக்கியம். மறுபுறம் இதனால் அல்லாடும் சாமானியர்கள். இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், இதற்கிடையே, இதைப் பேசித் தீர்க்க நிகழ்ந்த முயற்சிகள் என்னென்ன என்பதை ஆசிரியர் விளக்கியிருக்கலாம். ஏன் வலுக்கட்டாயமாக இந்த உடனடி வெளியேற்றம் நிகழ்ந்தது என்பதை இன்னும் விளக்கமாகப் புனைவில் பொருத்திப் பார்த்திருக்கலாம்.    


ஒருசில இயக்கத்தினர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழிக்கத் துணியலாமா என்ற கேள்வி ஸ்ரீலங்கா அரசை நோக்கிக் கேட்கப்படும். அந்தக் கேள்வியையே இறுதியில் இயக்கத்தினரை நோக்கிக் கேட்கத் தூண்டுகிறது நாவலின் இறுதி அத்தியாயம்.. ஒருசிலரின் செயல்பாடுகள் மீதான ஐயத்திலா இத்தனை மக்களை வெளியேற்றினீர்? அவர்களிடம் வழிப்பறியும் செய்தீர்? பலரின் உள்ளே இருந்த குழந்தைமையைப் போட்டு உடைத்தீர்? என்ற கேள்வியை எழுப்பிய வண்ணம் நிறைவடைகிறது நாவல்.






கலாதீபம் லொட்ஜ்


முந்தைய நாவலான ’ஜப்னா பேக்கரி’யில் ஒரு வரி வரும், ” ’’சிநேகிதம்கூட பிரச்சனையாக மாறும் துயரம் யாருக்கும் நிகழக் கூடாது” என.. இந்த இரண்டாம் நாவல் ’கலாதீபம் லொட்ஜி’ன் மையமாக இருப்பது அந்தப் புள்ளிதான்.


ஒரு போராளிப் பெண்ணுடன் இருமுறை பேசிய இளைஞன், ஏதும் அறியாத  அப்பாவி மனநிலை கொண்டவன்.   போலீசின் சித்திரவதைக்   கூடங்களில் சிக்கிச் சிதறிப்போகும் அவனது  வாழ்க்கை. ஒருவர் ஈழத்திலிருந்து கிளம்பி அகதியாகவோ அல்லது உறவினரைச் சந்திக்கவோ அயல்நாட்டிற்குச் சென்றுசேர்வது என்பதிலுள்ள சிக்கல்களைக் களமாகக் கொண்ட நாவல், அதிகம் சொல்லப்படாத கொழும்பு நகர்ப்புற வாழ்வைச் சொல்லிப் போகிறது. மலையகம், ஈழம் சார்ந்த கதைகளைப் படித்திருந்தாலும் நகர்ப்புற வாழ்வின் அச்சங்களும்  நம்பிக்கைகளும் கொண்ட நாவல் இது. அயல்நாடு செல்லும் வழியில் கொழும்பில் லாட்ஜில் தங்க நேரிடும் குடும்பமும் அவர்களைச் சுற்றியுள்ள பாத்திரங்களின் அலைச்சலும் சொல்லப்படுகிறது.


அயல்நாடு செல்பவர்கள் தங்கியிருக்கும் லாட்ஜின் அறைக்கு எப்பொழுது  வேண்டுமானாலும் உறவினரிடமிருந்து  அழைப்பு வரலாம். அதை வந்து சொல்வதற்கென ஒருவர் இருக்கிறார். அவரிடம் நலம் விசாரிக்காமல் யாரும் செல்வதில்லை. அது ஒரு கிரக உறவுபோல.  கிரஹாம்பெல் உறவு என்றும் சொல்லலாம் என்று அறிமுகப்படுத்தும் சரளமான நடை இதிலும் உண்டு.


ஈழத்தில் அரசியல் கடசிகள், அரசாங்க அதிகாரிகளின் லஞ்ச  லாவண்யங்கள், சிறுநீர் சோதனையில் நோய் இல்லை எனக்காட்ட  நிகழும் தில்லுமுல்லு என அனைத்தையும் முந்தைய நாவல் போலவே சுருங்கச் சொல்லியே விளக்கிவிடுகிறார்.  தலைநகரம்,  எல்லா தலைநகரம்போல மொழி இனம் குறித்த பாகுபாடு ஏதும் இன்றித்தான் இருக்கிறது. சந்திரனிடம் பழக்கமாகும் அபயசேகர  ஒரு பரிமாணத்தைக் காட்டினால், சிங்களவர்களே பரவாயில்லை என்கிற அளவில் தமிழர்களிடம் கறாராக நடந்துகொள்ளும் தமிழர் மங்கையற்கரசி மற்றோரு பரிமாணம்.  வெளிநாடு போகும் வழியில்  லாட்ஜில் தங்கியிருக்கும் தாரிணி, கொழும்புஆன்ரீ ( ஆண்ட்டி) யின் மகனைக் கண்டதேயில்லை. அவன் சிறையில் இருக்கிறான். அவள் அறிந்ததெல்லாம் அவன் அம்மாவுடனான உரையாடல் வழிதான். இறுதியில் தன மகனைக் காணச்செல்லும் அம்மாவிடம் அவனுக்கான காதல் கடிதத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டுத் தன் தந்தை, தம்பியுடன் வெளிநாடு கிளம்புகிறாள் தாரிணி. மண்ணை விட்டு விலகிச் செல்லும் மனிதர்களுக்கு அந்த மண்ணின் மீதான பற்றும் அதற்காகப் போராடும் மனிதர்கள் மீதான அன்பும் நாவலில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.


புத்திரன்


மண்ணை விட்டு விலகிச் செல்லும் மனிதர்களுக்கு அந்த மண்ணின் மீதான பற்று முந்தைய நாவலில் சொல்லப்பட்டதுபோல தன் மக்களைப் பிரிந்த தாய்மண்ணின் ஏக்கம்தான் புத்திரன் நாவல். சுந்தரி என்பது அழகானவள் என்ற பொருள் கொண்டது. நாவலின் நாயகி பெயர் அது. அதை அந்த மண்ணிற்கான குறியீடாகவும் கொள்ளலாம். 


கொரோனா காலத்தில் அனைவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்ப, புலம்பெயர்  வாழ்வில் அங்கு செல்லமுடியாத   ஏக்கத்தை எழுத்து வழியாக ஆசிரியர் தீர்த்துக்கொண்ட நாவல் எனலாம். மூன்று நாவல்களில் அதிகம் உணர்ச்சிவசப்படும் தருணங்கள் கொண்ட  நாவலாகவும் இது உள்ளது. தன் சிறுபிராயத்தை அசைபோடும் நினைவுகள் நிறைந்த சில நாவல்கள் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களால் எழுதப்பட்டுள்ளது. இது அந்த வரிசையில் சென்று அமர்கிறது.


நயினாதீவு மக்களின் வாழ்க்கையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கிடந்து அல்லாடும் வாழ்க்கையும் உரைக்கப்படுகிறது. ஒருவிதத்தில் முந்தைய நாவல்களில் உள்ள ‘தள்ளி நின்று பார்க்கும்’ தன்மையை விட்டுவிட்டு நம்மையும் உணர்ச்சிக்குள் இழுத்துவிடுகிறது எழுத்து. அதனாலேயே கதாசிரியரின் மற்ற இரு நாவல்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது . வாசு முருகவேலின் படைப்புலகில் நுழைய விரும்புபவர்கள் இதிலிருந்து துவங்கலாம். 


மூன்று நாவல்களிலும் பொதுவாக இருப்பது எள்ளல் நிறைந்த நடையும் ஏனைய ஈழ நாவல்களில்  அதிகம் உரைக்கப்படாத இடங்களைத் தொட்டு் நிரப்பும் உள்ளடக்கமும் ஆகும். அல்லது அதிக முக்கியத்துவம் இல்லாதுபோன இடங்களை நோக்கி ஒளியைப் பாய்ச்சுதல் என்றும்  சொல்லலாம். புத்திரன் நாவலில் திருவெம்பாவை சொல்ல அந்த முழுக் கிராமமும்  தயாராவது ஒரு குறிப்பிடத்தக்க இளம்பிராய  நிகழ்வு. நாஸ்டால்ஜியா என்பது நல்ல வாழ்க்கை வாழ்ந்தவருக்கே சுகமான ஒன்று. அகதியாக அலைக்கழிக்கப்பட்டவருக்கு அல்ல என்பதும் உண்மை.  முதலில் மனுஷன் போனான். பின் மகன் போனான். கடைசியாக மண்ணும் போய்விட்டது என்று ஒருத்தி காரி உமிழ்வாள். அனைத்தையும் செரித்துக்கொண்ட மண் அதையும் செரித்துக்கொண்டது என்ற வரி முதல் நாவலில் ஒரு வர்ணனையில் வரும். அந்த வாழ்க்கை பாரத்தை எளிய விவரிப்பின் மூலம் கடத்துகின்றன இவரது நாவல்கள். பொதுவாக குழந்தைகளே முக்கிய கதாபாத்திரமாகவும், சம்பவங்கள் குழந்தைகளின் சிறார்களின் பார்வையிலும் உரைக்கப்படுவது இவர் நாவலின் முக்கிய அம்சம். ஈழ அரசியல், சமூக அவலங்களைப் பொறுத்தமட்டில் தமிழக மக்களின் புரிந்துணர்வு ஒரு குழந்தைக்கு இணையானதுதான். இந்த நாவல்களில் வரும் குழந்தைகளின் உள்ளம், அங்கு நிகழும் சம்பவங்களைக் கண்டு  மெல்ல முதிர்ச்சி அடைவதைப் போலவே சில புரிதல்களை நோக்கி வாசகர்களை இவை செலுத்துகின்றன.  எங்கோ பிறந்து உள்நாட்டிலோ அயல்நாட்டிலோ அலைக்கழிக்கப்படும் மக்களின் வாழ்வை அனைத்து ஈழ எழுத்தாளர்களும் உரைத்துள்ளனர். அவை எதையும் வாசிக்காதவர்கள் வாசு முருகவேலிடமிருந்து துவங்கலாம்.  அவை அனைத்தையும் வாசித்தோர் அந்தப் பெரும் பயணத்தில் சொல்லாமல் விட்டுப்போன  இடைவெளிகளை வாசு முருகவேலின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை

ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பு குறித்து  அருணாசலம் மகாராஜன் வல்லினம் இதழில் எழுதிய மதிப்புரை:-




ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை 

    “அந்தக் கணம் என்றுமே என் நினைவில் இருந்து மறையாது… ஒரு கணத்திலேயே அது என்னவென்று புரிந்தது… ஆனால் அந்த ஒரு கணத்துக்குள் அது ஆயிரம் வடிவம் காட்டியது. முதலில் ஊரின் மச்சு வீட்டு வாசலில் இருந்த கரும் திண்ணையின் நினைவு வந்தது. பின் ஊர்க்காவல் பெரியாச்சி அம்மனின் விரித்த சடை ஞாபகம் வந்தது. ஒரு பெரும் அங்காளம்… அல்லது பெரும் பத்தாயம்… ஒருநாள் இரவில் கண்ட கோரை ஆறு… கார்மேகம்… அல்லது காரிருள்… அல்லது ஏதுமற்ற வெறுமை… அமாவாசை இரவு… சூனியம்பாங்களே அது இதுதானா… நட்சத்திரங்களாய் கண்கள்… எல்லாம் அறிந்தவன் போலப் புன்னகை.”


நண்பரும், தீவிர இலக்கிய வாசகருமான காளிபிரசாத் என்னுள் எழுத்தாளராக நுழைந்தது இவ்வரிகள் ஊடாகத்தான். ஒரு எழுத்தாளரின் மிகப் பெரிய சவால் என்பதே சொல்லாக மாற்ற இயலாத கணங்களை வாக்கியமாக்கி, அதன் பின்னும் அக்கணம் தந்த உணர்வுநிலையை வாசகனிடம் குன்றாமல், குறையாமல் கடத்துவதே. ஜெயமோகன் காவிய ஆசிரியராகவும், தல்ஸ்தோய், தஸ்தாவேஸ்கி துவங்கி நாஞ்சில்நாடன் போன்றோர் ஏன் பேரிலக்கியவாதிகளாகவும் (மாஸ்டர்ஸ்) கொண்டாடப் படுகிறார்கள் என்றால் அவர்கள் இச்சவாலை அநாயாசமாகக் கடந்தவர்கள் என்பதாலும் தான். ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்குத் தானே இலக்கிட்டு, எட்டி, கடந்து, புது இலக்கு உருவாக்கி, அதையும் கடந்து என ஆடும் ஆடலின் முக்கியமான சவால் இது. ஏனெனில் எழுத்தின் ஊர்தியான மொழியின் மேல் ஒரு எழுத்தாளனின் ஆளுமை இரண்டறக் கலக்கும் இடம் இது. ஒரு எழுத்தாளன் தன்னளவில் முழுமையாகும் முதல் படி என்பது அவனுக்கே உரித்தான ஒரு மொழிபை, தன் அகத்தில் ஓடும் மொழிக்கு மிக அருகில் இருக்கும்படியான ஒரு மொழிபைக் கண்டடைவதே. அகமொழிக்கும், வெளிப்பாட்டு மொழிபுக்குமான இடைவெளி குறையக் குறைய எழுத்தாளன் இலக்கியவாதியாகவும், பேரிலக்கியவாதியாகவும், காவிய ஆசிரியனாகவும் மலர முடியும்.


முதல் தொகுப்பிலேயே ஒரு எழுத்தாளரிடம் இதை எதிர்பார்ப்பது என்பது சற்று அதீதம் தான். ஆனால் அதை நோக்கிய பயணம் அந்த எழுத்தாளருக்குச் சாத்தியமா என்பதை முதல் தொகுப்பு காட்டிக் கொடுத்துவிடும். அவ்வகையில் காளிபிரசாத்தின் மேற்கண்ட வரிகள் அவர் அச்சவாலை ஏற்கக் கூடியவர்தான் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. மிகச் சரியாகத் தொகுப்பின் தலைமைக் கதையாக அவர் தேர்ந்தெடுத்த ‘ஆள்தலும் அளத்தலும்’ கதையில் தான் இவ்வரிகள் வருகின்றன. சந்தேகமே இல்லாமல் இலக்கியமாகும் தகுதி கொண்ட கதை தான் அது.


பெரும்பாலும் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் ஒரு கேள்வி எதை வைத்து ஒரு கதை இலக்கியமென்றும், அல்லவென்றும் ஆகிறது என்பது. உண்மையில் இது ஒரு அடிப்படையான கேள்வி. பொதுவாக எந்தவொரு அடிப்படையான கேள்விக்கான பதிலைப் போல இதன் பதிலும் மிக எளிமையானதே. ஒரு படைப்பு, சிறுகதை, கவிதை, நாவல் என எந்த வடிவமாகக் இருந்தாலும், வாழ்க்கையைப் பேசும் என்றால் அது இலக்கியம். மிக நேரடியான, எளிமையான பதில். எப்படி ஒரு படைப்பில் வாழ்க்கை இருக்கிறது என்பதை அறியலாம்? அதற்கு நீங்கள் வாசகராக வேண்டும். வாசிக்கையில் அதில் எழுந்து வரும் தருணங்களில், அதன் உணர்வு நிலைகளில் உங்களால் ஈடுபடமுடிந்தால் அப்படைப்பில் வாழ்க்கை இருக்கிறது. அது நீங்கள் அறிந்த வாழ்க்கையாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. முற்றிலும் புதிய நிலத்தின், புதிய வாழ்வாகக் கூட இருக்கலாம். ஆனால் அது மெய்யான சித்திரத்தைத் தருகிறதா அல்லது பொதுவில் சமைக்கப்பட்டிருக்கும் கருத்துநிலைகளில் இருந்து உருவாக்கி எடுக்கப்பட்ட ஒரு கற்பனையை முன்வைக்கிறதா என்பதில் இருக்கிறது இந்த வேறுபாடு. எப்படி இந்த வேறுபாட்டை அறிவது? அதற்கு வாசகராக நீங்கள் உங்கள் உள்ளுணர்வையும், நுண்ணுணர்வையும் தான் நம்ப வேண்டும். இலக்கிய விமர்சனங்கள், பரிந்துரைகள் ஓரெல்லை வரை உதவும். அதுவும் துவக்க நிலை வாசகர்களுக்கு மட்டுமே. அதன் பிறகு வாசகன் என்பவனும் தனியனே, எழுத்தாளனைப் போலவே!


வெறுமனே வாழ்வை மட்டுமே பேசுபவற்றை மெல்லிலக்கியம் என வரையறுக்கலாம். அவை பேசும் வாழ்வு மெய்யானதாக இருப்பதால் மட்டுமே அவை இத்தகுதியை அடைகின்றன. ஆனால் அது இலக்கியத்தின் வெளியில்தான் இருக்கிறது என்பதை வாசகர்கள் மறந்துவிடக் கூடாது. அப்படிப் பார்த்தால் இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளிலுமே வாழ்க்கை என்பது இருக்கிறது. பெரும்பாலான வாசகர்களுக்கு அறிமுகம் இல்லாத மின்னியல் தொழிலாளர்களின் வாழ்வு. பழனி, திருவண்ணாமலை, கரி, மதிப்பு, பராசக்தி போன்ற கதைகள். அப்படி ஒரு புதிய களத்தைத் தேர்ந்தெடுத்ததே இக்கதைகளுக்கு ஒரு வாசிக்கும் ஆர்வத்தைத் தந்துவிடுகின்றன. எனது வாசிப்பில் ‘மதிப்பு’ கதையே இவற்றில் சிறப்பானது. உண்மையில் தலைப்பால் மட்டுமே இக்கதை தன் உச்சத்தை வாசகருக்குக் கடத்துகிறது. அதை விட முக்கியம் இக்கதை யாருடைய தரப்பையும் எடுக்கவில்லை. நல்ல சிறுகதைக்கான படைப்பமைதி கூடிய கதை இது. மாறாக ‘கரி’, அதன் தலைப்பாலேயே அது சென்றடைய வேண்டிய உயரத்தை எட்டாமல் போன கதை ஆகிறது.


சிறுகதை என்பது முடிந்த அளவு ஒரு மையப்படிமத்தை முன்வைத்து நகர வேண்டியது. இக்கதையில் ஒரு நிகழ்வு இரு வேறு மனிதர்களிடம் என்ன வகை மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதைப் பற்றி பேசுகிறது. அவ்விரு மனிதர்களும் வெவ்வேறு வகையில் அந்த நிகழ்வில் இருந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்நிகழ்வில் பங்கேற்ற அப்பெண் எந்த சலனமும், மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறாள். உண்மையில் மிகப் பெரிய தரிசனம் உள்ள கதை. ஆனால் கதையின் போக்கும், அதன் தலைப்பும் இந்த திசையில் இல்லை.


வாழ்வை நடந்தது நடந்த படியே கூறுவதுதான் இலக்கியம் என்றால் சிசிடிவிகளும், நேரலை தொலைக்காட்சிகளும்தான் மிகச் சிறந்த இலக்கிய ஆசிரியர்கள். என்றால் ஒரு படைப்பு இலக்கியத் தகுதியை அடைய வேறு என்ன வேண்டியிருக்கிறது. அது காட்டும் வாழ்வில் இருக்கும் உணர்வு உச்சங்கள். எனில் நம் உணர்வை, கண்ணீரை, அறச்சீற்றங்களைத் தட்டி எழுப்புபவை எல்லாம் இலக்கியமாகிவிடுமல்லவா? இது வாசகரின் முன்னிருக்கும் முக்கியமான இக்கட்டு. வாசகன் திறந்த மனதுடன், தன்னைத் தானே சுயபரிசோதனை செய்யும் வகையில் அந்த உணர்வுகளை பரிசீலிக்க வேண்டும். தனக்கு வந்த அந்த உணர்வு உச்சம், வலிந்து ஏற்படுத்திக் கொண்டதா (நான் புரட்சியாளன், ஏழைப் பங்காளன், தன்னைப் போல பிறரை நேசிப்பவன் என அதற்கு பல வேடங்கள் இருக்கின்றன) அல்லது அது தான் உண்மையிலேயே தன் இயல்பா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த உணர்வு உச்சம் இயல்பானதுதான் என அவன் உணர்ந்தால் அப்படைப்பு சந்தேகமே இல்லாமல் இலக்கியம்தான்.


இப்போது ஒன்று புரிந்திருக்கும், ஒரு படைப்பு வாசிக்கும் ஒருவரை வாசகராக்க வேண்டும். அச்சவாலை அப்படைப்பு சந்திக்கும் போது தான் அது இலக்கியமா அல்லவா என்ற வகைப்பாட்டிற்கே தகுதி உடையதாகிறது

இத்தொகுப்பின் ‘விடிவு’ கதையை எடுத்துக் கொள்வோம். ஒரு இரு சக்கரவாகன விபத்தில் நண்பனைப் பறிகொடுத்த ஒருவன். அந்த நண்பன் இறந்து அவனது உடல் வீட்டிற்குக் கொண்டுசெல்லப்படும் வரையிலான நிகழ்வுகள்தான் கதை. ஆனால் இக்கதை முழுக்க முழுக்க கதை சொல்லியை அவனது அக்கணத் தவிப்புகளாக நம்முள் கடத்துகிறது. அவன் அழவில்லை. ஆனால் யாருடையத் தோளிலாவது சாய்ந்து கொள்ள வேண்டுமென தேடுகிறான். ஆனால் ஒரு தோளும் அமையாத கணங்களில், சோர்ந்து போய், தளர்ந்து நிற்கும் தருணத்தில் முற்றிலும் எதிர்பாராத ஒருவரின் கைகளில் அடைக்கலமாகும் அந்த உச்சம், வாசகரிடமும் அந்த உணர்வு நிலையை எழுப்புகிறது. ஒருவகையில் மலையாளச் செவ்விலக்கியத் திரைப்படமான பரதம் படத்தின் உச்ச காட்சியை நினைவுபடுத்தியது. அனைத்தையும் விட முக்கியம், அந்த உச்சத்திற்குப் பிறகு வாசகரிடம் மானுடம் பற்றிய, இந்த வாழ்வைப் பற்றிய ஒரு நம்பிக்கையை விதைக்கிறது இக்கதை.



சரி, வாழ்க்கைத் தருணங்களை, அவை எழுப்பும் அதே உணர்வு உச்சங்களைப் பேசுவது மட்டுமே தான் இலக்கியமா? இது இலக்கியமாகும் முதல் தகுதி தான். உண்மையில் எந்த ஒரு படைப்புமே அது சொல்ல வரும் வாழ்க்கை இங்கே இதற்கு முன்பு எப்படி பேசப்பட்டிருக்கிறது என்பதைச் சந்திப்பதில்தான் அது இலக்கியத்தின் அடுத்த படிக்கு நகர்கிறது. உதாரணத்திற்கு இத்தொகுப்பில் இருக்கும் ‘பூதம்’ கதையை எடுத்துக் கொள்வோம். கதை முழுவதும் மிகச் சாதாரண நிகழ்வுகள். அந்த வாழ்வை இன்று பெரும்பாலான ‘இழந்த மனசுக்கார ஆண்கள்’ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு நியாயங்களும் கண்முன் தெரிகையில் எந்த ஒரு தரப்பையும் எடுக்கமுடியாமல், தன் முன்னே உள்ள நியாய, அநியாயங்களை விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களின் பிரதிநிதியான கதையின் நாயகன் இறுதியில் தன்னை விடமுண்ட நீலகண்ட சிவமாக உணர்வதில் முடிகிறது. அந்த புள்ளியில் இருந்து வாசகன் மிக நீண்ட தூரம் செல்ல முடியும். உண்மையில் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று இது. இக்கதை அன்றாடத்தை மரபின் ஒரு புள்ளியில் இணைத்ததாலேயே இலக்கியமாகிறது. அந்த கடைசி பாரா மட்டும் இல்லாவிட்டால் இது ஒரு மிகச் சுமாரான, சாதாரணமான கதை. இந்த பூதம் கதையில் காளியின் இயல்பான அங்கதம் நன்றாகக் கைகூடியும் வந்திருக்கிறது.


இதே வகைமையில் வரத் தக்க மற்றொரு கதை ‘ஶ்ரீஜி’. தன்னெஞ்சறிய பொய் சொன்ன ஒருவரின் கதை. ஒரு நல்ல சிறுகதை என்பது அது முடிந்த பின் வாசகரிடம் துவங்க வேண்டும் என்பார் ஜெயமோகன். இக்கதை அதற்கு மிகச் சிறந்த உதாரணம். இக்கதையில் காளியின் மொழிபு திருக்குறளைச் சந்தித்திருக்கிறது.


வாழ்வும், உணர்வும், தத்துவங்களும் இருந்தால் இலக்கியம் எனச் சொல்லிவிட்டோம். அப்படியெனில் பேரிலக்கியம் என்பது என்ன? இன்னொருவக்கையில் இவ்வினாவைக் கேட்டால், இலக்கியம் என்பதை மிக அகலமான அலைவரிசையாகக் கொண்டால், அதன் உச்சம் என்பது என்ன? ஒரு படைப்பில் வரும் வாழ்வை வாசகனை உணர வைப்பது, அவ்வாழ்வுடனே அவனைப் பிணைப்பது ஆரம்ப கட்ட இலக்கியம் எனில், அவ்வாழ்வை, அவ்வாழ்க்கைத் தருணத்திற்கான தத்துவங்களை விவாதிப்பது, சுட்டுவதன் மூலம் வாசகனை அறிய வைப்பது அடுத்த கட்ட இலக்கியமாகிறது. ஆனால் இவ்விரண்டு தளங்களையும் தாண்டி அந்த வாழ்க்கைத் தருணத்தை அதன் உள்ளும் புறமுமாகக் காணச்செய்யும், அதை முழுமையாகப் பார்க்கச் செய்யும், படைப்புகளே இலக்கியத்தின் உச்சமாகும் தகுதி பெற்றவை. இதையே படைப்பின் தரிசனம் என்கிறார்கள் விமர்சனக் கோட்பாட்டாளர்கள்.


காவியம் என்பது இன்னும் ஒருபடி மேலே சென்று வாழ்க்கையை இந்த புடவிப் பெருக்கில் வைத்து, இன்னும் ஒரு மாபெரும் முழுமைத் தரிசனத்தைச் சொல்வது. அது வெண்முரசு, கம்பராமாயணம், சாகுந்தலம் போன்றவற்றிற்கே சாத்தியம். எனவே தான் காவிய ஆசிரியன் மெய்ஞானிக்கு இணையாக நம் மரபில் வைக்கப்படுகிறான்.


சிறுகதை என்னும் வடிவம் தரிசனங்களுக்கான வடிவம் அன்று. ஆயினும் அதில் தரிசனம் அமையக்கூடாது என்பதல்ல இதன் பொருள். மிகச் சிறந்த கதைகள் என்பவை இத்தகைய தரிசனங்களைக் கொண்டவை தான். புதுமைப்பித்தன், அசோகமித்திரன் என அத்தனை பேரிலக்கியவாதிகளும் இத்தகைய சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள்.


இத்தொகுப்பில் ‘ஆர்வலர்’ என ஒரு கதை இருக்கிறது. பிறவற்றைப் போலவே சாதாரண நிகழ்வுகள். ஒரு இஸ்லாமியர் தன் குடியிருப்புப் பகுதியில் வந்து அசிங்கம் செய்யும் பன்றி ஒன்றின் குட்டிகளுக்கு இரக்கம் காட்டுகிறார். அவரது பேரன் அந்த குட்டிகளில் ஒன்றை விளையாட விரும்பிக் கேட்க அதை எடுக்கச் சென்றுவிடுகிறார். தாய் பன்றியின் கோபத்திற்கு ஆளாகிறார். அடுத்தநாள் அந்த தாய்பன்றி குட்டிகளோடு வேறு இடத்திற்கு போய்விடுகிறது. இத்தனை நாள் எப்படி அந்த பன்றிகளை வெளியேற்றுவது என கையைப் பிசைந்து கொண்டிருந்த அந்த குடியிருப்பு வாசிகள் இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து விழா எடுக்கிறார்கள். அனைவரும் அவரது அன்பான அணுகுமுறையால் தான் பன்றிகள் சென்றுவிட்டதாக அவரைப் புகழ்கிறார்கள். ஆனால் அவருக்கு மட்டுமே அதன் உண்மையான காரணம் தெரிகிறது. இந்த இடம் வரை இதுவும் ஒரு ‘ஶ்ரீஜி’ வகைக் கதை தான். ஆனால் அவ்விழாவில் அவரது ஏற்புரையாக வரும் இவ்வரிகள், ‘ஒருவரை நாம் வெறுக்கும் போதும், விரும்பும் போதும் ஒரு எல்லைக்குள் நிற்கிறோம். ஆனால் அது கொஞ்சம் நீண்டு போகும்போது ஒரு உரிமை எடுத்துக் கொள்கிறோம். அதுவரையிலான நம் அன்பு, எல்லை தாண்டும் போது உரிமை என்றாகிறது என்பது நமக்குத் தெரிவதில்லை. அப்போது அனைத்துமே தலைகீழாகிவிடுகிறது…. அது தெரிந்தபின் செய்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை.’


இவ்வரிகளே இக்கதையின் தரிசனம். அன்பு உரிமையாதல் என்பதே இன்று நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால். அத்தனை உறவுகளின் கசப்படைதல்களின் ஆதார வேர் இது தான். ஆனால் இக்கதை மிக இயல்பாக இந்த புள்ளிக்கு வந்து நிற்கிறது. ஒரு எழுத்தாளராக காளியின் அடுத்த சவால் என்பது இவ்வரிகளை வாசகரைத் தாமே உணர்ந்து கொள்ள வைப்பதே.


அந்த சவாலிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர் அடைந்ததே ‘ஆள்தலும், அளத்தலும்’ கதை. அனைத்து வகையிலும், காளியிடம் இருந்து நல்ல இலக்கியத்தரமான படைப்புகளை இனியும் எதிர்பார்க்கலாம் என வாசகருக்கு நம்பிக்கை தரும் படைப்பு.


காளிபிரசாத்திற்கு சிறுகதைத் தருணங்களைக் கண்டடையும் கண்கள் இருப்பதைப் போல அவற்றைக் கூறும் முறையும் நன்றாகக் கைவந்திருக்கிறது. அத்தருணங்களில் இருந்து பெற வேண்டியவற்றை அடையவும், அறிய வேண்டியவற்றை அறியவும் தேவையான வாசிப்பும், நுண்ணுணர்வும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் ஒரே வாழ்வியலை ஒரே போன்று எழுதுவதை அவர் சற்று கவனிக்கலாம். அந்தந்த கருக்களுக்கான மொழிகள் அமைய வேண்டும். இத்தொகுப்பின் அனைத்து கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மொழியில் தான் அமைந்திருக்கின்றன. மேலும் ஆடையற்ற பெண்ணுடல் என்பதும், ஒரு இருளான அறையில் நிகழும் உடலுறவு என்பதும் இந்த தொகுப்பில் இருகதைகளில் மைய நிகழ்வாகவும் (ஆள்தலும் அளத்தலும் மற்றும் கரி), பேச்சுவாக்கில் வருவதாக மேலும் இருகதைகளிலும் (பழனி மற்றும் பராசக்தி) வருகின்றன. அதையும் ஆசிரியர் ஏன் என சுயவிசாரணை செய்து கொள்ளலாம். உண்மையில் நிர்வாணம் என்பதும் ஒரு தரிசனம் தான். அதைத் தான் ஆசிரியர் முன்வைக்கிறார் எனில் அதை இன்னும் பல கோணங்களில் எழுதிப் பார்க்கலாம். மாறாக அவை அதிர்ச்சி மதிப்பீடு அல்லது கதையின் சுவாரசியம் என்ற புள்ளியில் அமைந்திருக்குமாயின், சரியான மாற்றைத் தேடலாம்.


ஒட்டுமொத்தமாக ஒரு தொகுப்பு எனப் பார்த்தால் இலக்கியத்தின் அனைத்து இடங்களிலும் சென்றமரத் தக்க ஐந்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருகின்றன. முதல் தொகுப்பு என்ற வகையில் இதுவே சாதனைதான். ஆனால் ஒரு எழுத்தாளராக அவர் செல்ல வேண்டிய தொலைவுகள் இன்னும் இருக்கின்றன. அதற்கான முதல் அடியாக இந்த ‘ஆள்தலும் அளத்தலும்’ இருக்கட்டும்.


எப்படி எழுதவேண்டும் எனச் சொல்வது விமர்சகனின் வேலை கிடையாது. அது விமர்சனத்தில் எல்லைக்குள்ளும் வராது. எழுத்து என்பது தடையின்றி எழுதப்படவேண்டியது தான். ஆனால் அந்த இடத்திற்குச் செல்ல எழுத்தாளர் தொடர்ந்து எழுதி எழுதி தன்னை மொழிக்கும், எழுத்திற்கும் நிரூபித்திருக்க வேண்டும். பின் ஒரு புள்ளியில் படைப்புக் கணங்களே அந்த எழுத்தாளனைத் தன் கையில் ஏந்தி தன்னைத் தானே நிகழ்த்திக் கொள்ளும். அத்தகைய கணங்கள் வாய்ப்பதாக நண்பருக்கு, எழுத்தாளர் காளிபிராசாத்திற்கு!



ஆள்தலும் அளத்தலும் - முன்னுரை

புத்தகம் வாங்க