Saturday, June 18, 2022

இரா.முருகன்- மிளகு நாவல் குறித்த உரை

எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் மிளகு நாவல் குறித்து zoom கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதில் ஆற்றிய அறிமுக உரை


மிளகு நாவல் குறித்த இந்த கருத்தரங்கில் பங்கு கொள்ள இணைந்திருக்கும் எழுத்தாளர். இரா.முருகன் அவர்களுக்கும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பாளர்கள் வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய மாலை வணக்கங்களை உரித்தாக்குகிறேன்


புராணக் கதைகள் முதல் சமகால கிசுகிசுக்கள் வரை நாம் அன்றாடம் புனைவிலேயே புழங்கிவருகிறோம். கதைசொல்லல் வழியாக ஒரு சம்பவத்தை விவரிக்கும் போது அதில் சுவாரசியம் கூடிவிடுகிறது. Unexpected twist என்பார்கள். அதுபோல பல விஷயங்கள் யதார்த்த வாழ்வில் நிகழ்ந்த படிதான் இருக்கின்றன. யோசித்துப் பாருங்கள்.. சுனாமி என்பது எத்தனை பெரிய ட்விஸ்ட். திடீரென கடல் எழுந்துவந்து நிலத்தையும் உயிர்களையும் கவ்விக்கொண்டு போகிறது. ஆனால் இன்று அதை விவரிப்பவர்கள் கூட அதில் ஒரு சுவாரசியத்தை  சேர்க்கிறார்கள். திடீரென கடல் எழுந்து வந்தது என்பதை சொல்வதற்கு முன் ஒரு சுவாரசியம் தேவையாகிறது. நான் சும்மா நின்றுகொண்டிருந்தேன். ஒரு படகு வந்து அருகில் விழுந்தது. என்னான்னு பார்த்தால் சுனாமி என்கிற அளவில் அந்த பிரம்மாண்டத்தை இன்னும் பிரம்மாண்டமாகவோ அல்லது சுவாரசியமாகவோ சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு தரவுகள் சொல்லும் அபுனைவு பத்திரிக்கையானாலும் புத்தகமானாலும் அது ஒரு புனைவு சம்பவத்தோடே ஆரம்பிப்பதைக் காண்கிறோம்.  எதையும் ஒரு கதைசொல்லல் ஆக்குகிறோம். அது ஏன் செய்கிறோம் என்றால் அதுவே கேட்பவருக்கு ஆர்வத்தை அளிக்கிறது என்பதால். கதையாக சொல்லும் போது அதில் ஒன்றை ஒன்றை இணைக்கும் பரவசம் சொல்பவருக்கும் உருவாகிறது. அவரும் ஒரு விஷயத்தைக் கண்டடைகிறார்.





இங்கே கண்டடைபவர்களில் வரலாற்று விமர்சகரும் புனைவாசிரியரும் இரண்டாக பிரிகிறார்கள். இவ்வாறு நடந்தவற்றைத் தொகுத்து அதற்குப்பின்னால் ஒரு முன் வரையறுக்கப்பட்ட வழிநடத்தல் இருக்கிறது என்று சொல்பவர்கள் உண்டு. இன்று உட்கார்ந்து பின்னோக்கிப் பார்த்து அவை அனைத்திற்குமான ஒரு சரடை  தானே உருவாக்கி அதை வரையறுப்பது. இன்றைக்கான அரசியல் சமூக உரையாடல்களில் இதைப் பார்க்கிறோம். உலகியல் போக்கில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயத்தில் தானும் தன் சித்தாந்தமும் சம்பந்தப் பட்டிருந்தால் அது அன்றே சொன்ன நற்சிந்தனை என்றும் அவ்வாறு அல்லாமல் எதிர்தரப்பு பங்கேற்றிருந்தால் அது அன்றே நிகழ்ந்த சதிக்கோட்பாடு என்றும் தன் மனநிலைக்கு ஏற்ப வரலாற்றை வளைப்பது. அன்றும் விவாதங்களில் இதைப் பார்க்கிறோம்


இரண்டாவதாக வருவது புனைவைழுத்தாளரின் இடம். புனைவெழுத்தாளர் எவ்வாறு மாறுபடுகிறார்? புனைவெழுத்தாளரிடம் முன்கூட்டிய அவதானிப்பு ஏதும் இல்லை. நான் இதை நிரூபிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அதில் இறங்கும் சித்தாந்த சாய்வோ அல்லது பாத்திரத்தின்  குணநலன் சார்ந்த முன்முடிவோ இருப்பதில்லை. புனைவெழுத்தாளர் என்றாலும் அதில் வாசக சுவாரசியத்திற்காக எழுதுகிறேன் என்று சொல்லி எழுதுபவர்கள் உண்டு. இன்றைய தொலைக்காட்சித் தொடர்களில் அத்தகைய  வடிவம் இடம்பெறுகிறது. பார்வையாளர்கள் கவனம் தொடரில் ஒரு  துணைக்கதாபாத்திரத்தின் மீது செல்கிறது  என்பதை சர்வே மூலம் அறிந்தபின் அந்த கதாபாத்திரத்தை நீட்டிக்கிறார்கள்.  அவை புனைவெழுத்துக்களிலேயே வெகுஜனப் படைப்புகள். ஆனால் புனைவெழுத்தாளரிடம் இருக்கும் மற்றொரு வகை தீவிர இலக்கியம் சார்ந்த்து. அங்கு முன் முடிவுகள் இல்லை் வாசக ஏற்பு என்பது பொருட்டு இல்லை. அவரும் எழுதும் போது அந்தக். கதாபாத்திரமாக வாழ்ந்து அதன் நிலைப்பாட்டை எடுக்கிறார். அங்கு எழுத்தாளன் கதாபாத்திரத்தைச் செலுத்துவது கிடையாது. அவனும் சுழலில்  அடித்துக் கொண்டு போகிறான். அதற்கு முந்தைய கணம் வரை அந்தப் படகு அங்கு வந்து விழவே இல்லை. அது வாசிப்பவருக்கு இணையாகவே எழுதுபவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆகவே புனைவெழுத்தாளரிடம் நம்பிக்கைகூட உண்டாகிறது. 


இங்கே இன்னொரு பிரச்சனை இருக்கு..

வாசகரை மகிழ்விக்க எழுதுவது இலக்கியம் அல்ல என்பது உண்மைதான். அதற்காக அதை தவறாக உள்வாங்கிக் கொண்டு வாசகருக்குப் புரிந்துவிட்டால் அது இலக்கியம் அல்ல என்று கருதிக்கொண்டு மிகவும் கடினமாக எழுதப்படும் எழுத்துக்கள் உண்டு. ஆத்தைத்தாண்டி கொல்லைக்கு போகும்போது நெரிஞ்சி முள் குத்திவிட்டது என்பதையை முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டைக கடக்கையிலியே ஐந்து தலை நாகம் ஒன்று அழுந்தக் கடித்ததம்மா என்று கூறும் கவிமரபை சார்ந்தவர்கள். வாசகர்களிடம் கூட அத்தகைய மனப்பிம்பம் உண்டு. ஆர்வக கோளாறு என்று சொல்லுவோம் அல்லவா.. சாலை போடப்பட்டாலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து விழுந்து புரண்டு மேலேறி வந்தேன் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை. அந்த மலைக்கு தார்ரோடு போட்டு பத்து வருடம் ஆகிருக்கும். 


பொதுவாக இந்த வரையறுப்பில் ஒரு பிரச்சனை என்பது இதன் அளவைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. அது பிரதி சார்ந்து முன்வைக்கப்படுகிறது. ஒரே எழுத்தாளரின் இரு படைப்புகள் மாறுபடுகின்றன.. ஒன்று ஏற்கப் படுகிறது ஒன்று நிராகரிக்கப்படுகிறது. உள்ளடக்கம், நடை, மொழி கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மை என அனைத்திலும் கச்சிதம் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் காலப்போக்கில் நிற்பதையும்.. அவ்வாறு இல்லாமல் போனவர்கள் சாதாரண  காட்ஜெ்களின் வருகைகளினாலேயே  டீவி சீரியல்கள் வருகையினாலேயே காலப்போக்கில் அடித்துச் செல்லப்படுவதையும் காண்கிறோம்.. ஏன் காணாமல் போகிறார்கள் என்றால் அவர்களின் மொழியோ அல்லது அவர்களின் மனப்பாங்கு வாசக ஏற்பை கவனம் கொண்டு இயங்குகிறது. அல்லது இன்றைக்கு சமூக அல்லது அரசியல் பார்வை இவ்வாறாக இருக்கிறது. நாம் அதனோடு ஒத்துப் போவதுதான் நமக்கு நல்லது என்று நினைக்கிறது. அவ்வாறாகவே ஒரு சந்தர்ப்பவாதமாக ஆகிறது.





ஒரு இலக்கியவாதி இதற்கு ஆட்படாதவனாக இருக்கிறான். அவனால் ஒற்றை நிலைப்பாட்டை எடுக்க இயலவில்லை ஒட்டு மொத்த உலகிற்கும் பொதுவான ஒரு சித்தாந்த்த்தை அவனால் வைக்க முடியவில்லை. ஆகவே அவன் அனைத்திற்கும் எதிர்க்குரலை பதிவு செய்தபடியே இருக்கிறான். அதை தீர்க்கமாகவோ அல்லது மெலிதாகவோ சொல்கிறான். கைம்மீறிப் போனபின் அவன் பெரிய உரத்த சிரிப்போடு அதைக் கத்திக் கூறுகிறான்..


நான் இரா.முருகன் அவர்களின் படைப்புலகிற்கு அத்தகைய ஒரு  உரத்த நகைப்போடுதான் நுழைந்தேன். அங்கே அவர் என்னை அதை விடவும் பெரிய சிரிப்போடு வரவேற்றார். அத்தகைய சிரிப்புடன் அவர் சுட்டிக் காண்பித்த உலகில் ஒரு சமையற்கார குடும்பம் புகையிலை விற்றுக் கொண்டு இருந்தது. அதிகாரம் இழந்த ராஜா தன் ராணியோடு உலவிக்கொண்மிருந்தார்.  நூறாண்டிற்கும் முந்தைய கதையில் கதை நடக்கும் அந்த காலத்திற்கும் நூற்றாண்டுகள் முந்தைய முன்னோர்கள் ஆவியாக வந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.


அங்கிருந்து அவரின் சிறுகதைகளுக்குள் சென்றேன். அங்கே அன்று துவங்கி வளர்ந்து கொண்டிருந்த தகவல் தொழில்நுட்பத்துறையின் பணியாளர்கள் இருந்தார்கள்.  நண்பர்களே அந்த காலகட்டத்தில் பொது மனநிலை என்பது எப்படி இருந்த்து என்றால், அன்று  திரைப்படங்கள்  ஐடி ஊழயர்களின் விரல்கள் துண்டாவதாக படம் எடுத்து மகழ்ந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்து கைதட்ட பெரும்திரளும் இருந்தது.


ஆனால் இரா.முருகன் காட்டிய கதையில்  அவர்கள் மன உளைச்சலில்  தற்கொலை செய்து கொண்டிருந்தார்கள். பத்து மாதத்தில் ஒரு பெண் குழந்தை பெறுவாள் என்றால் நாம் நான்கு பெண்களை வைத்து இரண்டரை மாத்ததில் அந்தக் குழந்தையை பெற்று விடமுடியும்தானே என்று கணினி உலகம் ஆலோசிக்கும் அபத்தத்தை ஒருவர் மட்டுமே அன்று எழுதிக் கொண்டிருந்தார்.


இலக்கியவதிகளிடம் இருக்கும் first bench student மனப்பாங்கு அவரிடம் இல்லை. ஒரு எழுத்தாளர் நட்சத்திர அந்தஸ்து உள்ள திரைப்பட நடிகரை தெரியாது  என்று சொல்லிக் கொள்வதும் ஒரு இலக்கியவாதி வெகுஜன கதைகள் எழுதுபவரை எள்ளுவதும் சாதாரணமாக காணக்கூடியது.   ஒரு சம்பிரதாயமாக ஆரம்பகட்ட இலக்கிய வாசகர்களிடமும் அது இருந்தது. இரா.முருகன் அவர்களுக்கு  இலக்கியப் படைப்பு  வெகுஜனப் படைப்பு இரண்டும் படைப்பு சார்ந்த ஒன்றுதானே தவிர படைப்பாளிகள் சார்ந்த ஒன்று அல்ல என்கிற கவனம் இருந்த்து. அன்னந்தண்ணி புழங்க்கூடாது என்று கோடு போட்டு விலக்கிவைக்கப்படிருந்த பிரிவினையை இரா.முருகன் மெல்ல தாண்டவும் செய்தார். அந்த மீறலில் கலகம் ஏதும் இல்லை. அது இதைச் செய்யாதே என்று சொன்னால் இல்லை அப்படிச் செய்தால் என்ன என செய்து பார்க்கும்  ஒரு குழந்தைக்குரிய குதூகல மீறலாக இருந்தது. அவ்வகையில் சொல்லமுடியாத அளவிற்கு  தமிழ் இலக்கிய உலகிற்கு  புதிய வார்த்தைகளை கொடையாக அளித்துள்ளார். சொல்லமுடியாத அளவு என்பது எண்ணிக்கை சார்ந்து அல்ல.. இடம் பொருள் ஏவல் சார்ந்தது. அதை இதோடு நிறுத்திக் கொள்வோம்..


அத்தகைய ஒரு குதூகல மீறல்தான் மிளகு நாவலில் பரமனைக் கொண்டு வருகிறது.

மிளகு நாவலின் சில அத்தியாங்களை சொல்வனம் இதழில் கண்டிருந்தேன். ஆனால் வாசிக்கவில்லை. அதை நாவலாக வாசிக்க வேண்டும் என்பதே முதன்மையான காரணம். புத்தக கண்காட்சியில்  ஸீரோடிகிரி பதிப்பகம் சென்றேன். அங்கு ராம்ஜி மற்றும் காயத்ரி இருவரும் இருந்தனர். நூறுகி்ராம் மிளகு கொடுங்க என்று கேட்டேன்.  கிராம் கணக்கில் அல்லாது கிலோ கணக்கில்தான் அரங்கில் மிளகு கிடைத்தது. சொல்வனம் மிளகின் சில்லறை வியாபரம் பார்த்தார்கள் என்றால் இவர்கள் மொத்த வியாபாரியாக இருந்தனர். அவ்வாறாக இந்த வருடத்தின் வாசிப்பு என்பது மிளகு நாவல் வழியாகத்தான் துவங்கியது.


தன் எழுத்தின் மீதும் எழுத்தாளர் கொள்ளும் பெரிய நம்பிக்கை என்பது இந்த இடத்தில் வாசகரை இது எவ்வாறு உணரச்செய்யும் என அறிந்து அதை செயலில் காட்டுவது.  விஸ்வரூபம் நாவலிலி் மகாலிங்கம் ஆப்பிரிக்க நாட்டில் சிறையில் அடைபட்டிருக்கும் போது மனைவிக்கு்கடிதம் எழெதுவார். அந்தக் கடித்த்தை அவர் சொல்லச் சொல்ல சிறைப்பணியாளர் எழுதுவார்.. அதில் அவர் வர்ணிப்பது எவ்வாறு தான்  திருக்கருக்குன்றத்தில் ரெட்டிகன்னிகையால் ஈர்க்கப்பட்டேன் என்பது.  அதை எழெதிக்கொண்டே வரும் சிறைப்பணியாளர் அடுத்தநாள் ஒரு்கடிதம் அனுப்புவார். ஐயா உங்கள் கடிதங்களை எழுதி எழுதி எனக்கு காம உணர்வு மேம்பட்டுவட்டது.. ஆகையால் இனி எழுதுவதாக இல்லை என்பது போல ஒரு்பிலாக்கணம் வைப்பார். இந்த வரியை தன் வரிகள் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர் எழுதி விட முடியாது..  இதைத் திரைப்படங்களில் பார்க்கலாம்.. கதாநாயகன் வில்லன் ஆட்களை  அடிக்கும் போது கூட்டத்தில் இருக்கும் ஒருவர் அவரை நல்லா அடிங்க என்று சொல்லுவார். அவ்வாறு சொல்லும் பாத்திரத்தின் மனோபவத்தோடு அந்த திரைப்பட பார்வையாளர்களின் மனநிலை ஒத்து போகனும்.  ரசிகனின் மனநிலையை அந்த நபர் வெளிப்படுத்த வேண்டும். அத்தகைய திரைப்படங்கள் வெற்றி அடைகின்றன. ஒரு கமர்ஷியல் படத்தில் அதைக் கொண்டுவருவது இயல்பானது.  ஆனால் இலக்கிய வாசகனை அவ்வாறு உணர வைப்பது கடினம்.  அதை சாதிப்பவர்களே பெரும் இலக்கிய கர்த்தாவாக அறியப் படுகிறார்கள். இரா.முருகனின. படைப்புகளில் அவ்வாறு  சங்கரனின் மனத்தவிப்பு முதல்   திலீப் அகல்யபின் அலைக்கழிப்பு என வரும்  எல்லாம் வாசகரை ஒன்றச் செய்கின்றன.


அரசூர் வம்சம் நாவல்கள் தவிர பிற நாவல்களை வாங்கி வைத்தாலும் இன்னும் வாசிக்கவில்லை. நான் அவரது சிறுகதைகளை வாசிக்கத் துவங்கினேன்.  மிளகு நாவல் வெளியாவதை அறிந்து அதை வாங்கி வாசிக்கத் துவங்கியபோது அதில் பரமன் திடீரென பிரத்யட்ஷமகியிருந்தார்.  அது ஒரு அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒருவகையில்

மிளகு நாவல் ஒரே சமயதத்தில் தனித்த நாவலாகவும்   இருக்கிறது.  அரசூர் வம்ச நாவல்களின் வரிசையின்  இறுதிநாவலாகவும்   திகழ்கிறது. ராணி சென்னபைரா தேவியின் கதை என்ன என சொல்கிறது.  அதற்கு பிற்காலத்தில் என்ன மதிப்பு இருந்த்து என்றும் சொல்கிறது.. அன்றைக்கு பெரிய போட்டியாக இருந்த அது, தற்காலத்தில் என்ன கவனத்தைப் பெற்றிருக்கிறது எனவும் சொல்கிறது. அந்தப் போட்டியின்  தற்கால விளைவு என்னவாக இருக்கிறது என சொல்கிறது.  இவ்வாறு இரு விதங்களில் இது நிகழ்கிறது.


இங்கு பரமன் அவ்வாறு கால சுழற்சியில் முன்னும் பின்னும் செல்கிறார்.மிளகு ராணியின் கதையும், பெரிய சங்கரன் - பகவதிக்குட்டி   குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறைக் கதையும் இவரால் ஒரு கோட்டில்  இணைகிறது. அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் பொதுவான அம்சங்களோடு இவை இணைகின்றன. இரு காலத்திலும் ஒருவர் மற்றவரை பிரதி செய்கிறார்கள். சிலர் அதே குணத்துடன் அவ்வாறே; சிலர்  குணம் மாறுபட்டு; நேமிநாதனுக்கும் ரோஹிணிக்கும் பிறந்த மஞ்சுவிற்கு பராமன்தான் தந்தையாக இருக்கிறான்.  சின்ன சங்கரனுக்கு கொச்சு தெரசாவுக்கும் பிறந்த மருதுவிற்கு முசாஃபர்த்தான் தந்தையாக இருக்கிறான். அங்கும் இங்கும் மஞ்சுநாத்தும்  மருதுவும் தன் ரத்தஉறவான தந்தையைவிட இந்தப் 'பெயரளவு' தந்தையுடன்தான் பெரிதும் பாசமாக இருக்கிறார்கள்.





ஒரு கட்டத்தில் மிளகு என்பது ஒரு metopher  ஆக ஆகிறது. சந்நியாசம் மேற்கொள்பவர்கள் உப்பு காரம் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். ஒரு விஷயத்தில் சொரணையற்று யாராவது இருந்தால் உன் உணவில் காரம் இல்லையா என்கிறார்கள்? மிளகு என்பது உணர்வோடு தொடர்பு கொண்டதாக ஆகிறது. பரமனுக்கு திலீப்பை விடவும் மஞ்சுநாத் மீதும் சில தருணங்களில்  மஞ்சுநாத்தை விட திலீப் மீதும் காரம் அதிகமாக இருக்கிறது. சில பாத்திரங்களை மிளகு கொடியாக சூழ்ந்து கொள்கிறது. இதுபோல குறிப்பிட்ட ஒன்று தொடர்ந்து வருவது அவரது தனிச்சிறப்புகளில் ஒன்று. அச்சுதம் கேசவம் நாவலில் மயில்கள் அவ்வாறு வரும்..


இரா.முருகன் அவர்களின் மீறல் பற்றி முன்பு கூறினேன் அல்லவா.. அந்த் மீறலுக்கான மற்றொரு உதாரணம் அவரது்நடை. ஒரே நாவலின்  நவீன இலக்கியத்தின் அத்தனை கூறுமுறைகளையும் தேவைக்கேற்ப  கையாண்டிருக்கிறார். இப்போது அதை magical realism என்பதா வரலாற்று நாவல் என்பதா யதார்த்த நாவல் என்பதா.. அதை வகைப்படுத்துவதும் கடினமாக இருக்கிறது.  குறியீடு், உருவகம் மாய எதார்த்தம் என அனைத்தும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் தானாகவே வந்துபோகும் என்பதே அவருடைய நாவல்களின் தனித்துவம்.


இதில் ஒரு ஜம்ப் இருக்கும். எங்கிருந்து எங்கு தாவுகறது என அறிவது கடினம்.. மிளகுராணி-நேமிநாதன் பிரச்சனையில் வரும் தாமஸ் அகஸ்டின்ஹோவை உறங்க விடாமல் துன்புறுத்தும் ஒரு பெருச்சாளி.  சமகாலத்தில் அங்கு  சுரண்டி உண்டு கொழுக்கும் அந்நிய வியாபார அரசியலுக்கான   குறியீடாக ஆகிறது.   இறுதியில் அவர் அலறி எழ  அனைவரும் பற்றி என்ன என வினவுவார்கள்..,  ஒரு பணியாள்  'எலி அம்மணமா ஓடுதாம்' என்று அதை விளக்கும் ஒரு வரியில்  பிற்காலத்தில் இருந்து  அதைக் கண்டு நகைக்கும் பகடியாக ஆகிவிடுகிறது.  மிளகுராணி நேமிநாதன் பிரச.சனையில் போர்த்துகீசியரின் பங்கு வேறு என்னவாக இருக்கும? இதுபோல பல உண்டு. நான் எனது பதிவில் கூட எழுதியிருந்தேன்.  பாரதியாரின் கும்மிப்பாட்டு, காந்தியின் உப்பு சத்தியாகிரகம் எல்லாம் பதினாறாம் நூற்றாண்டில் வருகிறது.  இந்த விளையாட்டின்  உச்சகட்டமாக மிளகு ராணியைப் பார்த்து 'அம்மா.. நீங்கள்தான் மக்களின் முதல்வர்' என்கிறது ஒரு கதாபாத்திரம். இது எல்லாம் நடையும் சுவாரசியமும் சார்ந்தவை


ஆனால் அனைத்திற்கும் மேலதிகமாக ஒன்று உள்ளது..  நண்பர்களே ஒரு பிரசித்தி பெற்ற அறிவியல்  கேள்வி உண்டு.. தத்துவக் கேள்வியாகவும் கொள்ளலாம்.


“If a tree falls in a forest, and there’s no one around to hear it, does it make a sound,”


ஒரு காட்டில் மரம் ஒன்று விழுந்தால், அதைக் கேட்க யாரும் இல்லை என்றால், அது ஒலி எழுப்புமா?


ஆம் என்றும் இல்லை என்றும் இதற்கு இரு விடைகளையும் அதற்கு ஆதரவாக பல காரணிகளையும் தொகுத்துக் கொள்ள முடியும்.. ஆம் என்றாலே யாரோ கேட்டார்கள் என பொருள் வருகிறது. அறியப்படுவதற்கு அறிபவர் ஒருவர் வேண்டும் என்று விரிவடைந்து செல்கிறது.


ஒரு  பயணி எங்கோ ஒரு சிதிலமடைந்த கோயிலைக் காண்கிறான். உடனே அவர் மனம் புண்படுவதைக் காண்கிறோம். இரண்டாயிரம் வருடம்முன்பு கட்டியது இதை இன்று கவனிப்பாரற்று விட்டிருக்கிறோம் என்று மனம் குமுறுகிறார்.  சுவடற்றுப் போன ஒரு புராதனத்தை பார்க்கையில் மனம் பதற்றம் கொள்கிறோம்.  ஆனால் அது அங்கேதான் இருந்தது. இவர் சென்று காணும் ஒரு கணத்திற்கு முன்பு வரை அது அங்கேதான் இருந்தது. அது தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதும் நாம் அதன் கதையை அறிகிறோம். அந்தக் கதையை நமக்கு ஏற்றவாறு புரிந்து கொள்கிறோம். இங்கே மிளகுராணி ஆண்ட கெஸுரப்பாவை பிடித்த நாயக்கர் அரசு அவர்களிடமிருந்து பிரித்த போச்சுகீசியர்கள் ஆங்கிலேயர்கள் என மாறி மாறி இன்று அடையாளம் இல்லாமல் கிடப்பதை நாவல் பதிவு செய்கிறது. இன்று அதை தொடுவதன் மூலம் மொத்த வரலாற்றையும் நாவல் விரித்து காட்டுகிறது.


மீண்டும் முதல் பத்திக்கு வருகிறேன். அதை ஒரு வரலாற்று ஆசிரியர் சொல்லிவிட முடியும்.  ஆனால் ஒரு புனைவெழுத்தாளன் அதில் பொற்காலத்தை கண்டு சொல்ல மாட்டான். அல்லது இருண்டகாலத்தையும் கண்டடைய மாட்டான். அங்கிருந்து அவர் காட்டவிரும்புவது இன்றுவரை அதில் தொடருவது என்ன என்பதும் விலகிவருவது என்ன என்பதும்தான். சமீபத்தில் புரவி இதழுக்காக இரா.முருகன் அவர்களைப் பேட்டி  எடுக்கு நானும் நண்பர் சுரேஷ்பாபுவும் சென்றிருந்தோம். அபபொழுது அவரிடம் தற்காலத்தில் உள்ள existential குழப்பங்களையும் திடீரென ஒருவர் IT யை விட்டுவிட்டு agriculture செய்ய புறப்படுவதையும் பற்றி கேட்டிருந்தேன். அதற்கு பதிலாக மிகவும் யதார்த்தமானதாகவும் நடைமுறைக்கு உரித்ததாகவும் பதில் கூறினார். அந்த பதிலில் இவ்வாறு வரும்.. இன்றைக்கு நல்லா சம்பாதிக்கிறாங்கதான்.. நல்லா இருக்காங்க..நல்லாவே இருக்கட்டும்.. ஆனால் சிலர் வேலையை விட்டு போறாங்க என்று பதிலை தொடர்ந்தார்..


இந்த பதிலில் நடுவில் வரும் நல்லாவே இருக்கட்டும்  என்ற வார்த்தை அந்த பதிலுக்கு தொடர்பில்லாத வார்த்தை.. அதை பதிவு செய்துகொண்டிருந்த எனக்கு ஒரு கணம் மன நெகழ்வு உண்டாக்கியது. அது அரசூர் வம்சத்தில் பகவதி கல்யாணமாகி புகுந்த வீடு போகும் போது ஒரு பாட்டி குரல்ல வந்து பேசும் முன்னோர்களின் சொல். அது அறிந்து யோசித்து சொல்லப்படுவதில்லை. உள்ளிருந்து எழுந்து வருகிறது. நண்பர்களே! அந்த ஒரு கணம்தான் வரலாற்று அறிஞருக்கும் இலக்கியவாதிக்குமான இடைவெளி. அந்த ஒரு கணம் என்பது காலத்திற்கும் தூரத்திற்கும் அப்பாற்பட்டு என்றும் நிலைத்திருக்கும் ஒரு அபூர்வ கணம். இந்த நாவலில் வரும்  பரமன்  அத்தகைய ஒரு கணம். மஞ்சுநாத்திற்கும்  திலீப்பிற்கும் பொதுவான ஒரு கணம். ஆனால் அதை வரையறுக்க 1200 பக்கங்கள் தேவை. ஆனால் மற்றொன்று நண்பர்களே.. அதை வாசிக்கத் தேவை ஒரு கணம் தான்!!!!


மிளகு நாவல் குறித்த முந்தைய கட்டுரை