Wednesday, June 30, 2021

ஆள்தலும் அளத்தலும் - புத்தக கண்காட்சி புகைப்படங்கள்

நண்பர், எழுத்தாளர் அகரமுதல்வன் அவர்கள் ஒருங்கிணைப்பில்  புத்தக கண்காட்சி யாவரும் அரங்கில் தொகுப்பினை வெளியிட்ட போது


நன்றி எழுத்தாளர்கள்  கே.வி.ஜெயஸ்ரீ, அ .வெண்ணிலா, கே.வி.ஷைலஜா, அகரமுதல்வன் மற்றும் நண்பர் யோகேஸ்வரன் 





நண்பர், எழுத்தாளர் செல்வேந்திரன் 


நண்பர் யோகேஸ்வரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் 






ஆள்தலும் அளத்தலும் - பத்மஜா நாராயணனின் பதிவு

புத்தக கண்காட்சியை ஒட்டி என்னுடைய சிறுகதை தொகுப்பு 'ஆள்தலும் அளத்தலும்' வெளியானது. முதல் சிறுகதை தொகுப்பு வெளியானதும் இருக்கும் ஒருவித பதட்டம் எனக்கு இருந்தது. என் இயல்பு தெரிந்த நண்பர்களுக்கு கதைகள் பிடித்திருந்தாலும் பொதுவாக எப்படி கவனிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பு வெளியான சிலநாட்களில் தொகுப்பை படித்து என்னை தொலைபேசியில் அழைத்து கதைகளைக் குறித்து பாராட்டி பேசினார். நான் பத்மஜா நாராயணனை அவர்களின் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வாயிலாக அறிந்திருந்தேன். ஆனால் நேரடி அறிமுகம் இல்லை. அவருடனான முதல் உரையாடலே உற்சாகமாக உணரச் செய்தது. அவருக்கு என் நன்றி.



facebbok-ல் பத்மஜா நாராயாணனின் பதிவு


புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் முதலில் படித்து முடித்த நூல். மனதிற்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. அழகான, எளிமையான நடை. காத்திரமான கருத்துகள். நேர்மையான எழுத்து. திரு காளி பிரசாத் மேலும் உயரங்கள் காண்பார் என்பதற்கு இது ஒரு சிறு சான்று. காளி பிரசாத் அவர்களுக்கும் வெளியிட்ட பதாகை பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்

.

ஆள்தலும் அளத்தலும் குறித்து எழுத்தாளர் வாசு முருகவேல் அவர்களின் பதிவு

 

எழுத்தாளர் வாசு முருகவேல்

 

ஆள்தலும் அளத்தலும் - ஆர்.காளிப்ரஸாத்

எழுத்தாளர் ஆர்.காளிப்ரஸாத்தின் ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பின் பெரும்பாலான கதைகள் கடைநிலை ஊழியர்களின் (தொழிலாளர்களின்) உலகங்களை நம் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அவர்கள் உலகத்தின் மேன்மையையும் - கீழ்மையையும் யதார்தத்தை மீறாமல் காட்சிபூர்வமாக காட்டுகிறது. ( லோயர் மிடில்கிளாஸ் லெவலில் இருந்து, கடைநிலை ஊழியர்களை நோக்கும் பார்வை..( தொழிலாளர்களுடன் கூடவும்/ ஒரு வகையில் சற்றுத் தள்ளியும் இருந்து நோக்கும் பார்வை.)
இதில் இடம்பெற்றுள்ள எந்தக் கதையிலும் அவர்கள் மீதான வலிந்து திணிக்கப்பட்ட ஒரு பரிதாபத்தை காண முடியவில்லை. அவர்களின் வாழ்வியல் அழகை எந்த இடத்திலும் கலைக்க முற்படவில்லை. இவ்வாறான தன்மைகள் இந்த கதைகளை சிறந்த இடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றன.
ஆர்வலர் மற்றும் கரி இரண்டு கதைகளும் மேலே குறிப்பிட்ட கதைகளில் இருந்து மாறுபட்ட கதைகளாக என்னை சற்றுத் தீவிரமாகவே பாதித்தன. அது போல திருவண்ணாமலை என்ற கதையின் அங்கதத்தன்மை நன்றாக இருந்தது. அது வெறுமனே ஒரு அங்கதக் கதை என்று கடந்து போகக்கூடிய கதை அல்ல. பராசக்தி என்ற கடைசி கதை தரக்கூட தரிசனம், பராசக்தியை புரிந்தவர்களுக்கானது!.
முதல் கதையான பழனி என்ற கதைக்கும் மதிப்பு என்ற கதைக்கும் இடையில் சுற்றுகின்ற உலகம், மனிதர்களை எடை போடுவது என்பதை பற்றிய ஒரு விவாதத்தை நம்முள் ஏற்படுத்தக்கூடியது. இதிலும் பழனி என்ற கதை, கதை சொல்லல் முறையால் ஒரு படி முன்னே நிற்கிறது.
காளிப்ரஸாத்தின் கதைகள் சிலவற்றை படித்து முடிக்கும் போது, மீளவும் அந்த கதைக்குள் இடம்பெற்ற சில உரையாடல்களை தேடிச்சென்று படிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உதாரணமாக மதிப்பு மற்றும் கரி என்ற கதைகள்.
எழுத்தாளர் ஹண்ஸ்டா சௌவேந்த்ர சேகர் அவர்களின் "ஆதிவாசிகள் இனிமேல் நடனமாட மாட்டார்கள்" என்ற மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பை வாசித்த பிறகு எனக்குள் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. அந்த வெற்றிடத்தை ஆர்.காளிப்ரஸாத்தின் ஆள்தலும் அளத்தலும் பூரணமாய் நிறைத்து விட்டது. இருவரின் நிலங்கள் வேறுபட்டவை என்ற போதிலும் இவர்களின் கதைகளின் ஆழத்தில் ஒற்றுமைகள் நிறைந்திருக்கின்றன. அவை எந்த மேல் பூச்சும் இல்லாத வாழ்க்கைகள். நாம் கண்டுணராத மனிதர்களின் (அக) உலகங்கள்.
புத்தகம் - ஆள்தலும் அளத்தலும்
எழுத்தாளர் - ஆர்.காளிப்ரஸாத்
பதிப்பகம் - யாவரும் - பதாகை
விலை - 140/=
https://www.be4books.com/product/%e0%ae%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

ஆள்தலும் அளத்தலும் - சரவணன் மாணிக்கவாசகம்

 நன்றி:-சரவணன் மாணிக்கவாசகம்

 facebook ல் சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் பதிவு 


சரவணன் மாணிக்கவாசகம்


ஆள்தலும் அளத்தலும் - ஆர்.காளிபிரசாத்:

ஆசிரியர் குறிப்பு:
சென்னையில் வசிக்கும் இவர் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். தம்மம் தந்தவன் எனும் நாவல் இவரது மொழிபெயர்ப்பு. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இது.
விடிவு கதைக்கருவில் பல கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் இவர் இதைச் சொல்லியவிதம் புதிது. நிஜவாழ்க்கையிலும் கூட கணவன் மனைவி அல்லாத இருவர் வெளியூர் செல்கிறார்கள். ஒன்றும் நடக்காதவரை ஒன்றுமில்லை. ஒருவர் இறந்தால் மற்றவர் என்ன செய்வது? இருவரின் வீட்டாரை எப்படி எதிர்கொள்வது! விளையாட்டுக்கள் வினையாவது இப்படித்தான். முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை பதற்றத்தை சிறிதும் குறைக்காமல் கொண்டு செல்லும் கதைசொல்லல்.
விடிவு மட்டுமல்ல பழனி, ஆர்வலர் கதைகளும் சொல்லிய விதத்தாலேயே நல்ல கதையாகி இருக்கிறது. சம்பவங்களையே பெரும்பாலும் இவர் கதைகளாக்கி இருக்கிறார். சம்பவங்களை கேட்பவர் இமைக்காமல் கேட்பது போல் சொல்லும் சரளமான மொழிநடை இவருக்கு.
திருவண்ணாமலையின் மறுபெயர் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். முழுக்கவே பகடியான கதை. வண்ணநிலவனின் மழைப்பயணமும் பூதம் கதையும் சொல்லும் விசயம் ஒன்றே ஆனால் சொல்லப்படும் விதத்தில் எவ்வளவு வித்தியாசங்கள்? கடைசிப்பத்தி புன்னகையை ஏற்படுத்துகிறது.
பழனி, ஸ்ரீஜி, பாபு எல்லோருமே முன்னேறினால் போதும், End justifies the means என்ற வகையில் இயங்குகிறார்கள். தார்மீக நெறிகளில் இவர்களுக்கு கவலையில்லை. இருதயம் அண்ணன் கூட வைத்துக்கொண்டே வஞ்சகம் பண்ணுகிறார். அப்பாவி என்றால் ஆள்தலும் அளத்தலும் கதையில் வரும் பெயரில்லாத கதைசொல்லி தான்.
பத்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. நான்கு வருடங்களுக்கு பத்து கதைகள் என்னும் போது குறைவாகவே எழுதியிருக்கிறார். கரி கதையின் முடிவில் நாடகத்தன்மை இருக்கிறது, மதிப்பு கதையில் ஐநூறு ஆயிரம் வெறும் காகிதம் என்று பொதுவாக எல்லோருக்கும் உள்ள பிரமை இவருக்கும் இருந்திருக்கிறது. இவை இரண்டையும் விட்டுப்பார்த்தால் கதைகள் எல்லாமே வித்தியாசமான கதைக்களங்களில் தனித்துவமான கதைசொல்லல். சற்றே அசோகமித்ரனின் சாயல் இருந்தபோதிலும் இவரிடம் ஒரு Unique writing style இருக்கிறது.
ஆள்தலும் அளத்தலும் போன்ற கதைகள் இவர் இரண்டு கைகளையும் தாராளமாக வீசி நடைபயிலும் களம். O .Henryயின் பாணியில் கதை இறுதியில் திருப்பம் என்பதில் இவருக்கு நம்பிக்கை இருக்கிறது. பத்து கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் வித்தியாசமாக எழுதப்பட்டவை. மிகுந்த மனநிறைவை அளிக்கும் தொகுப்பு. இவர் தொடர்ந்து எழுத வேண்டும். மிகவும் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்.
பிரதிக்கு:
பதாகை & யாவரும் வெளியீடு
90424 61472 & 98416 43380
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ.140.
https://www.be4books.com/product/%e0%ae%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

ஆள்தலும் அளத்தலும் - மதிப்புரை - மந்திரமூர்த்தி அழகு

facebook  ல் மந்திரமூர்த்தி அவர்களின் பதிவு. (மந்திரமூர்த்தி அவர்களின்  "வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்" facebbok  குழு வாயிலாக )


மந்திரமூர்த்தி




ஆள்தலும் அளத்தலும் & பிற கதைகள்- எழுத்தாளர் ஆர் காளிப்ரஸாத்

வெளியீடு: பதாகை & யாவரும் பப்ளிஷர்
முதல் பதிப்பு: பிப்ரவரி 2021
எழுத்தாளர் ஆர்.காளிப்ரஸாத் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார். ஜெயமோகன் விஷ்ணுபுரம் வட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர். தமிழில் சிறுகதைகளை எழுதி வருபவர்களில் முக்கியமான கவனத்துக்கு உரியவர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் புதிதாக இந்த ஆண்டு வெளியான ஆர்.காளிப்ரஸாத்தின் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கப் பரிந்துரை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
தொகுப்பில் 10 சிறுகதைகள் இருக்கின்றன.
1. பழனி
2. ஆர்வலர்
3. விடிவு
4. திருவண்ணாமல
5. பூதம்
6.ஆள்தலும் அளத்தலும்
7. ஸ்ரீஜி
8. கரி
9.மதிப்பு
10.பராசக்தி
நூலின் முன்னுரையில் ஆர்.காளிப்ரஸாத் , "எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு. 'எழுத்து என்பது எனக்குத் தவம் அல்ல; வேள்வியல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; பேரும், புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி!' என்று. இந்தத் தொகுப்பில் நானும் அதற்கான என் முதலடியை எடுத்து வைத்திருக்கிறேன்.
என்னுடைய கதைகளில் சிறுகதைக்கான தருணம் இருக்கிறதா என்று கவனிக்கிறேன். என் கதைகளின் வழியே நான் சொல்ல வருவது வெறும் அதிர்ச்சியோ அல்லது நகைச்சுவையோ மாத்திரம் அல்ல என்பதில் கவனமாக இருக்கிறேன். கதைகளை வாசிப்பவரை மகிழ்விக்கும் நோக்கமோ அல்லது அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் ஆவலோ இருந்ததில்லை. அனுபவங்கள், அறிதல்கள் என அனைத்தையும் கலைடாஸ்கோப்பில் போட்டுச் சுழற்றிச் சுழற்றிக் காட்டுவது போலத்தான் இவை வெளிப்பட்டிருகின்றன." என்று குறிப்பிடுகிறார். அவை உண்மை என்பதை இந்தக் கதைகள் அனைத்துமே நிரூபிக்கின்றன.
இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு
அருமையான
அறிமுக உரையைத் தந்திருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள். அவர் தொகுப்பில் உள்ள ஆள்தலும் அளத்தலும், விடிவு, மதிப்பு, கரி ஆகிய 4 சிறுகதைகளைக் குறித்தும் ஆழமாக அலசி அவற்றைப் பெருமைப்படுத்தி இருக்கிறார். அவர் தனது அறிமுக உரையில் 'பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு ஒரு தனியான வசீகரம் உண்டு.
மனத்தின் அவத்தைகள், தட்டழிவுகள், பிறழ்வுகள், கனவுநிலை உரைத்தல்கள், பிரமைகள் என்பன சிறுகதைக் கருப்பொருட்கள். சம்பவங்கள்,முரண்கள், குணச்சித்தரிப்புகள், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பிறிதொருவகை. என்ன வகையாயினும் மொழித்திறனிலும், செய்நேர்த்தியிலும், கூறு முறையிலும் இந்தச் சிறுகதைகள் எம்மை ஈர்க்கின்றன' என்று குறிப்பிடுகிறார்.
இன்றைய காலக்கட்ட நவீனச் சிறுகதைகளை அறிய விரும்புவோருக்கு இந்தத் தொகுப்பு சிறந்த அறிமுகமாக இருக்கும். ஒவ்வொரு கதையும் வாசகன் நுணுக்கமாக உணர்ந்து அறிய வேண்டிய நிலையில் எழுதப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கதையும் அதற்குத் தேவையான மொழி நடையுடன், சொல்லும் பாங்குடன் இணைந்து உச்சமான இடத்தைப் பெறுகிறது.
தொகுப்பில் உள்ள முதல் கதை பழனி.
லாட்ஜில் எலக்ட்ரிகல் வேலை செய்யும் பழனி பல பித்தலாட்டங்களைச் செய்பவன். அதனை உடன் இருந்து பார்க்கும் அவனது நண்பன் பார்வையில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. பழனி விரும்பும் பெண்ணை மணம் செய்ய பழனியே அறியாமல் உதவி செய்கிறான் அவனது நண்பன். 15 ஆண்டுகள் சௌதி வெளி நாட்டில் வேலை செய்து திரும்பி வரும் நண்பன், உடன் வேலை செய்த நண்பர்களைக் குறிப்பாகப் பழனியைத் தேடுகிறான். பழனி தற்போது காண்டிராக்டராக தரமணியில் நல்ல நிலையில் இருப்பதை அறிகிறான். அப்போது சற்றுத் தொலைவில் ஒரு கன்றுக்குட்டி பசுவைத் தேடித் துள்ளித் துள்ளிச் சென்றது என்றளவில் இந்தக் கதையை நிறைவு செய்கிறார் காளிப்ரஸாத். அவர் இந்தக் கதையைச் சொல்லியிருக்கும் நடையும், மொழியும், இடையிடையே வரும் கேலி, கிண்டல்கள், நகைச்சுவையும், கதையின் எதிர்பாராத திருப்பங்களும், எதார்த்தமான கதையைச் சொல்லும் பாங்கும், வாசகன் இடையிடையே யூகித்து உணர்ந்து ரசிக்க வேண்டிய செய்திகளும் இந்தக் கதையை மேலான இடத்தில் நிறுத்துகின்றன.
இன்றைய எழுத்தாளர்களின் நவீனச் சிறுகதைகளை அறிய விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு ஆர்.காளிப்ரஸாத்தின் ஆள்தலும் அளத்தலும் சிறுகதைத் தொகுப்பு.
May be an image of text that says 'ஆள்தலும் அளத்தலும் பிற கதைகள் ஆர் காளிப்ரஸாத்'