Monday, April 19, 2021

ஷோஷா - ஐசக் பாஷவிஸ் சிங்கர் - (தமிழில்) கோ.கமலக்கண்ணன்

 

போலந்தில் வாழும் யூத சமூகத்தின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். ஹிட்லர் ஒருபுறம் ஸ்டாலின் ஒருபுறம் என இரண்டுக்கும் நடுவில் வாழும் மக்கள். தான் வசிக்கும் தேசத்து மக்கள் ஒருநாளும் தன்னை துன்புறுத்தவோ   அடிக்கவோ கொள்ளவோ மாட்டார்கள் ஆனால்  ஹிட்லர் படையெடுத்து வந்து வென்று தன்னை சித்ரவதை கூடத்திற்கு அனுப்பினால் அதற்காக பொங்கியெழவும் மாட்டார்கள் என்கிற புரிதலும் கொண்ட யூதர்கள்.  சமூக, அரசியல், வாழ்க்கை, வலைப்பின்னல்களுடன் செல்லும் சுவாரசியமான நாவலான ஷோஷா  தமிழில் வெளியாகியுள்ளது.

 

முதற்வாசிப்பில் எளிமையான நேர்கோட்டுக் கதையாகத் தோன்றும் நாவலுக்குள் எத்தனை தளங்கள் இயங்குகின்றன என்று ஆச்சரியமும் உண்டாகிறது. எழுத்தாளனாக விளங்கும்  யூத இளைஞனின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு பன்முக  சமூகத்தின்   வரலாறும் மனித மனங்களின் மாறுதல்களையும் மேன்மைகளையும் சொல்லிச் செல்கிறார்  ஐசக் பாஷவிஸ் சிங்கர்

 


(இங்கு ஒரு டிஸ்கி: - ஆயுர்வேத மருந்துகளின் பெயர்களுக்கே உள்நாக்கு சுருட்டிக் கொள்ளும் அபாயம் கொண்ட நான்.  ரஷ்ய பெயர்களையும் யூத  பெயர்களையும் முழுமையாக குறிப்பிட விரும்பவில்லை. அ.முத்துலிங்கம் தன் 'புளிக்கவைத்த அப்பம்' சிறுகதையில் சாரா என்கிற  ஒரு யூதரை சந்திக்கிறார். அவர் பெயரை இப்படியாக சொல்கிறார். " வாய்க்குள் கூழாங்கல்லை அடக்கிக் கொண்டு குலேபகாவலி என்று சொன்னால் ஒரு சப்தம் வருமே அதுதான் அவருடைய முழுப்பெயர். நான் ஒரு வசதிக்காக சாரா என்று வைத்துக் கொள்கிறேன்" என்று. வேறு வழியின்றி அவ்வாறே  நானும் அதை வழிமொழிகிறேன்.)

 

நெருங்கிய நண்பர்களால்  சுட்சிக் என்று செல்லமாகவும் பொதுவாக அரோலி என்றும் அழைக்கப்படும் நாயகன். எழுத்தாளனாக வாழ்பவன். அரொலி காதல் கொள்ளும்  வெவ்வேறு பெண்களில் ஒருவர் மக்களைப் புரட்சிகரமாக  சீர்திருத்த எண்ணும்  ரஷியாவை நேசிப்பவர். ஒருவர் வளமும் கவர்ச்சியும்  அமெரிக்க நடிகை. மற்றவர் அன்பான உள்ளூர் செல்வந்தர். உள்ளூர் பணிப்பெண் ஒருவர். இவர்களை விட,  தன் ஆழ்மனத்திற்கு அணுக்கமாக இருக்கும் இளம் பருவத்தோழி ஷோஷாவையே அரோலி மணம் புரிகிறான். நாவலுக்கு ஷோஷா என்று பெயர் வைத்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே தோன்றுகிறது.   நாவலை வாசித்ததும் அந்த தேசத்தில் இத்தியம் பேசி வாழ்ந்து வந்த யூத  மரபுக்கான  ஒரு  குறியீடாகவே ஷோஷாவை சிங்கர் சித்தரிக்கிறார் என்பது புரிகிறது. மென்மையான மனம் கொண்ட, எப்பொழுதும் அச்சத்தில் இருக்கிற வளர்ச்சி அடையாமல் குழந்தைத் தன்மையுடன்தான் இருக்கிறாள் ஷோஷா. அவள் தோற்றம் இருப்பு இரண்டுமே மற்றவர்களை இம்சிக்கிறது. வெகுஜனங்களுக்கு அவள் மீது பரிதாபமும் இருக்கிறது. அது அன்றைக்கிருந்த யூத இனத்தின் நிலைமைக்கே பொருத்தி வருகிறது. அவளுடைய தூய மனத்தைத்தான்  அராலி விரும்புகிறான். இதில் அவளை மணப்பதற்கு முன் அவனுடைய தந்தையின் சொற்களை அவன் மானசீகமாக கேட்பது முக்கியமான ஒன்று. அவனுடைய ஆழ்மனம் இத்தனை கால மரபு  கொண்ட தன்  இனத்தையே நேசிக்கிறது. தன் தந்தையின் குரலாக அதைக் கொள்கிறது.   இந்த நாவலுக்கு ஷோஷா என்கிற பெயர் தவிர வேறு எதை வைக்க முடியும்.




 

நம்பிக்கையுடன் கம்யூனிச தேசம் செல்லும் அவன் காதலி டோராவின் நண்பர் ஒருவர்,  உளவாளி என முத்திரை குத்தப்பட்டு சித்ரவதை அனுபவிப்பதன் சாரம் நாவல் இடையில் வருகிறது. அத்தனை சித்ரவதைகளைக் கண்ட பின்பும் அவள் அதன் மீது நம்பிக்கையுடன் இருக்கிறாள். மாறாக நல்ல வளத்துடன்  நடிகையாகும் எண்ணத்தில்  அமெரிக்காவிலிருந்து வரும் பெட்டி  மிகவும் அவநம்பிக்கை கொண்டவளாகவே இருக்கிறாள். வெறும் நம்பிக்கை மட்டுமே இருந்த ரஷ்யா,  செல்வம் இருந்தாலும் அவநம்பிக்கை கொண்ட அமெரிக்க தேசம் இவற்றுக்கிடையே ஷோஷாவை சுமந்துகொண்டு   ஊசலாடும் அரோலி. இந்த நுட்பமான சித்தரிப்பு நாவல் முழுவதும் உண்டு. இறுதியாக நாட்டை விட்டு வெளியேறும்போது அவனுக்கு பெட்டிதான் உதவுகிறாள்.

அவர்கள் அகதியாக கிளம்பி அந்த நகரை நீங்கும் போதே ஷோஷா இறந்து விட்டாள்  என்பதை பிற்காலத்தில் ஒரு உரையாடலில் அராலி உரைக்கிறான். பெரும் வர்ணனை இல்லாமல் அவள் முடிவு சொல்லப் படுகிறது. போர்க்கால நாவல்கள் நேரடியாக அதன் பாதிப்பை, போரின் வர்ணனையை சொல்வதை விடவும் அதற்கிடையே ஊடுருவி செல்லும் மக்களின் வாழ்க்கையையயும் துயரத்தையும் மீட்சியையும் சொல்வதுதான்  மனதை இன்னும் கனக்க  வைக்கிறது.  இறுதியில், யூதர்களை துரத்தியடித்து விட்டு யூதர்களுக்கான தனி நாடு உருவாக்க அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக வாக்களித்த அபத்தத்தின் மீது நகைப்பு செய்து நாவல் முடிகிறது.

 




இந்த நாவலை மிகவும் எளிய வகையிலும் செறிவாகவும் நம் நணபர் கோ.கமலக்கண்ணன் மொழி பெயர்த்துள்ளார். அவர் கடந்த  ஊட்டி காவிய முகாமில் அறிவியல் புனைவு குறித்து உரையாடியிருந்தார். உலக இலக்கியங்கள் மீது நல்ல வாசிப்பு கொண்டவர் என்பது புரிந்தது. ஷோஷா நாவல் மீதான அவரது புரிதலும்  மொழிபெயர்ப்பின் லாவகமும்  நாவலை இயல்பாக  வாசிக்க   வைக்கின்றன. எங்கு அந்த தேசத்து  வார்த்தைகளை அப்படியே உபயோகிக்கலாம், எங்கு தமிழ் மண்ணில் புழங்கும்  வார்த்தைகளை இடலாம் என்கிற  கவனம் இருப்பதால் எங்கும் நாவலின் இயல்புத்தன்மை கெடவில்லை. நெடுங்காலமாக டால்ஸ்தோய், தாஸ்தாவ்யேஸ்கி ஆகியோர் மொழிபெயர்ப்புகள் வாயிலாக தமிழக மக்களுக்கு அறிமுகமாகி மனதிற்கு அண்மையானவராகவும் விளங்குகிறார்கள். இவ்வருடம்   தமிழில் அறிமுகமாகியுள்ள சிங்கரும் இங்கு நீண்டகாலம் மனித இனத்தின் அன்பையும் உன்னதங்களை பேசியவராக ஷோஷா மூலம் நிலைத்து  நிற்பார் என்றே நாவலைப் படித்ததும் தோன்றியது. அதற்கு முதற்படி அமைத்திருக்கும் நண்பர் கமலக்கண்ணனுக்கு வாழ்த்துகள்

Saturday, April 3, 2021

பசித்த மானிடம் - எல்லையைக் கடந்த முன்னோடி

பசி வழி ஞானம்

நாவலில் ஒரு இடத்தில் 'காமோகாரிஷீத்: மன்யுரகாரீஷீத்:' என்று சொல்வதில் குறிப்பிடப்படும் ரிஷிகள் யாரு என்று ஐயம்  கேட்கிறார்கள் ஊரில் உள்ளவர்கள். வாத்தியார் அதற்கு பதில் சொல்கிறார். அது நான் செய்த அத்தனை தவறுகளும் தன் காமத்தால் செய்தேன் . கோபத்தால் செய்தேன் என்று உணர்ந்து சொல்வது என்று. 




எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு என்று அறியப்படும்   ஆர்.நாராயணசாமி அவர்கள் எழுதி, தமிழ் இலக்கிய உலகில் மிகவும்  புகழ்பெற்ற நாவல் பசித்த மானிடம். கணேசனும் கிட்டாவும் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட இடர்களும் பெற்ற புரிதல்களும் நாவலின் கதை. கும்பகோணம் மன்னார்குடி நகரங்களும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களும் கதைக்களம். 

ஒருபுறம் காமத்தால் அல்லாடும் கணேசன் மற்றொரு புறம் கோபமும் சந்தேகமும் கொண்டவனாய் மாறியிருக்கும் கிட்டா. பணம் இல்லாததால் இளம் வயதில் டிரைவர் / மெக்கானிக் வேலைக்கு  போகும் கிட்டா சிறு வயதுமுதல் எதிர்பார்ப்பது தான் ஒரு முக்கியஸ்தன் என்று மற்றவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுதான். சிறுவயதில் அவமானப்பட்டு ஊரை விட்டு கிளம்புவதிலிருந்து தொடர்ந்து வருவது அவனுடைய அணுக்கமான மக்கள் அவன் மீது  காட்டும் மரியாதையின்மை. பின் வேலைதேடி அலைவது, பின் மணம் கொள்ளப்போகும் காலங்களிலும்   செட்டியார் மகள் உதாசீனப்படுத்துவது தன் அக்காள் மகள் ஏற்க மறுப்பது இறுதியில்  தன் மகன் கூட தன்னை எதிர்ப்பது என இந்த உளைச்சலில் இருந்து   அவன் மனம் விடுபடவில்லை..

காமம் வேட்கை ஆகிய பசியின் வழி எழுந்து வந்து  அதற்கான உணவு உண்ட பின்னும் அடங்காத இருவரின் வாழ்க்கையையும் ஞானியாக மாறிய கணேசன் உணர்ந்து உரைக்கிறான், உடலின் பசி உள்ளதின் பசி இரண்டும் கடந்தபின்னும் அந்தப் பசித்த மானிடங்களை  நிறைவடையாமல் வைத்திருப்பது என்ன என்று ஆராய்கிறது நாவல். கணேசனை குருவாக உணரும் பசுபதியின் சொற்களை இறுதியில் நினைத்துப் பார்க்கிறான்.  ஒருவகையில் அவனுக்கு சீடனாக வந்த குருவாக பசுபதியே இருக்கிறான்.




நாவலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அந்த முன்னோடி  எழுத்தாளரான கரிச்சான்குஞ்சுவின் தெள்ளிய மொழிவளம்.  ஒரு  சிறிய நகரத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் எந்தளவு ஒரு குழுவாக இருக்கிறார்கள் என்பதை சொல்வது நாவலின்  குறிப்பிடத்தக்க ஒரு இடம். சிங்கத்தின் ஆள் மீது ஜவுளிக்கடைக்காரருக்கு ஈர்ப்பு. அவர் அவனை தன்னிடம் அனுப்ப கேட்கிறார். அப்போது சிங்கம் ஜவுளி கடைக்காரரிடம் சொல்கிறார்.." யோவ்.. இது அயர்ன் ராஜாபார்ட் சரக்கு.. இவ்ளோ செலவு பண்ணி இவனை தயார் பண்ணிருக்கேன்.. உனக்கு பைசா இருந்தா சொல்லு.. இதே போல இன்னொண்ணு தயார் பண்ணி தறேன்.. இவனை தர முடியது.. " 


குறிப்பிடத்தக்க மற்றொன்று. மனிதர்கள் மீதான நுட்பமான வர்ணனை.  தோப்பூர் எனும் கிராமத்தில் ஒரு கணக்கப்பிள்ளை இருக்கிறார். தோப்பூரின் அத்தனை  நில பத்திரபதிவுகளும்  கொடுக்கல் வாங்கலிலும் பஞ்சாயத்துகளிலும் அவர்தான் முக்கிய புள்ளி. தீர்ப்பு அல்லது முடிவு எட்டப்படும் முன் அவர் வார்த்தைக்கும் பெரிய மதிப்பு உண்டு. அவர் வைத்ததுதான் சட்டம். பட்டாமணியார் வாரிசு இல்லாதவர் என்பதால் ஊரில் உள்ள பாட்டிகள் விதவைகள் எல்லாருக்கும் இவர்தான் ராஜா மந்திரி எல்லாமே என்கிறார் கரிச்சான் குஞ்சு. விவசாயம்  சார்ந்த குத்தகை உழவுப்பணம் ஆகிய அனைத்திற்கும் இவரை நம்பித்தான் இருக்கிறார்கள். கிட்டா வேலைதேடி வெளியூர் போகும்போது கிட்டாவின் அம்மா  அவனிடம் சொல்வதே, எதானாலும் நேரில் வந்து சொல். கடிதம் எழுதினால் அவர் வழியாகத்தான் நமக்கு வந்து சேரும் என்று. 

கணேசனுக்கு பூணூல் போட்ட கல்யாணத்தில் கிடைத்த மொய்பணத்தை எண்ணி வாத்தியாரிடம் கொடுக்கையில், இதை வைத்து இன்னும் பலருக்கு சிறப்பாக நல்லது செய்யவேண்டும் என ஆசீர்வதிக கிறார் கணக்கப்பிள்ளை சீனி ஐயங்கார்.  அவருடைய மேன்மையான மனம் அப்போது எழுந்து வருகிறது. ஆனாலும் அவர் இதை எப்பொழுது  வேண்டுமானாலும்  இதை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வார்; அப்போது அவரிடம் சொல்ல தனக்கு சரியான பதில் உள்ளதா என யோசித்து வாங்கிக் கொள்கிறார் வாத்தியார்.  அனாதையான கணேசனுக்கு ஒரு சுப காரியம் செய்த திருப்தியில் ஊரே இருக்கும் போது,  அந்த நேரத்தில் சீனியின் மேன்மை யதார்த்தமாக  வெளிப்படுகிறது என்பதும் அதை  அந்த ஊர் எவ்வளவு கவனமாக கையாள்கிறது  என்பதும் எளிமையாகவும் நேரடியாகவும் சொல்லிவிடுகிறார்.  




மன்னார்குடியை சேர்ந்தவனாக இருந்தாலும் மன்னார்குடியிலேயே நிகழும் இந்த  நாவலை இந்த வாரம்தான்  வாசித்தேன்.  கரிச்சான் குஞ்சு ஒரு தமிழாசிரியர்.  மன்னார்குடியில் நான் பயின்ற பள்ளியில்  தமிழாசிரியராக பணியாற்றியுள்ளார். ஊரின் இடங்களை குறிப்பிடுகிறார் ஆனால் நிலம் பற்றிய பெரிய வர்ணனைகள் இல்லை.  அதேநேரம் மனிதர்கள் மீதான அவதானிப்பும் வர்ணனையும் திகைக்கவே வைக்கின்றன. இது எழுதப்ப ட்ட காலத்துக்கும் முன்னால் நிகழும் கதை. காமம்  ஆசை எல்லாம் அப்பட்டமாக எழுதுகிறார். சில நேரங்களில் பக்கங்களைப் புரட்டவே தயக்கமாக இருக்கும் அளவு கதாபாத்திரம் மீது கருணை உண்டாகிறது.  அந்த 'அப்பட்டமான' என்பது காமத்தை வர்ணிப்பதில் இல்லை. கதையோட்டத்தில்தான் இருக்கிறது.  தொழுநோயாளிகளின்  பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை தகாஉறவுகளின்  போது எழும் மனவோட்டத்தை  வர்ணிக்கையில் அவர் கையாலும் இயல்புத்தன்மை குறிப்பிடத்தக்கது.  இலக்கியத்தின்  எல்லைகளை மீறும் எழுத்திற்கு பசித்த மானிடம் ஒரு முன்னோடி படைப்பாக என்றுமே இருக்கும்