நற்றுணை கலந்துரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் குணா கந்தசாமியின் டாங்கோ நாவல் குறித்துப் பேசிய உரையின் எழுத்து வடிவம்
டாங்கோ
நாம் தொடர்ச்சியாக
பொது ஊடகங்களின் வாயிலாகவும் ஜனரஞ்சக திரைப்படங்களின் வாயிலாகவும் பயின்று வந்த ஒன்று
இருக்கிறது. தனித்து இருப்பவன்/ள் மீது சமூகம் கொள்ளும் பரிதாபம். நான் வளர்ந்த காலத்தில் பார்த்த திரைப்படங்களில்
மூன்றுக்கு ஒன்று இப்படி ஒரு கதையைக் கொண்டிருக்கும்.
நாயகன் யாருமற்றவனாக இருப்பான். அனாதையான ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் மீது கருணையை
குடம் குடமாக ஊற்றுவது என்பது அன்றைய கதைகளின் மரபு. அதற்கு எதிர் தரப்பாக அவனைத் திட்டுபவர்கள்
‘அடிச்சா ஏன்னு கேட்க ஆளில்லாத அனாதை என்றும்.. செத்தா தூக்கிப்போட ஆளில்லாத அனாதை”
என்றும் வசைச் சொல்லை உதிர்க்கிறார்கள். அவனுக்கு ஆதூரமாக இருக்கும் கதாபாத்திரங்கள்
‘’உனக்கு யாரும் இல்லைனு நினச்சுக்காத.. என்னை அம்மாவா நினைச்சுக்கோ” என்று சொல்கிறார்கள்.
அந்தப் பதின் பருவத்தைக் கடந்த பின் நேரில் காண்பது என்பது வேறொன்றாக உள்ளது, அந்த காலகட்டத்தில்தான் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ந்து தனிநபரின் வருமானம உயர்ந்து போகும் ஒன்றையும் கண்முன்னால் காண்கிறோம். அப்போது இத்தகைய ”உடனிருப்புகளை” விடவும் விலகியிருத்தலில் ஆர்வம் கொண்ட தலைமுறை உருவாவதையும் காண்கிறோம். தனக்கு யாரும் இல்லை என்பது கழிவிரக்கம் என்கிற நிலை போய்.. அது ஒரு சுதந்திரம் என்கிற நிலைபாடு வருகிறது. இதற்கு இடையில் என்ன நிகழந்து விட்டது என்றால் வாழ்வாதாரத்திற்கான பொருள் சேர்ந்திருக்கிறது என்கிற ஒன்றைத்தவிர வேறு பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. பொருளியல் சுதந்திரம் என்பது அதுவரை கட்டிவைத்திருந்தவற்றைக் கலைத்துவிடுகிறதா? அதுநாள் வரையிலான ஒரு ‘கட்டு” என்பது தனிநபராக பார்க்கையில் ஒருவித பொருளியல் பாதுகாப்புதானா என்கிற கேள்வி எழுகிறது.
மானுடவியலாளர்கள்
ஒன்று சொல்கிறார்கள். மனிதன் எப்பொழுதும் தனிமையானவனே.. lonely tiger என்பது போல. ஆனால்
அவன் ஒரு குழுவாக மாற அவனுக்கு ஒரு “பிழைத்திருத்தல் தேவை இருக்கிறது. அன்றைய கால பெரு
விலங்குகளுக்கு மத்தியில் வாழ்ந்து அவற்றை வென்று இன்றைய உயிரினங்களின் உச்சத்தில்
மனிதன் அமர்வதற்கு அவனுக்கு ஒரு குழுவாக இயங்குவது தேவையானது. அவன் இயல்பாக குழுவுடன்
இருப்பவன் அல்ல. ஒரு பிழைப்பிற்காக சேர்ந்து இருக்கிறான். அவ்வாறு தொடர்ந்து பல்லாயிரம்
ஆண்டுகள் கடந்து உயிர்ச் சங்கிலியின் உச்சத்தை அடைந்த பின்னர் நாகரீக மனித உயிரிக்கு
குழுவாக இருத்தல் என்பது ஒருசில விதங்களில் மட்டுமே பொருளாகிறது. சக மனிதர்களுடன் கூடிக் களித்திருத்தல், சக மனிதர்களுடன் விலகியிருத்தல்.
தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் இருந்து கொண்டும்.. அதே நேரத்தில் இல்லாமலும் உருண்டு
போவது.
இலக்கியத்தில் யாரும் லட்சிய வேட்கை, தியாகம் ஆகியவற்றை உன்னதப் படுத்துவதில்லை. பெரும்பாலானவை அவற்றில் உள்ள அபத்தத்தை சுட்டிக் காட்டியபடி இருக்கின்றன. இன்னும் விளக்கமாக சொன்னால், எழுத வரும் அனைவரும் ஒருவகையில் இருத்தலியல் சிக்கல் கொண்டுதான் வருகின்றனர். சமூகம் ஒரு குழுவாக அடுத்தக் கட்டத்திற்கு பலவகைகளில் முன்னேறிச் செல்கிறது. அப்போது இலக்கியம் அதில் உள்ள அபத்தத்தை சுட்டிக் காட்டுகிறது. ஒவ்வொரு காலத்திலும் இங்கே இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிற படைப்புகள் உண்டு. இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஏசுவின் தோழர்கள் நாவல் ஒரு உதாரணம். தோழர் என்றால் நாம் இங்கு குறிப்பிடும் இடதுசாரி தோழர்கள். Friends of Jesus அல்ல comreds of Jesus. பணி நிமித்தமாக போலந்து செல்லும் ஒருவன் தனது கலாசாரம் மற்றும் போலந்தின் கலாசாரம் மற்றூம் அன்றைய அரசியல் சூழல் ஆகியவற்றைக் கொண்டு அடையும் ஒரு புரிதல். அதை அரசியல் நாவல் எனலாம். பசித்த மானுடம் நாவலில் வரும் கணேசன் கொள்கிற அலைபாய்தல்கள் மற்றொரு உதாரணமாக வருகிறது. இறுதியில் அவன் அடைகிற தரிசனம் அந்நாவலில் உண்டு. அவன் அதற்கான செயலில் இருப்பான்.
டாங்கோ நாவலை இவ்விரு விதங்களிலும் மேற்சொன்ன நாவல்களைத் தொட்டுப் பார்த்து அறியலாம். இன்றைக்கு சென்ற தலைமுறையை விடவும் பொருளிலும் ஆரோக்யத்திலும் பயணங்களிலும் பலதரப்பட்ட அனுபவங்களிலும் உயர்ந்து நிற்கிற நமது தலைமுறை எதையும் வெறும் நுகர்வோடு தொட்டு நகர்கிறதா? அல்லது சென்ற தலைமுறை போல காலுன்றி ஒன்றைப் பற்றிக்கொண்டு நிற்க விரும்பிகிறதா என்கிற கேள்வி கேள்வியை டாங்கோ நாவல் ஆனந்த் என்கிற ஒருவனின் பார்வையில் கேட்டுப் பார்க்கிறது.
திணை என்பது
ஒரு நாலலுக்கு முக்கியமானது. காடு, ஆழிசூழ்உலகு, அவன் காட்டை வென்றான் ஆகியவற்றில்
திணை ஒரு பாத்திரமாக ஆவைதைப் பார்க்கிறோம். அவ்வகையில் நிலப்பகுதி என்று எடுத்துக்
கொண்டால், டாங்கோ மேலோட்டமாக உருகுவேவை சுட்டிச் செல்கிறது. அந்த நாடு தனிப்பட்ட விதத்தில்
ஆனந்திற்கு என்ன செய்கிறது? முழுக்க முழுக்க நுகர்வு கலாசாரம் ஊறியிருக்கும் ஒரு அமெரிக்க
நகரத்திற்கு சென்று அங்கிருக்கும் ஒரு மலைப்பகுதியில் ஆனந்திற்கு இதே புரிதல்தான் ஏற்பட்டிருக்குமா..
அல்லது முழுக்க கட்டுப்பாடுகள் நிறைந்திருக்கும் அரபு தேசத்திற்கு சென்று அங்கு பாலைவன
மணலில் அவனுக்கு இதே புரிதல் ஏற்பட்டிருக்குமா என்றால் ஆம் என்று சொல்லிவிடக்கூடிய
சாத்தியம்தான் இருக்கிறது. ஏனெனில் அவனது குழப்பங்கள் அவனது அகக்குழப்பங்கள். மிகவும்
கவனமும் எச்சரிக்கையும் கொண்டவன். ஆனந்த் தனக்குள் இட்டுக்கொண்டிருக்கும் கூண்டு அல்லது
தான் அடைப்பட்டிருக்கும் தீவிலிருந்துதான் முதலில் வெளிவர வேண்டும். அவன் தனது ஊரிலேயே இருந்திருந்தாலும் இப்படித்தான்
ஆகியிருக்கும் என்று கருத முடிகிறது. ஆகவே அந்நிய தேசத்தின் அரசியலோ சமூகமோ அவனுக்கு
ஒரு பாதிப்பை உருவாக்கவில்லை. அவனது ஈர்ப்புமே ஒரு தமிழ்ப் பெண்ணிடம்தான் உருவாகிறது.
ஆகவே நாம் இதை ஏசுவின் தோழர்கள் போல ஒரு கலாசார மோதல் என்று சொல்ல முடியாது. அல்லது
அந்த தேசத்தைப் பற்றிய அறிதல் என்றும் சொல்லவியலாது. இளம்வயதில் கைவிடப்பட்டவன் என்று
கருதி அலைபாய்தல் கொண்ட மற்றொரு நாவலான பசித்த மானிட்டத்தை எடுத்துக் கொண்டால், டாங்கோவில்
ஆனந்த் அந்த அளவு வயதாலும் அனுபவத்தாலும் முதிர்ந்து விடவில்லை. அவன் அந்த திசை நோக்கி
ஒரு அடி எடுத்து வைப்பதுதான் நாவலின் இறுதிப் பகுதியாக இருக்கிறது
அப்படியென்றால்
இந்நாவலை என்னவென்று சொல்லலாம்
”நுண்ணுணர்வு
கொண்டவர்களின் தனிமை” என்று வகைப்படுத்தலாம்.
ஆனந்த், சந்தியா,
மத்தியாஸ், ’அமேந்தே என்கிற மார்செலா’’ என இந்நாவலின் கதா பாத்திரங்கள் அனைவருமே தனித்து
அலைபவர்கள். தனக்கான சுயம் கொண்டவர்கள். இதில் ஆனந்த் மட்டுமே தனக்கான தேவை என்ன என்பதை
அறிய முடியாத ஒரு தத்தளிப்பு கொண்டவனாக இருக்கிறான். பிற அனைவருக்கும் ஒரு உணர்ச்சிப்
பிணைப்பும் அதன் வழி பெற்ற அனுபவமும் இருக்கின்றன. சந்தியா ஒரு கொடூரமான திருமண வாழ்க்கையில்
இருந்து விலகி ஒரு புரிதலை அடைகிறாள். அவளுக்கு தான் போஷிக்கும் உயிர் போதுமானது. தன்னைப்
பார்த்துக்கொள்ளும் உயிர் தேவையில்லை. இந்தியாவில் பெற்றோர்கள், உருகுவேயில் கிளிகள்.
அவளுக்கு அவற்றுடன் நிலைகொள்ளும் தெளிவு இருக்கிறது. அமந்தே என்னும் மார்செலாவுக்கும்
தனது குழந்தைகள் உள்ளன. இத்தகைய உணர்ச்சிப் பிணைப்பு என்பது ஆனந்த் க்கு வாய்க்கவில்லை.
பெற்றோர் இல்லை என்றான பின்னர் பெயருக்கு இருக்கும் மாமா. விடுதியிலும் கல்லூரியிலும்
அவன் பெறும் ஆசிரியர்களையும் வழிகாட்டி என்று சொல்லமுடிகிறதே யன்றி அவர்களுடன் ஒரு
இடைவெளி உள்ளது. அவனுக்கு ஏற்படும் பிணைப்பும் சந்தியாவுடந்தான் என்றாலும் அவன் அதில்
ஏமாற்றம் அடைகிறான்.
ஒவ்வொருமுறை
அவன் விரும்பி விழுகின்ற நினைவின் பள்ளத்தாக்கு என்றால் அது பெற்றோர்களால் வளர்க்கப்
படாமல் அவன் இழந்த அரவணைப்பும் பாதுகாப்பு உணர்வும்தான். அவன் அதையே தனது வாழ்நாளில்
தேடிக்கொண்டு இருக்கிறான். சொந்தம் என்று யாரும்
இல்லாத ஒருவனுக்கு சொந்த ஊர் சொந்த நாடு என்று ஏதும் இல்லை. ஆகவே அவன் தனது அறிவுத்தளத்தில்
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிற எண்ணமும் உணர்வுத்தளத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும்
என்கிற ஏக்கமும் கொண்டவனாக இருக்கிறான்.
மனிதர்கள்
மீது ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். கடற்கரையில் சுற்றித் திரியும் கார்லோஸ் முதல்
வீட்டு உரிமையாளர் டாக்டர் கிற்ஸ்டாஃப் வரை அனைவரிடமும் உரையாடுகிறான்.
அதுநாள் வரை
தான் சந்தித்த சுற்றுவட்ட நண்பர்களை வைத்து, தன்னுடைய துயரம் தனித்துவமானது என்று எண்ணி
இருந்தவனுடன் அவன் வீட்டு உரிமையாளர் டாக்டர் கிற்ஸ்டாஃப் உரையாடுவது நாவலின் ஒரு மைய
அத்தியாயம். ஒருவகையில் அவனை உடைத்து விடுகிறார். அவருக்கு மறதி நோய் உள்ளாது. அவர்
அந்தக் கணத்தில் வாழ்பவர். அந்த இடம் கவித்துவமானது. தன் கடந்த கால ஏக்கத்தை சுமந்து
நிற்கும் ஒரு இளைஞன் அவன் முன்னால் தொன்னூறு வயதை அடைந்த ஒரு முதியவர், மறதி நோய்க்கு
ஆட்பட்டு அந்தக் கணத்தில் வாழ்பவர், முதல் உலகப்போர் முதல் கண்டவர், அவர் சொல்கிறார்,
”உன்னுடைய சிக்கல் என்னவோ ஸ்பெஷல்னு நினைச்சுக்காத, இது மாதிரி லட்சம் பேர் உண்டு.
இதைவிட கொடுமையை அனுபவிப்பரும் பலர் உண்டு” என்று. தான் கூட்டத்தில் ஒருவன் இல்லை நான்
தனித்துவமானவன் என்பதே ஒரு இறுமாப்புதான். அவர் அதை உடைத்து விடுகிறார். மேலும் குடும்பம்
பற்றிய அவனுடைய அத்தனை முன் முடிவுகளையும் சிதறடிக்கிறார். அவனறியாமல் அவனுக்கு கிட்டிய
ஒரு கீதோபதேசம் அதுதான் என்று வாசகர்கள் கருதும் வண்ணம் அந்த இடம் உணர்த்தப் படுகிறது.
இப்பொழுது பார்த்த்தால் அவன் தன் தனிமை நுகர்வை
விட்டுவிட்டு வெளியேறுவது அங்கிருந்து துவங்குகிறது என்று கூறலாம். அதை ஒரு காட்சியாக
உணரமுடிகிறது,
உள்ளடக்கத்தைத்
தாண்டி நாவலில் குறிப்பிட வேண்டிய விஷயங்கள் என்று இம்மூன்றைக் கூறலாம்
1. அதன்
காட்சித் தன்மை. நாவலில் கடற்கரை வர்ணிக்கப் படுகிறது. ஒரு அருமையான விண்மீன்கள் காட்சிவருகிறது.
அவற்றொடு நான் குறிப்பிட விரும்புவது மேற்சொன்ன
காட்சித் தன்மை. கிற்ஸ்டோபருடனான் உரையாடல் அவனுக்கு என்ன உருவாக்கியது என்பதை நாவலில்
சொல்லாமல் உணர்த்த முடிகிறது. நாவல் வடிவத்தின் ஒரு முக்கியத்துவம் இது.
ஒரு
இடத்தில் அவன் தனது அலுவலகத்திற்கு அன்றக்கான தனது விடுப்பு செய்தியை அறிவிப்பதை சொல்லும்போது
அவன் பொருள் வரியில் அதை தட்டச்சு செய்து அனுப்பினான் என்று குறிப்பிடுகிறார். அவன்
உடல் நலமின்றி இருப்பதை சட்டென்று சொல்கிறது. அவன் அலுவலகத்தில் அவன் இடம் என்ன என்பதையும்
அது சொல்கிறது. அங்கு உள்ள சுதந்திரத்தையும் சொல்கிறது
2. உவமைகள்..
சில உவமைகள் உரையாடல்களில் சட்டென்று விழுகின்றன. சந்தியாவிடம் தனது விருப்பத்தை தெரிவிக்கையில்
அவள் அதை மறுத்து பேசி தன் விருப்பத்தைக் கூறூம்போது என்ன ifloop போட்டு பேசற என்பான்
3. அறிதல்-
தன் கனவும் தன் எதார்த்தமும் வேறு வேறு என்று அவன் உணரும் இடம். குறிப்பாக மத்தியாஸ்
அவனிடம் சொல்லுவார், தம்பி கனவுப் புணர்ச்சியில் நாற்றம் இருக்காது. ஆனால் யதார்த்தத்தில் அப்படியில்லை என்பார். கிட்டத்தட்ட ஆனந்த்ன் வாழ்நாள்
கேள்வி அது. அதற்கான பதில் அவன் இறுதி அத்தியாயத்தில்
வாய்விட்டு உளறும் வார்த்தைகள். அங்கு அவன் தன் வாய்விட்டு சொல்கிறான்.. ”பிரபஞ்சமே
நான் உன்னை ஆரத் தழுவிக் கொள்கிறேன்” என்று.
தற்போது கஞ்சா
இயல்பாகிவிட்டது போல அதுகுறித்த செய்திகள் வருகின்றன. பிற போதைப் பொருட்கள் போல கஞ்சா குடித்தவரை வாடையை
வைத்து அறிய முடியவில்லை. உள்ளே தேக்கிக்கொண்டு வெளியே சாதரணமாய் இருப்பது அவர்களுக்குப்
பழகியிருக்கிறது. அவர்களுக்கு என்று இல்லை இப்பொழுது பொதுவெளி நாகரீகம் என்பதே அதுதான்
என்று ஆகிவிட்டது. இந்நாவல் அதை சொல்லுவதோடு
நிற்கிறது.
உருகுவெ நாட்டில் ரியோ தெ லா பிளாட்டா அட்லாண்டிக்கில் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள மாண்டிவிடியோவின் தென்பகுதியான லா றாம்ப்லா என்கிற இடத்தில் நிகழ்கிற கதை. முதல் அத்தியாயம் கடலில் மூழ்கி நீந்தி பின் வெளியே வந்து விழுந்து ஈரம் காயும் வரை கரையில் கிடப்பவன் தன்னை அனாதையாக உணர்கிறான். இறுதி அத்தியாயமும் அத்தகையதே. இங்கே அவனது தனிமை நீங்கிவிடவில்லை.. அவனது நட்புக் குழுக்களுடான சந்திப்புகள் முன்போல நடக்கவில்லை. முன்பைவிடவும் தனிமையில்தான் இருக்கிறான். தன் கையில் இருக்கும் போதை பொட்டலத்தை கிழித்து அலைகளில் வீசிவிட்டான். ஆனால் அவன் பிரபஞ்சத்தைத் தழுவிக்கொள்ளும் அளவிற்கு மிதமிஞ்சிய உணர்ச்சிக் குவியலில் இருக்கிறான். இவற்றிற்கிடையிலான நிகழ்வுகளின் தொகுப்புதான் டாங்கோ. பிரபஞ்சமே நான் உன்னைத் தழுவிக் கொள்கிறேன் என்று அவன் வாய்விட்டு சொல்வது இங்கு ஒரு சிறுகதைக்கான முடிவாக இருக்கிறது