Sunday, July 14, 2019

மொழிபெயர்ப்பு அனுபவம்

கேயாஸ் தியரி என்றும் வண்ணத்துப்பூச்சி விளைவு என்றும் தசாவதாரம் திரைக்கதை என்றும் சொல்லப்படுகிற தற்செயல்களின் தொடர்ச்சியினை விளக்க, இந்த மொழிபெயர்ப்புப் பணி என்னை வந்தடைந்ததையும் சொல்லிக்கொள்ளலாம்.

வெண்முரசில் கிராதம் நாவல் எழுதும்போது  ஜெயமோகன் அவர்களுக்கு கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் அவர்களின் நினைவு வருகிறது. அவரை விஷ்ணுபுரம் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கிறார். வந்தவர், இதுபோல பிறமொழிகளின் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதையும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் முன்னெடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அதைச் சிரமேற்கொண்ட ஜெ. தொடர்ந்து பிறமொழி எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதை ஒவ்வொரு விஷ்ணுபுர விழாவிலும் தொடர்கிறார். அவ்வரிசையில் இரண்டாவதாக வந்தவர்தான் மேகாலய எழுத்தாளரான ஜெனீஸ் பரியத் அவர்கள். அவரது ஆங்கில சிறுகதைத் தொகுப்பான Boats on Land யுவபுரஸ்கார் விருது பெற்ற ஒன்று. அதைத் தமிழில் நிலத்தில் படகுகள் என்று விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் மொழி பெயர்த்தோம். அதில் Discovery of flight எனும் சிறுகதையை பறத்தலைக் கண்டடைதல் என்று நான் மொழிபெயர்த்திருந்தேன்.


இனி அங்கிருந்து இன்னருத நிகழ்விற்கு தாவுவோம். தஸ்தவ்யேஸ்கியின் தமிழ்க்குரலாக எம்.ஏ.சுசீலா அவர்கள், அவரது குற்றமும் தண்டனையும், அசடன் உள்ளிட்ட பெருநாவல்களையும், மற்ற நாவல்களையும் சிறுகதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.  சென்ற வருடம் எம்ஏ சுசீலா அவர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் ரஷ்ய கலாச்சார மையமும் சேர்ந்து பாராட்டு விழா நடத்தினோம். அப்புத்தகங்களின் பதிப்பாளரும் நற்றிணை பதிப்பகத்தாரே.  அது தொடர்பாக அவரை அணுகியபோது,  கூடவே, நிலத்தில் படகுகள் தொகுப்பை விரைவில்  கொண்டுவரவேண்டும் என்ற துடிப்புடனும் இருந்தோம்.   அப்பொழுதுதான்  The Dhamma Man என்கிற இந்த நாவலை மொழிபெயர்க்க அளித்தார். அதை வாங்கும் பொழுது, ஒரு வாரம் அந்த நாவலை வாசிக்க மேலும் ஒரு மாதம் அதை மொழிபெயர்க்க என எனக்கு நானே குறித்து வைத்துக்கொண்டேன். அதன்பின் 2018 மேமாத ஊட்டி காவிய முகாம் தலைக்கு மேல் இருக்கிறது.


(கவர்னர்) ஸ்ரீநிவாஸன்

எழுத்தாளர் விலாஸ் சாரங், அடிப்படையில் கவிஞர் மற்றும் சிறுகதையாசிரியர். ஆகவே அந்தக் கச்சிதம் அவரது நாவலிலும் வெளிப்படுகிறது. அவரது  நடையில் மேலும் என்னை ஆச்சரியப்படுத்தியது அவரது கதை சொல்லும் முறை. அது ஆசிரியர் குரலாக துவங்கும். திடீரென ஒரு பணியாள் வழியாக பயணிக்கும். சில நேரங்களில் சித்தார்த்தன் குரலாகவும்.

ஜெயமோகன் எழுதும் வெண்முரசு நாவலில் அத்தனை கதாபாத்திரங்களின் மனவோட்டங்களும் எழுதப்படவில்லை. கிருஷ்ணன், திரெளபதி,கர்ணன் கணிகர் போன்றவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை ஜெயமோகன் எழுதுவதில்லை. அவர்கள் கடவுள்களா மானுடர்களா என்ற புதிரை லாவகமாக கையாண்டு வருகிறார். அதேபோல, இந்நாவலில் விலாஸ் சாரங் அவர்களும் சித்தார்த்தனின் மனம் என்ன நினைக்கிறது என்று எழுதியது போல் புத்தரின் மனவோட்டத்தை எழுதுவதில்லை. மேலும் காலம் மற்றும் தூரம் போன்ற காரணிகளைக் கொண்டு நாவலை நகர்த்திச் செல்வார். நாவலை படித்து முடித்து இந்தப் புரிதலை அடைந்தவுடன் நான் மொழி பெயர்க்கத் துவங்கினேன். அச்சமயத்தில்  நான் செய்த மிகை பாவனை ஒன்று உண்டு

முதலில் அதை தட்டச்சிடாமல் நற்றிணை பதிப்பகம் அளித்த கநாசு படம் போட்ட  நாட்காட்டியில் எழுதத்துவங்கினேன். தட்டச்சிடாமல்  எழுதுவதில் ஒரு இன்பம் இருக்கிறது. நான் என்னை கநாசு முதலான மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் வைத்து நினைத்துக்கொண்டேன் அல்லது மீண்டும் சரிபார்க்க வசதியானது என எண்ணிக்கொண்டேன்.  எழுத்தாளர் யுமாவாசுகி மற்றும் எம்.ஏ.சுசீலா ஆகியோரின் மொழி பெயர்ப்புகளை விரும்பி  படித்திருப்பதால் அவர்களை ஆதர்சமாக கொண்டு எழுதத துவங்கினேன்.  ஒரு மாதத்தில் முடித்து மே மாத  ஊட்டி காவியமுகாமிற்குள் அளித்து விட வேண்டும் எனத் துவங்கியவன், ஒரு  நாளைக்கு ஒரு பக்கம் என எழுதி 2018 ஆகஸ்டு மாத ஈரோடு புத்தக கண்காட்சிக்குள் அளித்து விட வேண்டும் என என் விதிமுறைகளைச் சற்று தளர்த்திக் கொண்டேன். அதற்குள் ஒரு குழுவாக இணைந்து நிலத்தில் படகுகளை சரிபார்த்து அளத்துவிடலாம் என அதற்குள் இறங்கி அதை அளித்து வைத்தோம். அதற்குள் செப்டம்பர் வந்திருந்தது. நான்  மொழிபெயர்ப்பில் இரு பக்கங்கள் எழுதி முடித்திருந்தேன்.

நடுவே குமரகுருபரன் விருது விழாவிற்காக கவிஞர். கண்டராதித்தன் படைப்புகளைப் படித்தேன். என் முதல் மேடை உரை அங்கு நிகழ்வதால் அதற்கு முன்னுரிமையை அளித்தேன். அதன்பின் டிசம்பர் மாதம் நிகழவிருக்கும்
விஷ்ணுபுரம் விருது விழாவின் நாயகரான பேராசிரியர்: ராஜ் கெளதமன் படைப்புகளையோ அவரது திறனாய்வுகளையோ நான் அறிந்தவனில்லை. ஆகவே அதை முடித்துவிட்டு இங்கு வரலாம் என அவர் புத்தகங்களை படிக்கத் துவங்கினேன். சிலுவைராஜ் தொடர் நாவல்களை படித்து ஆகோற்பூசல் வந்திருந்தேன். அதற்குள்  விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளரின் பட்டியலை ஜெ. அளித்தார். ஸ்டாலின் ராஜாங்கம், எஸ்.செந்தில்குமார்  என நான் அதிகம் படித்திராத எழுத்தாளர்கள் பட்டியல். ஆகவே அவற்றையும் வாசிக்கத்துவங்கியிருந்தேன். நல்லவேளையாக சுனில் கிருஷ்ணன் அரங்கு எனக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. ஆசுவாசமாக உணர்ந்தேன்.

விஷ்ணுபுரம் விருது விழா முடிந்து 2019 ம் ஆண்டு தைப்பொங்கலும் முடிந்திருந்த அந்த தருணத்தில் நான் மூன்று அத்தியாயங்களை எழுதியிருந்தேன்.  சென்னைப் புத்தக கண்காட்சியே கடந்துவிட்டிருந்த்து. ஆனால் அந்த எட்டு மாதங்களில் காணும் கலைப்பொருள்களில், பைக் மற்றும்  கார் ஸ்டிக்கர்களில், சுடிதார் சேலை டிசைன்களில், மேகத்தின் வடிவங்களில் புத்தரே கண்ணில் தென்பட்டுக்கொண்டிருந்தார். கடன் பட்டார் நெஞ்சம் போல பதறிக் கொண்டிருந்தது மனம். தம்மன் என்கிற பெயரில் மொழிபெயர்த்திருந்த அந்த புத்தகத்தின மற்ற அத்தியாயங்களை மனதில் மட்டுமே எழுதிவைத்திருந்தேன். மீண்டும் அதை டைரியில் தொடர்ந்து எழுதத் துவங்கினேன்.  என் மீது எனக்கிருந்த கோபத்தில்  வாட்சப்பை அன்இன்ஸ்டால் செய்ததை எண்ணி இப்பொழுதும் வியந்துகொள்வதுண்டு. முழுவதையும் எழுதி முடித்த போது 2019 ம் ஆண்டின் ஊட்டி காவியமுகாமற்கான படைப்புகள் வரத்துவங்கியிருந்தன.



ஆனால் இத்தனை வாசித்திருக்காவிடில் விலாஸ் சாரங் எளிதாக தொகுத்துச் சொல்லிச்செல்லும் வேத காலமும் இந்திய மரபும் பிடிபட்டிருக்குமா
என்பது ஐயமே!
வேத கால நெறிகள்,உபநிடத காலம் அதைத்தொடர்ந்து பெளத்தத்தின் எழுச்சி என அனைத்தும் இறுதியில் நம்மால் விளக்கக்கூடிய அளவில் நாவலுக்கிடையே புகுத்துவது என்பதே விலாஸ் சாரங்கின் வெற்றி. அதிர்ஷ்டவசமாக முன்பே வெண்முரசு வாயிலாக இது எனக்கும் அறிமுகமாகிவிட்டிருந்தது. சொல்லப்போனால், இதில் வரும் சிருஷ்டி கானம் உபநிடத வரிகள் போன்றவற்றை ஏற்கனவே ஜெயமோகன் அவர்களின் வலைதளத்தில் படித்தும் இருக்கிறேன். குறிப்பாக  சொல்வளர்காடு நாவல். இந்நாவல் அங்கிருந்து வேறு கோணத்தில் இது நகர்ந்தாலும் அடிப்படைகளின் புரிதல் இருந்தது.

அதேபோல, மூன்று மாதங்களில் எழுதக்கூடிய ஒன்றுதானா ஒருவருடம் இழுத்தது என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. ஒருநாளில் எளிய தியானத்தில் அடைந்த மெய்மையை அடைய முடியாமலா சித்தார்த்தன் அத்துனை வருடங்கள் அலைந்தான்? ஞானம் அடைவது எங்கனம் என்று ஜென் குருவிடம் சீடன் கேட்கிறான். அவர் தன் கையில் உள்ள பிரம்பால் அவன் தலையில் அடிக்கிறார். அந்த்பிரம்படி கணம் நம்மை வந்தடைய நாம் காத்திருக்கத்தான் வேண்டும்

அதன் பின்னர்தான் நான் துவக்கத்தில் கூறிய மிகை பாவனையின் பக்க விளைவு ஆரம்பமானது. அதை நான் இனி தட்டச்சு செய்து பதிப்பகத்தற்கு அனுப்ப வேண்டும். அது மட்டுமே மீண்டும் மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டது. யாரிடமாவது தரலாம் எனில் அவர்களுக்கு என் கையெழுத்து புரியவில்லை. மேலும் இன்னொரு முறை நாமே சரிபார்த்தவிதமாகவும் ஆகிவிடுகிறது என்பது என் எண்ணமாக இருந்தது. ஆனால் அது தவறான எண்ணம். தட்டச்சு செய்வதே சிறந்த வழி அல்லது நமக்காக தட்டச்சு செய்ய ஆட்கள் இருக்கவேண்டும்.



இறுதியில் மொழிபெயர்ப்பின் படிப்பினைகளாக நினைத்துக்கொள்ள  விரும்புவது கீழ் கண்டவை:-


அ) நம்மால் பதினைந்து நிமிடங்களுக்குள் ஒரு கட்டுரையோ அல்லது கருத்தைத் தொகுத்தோ  எழுத முடிகிறது என்பதை வைத்து மொழிபெயர்ப்பை அணுகலாகாது. மூலத்தின் வார்த்தைகளை தவறவிடாமல் பொருள் மாறாமல் சேர்க்க அதைவிட நாலு மடங்கு நேரமாகறது

ஆ) அச்சுப்பிரதியின் ஒரு பக்கம் என்பது நமக்கு இரு பக்கங்கள் எனக் கணக்கிடவேண்டும்.

இ) மொழி பெயர்ப்பிற்கு உகந்த நேரம் எது என்பதைக் கண்டறிய வேண்டும்

ஈ) நாவலின் கனமான பக்கங்களை மொழிபெயர்க்க மற்ற அத்தியாயங்களை விட நேரம் அதிகமாக ஆகிறது. இதில் யசோதரையும் ராகுலனும் புத்தரைச் சந்திக்கும் இடம் எனக்கு அத்தகைய சோர்வை அளித்தது.

உ) கையால் எழுதி சீன் போடுவதைவிட, நேரடியாக தட்டச்சிவிடுவதே நலம்

ஊ) மேற்சொன்னவை வெறும் மொழிபெயர்ப்பிற்கான புரிதல்களே! அலுவலக குடும்ப நெருக்கடிகள் அந்தந்த சூழலுக்கானவை

ஒரு நாளில் பத்து மணிநேரம் சராசரியாக அலுவலக வேலையே எடுத்துக்கொள்கிறது.  இந்த வேலையானாலும், இதர லெளகீக கடமைகளானாலும், இலக்கிய வாசிப்பானலும், என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இத்தனைக்கும் நடுவில் இதை செய்து முடிக்க வேண்டுமா என்று எண்ணும் போதெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொள்வது ஒன்றுதான். 'இதைத் தேர்ந்தெடுத்தது நீ!'


இன்று இந்த புத்தகம் வெளியான சமயத்தில் நேரடிப் பங்கு வகிக்கும் இருவருக்கு நன்றி சொல்லவேண்டும். ஒருவர் நற்றிணை யுகன். பதிப்பாளர் என்பதையும் தாண்டி அவர் பொறுமையாக காத்திருந்து, அடிக்கடி தொலைபேசியில் அழைத்து உற்சாகமூட்டியபடி இருந்தார்.   அவருக்கு அளித்த ஒரு மாதத்திலேயே மீண்டும் ஒருமுறை பிழை பார்த்து சிறந்த வடிவமைப்பில் பதிப்பிக்கவும் செய்துவிட்டார்.  இரண்டாவதாக, திரு. ஸ்ரீநிவாசன் அவர்கள். அவர்தான், முதல்முறை படித்து அதை திருத்தியும்  அளித்தார். தம்மம் என்று பல நாவல்கள் வந்திருப்பதால் தம்மன் என்னும் பெயருக்கு மாற்றாக யுகன் கூறிய மற்ற பெயர்களில் தம்மம் தந்தவன் என்ற  பெயரே பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம். இவ்வாறாக முன்பு கூறிய தற்செயல்கள் ஒரு நிலையை வந்தடைந்தன

இவர்களைத் தவிர மறைமுக காரணமாக குடும்பத்தினரும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களும் மற்ற நண்பர்களும்  இருக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக நான் மனம் சோர்ந்து போகும்போதெல்லாம் மனச்சோர்வு என்று  அதை வெளியே சொல்லக்கூட நாணும் வண்ணம்  தன் குன்றா செயலூக்கத்தினூடே சோர்வென்பது இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஜெயமோகனும் இருக்கிறார்
தொடர்புடைய பதிவு:- புத்தரைச் செலுத்திய விசை




6 comments:

பாவண்ணன் said...

வாழ்த்துகள் காளிபிரசாத். எவ்வளவு தாமதமானாலும் ஒரு செயலைச் செய்துமுடித்த பிறகு உருவாகும் நிறைவு மகத்தானது. உங்கள் ஊக்கம் வளரச்சிமுகமாக ஓங்கி வளரட்டும். இந்தத் திசையில் உங்கள் பயணம் தொடரட்டும். பாவண்ணன்.

காளி said...

அன்புள்ள பாவண்ணன் சார்,

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

Unknown said...

Vaalthukkal kali

Partha said...

வாழ்த்துக்கள் காளி....

காளி said...

மிக்க நன்றி

காளி said...

மிக்க நன்றி பார்த்தரே!!!