Wednesday, June 30, 2021

ஆள்தலும் அளத்தலும் குறித்து எழுத்தாளர் வாசு முருகவேல் அவர்களின் பதிவு

 

எழுத்தாளர் வாசு முருகவேல்

 

ஆள்தலும் அளத்தலும் - ஆர்.காளிப்ரஸாத்

எழுத்தாளர் ஆர்.காளிப்ரஸாத்தின் ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பின் பெரும்பாலான கதைகள் கடைநிலை ஊழியர்களின் (தொழிலாளர்களின்) உலகங்களை நம் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அவர்கள் உலகத்தின் மேன்மையையும் - கீழ்மையையும் யதார்தத்தை மீறாமல் காட்சிபூர்வமாக காட்டுகிறது. ( லோயர் மிடில்கிளாஸ் லெவலில் இருந்து, கடைநிலை ஊழியர்களை நோக்கும் பார்வை..( தொழிலாளர்களுடன் கூடவும்/ ஒரு வகையில் சற்றுத் தள்ளியும் இருந்து நோக்கும் பார்வை.)
இதில் இடம்பெற்றுள்ள எந்தக் கதையிலும் அவர்கள் மீதான வலிந்து திணிக்கப்பட்ட ஒரு பரிதாபத்தை காண முடியவில்லை. அவர்களின் வாழ்வியல் அழகை எந்த இடத்திலும் கலைக்க முற்படவில்லை. இவ்வாறான தன்மைகள் இந்த கதைகளை சிறந்த இடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றன.
ஆர்வலர் மற்றும் கரி இரண்டு கதைகளும் மேலே குறிப்பிட்ட கதைகளில் இருந்து மாறுபட்ட கதைகளாக என்னை சற்றுத் தீவிரமாகவே பாதித்தன. அது போல திருவண்ணாமலை என்ற கதையின் அங்கதத்தன்மை நன்றாக இருந்தது. அது வெறுமனே ஒரு அங்கதக் கதை என்று கடந்து போகக்கூடிய கதை அல்ல. பராசக்தி என்ற கடைசி கதை தரக்கூட தரிசனம், பராசக்தியை புரிந்தவர்களுக்கானது!.
முதல் கதையான பழனி என்ற கதைக்கும் மதிப்பு என்ற கதைக்கும் இடையில் சுற்றுகின்ற உலகம், மனிதர்களை எடை போடுவது என்பதை பற்றிய ஒரு விவாதத்தை நம்முள் ஏற்படுத்தக்கூடியது. இதிலும் பழனி என்ற கதை, கதை சொல்லல் முறையால் ஒரு படி முன்னே நிற்கிறது.
காளிப்ரஸாத்தின் கதைகள் சிலவற்றை படித்து முடிக்கும் போது, மீளவும் அந்த கதைக்குள் இடம்பெற்ற சில உரையாடல்களை தேடிச்சென்று படிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உதாரணமாக மதிப்பு மற்றும் கரி என்ற கதைகள்.
எழுத்தாளர் ஹண்ஸ்டா சௌவேந்த்ர சேகர் அவர்களின் "ஆதிவாசிகள் இனிமேல் நடனமாட மாட்டார்கள்" என்ற மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பை வாசித்த பிறகு எனக்குள் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. அந்த வெற்றிடத்தை ஆர்.காளிப்ரஸாத்தின் ஆள்தலும் அளத்தலும் பூரணமாய் நிறைத்து விட்டது. இருவரின் நிலங்கள் வேறுபட்டவை என்ற போதிலும் இவர்களின் கதைகளின் ஆழத்தில் ஒற்றுமைகள் நிறைந்திருக்கின்றன. அவை எந்த மேல் பூச்சும் இல்லாத வாழ்க்கைகள். நாம் கண்டுணராத மனிதர்களின் (அக) உலகங்கள்.
புத்தகம் - ஆள்தலும் அளத்தலும்
எழுத்தாளர் - ஆர்.காளிப்ரஸாத்
பதிப்பகம் - யாவரும் - பதாகை
விலை - 140/=
https://www.be4books.com/product/%e0%ae%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

No comments: