Wednesday, June 30, 2021

ஆள்தலும் அளத்தலும் - மதிப்புரை - மந்திரமூர்த்தி அழகு

facebook  ல் மந்திரமூர்த்தி அவர்களின் பதிவு. (மந்திரமூர்த்தி அவர்களின்  "வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்" facebbok  குழு வாயிலாக )


மந்திரமூர்த்தி




ஆள்தலும் அளத்தலும் & பிற கதைகள்- எழுத்தாளர் ஆர் காளிப்ரஸாத்

வெளியீடு: பதாகை & யாவரும் பப்ளிஷர்
முதல் பதிப்பு: பிப்ரவரி 2021
எழுத்தாளர் ஆர்.காளிப்ரஸாத் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார். ஜெயமோகன் விஷ்ணுபுரம் வட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர். தமிழில் சிறுகதைகளை எழுதி வருபவர்களில் முக்கியமான கவனத்துக்கு உரியவர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் புதிதாக இந்த ஆண்டு வெளியான ஆர்.காளிப்ரஸாத்தின் இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கப் பரிந்துரை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
தொகுப்பில் 10 சிறுகதைகள் இருக்கின்றன.
1. பழனி
2. ஆர்வலர்
3. விடிவு
4. திருவண்ணாமல
5. பூதம்
6.ஆள்தலும் அளத்தலும்
7. ஸ்ரீஜி
8. கரி
9.மதிப்பு
10.பராசக்தி
நூலின் முன்னுரையில் ஆர்.காளிப்ரஸாத் , "எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு. 'எழுத்து என்பது எனக்குத் தவம் அல்ல; வேள்வியல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; பேரும், புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி!' என்று. இந்தத் தொகுப்பில் நானும் அதற்கான என் முதலடியை எடுத்து வைத்திருக்கிறேன்.
என்னுடைய கதைகளில் சிறுகதைக்கான தருணம் இருக்கிறதா என்று கவனிக்கிறேன். என் கதைகளின் வழியே நான் சொல்ல வருவது வெறும் அதிர்ச்சியோ அல்லது நகைச்சுவையோ மாத்திரம் அல்ல என்பதில் கவனமாக இருக்கிறேன். கதைகளை வாசிப்பவரை மகிழ்விக்கும் நோக்கமோ அல்லது அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் ஆவலோ இருந்ததில்லை. அனுபவங்கள், அறிதல்கள் என அனைத்தையும் கலைடாஸ்கோப்பில் போட்டுச் சுழற்றிச் சுழற்றிக் காட்டுவது போலத்தான் இவை வெளிப்பட்டிருகின்றன." என்று குறிப்பிடுகிறார். அவை உண்மை என்பதை இந்தக் கதைகள் அனைத்துமே நிரூபிக்கின்றன.
இந்தச் சிறுகதைத் தொகுப்புக்கு
அருமையான
அறிமுக உரையைத் தந்திருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள். அவர் தொகுப்பில் உள்ள ஆள்தலும் அளத்தலும், விடிவு, மதிப்பு, கரி ஆகிய 4 சிறுகதைகளைக் குறித்தும் ஆழமாக அலசி அவற்றைப் பெருமைப்படுத்தி இருக்கிறார். அவர் தனது அறிமுக உரையில் 'பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு ஒரு தனியான வசீகரம் உண்டு.
மனத்தின் அவத்தைகள், தட்டழிவுகள், பிறழ்வுகள், கனவுநிலை உரைத்தல்கள், பிரமைகள் என்பன சிறுகதைக் கருப்பொருட்கள். சம்பவங்கள்,முரண்கள், குணச்சித்தரிப்புகள், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பிறிதொருவகை. என்ன வகையாயினும் மொழித்திறனிலும், செய்நேர்த்தியிலும், கூறு முறையிலும் இந்தச் சிறுகதைகள் எம்மை ஈர்க்கின்றன' என்று குறிப்பிடுகிறார்.
இன்றைய காலக்கட்ட நவீனச் சிறுகதைகளை அறிய விரும்புவோருக்கு இந்தத் தொகுப்பு சிறந்த அறிமுகமாக இருக்கும். ஒவ்வொரு கதையும் வாசகன் நுணுக்கமாக உணர்ந்து அறிய வேண்டிய நிலையில் எழுதப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கதையும் அதற்குத் தேவையான மொழி நடையுடன், சொல்லும் பாங்குடன் இணைந்து உச்சமான இடத்தைப் பெறுகிறது.
தொகுப்பில் உள்ள முதல் கதை பழனி.
லாட்ஜில் எலக்ட்ரிகல் வேலை செய்யும் பழனி பல பித்தலாட்டங்களைச் செய்பவன். அதனை உடன் இருந்து பார்க்கும் அவனது நண்பன் பார்வையில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. பழனி விரும்பும் பெண்ணை மணம் செய்ய பழனியே அறியாமல் உதவி செய்கிறான் அவனது நண்பன். 15 ஆண்டுகள் சௌதி வெளி நாட்டில் வேலை செய்து திரும்பி வரும் நண்பன், உடன் வேலை செய்த நண்பர்களைக் குறிப்பாகப் பழனியைத் தேடுகிறான். பழனி தற்போது காண்டிராக்டராக தரமணியில் நல்ல நிலையில் இருப்பதை அறிகிறான். அப்போது சற்றுத் தொலைவில் ஒரு கன்றுக்குட்டி பசுவைத் தேடித் துள்ளித் துள்ளிச் சென்றது என்றளவில் இந்தக் கதையை நிறைவு செய்கிறார் காளிப்ரஸாத். அவர் இந்தக் கதையைச் சொல்லியிருக்கும் நடையும், மொழியும், இடையிடையே வரும் கேலி, கிண்டல்கள், நகைச்சுவையும், கதையின் எதிர்பாராத திருப்பங்களும், எதார்த்தமான கதையைச் சொல்லும் பாங்கும், வாசகன் இடையிடையே யூகித்து உணர்ந்து ரசிக்க வேண்டிய செய்திகளும் இந்தக் கதையை மேலான இடத்தில் நிறுத்துகின்றன.
இன்றைய எழுத்தாளர்களின் நவீனச் சிறுகதைகளை அறிய விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு ஆர்.காளிப்ரஸாத்தின் ஆள்தலும் அளத்தலும் சிறுகதைத் தொகுப்பு.
May be an image of text that says 'ஆள்தலும் அளத்தலும் பிற கதைகள் ஆர் காளிப்ரஸாத்'

No comments: