Wednesday, May 12, 2021

நீ சரி பண்ணி வாழ்ந்த




வங்கித் தபாலின் முகவரி பகுதி போல கரும் சுருளுக்குள் முகம் மட்டும் பளீரிடுகிறது

கரிய போர்வைக்குள்ளிருந்து முகம் மட்டும் காட்டி தூங்கும் ஒரு  பெரிய குழந்தையின் முகம் போலவும் 

ஸ்ட்ரெக்சரை நிதானமா இழுங்க என்கிறார் ஆம்ஸ்ட்ராங் உடையணிந்த தகனமேடை பணியாளர் 

'ஹ்க்கும்! நிதானம்' என மோவாயை தோள்பட்டையில் இடித்துக்கொள்கிறாய்

ஏன்? நிதானமாதான் இழுக்கறேன் என்கிறேன்

சும்மா கதைவுடாதடா
நான் பாத்துண்டுதான் இருந்தேன்
ஆத்தை வுட்டு வெளிய வந்தவுடனே சிகரெட் வாங்கலாமான்னு கடகாரன் கிட்ட வரைக்கும் போய்ட்டு  பைக்ல போனா போலீஸ் புடிக்குதான்னு ஒப்புக்கு கேட்ட

ரெண்டு பேரு போன் பண்ணிணா..
 அப்படியே ஹெல்மேட்ல போன வுட்டுண்டு பேசற
அப்பறந்தான் வண்டிய நிறுத்தற
திரும்ப வண்டிய எடுக்கறப்போ
சைட்ஸ்டாண்ட எடுக்கல
எவனோ திட்னப்போ அவன்கிட்ட சாரின்னு சொல்லிட்டு ஸ்டாண்ட் எடுக்குற

இருந்தாலும் அது மேனர்ஸ் இல்லையா என்கிறேன்


எப்பேலேந்து சொல்லிண்டிருக்கேன் பதறாம இருடான்னு...
ரெண்டு கொழந்தைங்க ஆயிடுத்து
இன்னும் ஆத்த விட்டு வெளீல வந்தா புக்காத்துக்கு வந்த புதுப்பொண்ணு  மாதிரியே மலங்க மலங்க முழிக்கிற

எல்லாம் சரியாகிடும் சித்தி என்கிறேன்

ஆமாம்..நீ சரி பண்ணி வாழ்ந்த.. என இருகைகளால் என் முகத்தை வழித்து திருஷ்டி கழிக்கிறாய்

சிமெண்ட் தரையில் கடகடவென ஏறுகிறது ஸ்ட்ரெக்சர்

என் கொழந்தைக்கு எவ்ளோ திருஷ்டி பாத்தேளா என்கிறாய் சுற்றிவரப் பெருமையாய் பார்த்து

No comments: