Wednesday, November 14, 2018

கட்டண உரை பயணம் ( தொடர்ச்சி...)



அரங்கம் மிக பரபரப்பாக இருந்தது. வழியிலேயே சாலையில் வண்ணதாசன் தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அரங்கம் பாதிக்குமேல் நிரம்பி இன்னும் வாசகர்கள் வந்து கொண்டும் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டும் இருந்தனர். சக்திகிருஷ்ணன், சல்யான் கிருஷ்ணன் இருவரும் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆகவே மிகவும் பதட்டத்துடனும் இருந்தனர். 5:25 க்கு அனைவரும் உள்ளே வர அரங்கம் நிரம்பியது. ஆனால் ஒரு இறுக்கமான சூழ்நிலை இருந்தது. முதல் கட்டண உரை என்பது காரணமாக இருக்கலாம். அரங்கம் அமைதியாக இறுக்கமாக இருக்க, உரையை ஆரம்பிச்சுடலாம்சார் என்று கிருஷ்ணன் கேட்க ஜெ. சரியென தலையசைக்க, ஒலி அமைப்பாளர் என்ன நினைத்தாரோ, உடனே தன் ஒலிப்பெருக்கியையும் இசைத்தட்டையும் இயக்கினார்.. ”பல்ட்டி பக்குர டர்ல வுடனும் பல்த்து..வெர்ல்டு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்த்து..” என சிம்டாங்காரன் அலற ஆரம்பிக்க, உடனே கிருஷ்ணன் அதை நிறுத்தச்சொல்ல.. மொத்த அரங்கும் கலகலத்தது. வண்ணதாசனுமே சிரித்தார். இந்த நேரத்தில் கவிஞர் விவேகாவைப்பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.  எனக்கு திருமணமான புதிதில் ஆர்த்தியுடன் முதல் சண்டை துவங்கியிருந்த நேரம் அது. அவள் முகத்தை அலமாரி மேல் வைத்துக்கொண்டு நிற்க, நானும் கோபித்துக்கொண்டு பேசாமல் டிவியை ஆன் செய்தேன். அதில் அப்போது எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி,  மியாவ் மியாவ் பூன போன்ற பாடல்களை எழுதிய பிரபல கவிஞர் விவேகாவின் பேட்டி ஒளிபரப்பானது. பேட்டியெடுப்பவர், ”சார் நீங்க சமீபத்துல எழுதின பாடல் என்ன சார் அந்த கவிதையை சொல்ல முடியுமா” என்று கேட்டார். அதற்கு அவர், இப்ப ஒரு படத்துல கவிதை எழுதி எல்லோரும் நல்லாருக்குன்னு சொன்னாங்க சார்.. அந்த கவிதை என்னான்னா..” ஒரு மணி ரெண்டுமணி.. நீ ஓரமா போடி குண்டுமணி” ங்கிற கவிதைதான் என்று சொல்லிய போது நாங்கள் இருவரும் கடகடவென சிரிக்கத்துவங்கினோம். தற்போது மீண்டும் நிகழ்காலத்துக்கு வருவோம்..ஒன்பது ஆண்டுகளுக்குள் இருநூற்றைம்பது பேரின் இறுக்கத்தை போக்கும் அளவு கிட்டத்தட்ட அதே பெயரில் கவிஞர் விவேக் என ஒருவர் வந்துவிட்டார்  என நினைத்துக் கொண்டேன்.




ஜெ. உரைக்கு முன் கிருஷ்ணன் இந்த புதிய முறையான கட்டணஉரை பற்றி ஒரு நிமிடம் பேசினார். சென்றமுறை விஷ்ணுபுரம் விழா மேடையில் கவனித்தது போலவே, இங்கும் அவர்  பேசுகையில் வாக்கியத்தில் செய்வினை செயப்பாட்டுவினை சிக்கலில் சிக்கியிருப்பது கண்டேன். இலக்கிய வாசகர்களுக்குப் பிரச்சனையில்லை.. ஆனால் கச்சேரியில், “ கனம் கோர்ட்டார் அவர்களே, எனது கட்சிக்காரர்  எதிர்கட்சிக்காரரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்” என்று வாதாடினால் நீதியரசர்கள் குழம்பிவிட மாட்டார்களா..


அடுத்து, ஜெ. வை உரையாற்ற கிருஷ்ணன் அழைத்தார். ஜெ. உரையாட எழுந்த அதே நேரம் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன. குருஜியின் மகன் சத்யா யாராலோ கிள்ளப்பட்டது போல அழத்துவங்கினான். அஸ்வத்க்கு பிஸ்கெட் சாப்பிட்டே ஆக வேண்டிய தாகம் எதானாலோ ஏற்பட்டது. அவனும் நச்சரிக்கத்துவங்கினான். சாதாரண உரையிலேயே யாராவது தும்மினால் ஃபஸ்ட் பெஞ்ச் பசங்க திரும்பிமுறைப்பார்கள். இது கட்டண உரை வேறு. அதனால், அஸ்வத்தை தூக்கிகொண்டு வெளியேறினேன். கதவை சாத்தும்போது அந்த இடுக்கில் புகுந்து வெளியே வந்த விஸ்வாவும் அத்விகாவும் விளையாட ஆரம்பித்திருந்தார்கள். உரையாற்றிய நேரம் முழுவதும் நானும் குருஜியும் குழந்தைகளை கவனித்துக்கொண்டு ஹாலில் நின்றிருந்தோம். உரை முடிந்து வெளியே வரும்போது ஒருவர் அருகில் வந்து “சூப்பர் ஸ்பீச்..செமயா இருந்ததில்ல” என்றார்..” ஆமாங்க அதிலும் சிந்தனையாளனின் அறம்னு ஒண்ணு சொன்னாரு பாருங்க” என்றேன்.. அது எப்போ என்று அவர் திரும்ப கேட்டதை கவனிக்காதவன் போல குழந்தையை தாயிடம் அளிக்க உள்ளே ஓடிவிட்டேன்.



ஜெ . உரையற்றிக்கொண்டிருந்தபோது, வெளியே பாரதி இளங்கோ அண்ணனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். விகடனில் தொடராக வந்த வெள்ளிநிலம் அச்சில் வந்துவிட்டது. அது சேலம் பிரசாத் திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவன் தன்னை பெருங்காதலனாக எண்ணிக்கொண்டிருப்பவன். மோமோவையும் பேரழகியாக காண்பவன். கன்னிநிலம் ரேஞ்சுக்கு நினைத்திருப்பவனுக்கு வெள்ளிநிலத்தை அளித்த ஆசானின் நகைச்சுவையை எண்ணி அவனை அழைத்துக்கூறினேன்.  அவன்சேதி கேட்டு உணர்ச்சிவசப்பட்டு நின்றுவிட்டான். முருகனைக்கண்ட ஏவிஎம் ராஜன் அளவிற்கு ஆகிவிட்டதால் என் கருத்தை குறுஞ்செய்தியாக மட்டுமே அனுப்பினேன்.. தாமதமாக விழாவுக்கு வந்தவர்கள் அவசர அவசரமாக உள்ளே சென்றனர். இருந்த இரண்டு மூன்றுசீட்டுக்களை பாரி கருப்புச்சந்தையில் விற்றார். அப்புறம் என்னைப்பார்த்து சில்லறை இல்லீங்க.. திரும்பி வரும்போது மீதி வாங்கிக்கச்சொன்னேன் என்று கூறினார். சிறப்பு அழைப்பாளராக இருந்த  நெல்லைத் தமிழ்சங்கத்தை சேர்ந்த இருவர் தாமதமாக வந்தனர். ஆனால் அவர்கள் ஏழுமணி சுமாருக்கு வந்ததால் அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்திற்குள் உரை முடிந்துவிட்டது. எனக்கு ஜெ.வுடன் இரு வாக்கியங்களே பேச முடிந்தது. அவர் வாசகர்களால் சூழப்பட்டிருந்தார். பிறகு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பினோம். மீண்டும் ஒரு விசாகா ஹோட்டல் உணவு..

அன்றிரவு மண்டபத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ந்தது. படித்தது, வளர்ந்தது திருமணமானது இலக்கியம். என. வாசகர்கள் ஒவ்வொருவரும் இலக்கியத்தின் பயன் மதிப்பு என்ன வென்பதை மனைவியிடம்தான் கேட்டறிய வேண்டும். தள்ளிநின்று கேட்பவர், “என்னடா உன் நிலமை காறித்துப்பறாப்லல்ல இருக்கு “ என வடிவேலு ரியக்‌ஷன் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.


மறுநாள் இலக்கியப்புகழ்பெற்ற, குறுக்குத்துறையை அடைந்தோம். அந்த ஏரியாதான் ஜாஜா பிறந்து வளர்ந்த இடம்.. ஒவ்வொன்றாக அவர் விவரிக்கையில், கங்கா சந்திரமுகியாக மாறுவதை கண்டேன். இதுதான் சுகா எழுதின் ஹோட்டலு,  அதோ போறாரு பாரு அவர் பேரு செந்தில்நாதன்,  இது பாரதியார் படிச்ச ஸ்கூலு, இந்த ஆபீஸ்லதான் நான் வேல பாத்தேன்,  இந்த ரோட்டுலதான் முதல்தடவை…. தூரத்தில் கோபியர் கொஞ்சும் ரமணா பாடல் ஒளிபரப்பாகிகொண்டிருந்தது. கூகுள் மேப் இல்லாமலேயே வாசகர்கள் சென்றடையும் விதம் அறிமுகமாகியிருந்த குறுக்குத்துறை எதிபார்த்ததை விட அழகாக இருந்தது. ஒருநாள் குளித்தால் ஒரு கவிதை தொகுப்பு போட்டுவிடலாம். அத்விகாவும் ஜுரம் விட்டு, ஆற்றில் ஆட்டம் போட ஆரம்பித்தாள். பெண்கள் அனைவரும் வட்டமாக நின்று முங்கிக் குளித்தனர். முங்குவதற்கு முன் என்னமோ சொன்னமாதிரி இருந்துச்சே.. சா பூ த்ரீயா என கரையேறியதும் ஆர்த்தியிடம் கேட்டேன். அவள் சீற்றத்துடன் மறுத்து அது ரிங்கா ரிங்கா ரோசஸ் என்று கூறினாள்.



அடுத்து கிருஷ்ணாபுரம் கோயில். அங்கிருந்து விட்டலாபுரம் போகலாம் என்று நினைத்திருந்தோம் ஆனால் நேரம் கருதி செல்ல முடியவில்லை. கயத்தாறு புளியமரத்தையே ரோட்டிலிருந்து திசை நோக்கித்தான் கும்பிட்டேன். ஓட்டுநர் தன் சேகரிப்பில் இருந்த 80களின் பாடல்களை ஒலிபரப்பினார். 80 களின் பாடல் என்றதும் நம் நினைவில் வரும் மோகன் பாடல்களும், பாடறியேன் படிப்பறியேன்களையும் கவனமாக தவிர்த்து சேகரிக்கப்பட்ட பாடல்கள். ஒரே படத்தின் பாடல்களில் சந்தோஷப்பாடல்களை தவிர்த்து சோகப் பாடல்களை மட்டும் வைத்திருந்த  அந்த  தொகுப்பை அலறவிட்டார் ஓட்டுநர்.  இவை அனைத்தும்கூட எனக்கு ஞாபகம் இருந்தன என்பதும்  ஆச்சரியம். அது சேடப்பட்டியில் சரண்யா இறங்குகையில் “குடகுமலை காற்றில்வரும் பாட்டு கேட்குதா ..ஏதோ நினைவுதான் உன்னைசுத்தி பறக்குது“ என சந்தோஷின் மனதை வெளிப்படுத்தியது. ஊரப்பாக்கத்தில் வெங்கட் இறங்கும்போது..” சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை.. அது தேடுது தன் உறவை..” என்றது. வீட்டிற்கு வரும்போது நள்ளிரவு மூன்று மணி.. 

மறுநாள் காலை எழுந்திருக்கவே பத்துமணியனது. ப்ராஜெக்ட் மேனேஜர்.. “ கால் இருக்கே..ஜாயின் பண்ணலையா..” என எழுப்பிவிட்டார்.. திருநெல்வேலி போய்விட்டு வந்தேன் என்று சொன்னதும்.. “ ஐயையோ.. ஸ்ட்ரிக்ட்டான கஸ்டமராச்சே.. இந்த கால் க்கு நீங்க கண்டிப்பா வேணும்.. இருந்தாலும் சமாளிச்சுகிறேன்.. வரும்போது என் டெஸ்க்குக்கு வந்துட்டுப்போங்க” என்றார். சரியென எழுந்தபடி, வீட்டுக்கு - ஆபீசுக்கு என தனித்தனியாக அடுக்கி இருந்த டப்பாக்களில் இருந்த லக்‌ஷ்மிவிலாஸ் அல்வாக்களில் வீட்டுகணக்கில் இருந்து ஒன்றை எடுத்து ஆபீஸ் வரிசையில் வைத்தேன்..” நெல்லையில் அல்வா கிண்டும்வரை  கொலை செய்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தபடி பல்துலக்கச்சென்றேன்..

No comments: