Sunday, November 4, 2018

ஆர்வலர் - சிறுகதை



குத்தூஸ் தன் தெருமுனைக்கு வந்து மறுமுனையில் தோரணங்களோடும் அலங்கார விளக்குகளோடும் இருந்த சமுதாய கூடத்தை நோக்கினார். அப்போது அவருக்கு எதிர் திசையிலிருந்து வந்த இருவர்கம்மூனிட்டி ஹாலுக்கு எப்படி போகனும் என வழி கேட்டனர். அவர்கள் வண்டியின் முன்புறம் தேநீர் நிரப்பிய பெரிய குடுவை அடியில் குழாயுடன் இருந்தது. பின்னால் இருந்தவர் கையில் பெரிய பிஸ்கெட் பொட்டலங்களும் இருந்தன. அவர்களுக்கு வழி சொல்லிவிட்டு, இன்று அங்கு நடக்கும் ஜான்சி நகர் நல சங்க கூட்டத்திற்கான ஆரம்பம் இந்தத் தெருமுனையில் அதுவும் இந்த இடத்தில்தானே நிகழ்ந்தது என எண்ணியபடி அதை நோக்கி நடந்தார் குத்தூஸ்.
அன்று காலை சுகாதார ஆய்வாளர் வந்தபோது எப்போதும் போல ராஜசேகருக்கும் சுந்தர்ராமுக்கும் பெரிய விவாதமே நடந்தது. அந்தப் பகுதியின் குப்பை தூர்வாரப்படாமல் பன்றிகள் கூட்டமாக அங்கு புழங்குவதுதான் முக்கிய காரணம். குப்பைகளைவிட பன்றிகள் பெரிய பிரச்சனையாக இருந்தன.
எல்லாப்பன்னியையும் தூக்கிட்டுப்போய் சுட்டுப்போடுங்க என்றார் ராஜசேகர்.
குப்பையை எடுத்துட்டுப்போங்கபன்னிங்க தானா போயிரும்இது சுந்தர்ராம்.
போட்க்ளப் ரோடுல அண்ணாநகர்ல ஒரு பன்னியாவது கண்ல படுமா…? எல்லாத்தையும் கொண்டுவந்து இங்கவுட்டுட்டாங்க…”
அங்க இருக்கிவங்க மாதிரி நீங்களும் குப்பையை தொட்டில போடுங்க. நீங்களே சோறுபோட்டா உங்களத்தான் சுத்தி சுத்திவரும்.
அரைமணிநேரம் நீடித்துக்கொண்டு போனது அந்தப் பேச்சு. ராஜசேகர் மற்றும் சுந்தர்ராமின்  டாம் அண்ட் ஜெர்ரி பிரச்சனை ஒரு முடிவை எட்டி நகர்வாசிகள் கண்டதில்லை

ஜான்ஸி நகரில் குத்தூஸ் வீட்டின் காம்பவுண்டிற்குப் பக்கத்தில் சந்து என்றும் மனை என்றும் சொல்லமுடியாத ஒரு இடம் கேட்பாரற்று கிடக்கிறது. செடிகளும் புதர்களுமாக இருக்கும் அந்த இடம். கழிவு நீரும் அங்கு தேங்கும். குத்தூஸும் மீந்து போன உணவை அவ்வப்போது அங்கு கொட்டுவதுண்டு. சேறும் சகதியுமாகவே இருக்கும் எப்போதும். அந்த சேற்றுக்குதான் பன்றிகள் வருகின்றன.
 சம்பத் சார்! பொது வேலைன்னா எடுத்து செய்யறீங்க. நாலு விஷங்களும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. என்னை கூப்டுட்டு வந்துட்டு சும்மா நின்னா எப்படி சார்? எதாச்சும் சொல்லுங்க!” என்றார் ஆய்வாளர் சம்பத்தை நோக்கி.
சம்பத் காய்ந்த மாலையை இன்னும் தன் வண்டியிலிருந்து கழட்டியிருக்கவில்லை. வண்டி எண்ணும் இன்னும் வரவில்லை. பழையவண்டி ஓரளவு நல்ல விலைக்கு போனது. பன்னி இடிச்ச வண்டின்னு விற்கும்போது சொல்லக்கூடாது என அவர் அறிந்தே இருந்தார்.
“’சென்னைல மத்த ஏரியால தெருநாய்ங்க பிரச்சனைன்னா எங்களுக்கு பன்னிங்க பிரச்ச்னையும் கூட சேர்ந்து இருக்கு. மாநகராட்சிலேந்து வந்து மத்த இடங்களிலெல்லாம் பூங்காவே வச்சுத்தறீங்க. ஆனா எங்க நகர்ல மட்டும் இன்னும் பன்னிதான் மேயுது. பன்னிய தூக்கிட்டுப் போவீங்களோ இல்ல குப்பையை எட்டுத்துட்டுப் போய் பன்னிய விரட்டுவீங்களோ எல்லாம் உடனடியா பண்ணனும்.  அதான் உங்களை கூட்டு வந்தேன்.’ சம்பத் தொடர்ந்தார்.
இப்ப நம்ம பாயை எடுத்துக்கங்க. அவங்க வீட்ல எல்லோரும் அஞ்சு வேளை தொங்க. அப்ப பன்னி சத்தம் கேட்டா அவங்களுக்கும் அது ஹராம் இல்லையா…? நாமதான் சார் ஏதாவது செய்யனும்.”
குத்தூஸ் சம்பத்தை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார்.

சம்பத்திற்கு ஹராம் எல்லாம் தெரிந்திருக்கிறது. அவர் தன்னை வழியில் எங்கு பார்த்தாலும் தன் கையில் இருக்கும் காய்கறிபையை கண்டும் தொழுகைக்கு போயிட்டு வறீங்களா என்றுதான் கேட்பார். அப்படி பொதுவாகவும் கேட்கமாட்டார். நேரத்துக்குத் தகுந்தபடி ளுகரா, அஸரா என்றுதான் கேட்பார்.
குத்தூஸ் தாம் கடைசியாக ஐந்துவேளை தொழுதது எப்போது என யோசித்தார். மதியமும் மாலையும் முடிவதே இல்லை. மகனும் ஐந்து வேளைகள் தொழுவதில்லை. அலுவலகத்திற்கு ரெண்டுங்கெட்டானாக மதியம் மூன்று மணிக்கு கிளம்பிப்போய் காலை ஐந்து மணிக்கு வருகிறான்.
ஆனால் சம்பத் சொன்ன கருத்துக்கு மாற்று என யாரும் சொல்லவில்லை. அன்று மாலை இருவர் வந்து ஒரு கயிற்றை நீட்டிப்பிடிக்க மற்றொருவர் துரத்த, ஓடிவந்த பன்றிகளில் ஒன்றை கயிற்றில் தடுக்கிவிட்டு பிடித்துச்சென்றனர். ஆய்வாளர் வந்ததற்கும் இதற்கும் தொடர்பில்லை. வாரம் ஒரு பகுதியில் இது நடக்கும். பின் ஞாயிறு அன்று புளியமரத்தடியில் பாளம் பாளமாக காணக் கிடக்கும் இறைச்சியாக சென்றுவிடும்.
அந்தப்பன்றியின் கேவல் வெகுநேரத்திற்கு கேட்டுகொண்டுதான் இருந்தது.
பன்றியின் சத்தம்கூட ஹராமா என ஜமாத்தில் கேட்கவேண்டும்என நினைத்துக்கொண்டார் குத்தூஸ்.

ஓல்ட் மெக்டோனால்ட் என்று அவர் பேரன் அவரை அழைப்பான். அவனைப்பார்த்து பிற குழந்தைகளும் அதையே சொல்லத்துவங்கின. அவர் வீட்டு பக்கத்திலிருக்கும் அந்த இடத்தில் ஒவ்வொருமுறை மாட்டையோ நாயையோ பன்றியையோ பார்க்கையில்,
மூம்மூ ஹியர்
ஒய்ங்க் ஒய்ங்க் ஹியர்
பவ் பவ் ஹியர்
என பாடுவான். கூட பேத்தியும் கையை அசைத்து ஆடுவாள். அவர் மகன் வேலைக்கு போய்வந்து காலையில் தூங்கும்போது அவர் பேரக்குழந்தைகளை சிலநேரம் வெளியே அழைத்து வந்து நிற்பார். அப்போதுதான் இந்த பாடல். சிலநேரங்களில், பன்றிகளை கல்லால் அடித்தும் கம்பை வீசியும் துரத்தியடிப்பார். அவர் ஹ்ஹேய் என கையை ஓங்கியதுமே அவைகள் ஓடத்துவங்கும்.
அன்று இரவு நல்ல மழையில்தான் அந்த சத்தம் கேட்டு விழித்துக்கொண்டார் குத்தூஸ். சில நாட்களாகவே சினைப்பன்றி வந்து செடியோரம் ஒதுங்கியிருப்பதை ஜைனம் சொல்லியிருந்தாள். மழைக்கு முன் ஈன்றிருக்கவேண்டும். நேரம் செல்லச்செல்ல சத்தம் வலுத்தது.. மழையும்தான். குத்தூஸ் தன் மகனை எழுப்பி இருவருமாக அவசரகால விளக்கை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கொல்லையில் சாய்த்து வைக்கப்பட்டு சும்மா கிடந்த ப்ளாஸ்டிக் கூரையை எடுத்துச்சென்று மதிலுக்கும் ஒரு தடித்த செடிக்கும் இடையே போட்டு பன்றிமீது மழை விழாமல் குடை போல வைத்துவிட்டு வந்தனர். சிறிது நேரத்தில் சத்தம் நின்றதோ அல்லது அவர் தூங்கினாரோ என அவருக்கு நினைவில்லை.

சூரியன் நன்றாக பல்லைக்காட்டிய காலையில் பன்றிக்குட்டிகள் தாய்ப்பன்றி மீது புரண்டு கிடந்தன. பேரன் மாடியிலிருந்து பொம்மை பைனாகுலரில் பார்த்தபடி ஒவ்வொரு குட்டிக்கும் டோரா, ஜூலி, சிங்சாங், ஹடோரி, பீம், சுக்கி என பெயர் வைத்தான். குத்தூஸ் தன் வீட்டில் இருந்து சமைத்தது போக எஞ்சிய காய்கறிக் கழிவுகளை மதில்வழியாக பன்றிக்கு விட்டெறிந்தார். அது எழுந்து வந்து உண்டுவிட்டு திரும்ப இவர் முகத்தைப் பார்ததது. மீண்டும் வீட்டிற்குள் போய் முழு கேரட்டுகளை எடுத்துவந்தார். ஒவ்வொன்றாக அதற்கு போட்டார்.
அன்று மதியம் மகன் வேலைக்கு கிளம்புகையில் அவரை அழைத்து முகநூலில் அன்புக்கு ஹராம் ஏதுமில்லை என்ற வசனத்துடன் பன்றிக்கு கேரட் போடும் அவர் படம் வந்திருந்ததை காட்டினான். அவர் என நினைத்துப்பார்த்தால்தான் அவர் என புரியும் வண்ணம் நல்லதொரு நிபுணத்துவத்துடன் அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. ஜான்ஸி நகரின் மக்கள் அதற்கு விருப்பக்குறி இட்டிருப்பதை சொன்னான். ராஜசேகர் தன் கண்டனத்தையும் சுந்தர்ராம் தன் அன்பையும் குறியீட்டிருப்பதாக அவன் மேலும் கூறிச் சென்றான். ராஜசேகர் நேரிலும் தன் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். சில முகநூல் குழுக்களில் இது ஏன் ஹராம் என் விவாதிக்கப்பட்டது.
பன்றியை தின்பதுதான் ஹராம் என்றில்லை, வளர்ப்பதுகூட ஹராம்தான் என ஒருவர் போட்டிருந்தார். அவருக்கு பலர் தன் கோபக்குறியையும் பலர் கட்டைவிரல் உயர்த்தி வெற்றிச்சின்னத்தையும் அளித்த்திருந்தனர்.
இவர் வளர்க்கவில்லை. பொதுவாக திரியும் ஒன்றிற்கு உணவிடுகிறார். இதைத்தான் அன்பு மார்க்கம் போதிக்கிறது என்று ஒருவர் அளித்த பதிலுக்கு முன்பு பதிவிட்டவரே வெற்றிச்சின்னத்தை காட்டியிருந்தார்.
பள்ளிவாசலிலும் இதைப்பற்றி பேசினார்கள்.
எதுக்கு வாப்பா இந்த வேலை உனக்குஎன்று சலித்துக்கொண்டான் அவர் மகன். குட்டிகளை பார்க்கவேண்டும் என அடம்பிடித்த பேரனுக்கு ஒருமுறை அடிகூட விழுந்தது.
தலைவரே! உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? இதுதாண்டா இந்தியா குரூப்பில் மட்டுமே உங்கபடம் இன்னிய தேதிக்கு ஐம்பதுலட்சம் லைக் வாங்கிடுச்சுஎன்றான் சுந்தர்ராம். அப்போது சமுதாய கூடத்தின் வாசலுக்கு வந்திருந்தார் அவர்.

பன்றிப் பிரச்சினையையும் துப்புறவுப் பிரச்சினையையும் தீர்த்தற்காக குத்தூஸுக்கு இன்று பாராட்டும் மற்றும் ஜான்ஸி நகர் நல சங்கத்தின் தலைவராக ராஜசேகர் சுந்தர்ராம் என இருவராலுமே முன் மொழியப்பட்டு பொறுப்பேற்பதும் என ஒரு சேர நடக்கும் கூட்டம் இது. அதனால்தான் தலைவரே என்ற இந்த விளி.
துப்புறவுத்துறை ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலரும் காவல்துறை மற்றும் சுகாதரத்துறை ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர். சம்பத் உரையாற்றினார்.
நாமளும் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தோம். அடிச்சுப்பார்த்தோம். துரத்திப்பார்த்தோம். நம்ம ஹெல்த் இன்ஸ்பெக்டர்கூட பல தடவை மாநகராட்சியுடன் போராடிய ஒரு விஷயம் இது. ஆனால் பன்றிகள் செல்லவில்லை. ஆனால் நம்ம பாய் என்ன பண்ணினாரு? அவைகளிடம் அன்பால் பேசினார். மழைக்காலத்தில் அவைகளுக்கு ஒதுங்க இடம் அளித்தார். பசிக்கு உணவு போட்டார். பிறகு அவைகளிடம் எடுத்துரைத்தார். அவைகளால் தனக்கு எவ்வளவு பெரிய ஹராம் ஏற்படுதுன்னு சொன்னார். அவர் ஐந்து வேளை தொழுத அந்த எல்லாம் வல்ல பேரருளானின் கருணையால் பன்றிகளுக்கு அவர் நிலை புரிந்து தாமே நம் நகரைவிட்டு விலகின. இதைத்தான் வள்ளுவர் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக்கூலி தரும்னு சொல்றார். குத்தூஸ் பாய் நம்ம தலைவரா பொறுப்பேற்று இனி நம்ம தண்ணீர், தெருவிளக்கு பிரச்சினையெல்லாம் தன் அன்பால் தீர்த்துவைப்பார்.”

குட்டிகள் சிலநாட்கள் ஆன நிலையிலும் குத்தூஸ் கவனமாக யாரும் போட்டோ எடுத்துவிடாவண்ணம் ஜன்னல் வழியே கேரட் பீட்ரூட் துண்டுகள் முட்டைகோஸ் என விசிறியெறிந்து பன்றிக்கு உணவிட்டு வந்தார். அன்று மகன் தூங்கிக்கொண்டிருந்தபோது பேரனைப்  பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பேத்தியை தடுப்பூசிக்கு தூக்கிச்சென்றிருந்தனர். அவன் மாடிவழியே எக்கி எக்கி குட்டிகளை பார்த்துக்கொண்டிருந்தான். குட்டிகளில் டோரா மட்டும் தனியாக குதித்து விளையாடிக்கொண்டிருந்தது. மற்றவைகள் தூங்கிக்கொண்டிருந்தன.. தாய் அருகில் இல்லை எங்கோ இரைதேடிச்சென்றிருந்தது.
தாத்தா! எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுவியா?
சொல்லுப்பா!”
இல்ல ப்ராமிஸ் பண்ணு!”
ப்ராமிஸ். சொல்லு!”
டோராவ எடுத்துத் தரியா? விளையாடிட்டுத் ரேன்.”
அதெல்லாம் வேணாம்ப்பா, வேற ஏதாவது கேளு
முடியாதுபோ!!“ குதித்தான் பேரன்
பேசிக்கொண்டே எதார்த்தமாக பார்த்த போது, அந்த டோரா கொஞ்சம் கொஞ்சமாக மதில் ஓரத்தை எட்டி அடுத்து சாலைக்கு ஓடிவிடும்படி நின்றது. எதிர்பாராமல் வாகனங்கள் வரும் சாலை. தூரத்தில் லாரி ஒலிபோல ஏதோ கேட்டது. அதன் பின் அவர் தாமதிக்கவில்லை
குத்தூஸ் ஒரு ஸ்டூல் போட்டு மதில் மேல் வயிறு பதிய குனிந்து கைநீட்டி மெல்ல துழாவி அதை எடுத்தார். வெதுவெதுப்பாக இருந்த தண்ணீரை ஊற்றி துடைத்தார்.. துணியைச்சுற்றி தன் கையில் லாவகமாக வைத்தபடி பேரனிடம் காட்டினார். இத்தனை களேபரத்திலும் யாரும் போட்டோ எடுக்கிறார்களா என முன்னும் பின்னும் பார்க்கத் தவறவில்லை. ஒரு முன்னெச்சரிக்கையாக குல்லா போடவில்லை என்பதையும் உறுதிசெய்துகொண்டிருந்தார்
தாத்தா! இது முயல் மாதிரி இருக்கு... அணில் மாதிரி இருக்கு…”
அவன் சிறு தட்டை முறுக்குபோல வட்டமாக இருந்த அதன் வாயின் முன் தன் வாயை குவித்து அதே போல வைத்துக்கொண்டு வும் வும் என பார்த்து பார்த்து டோரா டோரா என தலையாட்டிக் கூவி விளையாடினான்.
டோராக்கு சாக்லேட் எடுத்துட்டு வறேன் என்று உள்ளே ஓடினான்.
அணில்குஞ்சு போலத்தான் இருந்தது. மெல்ல வருடினார். அது கையில் துள்ளியபடி இருந்தது.

அப்போதுதான் தன் அடிவயிற்றைக் கலக்கிய அந்த உறுமலை கேட்டார். தன் உடலின் மொத்தத் துடிப்பும் அடங்க திரும்பிப் பார்த்தார். அன்னைப் பன்றி ஒருமுறை மதிலை முட்டியது. பின் பின்னே சென்று அவரைப்பார்த்து உர் என உறுமியது. பின் மீண்டும் அவரை நோக்கி பாய்ந்தது. சுவற்றை பெயர்த்துக்கொண்டு வந்து தன் மீது பாய்வதுபோல உணர்ந்தார். மதில் அதிர்ந்தது. உடல் நடுக்கம் குறையாமல் மதிலுக்கு அந்தப்பக்கம் டோராவை விட்டார். இறங்கி நின்ற பிறகும் உடல் அதிர்ந்தது. நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. வீட்டிற்குள் சென்று கை முகம் கழுவி சிறிது நேரம் நாற்காலியில் சாய்ந்தார். இன்னும் படபடத்துக்கொண்டிருந்தது.
கைதட்டல் ஓசை கேட்டு மீண்டார் குத்தூஸ். சம்பத் இன்னொரு குறள் சொல்லியிருக்கவேண்டும்
.
பன்றிகள் அவர் மதில்பக்கம் வருவதேயில்லை. அந்த இடத்தை சுத்தம் செய்து சில மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். ஒரு சிறு புல்வெளிபோல ஆக்கினர். அதன்பின்னும் அந்த இடம் இன்னும் வெறுமையாக இருப்பது போலவே தோன்றியது. அது அவருக்கு குற்றவுணர்ச்சியை தூண்டியது. தினமும் நடைபயிற்சிக்கு செல்லும்போது பன்றிகள் புதிதாக தேர்ந்தெடுத்துள்ள விளையாட்டுத்திடலையொட்டிய இடத்திற்குச் சென்று டோராவை பார்த்து வருவார். அதன் மென்மை இன்னும் அவர் கைகளில் ஒட்டியிருந்தது.
அடுத்து தலைவரை பேச அழைத்து அமர்கிறேன்கைத்தட்டலோடு அமர்ந்தார் சம்பத்.

குத்தூஸ் ஒலிபெருக்கி முன் நின்றார்.
நண்பர்களே! ஒருவரை நாம் வெறுக்கும்போதும் விரும்பும்போதும் ஒரு எல்லைக்குள் நிற்கிறோம். ஆனால் அது கொஞ்சம் நீண்டு போகும்போது ஒரு உரிமை எடுத்துக்கொள்கிறோம். அதுவரையிலான நம் அன்பு, எல்லை தாண்டும்போது உரிமை என்றாகிறது என்பது நமக்குத் தெரிவதில்லைஅப்போது அனைத்தும் தலைகீழாக ஆகிவிடுகிறது... அது தெரிந்தபின் செய்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை.” குத்தூஸுக்கு சற்று தொண்டையடைத்துக்கொண்டது. தான் இங்கு ஏதாவது உளறப்போகிறோம் என உறைத்து தண்ணீர் குடிக்க மூடியை திறந்தார்.
அதைத்தான அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் ங்கிறாரு வள்ளுவர் என்றார் சம்பத் தன் இருக்கையில் அமர்ந்தபடி. ஆய்வாளர் அற்புதம் என தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார்.
சற்று நேரம் அவர்களை வெறித்துப்பார்த்த குத்தூஸ், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இயல்பாக ஏற்புரையைத் துவங்கி நன்றி எனக்கூறி முடித்துக்கொண்டார்.

வீட்டிற்குத் திரும்பியபோது பேரன் தன் இடது உள்ளங்கையில் வலது முழங்கையை வைத்து உள்ளங்கையை மடக்கி புஸ் புஸ் ஹியர், புஸ் புஸ் தேர் எனப்பாடியபடி ஆடிவந்தான். மகனும் மருமகளும் மதிலுக்கு அந்தப்பக்கம் பார்த்துகொண்டிருந்தனர்.
ஏக் படீ சாம்ப் ஹை ஜிஎன்றாள் ஜைனம் தன் இரு கைகளையும் அகல விரித்தபடி,
அந்தக்கணம் பாம்பைவிட சம்பத்தை எண்ணி அவருக்கு கதி கலங்கியது.

( கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ”சாமி ஊர்வலம் வராத தெருவில் வசித்தவர்கள் தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை )





No comments: